search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM Modi"

    • நாட்டு மக்களின் மனநிலையைதான் பாரதிய ஜனதா பிரதிபலிக்கிறது.
    • இந்த தடவை எங்களுக்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு கிடைத்து இருக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி மாநிலம் வாரியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தனது கருத்துக்களை பிரதமர் மோடி வெளிப்படுத்தி உள்ளார்.

    அந்த பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இதுவரை நான் நாடு முழுவதும் 70 நகரங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்தி பிரசாரம் செய்து உள்ளேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் என் மீது அளவு கடந்த அன்பையும் ஆதரவையும், பாசத்தையும் காட்டியதை காண முடிந்தது. மக்களின் இந்த அபரிமிதமான அன்பை பார்க்கும் போது 400 இடங்களுக்கு மேல் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்ற எங்களது இலக்கு நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

    பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்தால் அது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அளிக்கும் வாக்கு என்பதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்து புரிந்து இருக்கிறார்கள். தற்போது 2 கட்ட தேர்தல் முடிந்து இருக்கிறது. இந்த 2 கட்டங்களிலும் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையான தோல்வியை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாரதிய ஜனதா 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும் என்று நாங்கள் இலக்கு நிர்ணயித்து இருப்பதற்கு முக்கிய காரணம் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் இன மக்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சட்டங்களை திருத்தி விடுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள்.

    அப்படிப்பட்டவர்கள் நான் முதல்-மந்திரி ஆனதில் இருந்து தற்போது வரை என்னென்ன செய்து வருகிறேன் என்று சற்று ஆய்வு செய்து பார்க்க வேண்டும். எந்த ஆதாரமும் இல்லாமல் என் மீது குற்றச்சாட்டு சொல்லக்கூடாது. நாட்டு மக்களின் மனநிலையைதான் பாரதிய ஜனதா பிரதிபலிக்கிறது. மக்கள் இன்னமும் மாற்றங்கள் வேண்டும் என்கிறார்கள். அதை நிச்சயம் செய்வோம். பாரதிய ஜனதா தோற்கும் என்று காங்கிரசின் இளவரசர் சொல்கிறார். உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதால்தான் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் நழுவி சென்று விட்டனர். அப்போதே அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டனர். இந்த தடவை எங்களுக்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு கிடைத்து இருக்கிறது. நிச்சயம் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்.


    தென் இந்தியாவில் இந்த தடவை பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. தென் இந்தியாவில் நான் எங்கு சென்றாலும் மக்கள் அபரிமிதமான ஆதரவை கொடுத்தனர். அன்பு மழையை பொழிந்தனர். தென் இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளின் ஆட்சியைதான் மக்கள் பார்த்து வருகிறார்கள். அந்த கட்சிகளின் ஆட்சிகள் அரசை தவறாக வழிநடத்துவதையும், பிரிவினைவாத செயல்களை செய்வதையும் வாக்கு வங்கி அரசியல் நடத்துவதையும் தான் பார்த்து வருகிறார்கள். மொத்தத்தில் தென் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள மாநில கட்சிகள் ஊழல் செய்வதையே முதன்மையாக கொண்டு இருப்பதையும் மக்கள் பார்த்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி கலாச்சாரம், பண்பாடு மீது நடத்தப்படும் வெறுப்பு தாக்குதலையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் காரணமாக காங்கிரஸ் மீதும், மாநில கட்சிகள் மீதும் மக்களுக்கு மிகப்பெரிய வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் தென் மாநில மக்கள் மத்தியில் பா.ஜ.க. தலைமையில் நடைபெறும் சிறப்பான ஆட்சியையும் பார்க்கிறார்கள்.

