search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை"

    • வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.
    • யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    தருமபுரி:

    ஒற்றை ஆண் யானை ஒன்று, கடந்த 15 நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல் வனப்பகுதியை விட்டு வெளியேறியது. இந்த யானை கிராமப் பகுதிகளில் சுற்றி திரிந்து, கடந்த வாரம் தருமபுரி நகர் பகுதி வரை சென்றது. மேலும் தருமபுரியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடனே தருமபுரிக்கு வந்து அட்டகாசம் செய்து வந்த ஒற்றை யானையை தொப்பூர் வனப் பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த ஒற்றை யானை மீண்டும் பொம்மிடி கிராமப் பகுதியில் நுழைந்தது.

    குறிப்பாக முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, காளிக்கரம்பு வழியாக சுற்றிய யானையை கம்பைநல்லூர் வழியாக கொண்டு சென்று பாலக்கோடு வனப்பகுதியில் விட வன துறை தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த யானை சில்லாரஅள்ளியில் இருந்து கொடகாரஅள்ளி பகுதியில் மைலாப்பூர் கிராமத்தில் தஞ்சம் புகுந்தது.

    வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வத்தல் மலை அடிவாரபகுதியில் நேற்று இரவு நேரத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டிலிருந்து வெளியேறிய யானை விவசாய தோட்டங்களை சேதப்படுத்தி உணவை உட்கொண்டது. அப்போது யானைக்கு வனத்துறையினர் இரண்டு மயக்க ஊசி செலுத்தினர்.

    உடனடியாக கிரேன் மூலம் யானையை மீட்டு ஒகேனக்கல் அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப் பகுதிகளுக்குள் விடுவதற்காக யானையை வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர்.

    கடந்த 3 வாரமாக மக்களை அச்சுறுத்தி வந்த யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    • பலாப்பழங்களை ருசிப்பதற்காக காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களுக்கு திரண்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
    • தொடர்ந்து பலா மரத்தின் மேல் கால் போட்டு ஏறி நின்றுகொண்ட யானை, மீண்டும் துதிக்கையை உயர்த்தி மரத்தின் உச்சியில் விளைந்து தொங்கிய பலாப்பழங்களை பறித்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களில் ஊடுபயிராக பலாப்பழ மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன. அங்கு தற்போது பலாப்பழ சீசன் என்பதால் அங்குள்ள மரங்களில் பழங்கள் காய்ந்து தொங்குகின்றன. இதனால் பலாப்பழங்களை ருசிப்பதற்காக காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களுக்கு திரண்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் ஒரு காட்டு யானை நேற்று கூடலூர் ஓவேலி பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள தேயிலை-காப்பி தோட்டத்துக்குள் புகுந்து அங்கு விளைந்து நிற்கும் பலாமரங்களை நோட்டம் பார்த்தது. அப்போது ஒரு மரத்தின் உச்சியில் மட்டும் காய்கள் பழுத்து தொங்குவது தெரியவந்தது. தொடர்ந்து பலாமரத்தின்கீழ் நின்றபடி தும்பிக்கை மூலம் பலாப்பழங்களை பறிக்க முயன்றது. ஆனாலும் மரத்தின் உச்சியில் பழங்கள் இருந்ததால் யானைக்கு எட்டவில்லை. தொடர்ந்து பலா மரத்தின் மேல் கால் போட்டு ஏறி நின்றுகொண்ட யானை, மீண்டும் துதிக்கையை உயர்த்தி மரத்தின் உச்சியில் விளைந்து தொங்கிய பலாப்பழங்களை பறித்தது. பின்னர் அந்த பழங்களை தரையில் போட்டு நாசூக்காக மிதித்தது. இதில் அந்த பழங்கள் பிளந்து, சுளைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. தொடர்ந்து பலாக்காய்களை லாவகமாக தூக்கி நிறுத்தி, இரண்டாக பிளந்த காட்டு யானை, அவற்றில் இருந்த பழச்சுளைகளை ஆசைதீர ருசித்து தின்றது. பின்னர் மீண்டும் அடர்ந்த காட்டுக்குள் சென்றுவிட்டது.

    இந்த காட்சியை, அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்தார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

    • பொதுவாக யானைகள் கம்பீரமான உயிரினமாக பார்க்கப்படுகிறது.
    • யானை குச்சியை பயன்படுத்தி தன்னையே அழகு படுத்துவதை பார்க்க அழகாக இருப்பதாக பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் வன விலங்குகள் பற்றிய வீடியோக்கள் அதிகளவில் பகிரப்படுவது உண்டு. அவற்றில் யானைகள் மற்றும் பாம்புகள் குறித்த வீடியோக்கள் பயனர்களை அதிகம் கவரும். அந்த வகையில் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட ஒரு யானையின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் யானை ஒன்று தனது கால் விரலை ஒரு குச்சியை பயன்படுத்தி சுத்தம் செய்யும் காட்சிகள் உள்ளது.

