search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒற்றை யானை"

    • தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம்.
    • கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான், போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வன சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறைத்து துரத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் ஆசனூர் அடுத்த காராப்பள்ளம் சோதனை சாவடியில் ஆசனூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சோதனை சாவடி அருகே வந்தது. சோதனை சாவடி அருகே வந்த ஒற்றை யானை போலீசார் மற்றும் வனத்துறையினரை தாக்குவது போன்று வந்தது.

    இதை கண்ட போலீசார், வனத்துறையினர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சுமார் 15 நிமிடம் சாலையில் ஒற்றை யானை உலா வந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    இதனால் கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மெதுவாக யானை வனப்பகுதியில் சென்றது. அதன் பின்னரே போலீசார், வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர். வாகனங்களும் சென்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மலைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வேடப்பட்டி பகுதி உள்ளது.
    • யானை நடமாட்டம் வந்த தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளளனர்.

    வடவள்ளி:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகமாக உள்ளது. இந்த யானைகள் அவ்வப்போது வனத்தைவிட்டு வெளியேறி உணவு, தண்ணீர் தேடி வனத்தையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது.

    கோவை பேரூர் அடுத்துள்ளது வேடப்பட்டி பகுதி. இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த பகுதிக்கு ஒற்றை காட்டு யானை ஒன்று வந்தது. இந்த யானை அந்த பகுதிகளில் சிறிது நேரம் சுற்றி திரிந்தது.

    பின்னர், பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலைக்கு ஒற்றை யானை வந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள நிர்மல் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் யானை புகுந்தது. அங்கு சுற்றி திரிந்த யானை, தோட்டத்தில் இருந்த மாமரத்தை பார்த்ததும் குஷியானது. மரத்தின் அருகே சென்று, மரத்தில் கால்வைத்து தனது துதிக்கையால் மாங்காய்களை ஒவ்வொன்றாக பறித்து, ருசித்து சாப்பிட்டது. பின்னர் அங்கிருந்து மீண்டும் வேடபட்டி சாலைக்கு சென்றது. தொடர்ந்து அங்கிருந்து வனத்தை நோக்கி சென்றது.

    மலைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வேடப்பட்டி பகுதி உள்ளது. இந்த இடத்திற்கு எப்படி யானை வந்தது என்பது மக்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

    யானை நடமாட்டம் வந்த தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளளனர். தோட்ட வேலைக்கு செல்வோரும் தனியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே வனத்துறையினர் இந்த பகுதிகளில், யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • ஒற்றை யானை ஒன்று உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்துள்ளது.
    • ஜெயஸ்ரீயை தாக்கிய அந்த ஒற்றைக் காட்டு யானை அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு உள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை ஆண் யானை ஒன்று உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்துள்ளது. இந்த யானை காலை நேரங்களில் வனப் பகுதிக்குள் செல்வதும், இரவில் கிராமப்புறங்களில் நுழைந்து விவசாய பயிர்களை அழிப்பதுமாக இருந்து வந்துள்ளது.

    இதனை கடந்த 3 நாட்களாக பாலக்கோடு-காரிமங்கலம் இடையில் உள்ள ஆராதஹள்ளி கூட்ரோடு பகுதியில் உள்ள மலைப் பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனை பாலக்கோடு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு காரிமங்கலம் பகுதியை நோக்கி யானை சென்றுள்ளது. அப்பொழுது சவுளுக்கொட்டாய் பகுதிகளில் விவசாய நிலங்களில் நுழைந்துள்ளது. இரவு நேரம் என்பதால், வனத்துறையினரால் யானையினை கண்காணித்து வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் யானை சென்ற திசை தெரியாமல் வனத்துறையினர் அதே பகுதியில் சுற்றி தேடி வந்தனர்.