    மக்கள் நல திட்டங்களில் பாரதிய ஜனதா அரசு செய்துள்ள முக்கிய திருத்தங்களையும் தென் மாநில மக்கள் பார்க்கிறார்கள். நாங்கள் கொண்டு வந்துள்ள முக்கிய நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. பாரதிய ஜனதாவிடம் அவர்கள் நம்பிக்கை ஒளியை பார்க்கிறார்கள். எனவே தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவை மக்கள் நம்ப தகுந்த மாற்று சக்தியாக ஏற்க தொடங்கி இருக்கிறார்கள். தென் இந்தியாவில் பாரதிய ஜனதாதான் மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக கடந்த தேர்தலில் திகழ்ந்தது. இந்த தடவை தென் இந்தியாவில் அதிக வெற்றி பெறும் கட்சியாக பாரதிய ஜனதா திகழும். தமிழகம் உள்பட தென் இந்தியாவில் பாரதிய ஜனதா குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெறும். இந்த தடவை தென் இந்திய தேர்தல் முடிவுகள் பல பாரம்பரிய கதைகளுக்கு முடிவு கட்டுவதாக இருக்கும். தென் இந்தியாவில் இந்த தடவை பாரதிய ஜனதாவுக்கு வாக்கு வங்கியும் கணிசமாக அதிகரிக்கும். தேர்தல் முடிவு வெளியாகும் போது அதை நீங்கள் பார்ப்பீர்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    • ஒடிசாவுக்கு சேவை செய்ய பாரதிய ஜனதா கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
    • ஒடிசா மற்றும் ஒடியா மொழியின் பெருமை ஆபத்தில் உள்ளது.

    ஒடிசா மாநிலத்தில், வரும் மே 13 முதல் ஜூன் 1 வரை நான்கு கட்டங்களாக சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகும்.

    இந்நிலையில், ஒடிசாவுக்கு சேவை செய்ய பாரதிய ஜனதா கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

    ஒடிசாவின் பெருமையும் கண்ணியமும் அழிக்கப்பட்டு வருவதாகவும், மாநிலத்திற்கு சேவை செய்ய பாஜகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடியிடம், ஒடிசாவில் பிஜேடி உடனான பாஜகவின் உறவு குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி, "பிரச்சினைகளின் அடிப்படையின் மத்தியில் பிஜேடி எங்களுக்கு ஆதரவளித்துள்ளது. மேலும் பல கட்சிகளும் எங்களுக்கு ஆதரவை வழங்கியுள்ளன.

    ஒடிசா மற்றும் ஒடியா மொழியின் பெருமை ஆபத்தில் உள்ளது. ஒடியா மக்கள் இதை நீண்ட காலம் பொறுத்துக் கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒடிசாவில் ஏராளமான வளங்கள் உள்ளன. அது இன்று நாட்டின் பணக்கார மாநிலமாக மாறியிருக்கலாம்.

    ஒடிசாவை பணக்கார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு ஒடியாவிற்கும் உள்ளது" என்றார்.

    • தற்போது முடிந்துள்ள இரு கட்டங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்து வருகிறது.
    • ஜூன் 4 -ம் தேதி அன்று இந்தியா கூட்டணி 300 இடங்களைத் தாண்டி வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த பேரணியின்போது பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் வருடத்திற்கு ஒரு பிரதமர் என 5 பிரதமர்களை உருவாக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே, பிரதமரின் கருத்துக்கு சிவசேனாவின் சஞ்சய் ராவத் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பிரதமரை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது. அவர்கள் ஒரு வருடத்தில் 2 அல்லது 4 பிரதமர்களை கூட உருவாக்குவார்கள். ஆனால் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்ல விடமாட்டோம்.

    ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரியை விட கூட்டணி ஆட்சி சிறந்தது. யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்பது எங்கள் விருப்பம்.

    தற்போது முடிந்துள்ள இரு கட்டங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்து வருகிறது.

