என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Army"
காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கண்டமுல்லா ராணுவ முகாமில் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யும் முகாம் நடந்தது. கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வமாக வந்திருந்தனர். அங்கு அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
இது தொடர்பான வீடியோ ராணுவத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில், “நாட்டை காக்க ஏராளமான இளைஞர்கள் ராணுவத்துக்கான ஆட்கள் தேர்வில் கலந்துகொண்டு இருக்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ஸ்ரீநகரில் இந்த வார இறுதியிலும் அடுத்த வாரமும் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற உள்ளது என்றனர்.
புலவாமா பகுதியில் துணை ராணுவ படை மீது பயங்கரவாத தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே ராணுவத்தில் சேர காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வம் காட்டியது அதிகாரிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்த நிலையில் வடக்கு காஷ்மீர் பந்திபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடிப்பதாகவும், அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல உதவும்படியும் பந்திபூர் ராணுவ முகாமுக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் மூலம் அந்த கிராமத்துக்கு விரைந்தனர். ஆனால் சாலைகள் முழுவதும் பனித்துகள்களால் மூடப்பட்டு இருந்ததால் ஆம்புலன்சை வீட்டின் அருகே கொண்டு செல்ல முடியவில்லை. எனினும் மனம் தளர்ந்துவிடாத வீரர்கள், அந்த பெண்ணை தூக்குப்படுக்கையில் சுமார் 2½ கி.மீ தூரத்துக்கு இடுப்பளவு பனித்துகள்களுக்கு மத்தியிலும் சுமந்து சென்றனர்.
பின்பு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. தக்க நேரத்தில் உதவி புரிந்த ராணுவ வீரர்களுக்கு அந்த பெண் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். #Pregnantwoman #Snowfall
ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாட்டின் எல்லை பாதுகாப்பு மற்றும் காஷ்மீர் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-
நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லை நெடுகிலும் நாங்கள் அமைதியை பராமரித்து வருகிறோம். நாட்டின் எல்லைகள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன. இதில் அச்சமடைவதற்கு எந்த தேவையும் இல்லை.
ஓரினச்சேர்க்கை மற்றும் தகாத உறவு குற்றம் அல்ல என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து இருக்கிறது. ஆனால் ராணுவத்தை பொறுத்தவரை இது ஏற்கத்தக்கது அல்ல.
ராணுவம், சட்டத்தை விட மேலானது அல்ல என்றாலும், ஓரினச்சேர்க்கை மற்றும் தகாத உறவை ராணுவத்தில் அனுமதிக்க மாட்டோம். ராணுவம் பழமைவாதமானது, ஒரு குடும்பம் போன்றது. எனவே இதில் மேற்படி செயல்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது.
இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.
கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.
இதில் சேர 10-ம் வகுப்பு கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாலிபர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உடல் தகுதி தேர்வு, மருத்துவ சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கல்வி சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடந்தது. அப்போது தர்மபுரியை சேர்ந்த பரத், பெருமாள் ஆகியோரின் கல்வி சான்றிதழ் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
அவர்களது சான்றிதழை சரி பார்த்தபோது போலியானது என்பது தெரிய வந்தது. வேறு சிலரின் சான்றிதழ்களை அவர்கள் போலியாக தயாரித்து கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து ராணுவத்திற்கு ஆள் தேர்வு இயக்குனர் ரேனி கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பரத், பெருமாள் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது தங்களது வயது முதிர்வு அடைந்து விட்டதால் வயது குறைவானவர்களின் கல்வி சான்றிதழை கொடுத்ததாக தெரிவித்தனர். ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் போலி சான்றிதழ் கொடுத்தாக தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது;
காவிரி டெல்டாவில் கஜா புயல் தாக்குதலால் கிராமப்புறங்களில் விழுந்த மரங்கள், கழிவுகள் முழுமையாக அப்புறப்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் கழிவுகளால் மாசடைந்து மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள், வயல்வெளிகளிலும், வாய்க்கால் கரைகளிலும் அமைந்துள்ளதால் இதனால் தொற்றுநோய் பரவி வருகிறது. காய்ச்சல், வயிற்றுப் போக்கால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக மன்னார்குடி வட்டம் கோட்டூர் நடுத்தெரு கிராமத்தில் காத்தான் மகன் பாண்டியன் (வயது 50) என்பவர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு திடீரென்று இறந்து விட்டார். அவரது மனைவி, மகன் வயிற்று போக்கு நோய் தாக்குதலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்த பாண்டியன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கவேண்டும்.
எனவே தமிழக அரசு விரைந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் கிராமப்புறங்களில் மேற்கொள்ள வேண்டும். காய்ச்சிய குடிநீர் குடிப்பதற்கும், மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளை தவிர்ப்பதற்கும் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டும்.