    இந்நிலையில் அதிகாலை காரிமங்கலம் அருகே உள்ள சவுளுக்கொட்டாய் பகுதியில் பெருமாள் என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ என்பவர், அதிகாலை 5.30 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வயல் வழி பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென வந்த யானை ஜெயஸ்ரீயை தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்து சுயநினைவின்றி அதே இடத்தில் அவர் விழுந்து கிடந்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து இயற்கை உபாதை கழிக்க சென்ற ஜெயஸ்ரீ நீண்ட நேரமாக வராததால், வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். அப்பொழுது சுய நினைவின்றி படுகாயத்துடன் கிடந்துள்ளார். அதன் அருகில் கரும்பு தோட்டத்தில் ஒற்றை யானை இருந்தது தெரிய வந்தது.

    இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர், ஜெயஸ்ரீயை உடனடியாக அந்த இடத்தில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர். அப்பொழுது மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது நுரையீரல் பகுதியில் யானை பலமாக தாக்கி இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஜெயஸ்ரீ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் ஜெயஸ்ரீயை தாக்கிய அந்த ஒற்றைக் காட்டு யானை அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு உள்ளது. இதனை பாலக்கோடு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பெருமாள் ஜெயஸ்ரீ தம்பதியினருக்கு மூன்று மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் ஒற்றை ஆண் யானை தாக்கியதில், படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், ஜெயஸ்ரீ சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • வாழைகளை நோக்கி வந்த யானையை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மலையடி வாரத்தில் கடந்த 3 மாதமாக ஒற்றை யானை முகாமிட்டு, விவசாய பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன.

    காட்டு பத்து, மேலகாடு விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழை, நெல், தென்னை, பனை மரங்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலையில் ஒற்றை யானை மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்தது. வாழைகளை நோக்கி வந்த யானையை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் சுதாரித்து கொண்டு விவசாயிகள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இதைக்கண்ட யானையும் சற்று பின்வாங்கியது. உடனடியாக விவசாயிகள் உயிரை பணயம் வைத்து பட்டாசுகள் வெடித்தும், சத்தங்கள் எழுப்பியும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து யானை அங்கிருந்து சென்றது.

    இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ஒற்றை யானை தினசரி விளைநிலங்களில் நுழைகிறது. எங்கள் பயிரை காப்பாற்ற உயிரை பணயம் வைத்துள்ளோம். யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. யானையிடமிருந்து பயிர்களையும், உடமைகளையும் காப்பாற்ற முடியாமல் திணறி வருகிறோம்.எனவே அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.
    • அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியை விட்டு வெளியேறும் ஒற்றை காட்டு யானை கிராமங்களுக்குள் புகுந்து விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. பல நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை விவசாய தோட்டத்தில் காவலில் இருந்த விவசாயியை யானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட முதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (36). விவசாயி. அதே பகுதியில் 3 ஏக்கர் நிலத்தில் ராகி பயிரிட்டு இருந்தார். அது அறுவடைக்கு தயாராக இருந்தது.

    இந்த பகுதி வனப்பகுதியையொட்டி இருப்பதால் அவ்வப்போது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.

    இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமுவும் தினமும் இரவில் தனது விவசாய தோட்டத்தில் காவலில் ஈடுபட்டு வந்தார். அவருடன் அவர் வளர்க்கும் நாயும் இரவு நேரத்தில் அவருடன் காவலில் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ராமு தனது விவசாய தோட்டத்தில் காவலில் இருந்துள்ளார். இன்று அதிகாலை நேரம் ராமு நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ராமு ராகி தோட்டத்துக்குள் புகுந்தது. யானை தோட்டத்துக்குள் புகுந்ததை பார்த்த அவரது நாய் குரைத்தது.

    இதைக்கேட்டு திடுக்கிட்டு எழுந்த ராமு யானை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த ஒற்றை காட்டு யானை ராமுவை தாக்கி மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் யானை அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. ராமுவின் நாய் நீண்ட நேரம் குரைத்துக் கொண்டிருந்ததால் அக்கம் பக்கத்தில் காவலில் இருந்த விவசாயிகள் அவர் தோட்டத்துக்கு வந்தனர்.