    வரும் ஜூன் 4 -ம் தேதி அன்று இந்தியா கூட்டணி 300 இடங்களைத் தாண்டி வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    • ஒரு முஸ்லீம் என்பதால், பிரதமர் கூறியதில் நான் பெரும் ஏமாற்றமடைந்தேன். நான் பேசுவதற்கு கட்சி என் மீது நடவடிக்கை எடுத்தாலும் பயப்பட மாட்டேன்
    • இந்த தேர்தலில், பிரதமரின் இந்தப் பேச்சால் மாநிலத்தில் 4 தொகுதிகளில் பெரும் பின்னடைவு ஏற்படும்

    அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, "இந்தியாவில் இந்துக்களின் சொத்துகளை இஸ்லாமியர்களுக்கு பிரித்துக் கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது" என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்திய நாட்டின் பிரதமர் இப்படி மத ரீதியாக பேசுவது தவறு என்று எதிர்க்கட்சிகள் இதற்கு கணடனம் தெரிவித்தனர்.

    அப்போது, ராஜஸ்தான் மாநில பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் உஸ்மான் கனி, பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இதை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு பிறகு, பாஜகவுக்கு வாக்கு கேட்க முஸ்லீம்களிடம் செல்லும்போது, பிரதமர் கூறிய கருத்துகளைப் பற்றி மக்கள் கேள்வி கேட்கிறார்கள். ஒரு முஸ்லீம் என்பதால், பிரதமர் கூறியதில் நான் பெரும் ஏமாற்றமடைந்தேன். நான் பேசுவதற்கு கட்சி என் மீது நடவடிக்கை எடுத்தாலும் பயப்பட மாட்டேன். மேலும், பாஜக மீது ஜாட் சமூகத்தினரும் கடுமையான கோபத்தில் இருக்கிறர்கள். அதனால், இந்த தேர்தலில், பிரதமரின் இந்தப் பேச்சால் மாநிலத்தில் 4 தொகுதிகளில் பெரும் பின்னடைவு ஏற்படும்" என தெரிவித்தார்.

    இதனையடுத்து, ராஜஸ்தான் பாஜக தலைமை, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய சிறுபான்மையினர் அணி தலைவர் உஸ்மான் கனியை முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக அறிவித்திருக்கிறது.

    இந்நிலையில், முன்னாள் பாஜக சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் உஸ்மான் கனி கைது செய்யப்பட்டுள்ளார். காவல்நிலையத்தில் புகுந்து அமைதியை குலைத்ததாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • தேர்தலில் யார் மிரட்டல் விடுத்தாலும் பவன் கல்யாணை வெற்றி பெற செய்ய வேண்டும்.
    • பவன் கல்யாண் எப்போதும் மக்களின் குரலாகவும், அநீதியை எதிர்க்கும் அரசியல்வாதியாகவும் இருப்பார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் தேர்தல் தேதி நெருங்கி வருவதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    ஒரு புறம் அரசியல்வாதிகளும், மறுபுறம் சினிமா நடிகர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவில் பிரபல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பவன் கல்யாணை ஆதரித்து நேற்று ஆந்திராவில் பிரபல நடிகரும், பவன் கல்யாணின் அண்ணன் மகனான வருண் தேஜ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கோடாவாலியில் ரோடு ஷோ நடத்தினார்.

    அதைத் தொடர்ந்து கூட்டத்தில் வருண் தேஜ் பேசியதாவது, எனது தந்தையை பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    அதிகாரத்தை பொருட்படுத்தாமல் மக்களுக்காக போராடும் தலைவர் பவன் கல்யாண். எம்.பி., எம்.எல்.ஏ. யாகவோ இல்லாவிட்டாலும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக போராடியவர்.

    தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு துணை நின்றவர். எப்போதும் மக்கள் மத்தியில் வளம் வரும் தலைவர் வெற்றி பெற வேண்டும்.

    பவன் கல்யாண் மகனாக தேர்தல் பிரசாரம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிதாபுரம் பகுதி மக்களின் அன்பும், பாசமும் தந்தையின் மீது என்றும் இருக்க வேண்டும்.

    தேர்தலில் யார் மிரட்டல் விடுத்தாலும் பவன் கல்யாணை வெற்றி பெற செய்ய வேண்டும். பிதாபுரம் மக்களை பவன் கல்யாண் தனது குடும்ப உறுப்பினர்களாகவே கருதுகிறார்.

