என் மலர்
நீங்கள் தேடியது "யானை"
- 2 தினங்களுக்கு முன்பு தாளவாடி மலைப்பகுதியில் யானைகள் மிதித்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
- வனத்துறையினரின் அலட்சியப் போக்கால் மலை கிராம மக்கள் மிகவும் அச்சமடைந்து உள்ளோம்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை தின்பதும், மிதிப்பதும் என சேதப்படுத்தி வருகின்றன.
2 தினங்களுக்கு முன்பு தாளவாடி மலைப்பகுதியில் யானைகள் மிதித்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் ஆசனூர் வனக்கோட்டம் கேர்மாளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூத்தாளபுரம் கிராமத்தில் ரத்தினம்மா என்பவர் விளை நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் விவசாயி ரத்தினம்மா தோட்டத்திற்குள் புகுந்தன. அறுவடை செய்து வைத்திருந்த மக்காச்சோள கதிர்களை யானை கூட்டங்கள் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தோட்டத்திற்குள் இருந்த யானை கூட்டம் மக்காச்சோள கதிர்களை சேதப்படுத்தின.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து கூச்சலிட்டும், பட்டாசு வெடித்தும் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
தனது நீண்டகால விவசாய உழைப்பில் அறுவடை செய்து வைத்திருந்த மக்காச்சோள கதிர்களை யானைகள் தின்றுவிட்டு சென்றதால் விவசாயி ரத்தினம்மா மிகவும் வேதனை அடைந்தார்.
கேர்மாளம் வனச்சரக அலுவலகத்திற்கு யானைகள் அட்டகாசம் செய்வது குறித்து புகாரளித்தால் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொள்வதில்லை, மேலும் யானைகளின் அட்டகாசங்கள் குறித்து தொலை பேசியில் தொடர்பு கொண்டு கூறினால் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். வனத்துறையினரின் அலட்சியப் போக்கால் மலை கிராம மக்கள் மிகவும் அச்சமடைந்து உள்ளோம்.
எனவே வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமெனவும், கிராமத்தை ஒட்டி அகழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட விவசாயி ரத்தினம்மாவுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றனர்.
- கோவிலில் நடக்கும் விழாக்களில் பலர் தங்களின் யானைகளை தாமாகவே முன்வந்து அனுப்பி வைப்பார்கள்.
- யானையை இயல்புநிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டன.
கேரள மாநிலத்தில் உள்ள கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு பயன்படுத்தும் யானைகளுக்கு மதம் பிடித்துவிடுவதால், சில நேரங்களில் பிரச்சனை ஆகி விடுகிறது.
இதனால் கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த கேரள ஐகோர்ட் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஐகோர்ட்டின் கட்டுப்பாடுகளின் படியே, கேரளாவில் உள்ள கோவில் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கொச்சி அருகே கோவில் திருவிழாவுக்கு அழைத்து வரப்பட்ட யானை, திடீரென பாகனை தள்ளிவிட்டு அதிவேகமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள திரிபுனித்து ராவில் பூர்ணத்ரயீசர் கோவில் இருக்கிறது. கேளர மாநிலத்தில் உள்ள பெரிய ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் இங்கு விஷ்ணு அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் உற்சவங்கள் மற்றும் பண்டிகைகள் மிகவும் பிரபலமானவை ஆகும். இதனால் அவற்றில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பூர்ணத்ரயீசர் யானைகளை விரும்பும் கடவுளாக கருதப்படுவதால், இந்த கோவிலில் நடக்கும் விழாக்களில் பலர் தங்களின் யானைகளை தாமாகவே முன்வந்து அனுப்பி வைப்பார்கள்.
இந்தநிலையில் பூர்ணத்ர யீசர் கோவில் திருவிழாவிற்காக கோட்டயத்தில் இருந்து சாமப்புழா உன்னி கிருஷ்ணன் என்ற யானை கொண்டு வரப்பட்டிருந்தது. கோவிலின் கருவறைக்கு முன்னால் உள்ள அத்தாழ சீவேலிக்கான கோபுர நுழைவு வாயிலின் அருகே அழைத்துவரப்பட்ட போது, அந்த யானை திடீரென ஆக்ரோஷமடைந்தது.