    அப்போது ராமு யானை தாக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவரது உறவினர்கள் ராமுவின் உடலை பார்த்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ராமு வளர்த்த நாயும் அவர் உடல் அருகே சோகத்துடன் நின்று கொண்டிருந்தது.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். வனப்பகுதியையொட்டி அமைக்கப்பட்டுள்ள அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • யானை அங்கிருந்தவர்களுக்கு எந்த தொந்தரவும் அளிக்காமல் வனப்பகுதியில் சென்று மறைந்தது.
    • யானைகள் அருகில் சென்று புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்வதற்கு 9 /6 செக்போஸ்ட் வழியாக மலைப்பாதை செல்கிறது. கேரள மாநில எல்லையில் உள்ள மறையூர், காந்தளூர் மற்றும் மலையடிவார கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக காய்கறி, பால், முட்டை, மற்றும் கட்டுமான பொருட்கள், கறிக்கோழி, உள்ளிட்டவற்றை வாங்க இந்த வழியாக உடுமலை நகரத்திற்கு வந்து செல்கின்றனர்.

    உடுமலை- மூணாறு வழித்தடத்தில் ஏழுமலையான் கோவில், காமனூத்து பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. சமீப காலமாக வனப்பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்திருப்பதால் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக அமராவதி அணையை நோக்கி படையெடுத்து வருகின்றன.

    கடந்த ஒரு வாரமாக ஐந்துக்கும் மேற்பட்ட குட்டிகளுடன் 15 காட்டு யானைகள் மலைவழிப் பாதையில் சாலையோரம் முகாமிட்டுள்ளன. கூட்டமாக இருக்கும் காட்டு யானைகள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்யாமல் பாதையை விட்டு ஓரமாக இறங்கி வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன.

    இந்நிலையில் ஒற்றை ஆண் யானை ஒன்று சாலை ஓரமாக உலா வருகிறது. மேலும் உடுமலை தமிழக கேரள எல்லையில் உள்ள சின்னாறு சோதனை சாவடி அருகே வந்து நின்றது. அந்த நேரத்தில் கேரளாவில் இருந்து தமிழக நோக்கி கனரக வாகனம் வந்து கொண்டிருந்தது. பனி மூட்டம் காரணமாக சோதனை சாவடி அருகே காட்டு யானை நிற்பது தெரியாமல் வாகன ஓட்டி முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வந்தார்.

    சரக்கு வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்டவுடன் காட்டு யானை மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. சோதனை சாவடியை முற்றுகை இட்ட காட்டு யானையை கண்டு வனத்துறை ஊழியர்களும் வாகன ஓட்டிகளும் பீதி அடைந்தனர். இருப்பினும் நல்வாய்ப்பாக யானை அங்கிருந்தவர்களுக்கு எந்த தொந்தரவும் அளிக்காமல் வனப்பகுதியில் சென்று மறைந்தது.

    காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் வாகன ஓட்டிகள் உடுமலையிலிருந்து மூணார் செல்லும் போதும் மூணாறில் இருந்து உடுமலை செல்லும் போதும் யானையை படம் பிடிப்பதற்காக நடுவழியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது, "செல்பி" என்ற பெயரில் யானைகள் அருகில் சென்று புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    • வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த விவசாய நிலங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
    • தாண்டிக்குடி போலீஸ் நிலையம் மெயின் ரோட்டில் காட்டு யானை வலம் வந்தது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, தடியன் குடிசை, குப்பம்மாள்பட்டி, கேசி.பட்டி, பெரியூர், பார்ச்சலூர், ஆடலூர், பன்றிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் காபி, மிளகு வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். வப்பகுதியை ஒட்டியுள்ள இந்த விவசாய நிலங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் தாண்டிக்குடி முருகன் கோவில் கடுகுதடி பகுதியில், கடந்த 5 நாட்களாக காட்டு யானை ஒன்று உலா வருகிறது. அதன்படி நேற்று அதிகாலை 4:15 மணிக்கு தாண்டிக்குடி போலீஸ் நிலையம் மெயின் ரோட்டில் காட்டு யானை வலம் வந்தது. இந்த காட்சி, போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதன் பிறகு கல்லார் காப்பு காட்டு வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

