search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயிருக்கு போராடும் பெண் யானை- தாயை சுற்றி வரும் குட்டி யானையின் பாச போராட்டம்
    X

    உயிருக்கு போராடும் பெண் யானை- தாயை சுற்றி வரும் குட்டி யானையின் பாச போராட்டம்

    • குட்டி யானைக்கு பால் மற்றும் தண்ணீர் வழங்கி வருகின்றனர்.
    • 2 காட்டு யானைகள் திடீரென வெளியேறி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண் யானை அருகே சத்தமிட்டவாறு வந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதியில் உள்ள சாலையில் சர்வ சாதரணமாக நடமாடி வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி கோவில் அருகே நேற்று இரவு குட்டியுடன் தாய் யானை ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த தாய் யானை திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தது.

    இதைப் பார்த்த குட்டி யானை தாய் யானையை சுற்றி சுற்றி வந்து சத்தமாக பிளறியது. யானை சத்தம் கேட்டு அருகில் உள்ள மக்கள் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    40 வயது மதிக்கத்தக்க தாய் யானைக்கு குளுக்கோஸ் மற்றும் குடிப்பதற்கு தண்ணீர், உண்பதற்கு இலைகள் போன்றவற்றை வனத்து றையினர் அளித்து வருகின்றனர். இருந்தாலும் தாய் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.

    சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. 2 மாதமே ஆன குட்டி யானை தாய் யானையை சுற்றி சுற்றி வந்து சத்தமிட்டு வருகிறது. பண்ணாரி-பவானிசாகர் சாலையின் அருகிலேயே யானை படுத்திருப்பதால், குட்டி யானை சாலைக்கு சென்று வாகனங்களில் அடிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக வனத்துறையினர் 5 அடி ஆழத்தில் ஒரு குழியை தோண்டி அந்தக் குழிக்குள் குட்டி யானையை வைத்து பராமரித்து வருகின்றனர்.

    குட்டி யானைக்கு பால் மற்றும் தண்ணீர் வழங்கி வருகின்றனர். தாயை விட்டு பிரிய முடியாமல் இருக்கும் 2 மாத குட்டி யானையின் பாச போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தொடர்ந்து வனத்துறையினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் திடீரென வெளியேறி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண் யானை அருகே சத்தமிட்டவாறு வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் உடனடியாக பட்டாசுகளை வெடித்து அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    Next Story
    ×