search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கனமழை - வீடுகளை இழந்த மக்கள் தவிப்பு
    X

    டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கனமழை - வீடுகளை இழந்த மக்கள் தவிப்பு

    கடந்த 3 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்வி குறியாகிவிட்டது. #Rain #DeltaDistricts
    தஞ்சாவூர்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடந்த 16-ந்தேதி கஜா புயல் கரையை கடந்தது. இதையொட்டி பலத்த காற்று வீசியது.

    இதில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும் வீடுகள் இடிந்து பலர் பலியாகினர். இதைத்தொடர்ந்து மீட்பு பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு சில இடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இருந்த போதிலும் முகாம்களில் பல்லாயிரக்கணக்கானோர் தஞ்சமடைந்து உள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    மீட்பு பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மீண்டும் வானிலை மையம் மழை எச்சரிக்கை விடுத்தது.

    அதன்படி கடந்த 3 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் புயல் சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மீள முடியாத நிலையை அடைந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்வி குறியாகிவிட்டது. இதில் இருந்து அவர்கள் மீள இன்றும் பல நாட்களாகும் அவல நிலை உருவாகி உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று கொட்டும் மழையிலும் மின்சார ஊழியர்கள் புயலில் சாய்ந்து மின் கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். நெல்லை-திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த மின் ஊழியர்களும் இப்பணியில் ஈடுபட்டனர். தொடர்மழை நீடிப்பதால் நாகை முதல் வேதாரண்யம் வரை பல இடங்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை பொருட்படுத்தாமல் 200-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் மின் கம்பங்களை நட்டு மின் இணைப்பை வழங்க முயற்சித்து வருகின்றனர்.



    டெல்டா மாவட்டங்களில் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மீளாத நிலையில் தொடர்மழை பெய்து வருவதால் பல வீடுகள் சேதமாகி இடிந்து விழும் அபாய நிலை அதிகரித்துள்ளது.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாரசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களிலும் மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கி உள்ளது. மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் மழையால் மின் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

    நாகை மாவட்டம் கோடியக்காட்டில் உள்ள வன விலங்கு சரணாலயம் புயல் மற்றும் மழையால் உரு குலைந்து போய் விட்டது. அங்கு வசித்து மான்கள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் பல உயிரிழந்து விட்டன. இதனால் அங்கு நோய் பரவும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தை பொறுத்தவரை மீன்பிடித் தொழில் பிரதானமானது. அங்கு புயல் மற்றும் மழையால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் சேதமாகி விட்டன. இதனால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டு மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். நாகை, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், பூம்புகார், தரங்கம்பாடி, புதுபட்டினம் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களில் ஏராளமான வீடுகள் மழையில் சேதமாகி விட்டன. அவர்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

    இதேபோல் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஓட்டு வீடு மறியல் மற்றும் குடிசை வீடுகளில் பெரும்பாலான மக்கள் வசித்து வந்தனர். அவர்கள் வீடு புயல் மற்றும் மழையால் சீரமைக்க முடியாத அளவுக்கு சேதமாகி விட்டது. பாதுகாப்பு முகாம் வசதி குறைவாக உள்ளதால் மக்கள் சேதமான வீடுகளில் தங்கும் சூழ்நிலை நிலவுவதால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை. தொழிலாளர்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். மாணவ-மாணவிகள் புத்தகம், நோட்டு சேதமாகி விட்டதால் பள்ளிக்கு சென்று மீண்டும் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழையில் பல பள்ளி கட்டிடங்களும் சேதமாகி விட்டன. எனவே மழை நின்ற பின்னரும் அந்த பள்ளிகளில் சென்று படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வலங்கைமான், நீடாமங்கலம், பேரளம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் அந்த பகுதிகளில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயி அச்சத்தில் உள்ளனர்.

    டெல்டா மாவட்டங்களில் புயல் மழைக்கு பல லட்சம் தென்னை மரங்கள், வாழைகள், கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. அரசு நிவாரண பொருட்களை வழங்கிவரும் நிலையில் அவைகளை சென்று வாங்க முடியாத அளவுக்கு மழை பெய்து வருகிறது.

    பட்டுக்கோட்டையில் 9 நாட்களாக மின்சாரம் இல்லாததால் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. இதற்கிடையே தொடர்மழை பெய்து குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் குடைபிடித்து கொண்டு மக்கள் சாப்பிடும் நிலை ஏற்பட்டது. பல குடும்பத்தினர் தூங்க இடமின்றி தவித்து வருகின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் மீட்பு பணிகளை மழை முடங்கி விட்டதால் நிலைமை எப்போது சீராகுமா? என்று மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் புயலில் சேதம் அடைந்த வீடுகளுக்கு அரசு 5 லட்சம் தார்ப்பாய்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை முதல் இன்னும் தொடர் மழை பெய்து வருகிறது. இது மக்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது. எங்களுக்கு இயற்கை மறுவாழ்வு வழங்கவிடுமா? விடாதா? என்று வேதனை அடைந்துள்ளனர். மழை நிற்காதவரை மீட்பு பணிகள் முழுமை பெறாது. இந்த பிரச்சினைக்கு தீர்வு இயற்கையின் கையில் உள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை முதல் இன்று காலை 8 மணி வரை பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    நன்னிலம்- 197.3
    திருவாரூர்- 173.7
    நீடாமங்களம்- 152.8
    கும்பகோணம்- 147.3
    குடவாசல்- 136.2
    மன்னார்குடி- 114.2
    மதுக்கூர்-102.4
    நெய்வாசல்- 98.8
    திருத்துறைப்பூண்டி- 71.2
    மயிலாடுதுறை- 67.9
    மஞ்சலாறு- 61.2
    சீர்காழி- 45.6
    தஞ்சாவூர்- 45.5
    ஒரத்தநாடு- 44.8
    கொள்ளிடம்- 21.6 #Rain #DeltaDistricts
    Next Story
    ×