    இதனால் பொது மக்களும், விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர். தகவல் அறிந்து வத்தலகுண்டு வனவர் முத்துக்குமரன் தலைமையில் வனத்துறையினர் ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தண்ணீர் அருந்த வரும் யானை தொட்டியினை தேடி தாகத்துடன் வரும் யானையை சுற்றுலா பயணிகள் துன்புறுத்துவதால் மிரண்டு பிழியபடி சுற்றுலா பணியை தாக்க முயற்சி செய்கிறது.
    • வனப்பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையின் நடமாட்டத்தை ஒகேனக்கல், பென்னாகரம் வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.

    பென்னாகரம்,

    கர்நாடக மாநிலங்களில் வறட்சி நிலவும் போது, வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக ஆண்டுதோறும் கர்நாடக தமிழக எல்லை பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளுக்குள் இடம்பெயர்கின்றனர்.

    இந்த நிலையில் இந்தான்டில் ஒகேனக்கல் வனப்பகுதிக்குள் ஒற்றை யானை இடம் பெயர்ந்துள்ளது.

    இந்த யானை வனப்பகுதிகளில் உணவு அருந்திவிட்டு குடிநீருக்காக ஒகேனக்கல்லில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் பென்னாகரம் செல்லக்கூடிய சாலையின் ஓரத்தில் தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் குழாயின் வால்வுகளில் இருந்து வெளியேறப்படும் தண்ணீர் தொட்டியில் காலை மற்றும் மாலை வேளையில் நீர் அருந்துவதற்கு வருகிறது.

    தமிழகத்தின் முதன்மை சுற்றுலா தளமாக ஒகேனக்கல் பகுதிக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணமாக உள்ள நிலையில் அடர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானையை சாலை ஓரத்தில் நின்று தண்ணீர் குடிப்பதை கண்டதும் அதன் அருகில் வாகனங்களை நிறுத்துவது, வாகனங்களில் அதிக ஒலியை எழுப்புவது, அருகில் சென்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் வனப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தாலும், போதுமான குடிநீர் இல்லாததால் வழக்கமாக தண்ணீர் அருந்த வரும் யானை தொட்டியினை தேடி தாகத்துடன் வரும் யானையை சுற்றுலா பயணிகள் துன்புறுத்துவதால் மிரண்டு பிழியபடி சுற்றுலா பணியை தாக்க முயற்சி செய்கிறது.

    வனப்பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையின் நடமாட்டத்தை ஒகேனக்கல், பென்னாகரம் வனத்துறையினர் கண்காணித்து, காலை மற்றும் மாலை வேளையில் சுற்றுலா வரும் பயணிகளின் துன்புறுத்தல் இன்றி எவ்வித இடையூறுகளும் இல்லாத வகையில், நீர் அருந்திய பின்னர் ஒற்றை யானையை வன பகுதிக்குள் இடையூரின்றி செல்ல சுற்றுலா பயணிகளிடம் வாகனங்களை சாலை ஓரம் நிறுத்த வேண்டாம் என வன அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பர்கூர் அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை.
    • யானைகள் தண்ணீரை பருகி அதில் குளித்து மகிழ்ந்து செல்கின்றது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, மான், கரடி, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றனர்.

    பர்கூர் அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இந்த அணையில் தேக்கி வைக்கப்பட்ட நீரினை குடிப்பதற்காக வனவிலங்குகள் காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் வருவது உண்டு. அதில் குறிப்பாக யானைகள் தண்ணீரை பருகி அதில் குளித்து மகிழ்ந்து செல்கின்றது.

