என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "coalition"
அ.தி.மு.க.- பா.ம.க. தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் கூட்டணி மக்கள் கூட்டணி. மெகா கூட்டணியாக உருவாகி இருக்கிறது. இது வெற்றிக் கூட்டணி. புதுவை உள்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
இதுதொடர்பாக நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் சொல்வார். தமிழக மக்களின் நலன்களை காக்கவும், உரிமைகளை மீட்கவும் 10 கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
இந்த கோரிக்கைகளை இரண்டு கட்சியினரும் ஏற்றுள்ளோம். அதன் அடிப்படையிலேயே இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது,
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார். #LSPolls #ADMK #PMKConstituencies
பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன. ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில் அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் சேருவது உறுதி ஆனது.
இதையடுத்து இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடும் என்றும், இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
பாமக போட்டியிடும் 7 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் தெரிவித்தார். #LSPolls #ADMK #PMKConstituencies
மதுரை:
மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல் காட்டு மிராண்டிதனமானது. வீரர்களின் தியாகம் போற்றப்பட வேண்டிய ஒன்று. பயங்கரவாதிகளை தூண்டிவிடுவதன் மூலம் பாகிஸ்தான் உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு தக்கபதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பா.ஜனதா கட்சி தலைவர்களின் நிகழ்ச்சிகள் இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.
தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முத்ரா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 17 கோடி பேருக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 7.5 லட்சம் பேருக்கு கடன் கொடுக்கப்பட்டு உள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தில் இந்தியாவில் 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் 52 லட்சம் கழிவறைகள் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ளன.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி இடம் பெறும் அணி வெற்றி கூட்டணியாக அமையும். அந்த வகையில் வலுவாக கூட்டணியை அமைப்போம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது விரைவில் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #RavishankarPrasad
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது-
சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். இந்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருவது தேர்தல் வந்துவிட்டது என்பதை காட்டுகிறது. தேர்தல் வரும்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கை.
ஆஸ்திரேலிய பறவை சீசன் சமயத்தில் வனத்தை தேடி வரும் சீசன் முடிந்ததும் போய் விடும். அதுபோல் தான் நாராயணசாமி போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு அளிப்பது ஆகும். இதுவும் தேர்தலுக்கான அறிகுறியே.
மத்திய அரசு தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களை வழங்கி வருகிறது. அமித்ஷா வருகை தமிழக மக்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
அவரிடம் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பா.ஜனதாவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அவரது கருத்துக்கள் கூட்டணிக்கு இடையூறாக இருக்கிறதா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளிக்கும்போது, தம்பிதுரை என் சகோதரர் போன்றவர். அவரிடம் தினமும் பேசி வருகிறேன். எங்களுக்குள் எந்தவித சர்ச்சையும் இல்லை. பா.ஜனதா கட்சிக்கு கூட்டணியில் எந்த பிரச்சினையும் யாரோடும் கிடையாது. ஓரிரு நாளில் கூட்டணி அறிவிக்கப்படும் என அகில இந்திய பொது செயலாளர் முரளிதரராவ் கூறி இருப்பது சரியாக இருக்கும். கூட்டணி தொடர்பாக இன்று அறிவிக்க வாய்ப்பு இல்லை என்றார்.
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்கள் காலில் விழுகிறது என கூறி உள்ளாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளிக்கும்போது, விழுந்தவர்கள் பலம் உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். ஒரு தூணோடு இன்னொரு தூண் நின்றால் தான் பலம் பொருந்தியதாக இருக்கும். ஒரு தூணில் இன்னொரு தூண் விழுந்தால் அது பலமில்லை என்றார்.
பின்னர் அவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு புறப்பட்டு சென்றார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். #PonRadhakrishnan #ThambiDurai
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளன.
ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்து பேசுவதற்கு குழுவினை அமைத்துள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குழு ஒன்றை அமைத்து உள்ளார்.
அந்த குழுவில் இடம் பெற்றுள்ள நிர்வாகிகளுடன் அவர் நேற்று இரவு ஆலோ சனை நடத்தினார்.
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன், துணை செயலாளர் ஐ.பெரியசாமி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுடன் எப்போது பேச்சு வார்த்தை தொடங்குவது, ஒவ்வொருவருக்கும் தொகுதி பங்கீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தி.மு.க. கூட்டணியில் 11 கட்சிகள் இடம் பெற்று இருந்தாலும் 8 கட்சிகளுக்கு மட்டுமே ‘சீட்’ கொடுக்கப்படுகிறது.