    பொதுவாக யானைகள் கம்பீரமான உயிரினமாக பார்க்கப்படுகிறது. அவற்றால் நம்ப முடியாத பல பணிகளை செய்ய முடியும் என்றாலும் தற்போது இந்த யானை குச்சியை பயன்படுத்தி தன்னையே அழகு படுத்துவதை பார்க்க அழகாக இருப்பதாக பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர். 7.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும், ஏராளமான மறு டுவிட்டையும் பெற்றுள்ள இந்த வீடியோ பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருப்பதாக பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
    • வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சேஷன் நகர் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, வாழை தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் விவசாயி விஜயகுமார் (48) என்பவர் தோட்டத்தில் புகுந்து வாழை மரத்தை சேதம் செய்தது.

    இதை கண்ட விவசாயி அக்கம் பக்கத்து விவசாயிகள் உதவியுடன் யானையை விரட்டினர். 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை வனப்பகுதியில் விரட்டப்பட்டது. யானையால் 200 வாழைகள் சேதம் ஆனது.

    வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் தொடர்ந்து வனவிலங்குகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்து சேதம் செய்து வருவது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தாய் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.
    • பெண் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதியில் உள்ள சாலையில் சர்வ சாதாரணமாக நடமாடி வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி கோவில் அருகே குட்டியுடன் தாய் யானை ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த தாய் யானை திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தது.

    இதைப் பார்த்த குட்டி யானை தாய் யானையை சுற்றி சுற்றி வந்து சத்தமாக பிளறியது. யானை சத்தம் கேட்டு அருகில் உள்ள மக்கள் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    40 வயது மதிக்கத்தக்க தாய் யானைக்கு குளுக்கோஸ் மற்றும் குடிப்பதற்கு தண்ணீர், உண்பதற்கு இலைகள் போன்றவற்றை வனத்துறையினர் அளித்தனர். இருந்தாலும் தாய் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.

    தொடர்ந்து வனத்துறையினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் உயிரிழந்தது.

    இரண்டு நாட்களாக தொடர் சிகிச்சை அளித்த நிலையில் பெண் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பாகுபலி யானை கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் வட்டார பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது.
    • பாகுபலி யானையின் நடமாட்டம் வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம், ஓடந்துறை, தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாகுபலி யானை சுற்றி திரிந்து அங்குள்ள பயிர்களை தின்றும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தது.

    தொடர்ந்து அந்த யானையை மயக்கஊசி போட்டு பிடிப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானை திடீரென அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றுவிட்டதால் வனத்துறையினர் தற்காலிகமாக தேடுதல் வேட்டையை கைவிட்டனர்.

    இந்த நிலையில் பாகுபலி யானை கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் வட்டார பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது. மேட்டுப்பாளையம்-கோத்தகிரி ரோட்டில் சம்பவத்தன்று மதியம் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது பாகுபலி யானை திடீரென மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு வந்தது.


    இதனை பார்த்து வாகனஓட்டிகள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே ரோட்டை கடக்க முயன்ற யானை திடீரென அங்கு நின்றிருந்த ஒரு காரை லேசாக முட்டி தள்ளி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது. பின்னர் மேட்டுப்பாளையம் ரோடு வழியாக சிறுமுகை காட்டுக்குள் சென்று விட்டது.

    மேட்டுப்பாளையம்-கோத்தகிரி ரோட்டில் பாகுபலி யானையின் நடமாட்டம் வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், மேற்குதொடர்ச்சி மலையில் கோடைக்காலம் காரணமாக கடும் வறட்சி நிலவுவதால் பாகுபலி யானை தண்ணீர் மற்றும் உணவு தேடி அடர்ந்த காட்டுக்குள் இருந்து வெளியேறி வந்து உள்ளது. வனப்பகுதியில் கோடைமழை பெய்து பசுமை திரும்பினால் காட்டு யானைகள் மீண்டும் மலைஅடிவாரத்துக்கு வரும் நிலைமை ஏற்படாது. மேலும் அடர்ந்த காட்டுக்குள் உள்ள விலங்குகளின் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர்.

    • குட்டி யானைக்கு பால் மற்றும் தண்ணீர் வழங்கி வருகின்றனர்.
    • 2 காட்டு யானைகள் திடீரென வெளியேறி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண் யானை அருகே சத்தமிட்டவாறு வந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதியில் உள்ள சாலையில் சர்வ சாதரணமாக நடமாடி வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி கோவில் அருகே நேற்று இரவு குட்டியுடன் தாய் யானை ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த தாய் யானை திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தது.