    இங்குள்ள வாக்காளர்கள் பவன் கல்யாணை ஆசீர்வதித்து சட்டப்பேரவைக்கு அனுப்பினால் அவர் அனைவருக்கும் சேவகம் செய்வார். பவன் கல்யாண் எப்போதும் மக்களின் குரலாகவும், அநீதியை எதிர்க்கும் அரசியல்வாதியாகவும் இருப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஏற்கனவே பிதாபுரத்தில் பவன் கல்யாண் சார்பில் நடிகர் நாகபாபு பிரசாரம் செய்து வரும் நிலையில் வரும் நாட்களில் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நடிகர் பவன் கல்யாணை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர்.

    • தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரசாரத்தில் குதித்துள்ளார்.
    • தேர்தல் பிரசாரத்தில் திறந்த வேனில் நின்றபடி குஷ்பு உற்சாகமாக பேசினார்.

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் தொடங்கினார்.

    வேலூரில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து நடிகர் குஷ்பூ பிரசாரம் செய்த அவர் திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    உடல் நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. டாக்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என கூறியதால் பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக பா.ஜனதா தலைவர் நட்டாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார். குஷ்புவுக்கு பதிலாக அவரது கணவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி பிரசார களத்தில் இறங்கினார். வேலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரசாரத்தில் குதித்துள்ளார். செகந்திராபாத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் கிஷன் ரெட்டியை ஆதரித்து நேற்று குஷ்பு பிரசாரம் செய்தார்.

    அவரை காண உள்ளூர் தலைவர்களுடன் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் பிரசாரத்தில் திறந்த வேனில் நின்றபடி குஷ்பு உற்சாகமாக பேசினார். அவர் தனது ரசிகர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதியில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிகை குஷ்பு நடித்து பிரபலமானார்.

    இதனால் குஷ்புவை பாஜக மேலிடம் பிரசார களத்தில் இறக்கி உள்ளது. தமிழகத்தில் பிரசாரத்திற்கு மறுத்த குஷ்பு தெலுங்கானா மாநிலத்தில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பல்வேறு சமுதாயங்களின் தலைவர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பா.ஜனதா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் உள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் முதல்கட்டமாக பெங்களூரு, மைசூரு உள்பட 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், 2-வது கட்டமாக வருகிற 7-ந் தேதி பெலகாவி, பல்லாரி, உத்தரகன்னடா, தார்வார், பாகல்கோட்டை, சிவமொக்கா, தாவணகெரே, கலபுரகி உள்பட 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    ஏற்கனவே முதல்கட்ட தேர்தலுக்காக பெங்களூரு, மங்களூரு, சிக்பள்ளாப்பூர், மைசூருவில் பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் பங்கேற்றதுடன், வாகன பேரணியும் நடத்தி இருந்தார். 2-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள சிவமொக்கா, கலபுரகி தொகுதிகளிலும் பிரதமர் மோடி ஏற்கனவே பிரசாரம் செய்திருந்தார். இந்த நிலையில், கர்நாடகத்தில் 2-வது கட்ட தேர்தலிலும் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    அதன்படி, பெலகாவி, உத்தரகன்னடா, தாவணகெரே, பாகல்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஒரேநாளில் பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக கர்நாடகத்தில் பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். நேற்று மாலை கோவாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து இரவில் பெலகாவி சாம்புரா விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்திறங்கினார். அவருக்கு, பல்வேறு சமுதாயங்களின் தலைவர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பெலகாவியில் உள்ள ஐ.டி.சி. ஓட்டலில் இரவு பிரதமர் மோடி ஓய்வெடுத்தார்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் பெலகாவி மாலினி சிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அங்கு பெலகாவி மற்றும் சிக்கோடி தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேச உள்ளார். பின்னர் பெலகாவியில் இருந்து மதியம் உத்தரகன்னடா மாவட்டம் சிர்சிக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

    மதியம் 1 மணியளவில் சிர்சியில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி பேச உள்ளார். அதன்பிறகு, சிர்சியில் இருந்து தாவணகெரே மாவட்டத்திற்கு அவர் செல்ல உள்ளார். தாவணகெரேவில் மதியம் 3 மணியளவில் நடக்கும் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். அங்கு கூட்டம் நிறைவு பெற்றதும், தாவணகெரேயில் இருந்து பல்லாரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார்.

    பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டேயில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் பா.ஜனதா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அங்கு முன்னாள் மந்திரி ஸ்ரீராமுலுக்கு அவர் ஆதரவு திரட்ட உள்ளார். பின்னர் இன்று இரவு ஒசப்பேட்டேயில் உள்ள ஓட்டலிலேயே பிரதமர் மோடி தங்குகிறார். நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் ஒசப்பேட்டேயில் இருந்து பாகல்கோட்டைக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். பின்னர் பாகல்கோட்டையில் மதியம் 12.15 மணியளவில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். கர்நாடகாவில் பிரதமர் மோடி தொடர்ந்து 2 நாட்கள் பிரசாரம் செய்வதால் பா.ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என முணுமுணுக்கப்படுகிறது.
    • அவர்களால் மூன்று இலக்க இடங்களை பிடிக்க முடியாது அல்லது ஆட்சி அமைப்பதற்கான கதவை தட்ட முடியாது.

    பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் உள்ள கோலாபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவியை சுழற்சி முறையில் வழங்க முடிவு செய்துள்ளது. துணை முதல்வராக இருக்கும் நபரிடம் 2.5 ஆண்டுகள் கழித்து முதல்வர் பதவியை வழங்க திட்டமிட்டுள்ளது. சத்தீஸ்கர் மற்றம் ராஜஸ்தானில் இதே ஏற்பாட்டை செய்திருந்தனர்.

    கர்நாடகா மாநிலத்தின் மாடலான ஓபிசி இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களை சேர்த்ததை மற்ற இடங்களிலும் நீட்டிக்க காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சமூக நீதியை கொலை செய்ய சபதம் செய்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை மாற்றி மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கி தலித் மற்றும் ஓபிசிக்களின் இடஒதுக்கீடு பயனை பறிக்க விரும்புகிறது. காங்கிரஸ் கட்சி ராமர் கோவிலுக்கு எதிராக மட்டும் இருக்கவில்லை. கும்பாபிஷேகத்திற்கான அழைப்பையும் நிராகரித்தது.

    கோலாபூர் கால்பந்து முனையம் என அறியப்படுகிறது. 2-வது கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் வெறுப்பு அரசியலில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கூட்டணி இரண்டு சுய கோல்களை (Self-Goals) அடித்துள்ளபோது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2-0 என முன்னிலை வகிக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும்.

    3-வது கட்ட தேர்தலில் வாக்காளர்கள் அதுபோன்று கோல் அடிப்பார்கள் என நம்புகிறேன். அதன்மூலம் இந்தியா கூட்டணி தோற்கடிக்கப்படும். அடுத்தடுத்த கட்ட தேர்தல்களில் இந்தியா கூட்டணி தோல்வியை சந்திக்க வேண்டும்.

    காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 37 திரும்ப கொண்டு வரப்படும், சிஏஏ ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மோடியின் முடிவை யாராலும் மாற்ற முடியுமா?, அப்படி செய்தால், அதன் பின் விளைவு என்ன என்பது அவர்களுக்கு தெரியுமா?.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என முணுமுணுக்கப்படுகிறது. அவர்களால் மூன்று இலக்க இடங்களை பிடிக்க முடியாது அல்லது ஆட்சி அமைப்பதற்கான கதவை தட்ட முடியாது. இருந்தபோதிலும் அவர்கள் வாய்ப்பு பெற்றால் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒவ்வொரு பிரதமர் என்ற திட்டத்தை வைத்துள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • 2019-ல் போன்றே தற்போதும் சிறப்பானதொரு வெற்றியை ஐக்கிய ஜனநாயக முன்னணி பெறும் என எதிர்பார்க்கலாம்.
    • ராஜஸ்தானில் காங்கிரஸ் பல இடங்களை வென்று அமோக வெற்றி பெறும்.