துணை ராணுவப்படை மூலம் புயலால் விழுந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்தி விட்டு உடன் புதிய தென்னங்கன்றுகள் நடுவதற்கான பணிகளை அரசு தொடங்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் எந்திரங்களை வரவழைத்து தென்னை விளை நிலங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இதனை வலியுறுத்தி தமிழக தென்னை உழவர்கள் சங்கம் சார்பில் வருகிற 4-ந்தேதி பட்டுக்கோட்டை-அறந்தாங்கி முக்கத்தில் உண்ணாவிரதம் எனது தலைமையில் நடைபெற உள்ளது. போராட்டத்தை முன்னாள் தென்னை வாரிய உறுப்பினர் குருவிக்கரம்பை பழனிவேலு தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #prpandian #gajacycloneeffected
கொழும்பு:
இலங்கையில் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது சீனாவுடன் நட்புறவு கொண்டிருந்தார்.
துறைமுகங்களை சீன நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுத்தார். இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
எனவே இலங்கையின் நடவடிக்கைகளுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் அங்கு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்து மைத்ரியபால சிறிசேனா வெற்றி பெற்றார். அதையடுத்து அங்கு சீனாவின் ஆதிக்கம் தடுக்கப்பட்டது. அதிபர் சிறிசேனாவும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவும் இந்தியாவுடன் நட்புறவாக இருந்தனர்.
தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து இலங்கையில் மீண்டும் சீனாவின் ஆதிக்கம் மேலோங்க தொடங்கி விட்டது.
தற்போது துறைமுகங்களை மேம்படுத்தும் திட்ட பணிகள் மீண்டும் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான 2 ஒப்பந்தங்கள் கடந்த வாரம் கையெழுத்தானது.
இலங்கை அரசுக்கு சொந்தமான ஜெயா கண்டெய்னர் டெர்மினல் நிறுவனம் சீன துறைமுக என்ஜினீயரிங் நிறுவனத்துடன் இணைந்து ரூ.236 கோடி (32 மில்லியன் டாலர்) காண்டிராக்ட் கையெழுத்தாகியுள்ளது.
சீனாவின் ஷாங்காய் ஷேன்குவா கனரக தொழிற்சாலை நிறுவனத்திடம் இருந்து ரூ.190 கோடிக்கு (25.7 மில்லியன் டாலர்) மதிப்பில் 3 கிரேன் எந்தி ரங்கள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை இலங்கை துறைமுக கழகம் வெளியிட்டுள்ளது. #SriLankaPort
சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ‘மெட்ராஸ் கிழக்கு ரோட்டரி கிளப்’ சார்பில் ரூ.95 லட்சம் மதிப்பிலான சிறந்த கல்வி மற்றும் பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டது. இதனை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் குழும பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படுவதுடன் மரத்தால் ஆன நாற்காலிகள், மேசைகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த திட்டத்தின் மூலம் கற்றல் திறன் குறைபாடு உடைய மாணவிகளுக்கு சிறப்பாக கல்வி கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் ‘மெட்ராஸ் கிழக்கு ரோட்டரி கிளப்பின்’ கவர்னர் பாபு பேரம், தலைவர் ஆர்.எம்.நாராயணன், உலகளாவிய திட்டத் தலைவர் திவ்யா சித்தார்த், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யா பீடத்தின் செயலாளர் சுவாமி சுகதேவானந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
பெண்களுக்கு கல்வி என்பது புது சிந்தனை அல்ல. நம் நாட்டில் பெண்கள் கல்விக்கு எப்போதும் வாய்ப்பு இருந்து இருக்கிறது. குறிப்பாக வேதங்களில் பழமையான ரிக் முதலான வேதங்களை வழங்கியவர்களில் 22 பேர் பெண்கள். அந்த வகையில், சுவாமி ஸ்ரீ ராமகிருஷ்ணரே அன்னை சாரதா தேவியை குரு ஸ்தானத்தில் வைத்திருந்தார் என்றால் அவர் எப்படிப்பட்டவராக இருந்திருக்க வேண்டும். எனவே, அறிவை வளர்ப்பதில் பெண்களின் பங்கு நம் நாட்டில் எப்போதும் இருந்து இருக்கிறது.
எனவே, தற்போதைய நவீன கல்வி யுகத்தில், கல்வி கற்றல் குறைபாடு உள்ள மாணவிகளையும் சக மாணவிகளுடன் வைத்து கற்றுக் கொடுத்தால், அவர்களும் சமூகத்தில் சமமாக இருக்க முடியும். அதன் முதற்கட்டமாக அவர்களுக்கு என சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். படிக்கிற மாணவிகளுக்கு மட்டும் கல்வியை கொடுத்து நல்ல மதிப்பெண் வாங்கினார்கள் என்று கூறுவதை விட இதே போன்று கற்றல் குறைபாடு உள்ள மாணவிகளுக்கும் கல்வி கற்பிக்க முயற்சி எடுத்து உள்ளதை வரவேற்கிறேன்.