    இந்த நிலையில் வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள சாலைகளிலும், அதனையொட்டி உள்ள வனப்பகுதிகளிலும் ஒற்றை யானையை சுற்றி திரிந்து வருகின்றது. இதனால் மலைப்பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும், யானையை பார்த்தவுடன் செல்பி எடுப்பது, செல்போனில் படம் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இந்த சம்பவத்தினால் வன விலங்குகள் வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதும், வாகனத்தை சேதப்படுத்துவதும் தற்போது நிகழ்ந்து வருகிறது. அவ்வாறு நிகழாமல் இருக்க வாகன ஓட்டிகள் ஒத்துழைத்து வனவிலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

    • ஆத்திரம் அடைந்த யானை மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கியது.
    • 2 பேரும் ஓடி சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் அவ்வப்போது குடிநீர், உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி செல்லும் போது அருகில் உள்ள விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலை கிராமம் செங்காடு, ஏரியூர், பூதிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதமாக ஒற்றை யானை பகல் நேரங்களிலேயே உலா வருகிறது. விவசாய பூமியில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை கடம்பூர் அருகே ஒற்றை யானை ஒன்று அவ்வழியாக வந்த வாகனங்களை கடுமையாக துரத்தியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் வந்த ஒருவர் திடீரென யானை துரத்தி வருவதை கண்டு மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு நண்பருடன் ஓடி சென்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த யானை மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கியது. நல்ல வாய்ப்பாக 2 பேரும் ஓடி சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    நீண்ட நேரம் சாலையில் நின்று கொண்டிருந்த அந்த யானை பின்னர் வனப்பகுதிக்குள்ளே சென்றது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள, வாகன ஓட்டிகள் அஞ்சினார்கள். 

    • மளிகை கடையின் கதவை ஒற்றை யானை உடைத்து தக்காளியை தின்று ருசித்து உள்ளது.
    • யானை தக்காளியை மட்டுமே ருசித்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறி ப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    சமீபகாலமாக யானைகள் உணவு, தண்ணீ ரை தேடி ஊருக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. ஊருக்குள் புகும் யானைகள் விளைநிலங்களை சேத ப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் சத்திய மங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் ஒங்கல் வாடி, அரேபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து மக்களை பீதி அடைய செய்து வருகிறது.

    ஊருக்குள் புகுந்து கட்டிடங்களை சேதப்படுத்தி யும், விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தியும் வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் ஒரு வித அச்சத்து டனேயே இருந்து வந்தனர்.

    இந்நிலையில் ஆசனூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள தணிகாசலம் என்பவரின் மளிகை கடையின் கதவை ஒற்றை யானை உடைத்து உள்ளே வைத்திருந்த விலை மதிப்பில்லாத தக்காளியை தின்று ருசித்து உள்ளது.

    கடையில் பல பொருட்கள் இருந்தும் யானை தக்காளியை மட்டுமே ருசித்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தற்போது தக்காளியின் விலை விண்ணை தொடும் அளவில் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வனத்துறையினர் மீண்டும் ஒற்றை யானை ஊருக்குள் வராதவாறு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி செங்காடு பகுதியில் விவசாய தோட்டங்களில் பயிர்களை சேதப்படுத்தியது.
    • கடந்த 6 மாதமாக இந்த ஒற்றை யானை இரவு நேரங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் அவ்வப்போது குடிநீர், உணவு தேடி இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலை கிராமம் செங்காடு, ஏரியூர், பூதிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதமாக ஒற்றை யானை இரவு நேரங்களில் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இதே போல் இன்று அதிகாலை அந்த ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி செங்காடு பகுதியில் விவசாய தோட்டங்களில் பயிர்களை சேதப்படுத்தியது. இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் யானையை சைரன் ஒலி எழுப்பி விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியாக யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும் போது, கடந்த 6 மாதமாக இந்த ஒற்றை யானை இரவு நேரங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த ஒற்றை யானையை இங்கிருந்து வேறு இடத்துக்கு வனத்துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.

    ×