இதையடுத்து அந்த யானை, தன் மீது அமர்ந்திருந்த இரண்டாவது பாகனை கீழே விழச்செய்துவிட்டு ஆக்ரோஷத்துடன் வேகமாக ஓடியது. அந்த யானை கோவில் வளாகத்தை சுற்றி வேகமாக ஓடியபடி இருந்தது. இதனை கோவிலில் இருந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் கோவில் வளாகத்தில் நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு சிதறி ஓடினர். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து அந்த யானை கோவிலின் மேடைக்கு அருகே நின்றது. ஆனால் ஆக்ரோஷம் தனியாமல் தலையை வேகமாக அசைத்த படி நின்றது.
இதையடுத்து கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கோவில் வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு யானையை இயல்புநிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டன.
பல்லுருடடி அழகிய காவு கோவிலில் இருந்து யானை படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஒன்றரை மணி நேர முயற்சிக்கு பிறகு யானையை சாந்தப்படுத்தி அமைதி நிலைக்கு கொண்டு வந்தனர். பின்பு அந்த யானை கோவிலில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டது. அதன்பிறகே கோவிலில் ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிவகார்த்திகேயன், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி என்ற யானையை தத்தெடுத்துள்ளார்.
6 மாதங்களுக்கு யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு வண்டலூர் பூங்காவில் இருந்து ஒரு சிங்கத்தையும், ஒரு புலியையும் சிவகார்த்திகேயன் தத்தெடுத்திருந்தார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‛பராசக்தி' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- யானை குட்டியின் வாய் மற்றும் தும்பிக்கைப் பகுதியில் பலத்த இரத்தக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
- அந்தப் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (43) என்ற விவசாயியைக் கைது செய்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள் நாட்டு வெடி குண்டை விழுங்கியதால், இரண்டு வயது பெண் யானை குட்டி பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள குத்தியாலத்தூர் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது, இறந்து கிடந்த யானை குட்டியின் உடலைக் கண்டெடுத்தனர்.
வனத்துறை கால்நடை மருத்துவர் நடத்திய முதற்கட்ட சோதனையில், யானை குட்டியின் வாய் மற்றும் தும்பிக்கைப் பகுதியில் பலத்த இரத்தக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
யானை குட்டியின் பிரேத பரிசோதனையில், அது சக்தி வாய்த்த நாட்டு வெடிகுண்டை விழுங்கியதால் வாய் சிதைந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
காட்டுப்பன்றிகள் அல்லது யானைகள் விளைநிலங்களுக்குள் வருவதைத் தடுக்க விவசாயிகள் இது போன்ற வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது வழக்கம்.
இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய வனத்துறையினர், அந்தப் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (43) என்ற விவசாயியைக் கைது செய்தனர்.
அவர் தனது விளைநிலத்தைப் பாதுகாக்க இந்த வெடிகுண்டை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த யானை குட்டியின் உடல், வனத்துறை விதிகளின்படி அதே இடத்தில் புதைக்கப்பட்டது.
- காட்டு யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினர்.
- 4 யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் காட்டு யானையை கயிறு கட்டி, அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஏற்றினர்.
பேரூர்:
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நரசீபுரம், கெம்பனூர், மருதமலை மற்றும் தடாகம் சுற்று வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றி திரிந்து வந்தது. அந்த யானைக்கு மக்கள் ரோலக்ஸ் என பெயரிட்டு அழைத்து வந்தனர்.
இந்த ரோலக்ஸ யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து, விளைநிலங்கள், வீடுகளை சேதப்படுத்தி வந்தது. சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி கொன்றது.
இதையடுத்து ரோலக்ஸ் யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் ரோலக்ஸ் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர்.
இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிம்மன், முத்து என்ற 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு, ரோலக்ஸ் யானையை கண்காணித்து வந்தனர்.
கடந்த மாதம் வன மருத்துவர்கள் விஜயராகவன் தலைமையிலான குழுவினர் ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சித்தனர். அப்போது அந்த யானை டாக்டர் விஜயராகவனை தாக்கியது. இதனால் ரோலக்ஸ் யானையை பிடிக்கும் பணி தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ரோலக்ஸ் யானையை பிடிக்க வந்த, கும்கி யானைகள் நரசிம்மன், முத்து ஆகிய 2 யானைகளுக்கும் திடீரென மதம் பிடித்ததால் அந்த யானைகள் மீண்டும் டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டன.
அவற்றுக்கு பதிலாக டாப்சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி, கபில்தேவ் கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு, ரோலக்ஸ் யானையை கண்காணித்து பிடிக்க முயற்சி நடந்து வந்தது. நேற்றிரவு நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருந்து வசீம் மற்றும் பொம்மன் என்ற 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன.
