search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • வேளாண்மை அலுவலர் வசந்த் குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • பேண்ட், சுடிதார், புடவை உள்ளிட்ட புது துணிகளை பறிமுதல் செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் சமத்துவபுரம் அருகே சித்தூர் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேளாண்மை அலுவலர் வசந்த் குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது உடனே அவற்றை மடக்கி சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தினுள் இருந்த பெட்டி பெட்டியான புது துணிகளால் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக காரை முழுவதுமாக சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர்  சுமார் 20,000 ஆயிரம் மதிப்பிலான ஜீன்ஸ் பேண்ட், சுடிதார், புடவை உள்ளிட்ட புது துணிகளை பறிமுதல் செய்தனர்.

    உடனடியாக காரில் பயணித்த வாலிபர்கள் நாங்கள் புதுத் துணியை துணிக்கடைகளுக்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நாங்கள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளோம் என தேர்தல் பறக்கும் படையினரிடம் தெரிவித்தார் இருந்தபோதிலும் சோதனைக்கு பின் குஜராத் வாலிபர்கள் புது துணிகளை கொண்டு செல்லும் ஆவணங்களை குஜராத்தில் இருந்து வாட்ஸ் அப் மூலம் பில்களை காண்பித்த பிறகு அவற்றை சோதனை செய்த அதிகாரிகள் காரில் இருந்த வாலிபர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • பெரியாண்டவர், பெரியாயி மயான கொள்ளை நிறைவு விழா.
    • சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் பெரியாண்டவர், பெரியாயி மயான கொள்ளை நிறைவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    இந்நிகழ்வில் அங்காள பரமேஸ்வரி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அமர்ந்து மாடவீதி, குளத்து தெரு, புதிய தெரு உள்ளிட்ட கிராமத்தில் முக்கிய வீதியின் வழியாக உலா வந்தது. இறுதியாக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியாயி சிலையை வலம் வந்து பக்தர்கள் கொண்டு வந்த காய்கனிகள், தானியங்கள் மற்றும் பொறிகளை சூறையாடி பெரியாயி சிலையை சுற்றி இறைத்து ஆக்ரோஷமாக பக்தர்கள் அரிவாளுடன் வலம் வருவர். 

    மேலும் வேண்டுதல் உள்ள பக்தர்கள் பெரியாண்டவர், பெரியாயி உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.

    இந்நிகழ்வைக் காண போளூர், சேத்துப்பட்டு, அவனியாபுரம், கொழப்பலூர், பெரணமல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் இருந்து பல பகுதிகளில் இருந்தும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வந்தனர்.
    • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அடுத்த நாயுடு மங்கலத்தில் பாட்டாளி மக்கள் சார்பில் கடந்த 1989-ம் ஆண்டு அக்னி கலசம் வைக்கப்பட்டது. இந்த கலசத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பஸ் நிலையம் அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தால் அக்னி கலசம் அகற்றப்பட்டது.

    இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பஸ் நிலைய கட்டுமான பணி நிறைவு பெற்றவுடன் மீண்டும் அதே இடத்தில் அக்னி குண்டம் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் சொன்னபடி அக்னி குண்டம் அமைக்கப்படாததால் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் அக்னி குண்டம் அமைக்கப்பட்டது.

    மாவட்ட நிர்வாகத்தால் அக்னி குண்டம் அகற்றப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏந்தல் பக்தவச்சலம் தலைமையில் 2-வது முறையாக புதிய அக்னி குண்டம் அமைக்கப்பட்டது.

    இதை வருவாய் துறை மற்றும் போலீசார் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாட்டாளி மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி தலைமையில் இன்று காலை திருவண்ணாமலை அண்ணா நுழைவுவாயில் அருகில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் பேரணியாக நாயுடுமங்கலம் சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாட்டில் இருந்து பல பகுதிகளில் இருந்தும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வந்தனர். இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    இந்த பேரணியால் திருவண்ணாமலை முதல் நாயுடுமங்கலம் வரை உள்ள பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியது.

    • கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம் உள்ளிட்ட கோவில்களில் கிரிவல பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.
    • கிரிவலப்பாதையில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    நேற்று இரவு முழுவதும் அருணாசலேஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டிருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அருணாசலேஸ்வரர் கோவில் கருவறையின் மேற்கு திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவருக்கு நள்ளிரவு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    இதனை தொடர்ந்து தாழம்பூ சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல லட்சம் பக்தர்கள் ஓம் நமசிவாய எனும் சிவ மந்திரத்தை உச்சரித்தவாரே பக்தி பரவசத்துடன் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை வலம் வந்து வணங்கினர்.

    கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம் உள்ளிட்ட கோவில்களில் கிரிவல பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

    கிரிவலப்பாதையில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒரே இரவில் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்ததால் நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தெருக்களிலும், சாலையோரங்களில் 4 சக்கர வாகனத்தை நிறுத்தி சென்ற வெளியூர் பக்தர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களால் சில இடங்களில் போக்குவரத்து தடையும் ஏற்பட்டது.

    திருவண்ணாமலை நகராட்சி ஈசான்ய மைதானத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்ற 12 மணி நேர சிவராத்திரி விழாவை உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி கிரிவலம் வந்த பக்தர்களும் கண்டு ரசித்தனர்.

    மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நகர் முழுவதும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பலகை கல்லில் ஐயனார் சிற்பம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர்.
    • ஐயனார் சிற்பம் ஏராளமான சிற்ப தொகுப்புகளுடன் தனித்துவமானதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது உளுந்தூர்பேட்டை வட்டத்துக்குட்பட்ட குணமங்கலம் ஊரின் ஏரிக்கரையில் பலகை கல்லில் ஐயனார் சிற்பம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர்.

    சுமார் 3 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக ஐயனார் வடிக்கப்பட்டுள்ளது. தலையின் உச்சியில் குமிழுடன் கூடிய கரண்ட மகுடம் அலங்கரிக்க, நீளமான காதுகளில் பத்ர குண்டலமும், வட்டமான முகத்தில் மீசையுடன் கழுத்தில் பட்டையான சரப்பளியை அணிகலனாக அணிந்து காட்சி தரும் ஐயனார், உத்குதிகாசனத்தில் பீடத்தின் மீது அமர்ந்து தனது இடது கையை பீடத்தின் மீது ஊன்றியும், வலது கையை காலின் மீது வைத்து தொங்கவிட்ட நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

    தோளிலிருந்து வலது காலைச் சுற்றி யோக பட்டையுடன், இடையாடை உடுத்தி அதில் குறுவாள் ஒன்றைச் சொருகி அமர்ந்துள்ள ஐயனாரின் கால்களின் அருகே ஆடும், நாயும் காட்டப்பட்டுள்ளது. மேலும் வலது காலருகே ஒரு நீர் குடுவையும், நாயின் அருகே ஒரு நீர் குடுவையும் காட்சிப் படுத்தபட்டுள்ள நிலையில், இடது தொடை அருகே சேவல் ஒன்று காட்டப்பட்டுள்ளது.

    ஐயனாரின் மேற்புற வலது பக்கத்தில் குதிரையும் இடது பக்கத்தில் சாமரம் வீசும் பணிப் பெண்ணும், அதன் அருகே மிகவும் சிதைந்து நிலையில் வணங்கிய நிலையில் ஒரு உருவமும் காட்டப்பட்டுள்ளது.

    இதுவரை விழுப்புரம் பகுதியை ஒட்டி ஏராளமான பல்லவர் கால ஐயனார் சிற்பங்கள் ஆவணம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஐயனார் சிற்பம் ஏராளமான சிற்ப தொகுப்புகளுடன் தனித்துவமானதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    ஆடை , அணிகலன் மற்றும் சிற்ப அமைதியை வைத்து இது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால ஐயனார் என்பது உறுதியாகிறது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இச்சிற்பம் இன்றும் வழிபாட்டில் சிறப்புடன் இருந்து வருகிறது.