கூட்டணி கட்சிகளை அரவணைத்து தொகுதிகளை முறையாக பங்கீடு செய்வது பற்றியும் இந்த கூட்டணி குழுவினர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. #parliamentelection #dmk #mkstalin
ஈரோடு:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தமிழகத்தை பொருத்த வரை தி.மு.க. கூட்டணி மற்றும் அ.தி.மு.க. கூட்டணி என இரு முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட தயாராகி வரும் நிலையில் 3-வது கூட்டணியாக சில கட்சிகள் இணைந்து போட்டியிடவும் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் கொ.ம.தே.க. எந்த அணியில் இடம் பெற உள்ளது? என்று மதில்மேல் பூனையாக உள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கொ.ம.தே.க. பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் கொ.ம.தே.க. பாரதிய ஜனதா அணியுடன் கூட்டணி அமைக்குமா? அல்லது தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கூட்டணி அமையாதபட்சத்தில் கொ.ம.தே.க தனித்து போட்டியிட்டது. போட்டியிட்ட பகுதிகளில் கணிசமான அளவில் ஓட்டுகள் வாங்கினாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இப்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொ.ம.தே.க. நிலைப்பாடு என்ன? என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரனிடம் கேட்டபோது, “தேர்தல் கூட்டணி பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. கூட்டணி பற்றி எதுவும் கூறுவதற்கு இல்லை. இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்று கூறினார். #Eswaran #Parliamentelection
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களிடம் கூறியதாவது-
ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். கோவை மாவட்டத்தில் முக்கிய தொழிலான தென்னை விவசாயம் வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளை ஈ தாக்குதலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மத்திய அரசு பட்ஜெட்டில் சிறு,குறு விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ள ரூ.6 ஆயிரம் தொகையை உயர்த்திவழங்கவேண்டும், சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கவேண்டும். பொள்ளாச்சிக்கு கூடுதலாக ரெயில்களை இயக்கவேண்டும்.
2017-ம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டாலும் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என புகார் உள்ளது. விடுபட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்கவேண்டும். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளை சேமிக்க குளிர்சாதன கிடங்கு அமைக்கவேண்டும். பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் தென்னைநார் தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கிவருகின்றன. வறட்சியால் தற்போது மூலப்பொருட்கள் கிடைக்காமல் தென்னைநார் தொழில் பாதிப்பை சந்தித்துள்ளது.
எனவே தென்னை நார் உற்பத்தியாளர்கள் பெற்ற கடனுக்கான வட்டிகளை தள்ளுபடிசெய்யவேண்டும். வால்பாறை தோட்ட தொழிலாளர்களுக்கு தினசரி கூலியை ரூ.500 ஆக உயர்த்தி வழங்கவேண்டும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணி அமைத்துத்தான் தேர்தலை சந்திக்கும் நிலை உள்ளது. ஆகவே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்திக்கும்.
ஆனால், எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை தொண்டர்கள் கருத்தை கேட்டு முடிவு எடுக்கப்படும். அது மக்கள் விரும்பும் கட்சியாக இருக்கும். அ.தி.மு.க. அரசு தனது செயல்பாட்டை இன்னும் உயர்த்தவேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார். #GKVasan
பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உள்ளன.
இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் சேர்க்க காங்கிரஸ் விரும்புகிறது.
கமலும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விருப்பமான மனநிலையிலேயே இருக்கிறார். ஏற்கனவே கமல் டெல்லி சென்று ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.
தி.மு.க.வை பொறுத்தவரை 20 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் காங்கிரஸ்-8, இந்திய கம்யூனிஸ்டு-1, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-1, ம.தி.மு.க.-2, விடுதலை சிறுத்தைகள்-1, முஸ்லிம் லீக்-1 என்ற விகிதத்தில் பேசி வருகிறார்கள்.
காங்கிரஸ் தொகுதிகளில் ஒரு தொகுதியை குறைத்து 2 அல்லது 3 சீட் வரை கமலுக்கு கொடுக்கலாம் என்று கருதுகின்றனர்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அழகிரி கூறும்போது, காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வந்தால் மிகவும் நல்லது என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் கமல்ஹாசனை கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் சென்றுள்ளார்.
டெல்லியில் இன்று அனைத்து மாநில தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. அதன்பிறகு தமிழக கூட்டணி நிலவரம், கூட்டணியை வலுப்படுத்த கமலை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே தி.மு.க. பற்றி கருத்து தெரிவித்த கமல், அழுக்கு மூட்டை கட்சி என்றும் அதனுடன் கூட்டணி இல்லை என்றும் கருத்து தெரிவித்து உள்ளார்.
இதனால் கமலை கூட்டணியில் சேர்க்க தி.மு.க. விரும்புமா? என்று தெரியவில்லை. #KamalHaasan #Congress
உத்தரபிரதேச மாநிலத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய லோக்தளம் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. அகிலேஷ்யாதவும், மாயாவதியும் தலா 38 தொகுதிகளை எடுத்துக்கொண்டு அஜித்சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சிக்கு 2 தொகுதிகள் அளித்தன.
இந்தநிலையில் காங்கிரசுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பிரியங்கா தீவிர அரசியலில் இறங்கினார். அவர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இதனால் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது. எனவே காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்தது.
இதன்காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் மும்முனைப்போட்டி ஏற்பட்டு வாக்குகள் பிரியும் நிலை உருவானது. இது பா.ஜனதாவுக்கு சாதகமாகிவிடும் என்று கருதப்படுகிறது.