    புதுடெல்லி :

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மோடி சர்கார் போய்விட்டது. சில நாட்களாக பிஜேபி சர்கார் தான். அதுவும் நேற்றிலிருந்து என்.டி.ஏ., சர்கார்.

    ஏப்ரல் 19 முதல் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றத்தை கவனித்தீர்களா?

    ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 19 வரை காங்கிரசின் தேர்தல் அறிக்கை பிரதமர் மோடியால் புறக்கணிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் அறிக்கை புதிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

    நன்றி, பிரதமரே! எனக்கூறியுள்ளார்.

    மற்றொரு பதிவில்,

    நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலங்களில் இருந்து வரும் செய்திகள் காங்கிரசுக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது.

    2019-ல் போன்றே தற்போதும் சிறப்பானதொரு வெற்றியை ஐக்கிய ஜனநாயக முன்னணி பெறும் என எதிர்பார்க்கலாம்.

    கர்நாடகாவில் நேற்று தேர்தல் நடந்த 14 தொகுதிகளில், 2019ல் காங்கிரஸ் தனது 1 மதிப்பெண்ணில் இருந்து பெரும் முன்னேற்றம் அடையும்.

    ராஜஸ்தானில் காங்கிரஸ் பல இடங்களை வென்று அமோக வெற்றி பெறும் என பதிவிட்டுள்ளார்.

    • அரசு 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
    • முதல் மந்திரியின் இந்த விமர்சனம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி அடுத்த வாரம் 3 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடியை கருநாக பாம்பு என தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி ஆவேசமாக விமர்சனம் செய்துள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு மூன்று சட்டங்களை திரும்ப பெற செய்வதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு மோடிக்கு எதிராக போராடினார்கள்.


    இதனால் அரசு 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் விவசாயிகள் அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் படி மோடியை வற்புறுத்தினார்கள்.

    இந்த சம்பவத்தை மோடி ஒருபோதும் மறக்க மாட்டார். அவர் கருநாகம் போன்றவர். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்று விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கி விவசாயிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 400 இடங்களில் வெற்றி பெற நினைக்கிறார்.

    அதுபோல் நடந்தால் விவசாயிகளை கடிக்க மோடி மீண்டும் வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல் மந்திரியின் இந்த விமர்சனம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தேர்தலின் போது வாக்குகளை பெற சாதி அல்லது மதவகுப்புவாத உணர்வுகளை தூண்டிவிடக்கூடாது.
    • தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் புதுச்சேரி சமூக அமைப்பினர் புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோத்துங்கனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தேர்தலின் போது வாக்குகளை பெற சாதி அல்லது மதவகுப்புவாத உணர்வுகளை தூண்டிவிடக்கூடாது. ஆனால் பிரதமர் மோடி ராஜஸ்தான் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். அவரது பேச்சின் தாக்கம் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இருவரது மனங்களிலும் எத்தகைய தாக்கம் மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டியுள்ளது.

    தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக திட்டமிட்டு இந்தியாவில் மத வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பிரதமர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அவரது தேர்தல் பிரசாரத்துக்கு தடை விதிக்கவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களிடம் இருந்து ராணுவ பணியை பறித்தார்.
    • 20 முதல் 25 பேரை கோடீஸ்வரர்களாக்கி, அவர்களுக்கு நாட்டின் வளத்தை கொடுத்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    நீங்கள் பிரதமர் மோடியின் பேச்சை கேட்டிருப்பீர்கள். அவர் பயப்படுகிறார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களிடம் இருந்து ராணுவ பணியை பறித்தார். 20 முதல் 25 பேரை கோடீஸ்வரர்களாக்கி, அவர்களுக்கு நாட்டின் வளத்தை கொடுத்துள்ளார்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    400 இடங்களில் வெற்றி என்பதை இலக்காக வைத்து பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது. முதல் கட்ட தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்கவில்லை. இதனால் பா.ஜனதா பிரச்சனையை திசைதிருப்ப முயற்சிக்கிறது என காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. பாஜனதாவுக்கு 150 இடங்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை எனவும் காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது.

    ×