தற்போது இது போன்ற உதவிகளை பெறும் மாணவிகளாகிய நீங்களும், இதனை மனதில் வைத்துக் கொண்டு பெரியவர்களான பிறகு உங்களுக்கான வாய்ப்புகள் வரும் போது இது போன்ற உதவிகளை செய்ய வேண்டும். அவரவரால் முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும். மாணவிகளுடன் ½ மணி நேரம் இருந்தாலும் நான் ஊக்கம் பெற்றதாக கருதுவேன். இன்று மாணவிகளுடன் அதிக நேரம் இருந்தமையால் முழு ஊக்கம் பெற்றதாக கருதுகிறேன்.
14 லட்சம் எண்ணிக்கை கொண்ட நமது ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே உங்களில்(மாணவிகள்) நிறைய பேர் ராணுவத்தில் சேர வேண்டும். இன்று பள்ளிக்கூட சீருடையில் பார்க்கும் உங்களில் நிறை பேரை இன்னும் 5 வருடங்கள் கழித்து விமானப்படை சீருடையிலோ, கப்பல்படை சீருடையிலோ, ராணுவ சீருடையிலோ பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பள்ளி வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர் மற்றும் சாரதா தேவி வேடம் அணிந்து இருந்த மாணவிகளுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியின் முன்னதாக சாரதா வித்யாலயா பள்ளி சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #BJP #NirmalaSitharaman
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. மே மாதம் இறுதியில் பெய்யத் தொடங்கிய இந்த மழை ஆரம்பம் முதலே கனமழையாக இருந்தது.
2½ மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் கேரளாவில் உள்ள அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் கேரளாவே வெள்ளத்தில் மிதக்கிறது. 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் கேரளா இது போன்ற மழையை எதிர்க்கொண்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் இந்த மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் வயநாடு, இடுக்கி, எர்ணா குளம், கோழிக்கோடு, ஆலப் புழா, கண்ணூர், பத்தனம் திட்டா, கொச்சி, மலப்புரம், பாலக்காடு ஆகிய 10 மாவட்டங்கள் வரலாறு காணாத வகையில் சேதத்தை சந்தித்துள்ளது.
இங்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல இடங்கள் தீவு போல காட்சி அளிக்கிறது. இங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள்.
கேரளாவில் உள்ள 24 அணைகளும் நிரம்பி விட்டன. இதுவரை 22 அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 2401 அடி உயரம் கொண்ட இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியதால் அந்த அணையின் 5 மதகுகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் செருதோணி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள கட்டிடங்களும், பாலங்களும் அடித்து செல்லப்பட்டன.
கேரளாவில் மேலும் 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை 13-ந்தேதி காலை 8.30 மணி முதல் 15-ந்தேதி காலை 8.30 மணி வரை பலத்த மற்றும் மிகப்பலத்த மழை பெய்யுமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் கேரள மக்களை இந்த மழை எச்சரிக்கை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. வயநாடு, இடுக்கி மாவட்டங்களுக்கு 15-ந்தேதி வரையும், ஆலப்புழா, கண்ணூர் மாவட்டங்களுக்கு நாளை வரையும், எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இன்று வரையும் ‘ரெட் அலர்ட்’ எனப்படும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, வயநாடு பகுதிகளில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
இதனால் இந்த பகுதியில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கனமழைக்கு இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விட்டன. பல லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் நாசமாகி விட்டது. சாலைகள் துண்டிப்பு, நிலச்சரிவு, போன்ற பாதிப்புகளால் லட்சக்கணக்கான பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு தவிப்புக்குள்ளாகி உள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் நிலம்பூர், எடக்கரா, வண்டூர் போன்ற நகரங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இங்கு மீட்புப்படையினர் கூட செல்ல முடியாத அளவிற்கு பல இடங்கள் கடுமையாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் நிலச்சரிவால் மண்ணில் புதைந்து விட்டன.
பம்பை ஆற்றில் கரை புரளும் வெள்ளம் காரணமாகவும் பெரும் பாதிப்பை கேரள மக்கள் சந்தித்து வருகிறார்கள். மேலும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கும் இது தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயநாடு, பத்தனம்திட்டா பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கேரளாவையே புரட்டிப் போட்ட இந்த மழையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையினர், கடற்படை, கடலோர காவல் படை என்று அனைத்து மீட்புப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், எதிர்க் கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டனர். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் நிவாரண உதவிகளை அறிவித்தார்.
இந்த நிலையில் கேரள வெள்ளசேதங்களை பார்வையிட மத்திய உள் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கேரள வருகிறார். அவர், ஹெலிகாப்டர் மூலம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச்சேதங்களை நேரில் பார்வையிடுகிறார். அதன் பிறகு கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ளப் பாதிப்புகள் பற்றி ஆலோசனை நடத்துகிறார். #KeralaRain #KeralaFloods #IdukkiDam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்