பிரியங்காவின் வருகையாலேயே அகிலேஷ் யாதவிடம் இந்த மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா அரசியலில் நுழைந்திருப்பதை அகிலேஷ் யாதவ் பாராட்டி இருந்தார். பிரியங்கா வருகையை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக அவரும் கருதுகிறார். எனவே காங்கிரசுடன் ரகசிய உடன்பாடு செய்துகொள்ள அவர் விரும்புவதாக தெரிகிறது.
இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘‘உத்தரபிரதேசத்தில் எங்கள் கூட்டணியில் காங்கிரசையும் சேர்க்கை முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி முடியாவிட்டால் சமாஜ்வாடி- காங்கிரஸ் இடையே சில தொகுதிகளில் ரகசிய உடன்பாடு செய்ய ஆலோசனை நடந்து வருகிறது’’ என்றனர். #AkhileshYadav #Congress
தே.மு.தி.க. துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார். அவர் விரைவில் தமிழகம் திரும்ப உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் முடிவு எட்டப்படும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிட்டோம். அதுவே தான் எங்களுடைய கோரிக்கையாக இப்போதும் உள்ளது.
கூட்டணி குறித்து விஜயகாந்த் வந்த பின்னர் தான் உறுதி செய்யப்படும். தே.மு.தி.க. இருக்கும் கூட்டணி வலிமையானதாக இருக்கும். நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி, தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெறும். எங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்த பின்னர், பெயரிடப்படும். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பிரசாரம் மற்றும் இதர தகவல்கள் பற்றி அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #DMDK
மதுரை பெருங்குடி அருகே உள்ள மண்டேலா நகர் ரிங் ரோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழா, பா.ஜ.க. மாநாடு நடைபெறும் இடங்களை மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் முரளிதர ராவ் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் முரளிதர ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல், கலை, பண்பாடு ஆகியவற்றில் மதுரை முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். இங்கு பிரதமரின் முதல் கூட்டம் நடைபெறுவது சிறப்பு வாய்ந்தது.
வருகிற 27-ந் தேதி நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் தென் மாவட்டங்களில் இருந்து குறிப்பாக 10 பாராளுமன்ற தொகுதிகளில் இருந்து 2 லட்சம் தொண்டர்கள், மோடியை வரவேற்க தயாராக உள்ளனர்.
2014-ல் இருந்து பா.ஜ.க. அரசு இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கூடும் முதல் கூட்டம் என்பதால் பெரும் வரவேற்பு உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் மட்டுமே முடிவு செய்வார்கள். அது பற்றி நாங்கள் கூற முடியாது.
தி.மு.க., அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி என்று பலர் கருத்து கூறுகின்றனர். ஆனால் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன்தான் கூட்டணி அறிவிப்பு வரும். அதனை பிரதமர் மோடி முறையாக அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார். #MuralidharRao #PMModi #Parliamentelection
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவையில் இருந்து நேற்றிரவு சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதாவிற்கு எதிரான கட்சிகள் ஒன்றுகூட வேண்டும் என்று மம்தா பானர்ஜி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அது எனக்கு தெரியும். ஆனால் எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை.
மேலும் அதை முடிவு செய்ய வேண்டிய தருணம் இதுவல்ல. மக்கள் நீதி மய்யம் அதில் தெளிவாக இருக்கிறது. எங்களுடைய முக்கிய நோக்கமே தமிழகம் தான். எது எது நல்ல விஷயங்களோ அங்கே நான் போவேன்.
கேரளாவில் சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அந்த அரசு கடைபிடித்துக் கொண்டு இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை பாதுகாப்பது ஒரு அரசின் கடமை. அந்த மலை தமிழத்தில் இருந்து இருந்தாலும் நாமும் அந்த தீர்ப்பை கடை பிடித்திருப்போம். அந்த தீர்ப்பை செயல்படுத்த கடமைப்பட்டு இருப்போம்.
மக்களுக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்று தீர்மானித்து அதை செய்தால் எந்த கோர்ட்டும் ஒன்றும் செய்ய முடியாது.
ஊழல் இல்லாத கட்சிகளுடன்தான் நான் கூட்டணி அமைப்பேன். ஊழல் இல்லை என்றுதான் எல்லா கட்சிகளும் சொல்வார்கள். நிரூபிக்கப்பட்ட பின்தான் தெரியும். அதில் நாங்கள் முன் ஜாக்கிரதையாக இருக்கிறோம்.
ரஜினியின் பேட்ட படம், அஜித்தின் விஸ்வாசம் படங்களின் வசூல் போட்டி என்பது ஒரு வியாபாரம். ஒரு விளையாட்டை எப்படி ஸ்போர்ட்டிவாக எடுத்து கொள்கிறோமோ அப்படித்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் நான் 40 வருடமாக செய்து வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்