    • தீயணைப்பு துறையினர் உதவியுடன், இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

    வேங்கிக்கால்:

    ஆந்திராவைச் சேர்ந்த 4 பேர் காரில் இன்று அதிகாலை திருவண்ணாமலை நோக்கி வந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி புதூர் அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் முற்றிலுமாக நொறுங்கியது. அதில் இருந்த 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஓடிவந்தனர். படுகாயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    தீயணைப்பு துறையினர் உதவியுடன், இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

    விபத்தில் பலியான 4 பேரும் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள். அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை-பெங்களூரு சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால், ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். சாலை நடுவில் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    தற்போது பனிமூட்டம் அதிகம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கார் விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சம்புவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகு (வயது 48). பட்டு நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் ஆரணி தனியார் வங்கிக்கு பைக்கில் சென்றார்.

    வங்கியில் இருந்து தனது கணக்கில் உள்ள ரூ.5 லட்சத்தை எடுத்தார். ஆரணி டவுன் பெரியகடை வீதியில் உள்ள நகைகடைக்கு சென்று தன் பெயரில் வைத்துள்ள நகைகளை மீட்பதற்காக சென்றார்.

    இதனால் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மீதி தொகையான ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்தை பைக்கில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு நகை கடையின் உள்ளே சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பைக்கின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்தை திருடி சென்றனர்.

    பின்னர் வெளியே வந்த ரகு வீட்டிற்கு செல்வதற்காக பைக்கை எடுக்க முயன்றார். அப்போது பைக்கின் பெட்டி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் பணம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து ரகு ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் மர்ம கும்பல் பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    அதிக நடமாட்டம் உள்ள ஆரணி டவுன் பகுதியில் பட்டப்பகலில் பைக்கின் பெட்டியை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர்.
    • அமர்வு தரிசனம், சிறப்புதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 23-ந்தேதி மாலை 4.22 மணிக்கு தொடங்கி, 24-ந் தேதி மாலை 6.18 மணிக்கு நிறைவடைகிறது.

    எனவே, 23-ந்தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித் துள்ளது. இதையொட்டி, கோவிலில் பக்தர்கள் விரை வாக தரிசனம் செய்வதற்கு வசதியாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அமர்வு தரிசனம், சிறப்புதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.
    • பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கண்ணகுருக்கை மேல் நாச்சிப்பட்டு பகுதியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.

    இக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, வரவு செலவு சம்பந்தமாக இரு தரப்பினரிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

    இதன் காரணமாக உண்டியல் திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் திருவிழாவும் நடத்தப்படவில்லை. கோவில் மட்டும் தொடர்ந்து கிராம மக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் செங்கம் தாசில்தார் முருகன் தலைமையில், பாச்சல் போலீசார் முன்னிலையில் சமரச பேச்சு வார்த்தை கூட்டம் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. அதில் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

    தொடர்ந்து மீண்டும் கோவில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

    7 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாததால் அதிலிருந்த பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் மக்கி நிறம் மாறியதோடு கிழிந்திருந்தது.

    மேலும் 2016-ம் ஆண்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளும், சமீபத்தில் செல்லாததாக அறிவித்து மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள் சில இருந்ததாகவும் தெரிகிறது. இந்த பழைய ரூபாய் நோட்டுகளை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உண்டியலில் இருந்து சேதமடையாமல் இருந்த புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறைகள் மட்டுமே எண்ணப்பட்டது.

    மேலும், பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    7 ஆண்டுகளாக இருதரப்பு பிரச்சினையால் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் அதிலிருந்த பணம் வீணானது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

    • அயோத்தியில் 3200 ராமர் கோவில்கள் இருக்கிறது. இன்றைக்கு மோடி கட்டி உள்ளது 3201-வது கோவில் அவ்வளவு தான்.
    • பாபர் மசூதி இருந்த இடத்திற்கு 3 கிலோ மீட்டருக்கு அப்பால் தான் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகி இல்ல திருமண விழாவில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.

    பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் பொருளாதாரம் எங்கே வளர்ந்து இருக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருகிறேன் என்று சொன்னார்கள் வேலை தந்தார்களா?

    விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக ஆக்குகிறேன் என்று சொன்னார்கள் செய்தார்களா, பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு கருப்பு பணம் மீட்கப்பட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 15 லட்ச ரூபாய் போடப்படும் என்று சொன்னார்கள் போட்டார்களா, கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்தார்களா, அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய தொழிற்சாலைகள் வந்துள்ளதா, எந்த வகையில் இந்தியாவின் பொருளாதார முன்னேறி இருக்கின்றது.

    மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் மூலமாக 15 கோடி குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து வெளியே கொண்டு வந்தார். அதனை ஐ.நா. மன்றம் பாராட்டி சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

    உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோலையும், டீசலையும் விற்பது மோடி அரசாங்கம் தான். அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவினுடைய பொருளாதாரம் சீரழிந்து உள்ளது.

    அதனால் தான் அவர்கள் மற்றதை பேசுவதை விட்டுவிட்டு ராமர் கோவில் கையில் எடுத்துள்ளனர். ராமருக்கு கோவில் கட்டக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. எல்லாருமே ராமருடைய பக்தர்கள் தான்.

    வட இந்தியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் கூட ராமர் கோவிலை கட்டுங்கள் என்று தான் சொல்கிறார்கள். மசூதியை இடித்து விட்டு ராமருக்கு என்று தனியாக கோவில் கட்ட வேண்டாம் என்று தான் அன்று காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. கட்சிகள் சொன்னது. அயோத்தியில் 3200 ராமர் கோவில்கள் இருக்கிறது. இன்றைக்கு மோடி கட்டி உள்ளது 3201-வது கோவில் அவ்வளவு தான்.

    பாபர் மசூதி இருந்த இடத்திற்கு 3 கிலோ மீட்டருக்கு அப்பால் தான் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ஏன் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

    மக்களை திசை திருப்புவதற்காக எல்லாவற்றிலும் பொய் சொல்கின்றனர்.

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு எல்லா இடத்திலும் ஏராளமான மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். கோவில் கட்டுவதால் இன்றைக்கு தேர்தலில் யாரும் ஜெயித்து விட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலை அமைப்பதற்கு வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி இல்லை என போலீசார் உதவியுடன் சிலையை அகற்றினர்.
    • அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் கவனத்திற்கு மீண்டும் அம்பேத்கர் சிலை அமைக்கும் வரை பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் எனக் கூறியுள்ளனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட தோக்கவாடி கிராமத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது.

    இந்த சிலை அமைப்பதற்கு வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி இல்லை என போலீசார் உதவியுடன் சிலையை அகற்றினர். அதனை செங்கம் பேரூராட்சி வளாகத்தில் பாதுகாப்புடன் வைத்தனர்.

    இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கேட்டும் இதுவரை அனுமதி கிடைக்காததால் அப்பகுதி மக்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக பதாகை வைத்துள்ளனர்.

    அதில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் கவனத்திற்கு மீண்டும் அம்பேத்கர் சிலை அமைக்கும் வரை பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் எனக் கூறியுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 10.06 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 11.22 மணிக்கு நிறைவடைகிறது.

    கிரிவலத்தையொட்டி தமிழகம் மட்டும் இன்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கினர்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

    கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிலோ மீட்டர் தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை திருக்கோவில், இடுக்குப் பிள்ளையார் கோவில்களை வழிபட்டு கிரிவலம் சென்றனர்.

    தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ஆகியவை நேற்றும், இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பொது தரிசனம் மட்டும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இன்று முதல் வருகிற 28-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், கிரிவல பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது.


    எனவே, அருணாசலேஸ்வரர் கோவில் வெளி பிரகாரம் வரை பக்தர்கள் தரிசன வரிசையில் காத்திருந்தனர்.

    தொடர்ந்து இன்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

    திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, தைப்பூச நட்சத்திரம் இன்று காலை 9.14 மணிக்கு தொடங்கியது.

    எனவே, கிரிவலப் பாதை யில் உள்ள ஈசான்ய குளத்தில் இன்று காலை தீர்த்தவாரி நடந்தது.

    இதைத் தொடர்ந்து, தவில், நாதஸ்வரம் இசை முழங்க ஈசான்ய குளக்கரையில் அண்ணாமலையார் எழுந்தருளினார். வரும் மாசி மகத்தன்று, பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியில் வல்லாள மகாராஜாவுக்கு நடைபெறும் திதி மற்றும் தீர்த்தவாரியில் சந்திரசேகரர் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.

    ×