    இதைப் பார்த்த குட்டி யானை தாய் யானையை சுற்றி சுற்றி வந்து சத்தமாக பிளறியது. யானை சத்தம் கேட்டு அருகில் உள்ள மக்கள் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    40 வயது மதிக்கத்தக்க தாய் யானைக்கு குளுக்கோஸ் மற்றும் குடிப்பதற்கு தண்ணீர், உண்பதற்கு இலைகள் போன்றவற்றை வனத்து றையினர் அளித்து வருகின்றனர். இருந்தாலும் தாய் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.

    சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. 2 மாதமே ஆன குட்டி யானை தாய் யானையை சுற்றி சுற்றி வந்து சத்தமிட்டு வருகிறது. பண்ணாரி-பவானிசாகர் சாலையின் அருகிலேயே யானை படுத்திருப்பதால், குட்டி யானை சாலைக்கு சென்று வாகனங்களில் அடிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக வனத்துறையினர் 5 அடி ஆழத்தில் ஒரு குழியை தோண்டி அந்தக் குழிக்குள் குட்டி யானையை வைத்து பராமரித்து வருகின்றனர்.

    குட்டி யானைக்கு பால் மற்றும் தண்ணீர் வழங்கி வருகின்றனர். தாயை விட்டு பிரிய முடியாமல் இருக்கும் 2 மாத குட்டி யானையின் பாச போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தொடர்ந்து வனத்துறையினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் திடீரென வெளியேறி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண் யானை அருகே சத்தமிட்டவாறு வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் உடனடியாக பட்டாசுகளை வெடித்து அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    • திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் யானைகள் உலா வருகின்றன.
    • ஸ்ரீவாரி படால பாதை மற்றும் தர்மகிரி வேதப்பள்ளி பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள பாபவிநாசம், ஸ்ரீகந்தம் வனத்தில் திடீரென 10 யானைகள் வனப்பகுதியில் இருந்து வந்தன.

    வனத்தை பாதுகாக்க அமைக்கப்பட்ட தடுப்பு வேலியையும், சந்தன மரங்களையும் பிடுங்கி எரிந்து யானைகள் நாசம் செய்தன.

    ஸ்ரீகண்டம் வனப்பகுதியில் ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பதி தேவஸ்தான பாதுகாவலர்கள் மற்றும் வனத்துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஏராளமான வனத்துறையினர் வந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். அப்போது அங்குள்ள குளத்தில் யானைகள் தண்ணீர் குடித்தன.

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் யானைகள் உலா வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் யானைகள் தண்ணீருக்காக அருகில் உள்ள ஸ்ரீகண்டம்வனம் மற்றும் பார்வேட் மண்டப பகுதிகளுக்குள் புகுந்தன. ஸ்ரீவாரி படால பாதை மற்றும் தர்மகிரி வேதப்பள்ளி பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது. கடந்த ஆண்டு முதல் யானைகள் ஒன்றாக சாலையை கடந்து பக்தர்களை பயமுறுத்தியது.

    சமீபத்தில், கோடை காலம் தொடங்கும் முன், திருப்பதி மலை வனப்பகுதியில் யானைகள் கூட்டம், ஸ்ரீகண்டம் வனத்துக்குள் புகுந்து வேலியை நாசம் செய்ததால், வனத்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

    மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • யானைகள் மிரண்டு தாக்கும் அபாய நிலை உள்ளது.
    • சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் சாலையோரத்தில் நிற்கும் யானைகளின் அருகிலேயே வாகனத்தை நிறுத்துகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கோடை காலத்திற்கு முன்பே வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் யானைகள் கூட்டம் கூட்டமாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளில் சுற்றி திரிகின்றன. கோடை காலம் துவங்குவதற்கு முன்பே ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் யானைகள் அவ்வப்போது யானைகள் நுழைந்து விவசாய பயிர்களை நாசம் செய்வது வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக இடம்பெயர்ந்துள்ளன. ஒகேனக்கல் சுற்றுலா தளம் பென்னாகரம் பகுதியில் இருந்து 11 கிலோமீட்டர் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இடம்பெயர்ந்துள்ள யானைகள் பென்னாகரம், ஒகேனக்கல் செல்லும் சாலையின் ஓரங்களில் உள்ள மரங்களை உடைத்தும், தண்ணீருக்காக கணவாய் பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் சிறிய தொட்டிகளில் தண்ணீர் குடிக்க பென்னாகரம் ஒகேனக்கல் செல்லும் சாலைக்கு பகல் நேரங்களிலும் இரவு நேரங்களில் வந்து செல்கிறது.

    அப்போது இரவு நேரங்களில் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள், யானையைக் கண்டதும் அச்சத்தில் வாகனங்களை நிறுத்துவது, வாகன ஒலி, ஒளி எழுப்புவது போன்ற செயல்களின் ஈடுபடுகின்றனர். இதனால் யானைகள் மிரண்டு தாக்கும் அபாய நிலை உள்ளது.

    ஒகேனக்கல் வனப்பகு தியில் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனத்துறையினரின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பலகைகளை வாகன ஒளியில் யானைகள் மிரண்டு உடைத்திருப்பதால் யானைகள் கடக்கும் பகுதிகளை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் சாலையோரத்தில் நிற்கும் யானைகளின் அருகிலேயே வாகனத்தை நிறுத்துகின்றனர்.

    வறட்சி நிலவும் காலங்களில் ஆண்டுதோறும் யானைகள் ஒகேனக்கல் பகுதிக்கு இடம் பெயரும் சூழல் தொடர்ந்து நிகழ்வதால் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனத்து றையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டும், மடம் சோதனைச் சாவடி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

    • யானை தக்காளி செடிகளை மிதித்து சேதப்படுத்தியதில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தக்காளிகள் அனைத்தும் வீணானது.
    • யானை மீண்டும் கிராமத்துக்குள் புகாத வண்ணம் வனப்பகுதியை ஒட்டி அகழி அமைக்க வேண்டும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

    இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சேஷன் நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 45) என்பவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிர் செய்துள்ளார்.

    நேற்று இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை சதீஷ் தோட்டத்துக்குள் புகுந்து தக்காளி செடிகளை மிதித்து சேதப்படுத்தியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ் மற்ற விவசாயிகளை ஒன்று திரட்டி காட்டு யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    யானை தக்காளி செடிகளை மிதித்து சேதப்படுத்தியதில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தக்காளிகள் அனைத்தும் வீணானது. இதற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சதீஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இதே போல் யானை மீண்டும் கிராமத்துக்குள் புகாத வண்ணம் வனப்பகுதியை ஒட்டி அகழி அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிரம்பால் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
    • பாகன்களை குருவாயூர் தேவசம்போர்டு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று குருவாயூர் கிருஷ்ணன் கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமாக 30-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அவை அனைத்தும் கோவில் அருகிலேயே பாகன்களல் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    கிருஷ்ணன் கோவிலில் தினமும் இரவு சீவேலி என்று அழைக்கப்படும் சுவாமி வீதி உலா நடைபெறுவது வழக்கம். அப்போது யானை மீது சுவாமி விக்ரகம் வைக்கப்பட்டு வீதிஉலா நடத்தப்படும். சீவேலி நிகழ்ச்சியில் பங்கேற்கும் யானைகள் தனியாக ஒரு இடத்தில் பராமரிக்கப்படுகின்றன.

    அதில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய யானையும் அடங்கும். இந்நிலையில் சீவேலியில் பங்கேற்கும் ஜெயலலிதா வழங்கிய யானை உள்பட 2 யானைகளை, அதன் பாகங்கள் பிரம்பால் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    யானைகள் வலி தாங்க முடியாமல் பிளிறிய போதும், பாகன்கள் பிரம்பால் தொடர்ந்து தாக்குவது போன்று இடம்பெற்றிருந்த அந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். யானைகளை பாகன்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அதன் பாகன்களை குருவாயூர் தேவசம்போர்டு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

    • வாழைகளை நோக்கி வந்த யானையை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மலையடி வாரத்தில் கடந்த 3 மாதமாக ஒற்றை யானை முகாமிட்டு, விவசாய பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன.

    காட்டு பத்து, மேலகாடு விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழை, நெல், தென்னை, பனை மரங்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலையில் ஒற்றை யானை மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்தது. வாழைகளை நோக்கி வந்த யானையை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் சுதாரித்து கொண்டு விவசாயிகள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இதைக்கண்ட யானையும் சற்று பின்வாங்கியது. உடனடியாக விவசாயிகள் உயிரை பணயம் வைத்து பட்டாசுகள் வெடித்தும், சத்தங்கள் எழுப்பியும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து யானை அங்கிருந்து சென்றது.

    இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ஒற்றை யானை தினசரி விளைநிலங்களில் நுழைகிறது. எங்கள் பயிரை காப்பாற்ற உயிரை பணயம் வைத்துள்ளோம். யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. யானையிடமிருந்து பயிர்களையும், உடமைகளையும் காப்பாற்ற முடியாமல் திணறி வருகிறோம்.எனவே அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×