இதையடுத்து, கபில்தேவ், சின்னத்தம்பி, வசீம் மற்றும் பொம்மன் ஆகிய 4 கும்கி யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் ரோலக்ஸ் காட்டு யானை தொண்டாமுத்தூர் அடுத்த இச்சிக்குழி பகுதியில் நிற்பது தெரியவந்தது.
இதையடுத்து முதன்மை தலைமை வன பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர்கள் கலைவாணன் தலைமையில் மருத்துவர்கள் ராஜேஷ், வெண்ணிலா குழுவினர் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்றனர்.
பின்னர் கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையிலான மருத்துவர்கள் ராஜேஷ், வெண்ணிலா குழுவினர் ரோலக்ஸ் காட்டு யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினர்.
மயக்க ஊசி செலுத்தியதும் ரோலக்ஸ் காட்டு யானை நின்று விட்டது. இதையடுத்து வனத்துறையினர் கபில்தேவ், வசிம், கொம்பன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய 4 யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் காட்டு யானையை கயிறு கட்டி, அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஏற்றினர்.
கடந்த சில மாதங்களாக தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் காட்டு யானை பிடிபட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
4 கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்ட யானையை வனத்துறையினர் லாரியில் ஏற்றினர். பிடிபட்ட ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறையினர் முதுமலையில் உள்ள யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
- உத்தர பிரதேசத்தில் யானை ஒன்றை ஒரு கும்பல் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- யானை திருடு போனது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ராஞ்சி:
சாதாரணமாக ஒரு பொருளைத் திருடுபவர்கள் மறைத்து வைக்கக்கூடிய அளவிலேயே சிறிய பொருட்களை மட்டுமே திருடுவார்கள். ஆனால் தற்போது ஒட்டகம், பஸ் போன்ற உருவத்தில் பெரியவற்றையும் திருடிச் செல்கிறார்கள் பலே திருடர்கள்.
இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் மிகப் பெரிய யானையையே ஒரு கும்பல் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்தவர் நரேந்திர குமார் சுக்லா. இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ஜெயமதி என்ற பெண் யானையை ரூ.40 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். அங்குள்ள பலாமு மாவட்டத்தின் சுகூரில் யானையுடன் அவர் தங்கி இருந்தார்.
இந்நிலையில், அந்த யானை மாயமானது. இதுதொடர்பாக மேதினி நகர் போலீசில் நரேந்திர குமார் சுக்லா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, யானையை தேடி வந்தனர்.
பீகார் மாநிலம் சப்ராவில் ஒரு கும்பல் பெண் யானை ஒன்றை ரூ.27 லட்சத்துக்கு விற்றதாக ஜார்க்கண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் அங்கிருந்த யானையை மீட்டனர். அதே நேரம் யானையை திருடி விற்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
- பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
- வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக தாளவாடி, ஆசனூர், திம்பம், பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு அந்த வழியாக கரும்பு பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்பு துண்டுகளை ருசிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. சில சமயம் வாகனங்களையும், வாகன ஓட்டிகளையும் துரத்தும் சம்பவம் நடந்து வருகிறது.
இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மூன்று நாட்களாகவே ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு வாகனங்களை துரத்தும் சம்பவம் நடந்து வருகிறது.
நேற்று மாலையும் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை எதிர்நோக்கி காத்திருந்த ஒற்றை யானை அந்த வழியாக வந்த ஒவ்வொரு வாகனங்களையும் வழிமறித்து கரும்பு கட்டுகள் உள்ளதா என தேடியது. அப்போது அந்த வழியாக கரும்பு பாரங்களை ஏற்றி வந்த லாரியை மடக்கி லாரியின் மேல் பகுதியில் இருந்த கரும்புகளை லாவகரமாக கீழே எடுத்து போட்டு ருசித்தது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து ஆசனூர் வனப்பகுதியில் சுற்றிவரும் அந்த ஒற்றை யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசனூர் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- வாகன ஓட்டிகள் காட்டு யானைக்கு பயந்து இருபுறங்களிலும் வெகுநேரம் காத்திருந்தனர்.
- சிலர் ஆபத்தையும் மீறி காட்டு யானை நிற்பதை பொருட்படுத்தாமல் தங்களது வாகனங்களில் பயணம் செய்தனர்.
தளி:
தேன்கனிக்கோட்டை நகரில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் மரக்கட்டா வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் சாலை ஓரத்தில் காட்டு யானை ஒன்று நீண்ட நேரமாக சுற்றித்திரிந்தது.
இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சாலை ஓரத்தில் காட்டு யானை நீண்ட நேரம் நின்றதால் அந்த வழியாக பயணம் செய்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் வாகனங்களுடன் அப்படியே நின்றனர்.
நீண்ட நேரம் காத்திருந்த வாகன ஓட்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் சிலர் ஆபத்தையும் மீறி காட்டு யானை நிற்பதை பொருட்படுத்தாமல் தங்களது வாகனங்களில் பயணம் செய்தனர். ஏராளமான வாகன ஓட்டிகள் காட்டு யானைக்கு பயந்து இருபுறங்களிலும் வெகுநேரம் காத்திருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து அந்த காட்டு யானையை வனப்பகுதிக்கு உள்ளே விரட்டினர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து சென்றனர்.
இந்த ஒற்றை யானை சாலை ஓரங்களில் அவ்வப்போது வந்து நின்று வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே வாகனங்களை மறிக்கும் இந்த யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உணவு பற்றாக்குறை காரணமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
- பாகனுடன் யானையைக் காணவில்லை என உரிமையாளர் புகார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் யானையைக் காணவில்லை என ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது, வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா என்பவர், பலமு மாவட்டத்தில் உள்ள ஜார்காட் பகுதியில் இருந்து யானையையும், பாகனையும் காணவில்லை. யானையைத் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை என புகார் அளித்துள்ளார். மேலும், யானைக்கான உரிமை எண்ணையும் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வன அதிகாரி "பலமுவில் உணவு பற்றாக்குறை காரணமாக, அதன் உரிமையாளர் யானையை ராஞ்சிக்கு கொண்டு வந்தார். அங்கிருந்து மர்சாபூருக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். பலமுவில் யானையை பாகனிடம் ஒப்படைத்தார். அதன்பின் யானையுடன் பாகன் மாயமானார். வன சரக அதிகாரி இது தொடர்பான விவரங்களை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
- மையத்தில் உள்ள யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
- மற்ற யானைகள் இரண்டு நாளுக்கு ஒரு முறை இந்த நீர் சிகிச்சை குளத்திற்கு அழைத்து வரப்படுகின்றன.
திருச்சி:
வன விலங்குகளில் உருவத்தில் பெரிய அளவில் இருந்தாலும் யானைகள் மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமான ஓர் உயிரினமாக உள்ளது. அதனால்தான் அவை கோவில்களில் கடவுளுக்கு அடுத்தபடியாக ஆன்மிக பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. 'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்பது பழமொழி.
ஆனால் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் என்றாலும் சரி, தனியார்களால் பராமரிக்கப்படும் யானைகள் ஆனாலும் சரி அவற்றின் முதுமை காலம் என்பது அவற்றுக்கு மிகவும் சோதனையான காலமாகவே அமைந்துவிடுகிறது. வயது முதிர்வின் காரணமாக யானைகள் வியாதிகளால் உடல் நலிவுறும்போது அவற்றை பராமரிக்க முடியாமல் யானைகளின் உரிமையாளர்களும், பாகன்களும் நிலை தடுமாறி விடுகிறார்கள். காரணம் உருவத்தில் பெரியதாக இருப்பதால் அவற்றுக்கு அதிக அளவில் உணவு தேவைப்படுவது போல், மருத்துவ சிகிச்சைக்கும் அதிக பணம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இந்த பிரச்சனையின் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் எம்.ஆர்.பாளையம் என்ற இடத்தில் வயதான யானைகளை பராமரிப்பதற்காக யானைகள் மறுவாழ்வு மையம் வனத்துறையால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட 9 யானைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினரால் நடத்தப்படும் இந்த மையத்தில் உள்ள யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இங்குள்ள யானைகளில் 71 வயது கோமதி, 60 வயது சுமதி, 64 வயது சுந்தரி, 66 வயது இந்திரா ஆகியவை தசைபிடிப்பு காரணமாக கால்வலியால் அவதிப்பட்டு வருகின்றன. இந்த யானைகளின் கால்வலியை போக்குவதற்காக வனத்துறை சார்பில் மறுவாழ்வு மைய வளாகத்தில் 'ஹைட்ரோதெரபி' எனப்படும் நீர் சிகிச்சை அளிப்பதற்காக ஒரு சிறப்பு குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்திற்கு 4 யானைகளும், தினமும் அவற்றின் பாகன்கள் மற்றும் அவற்றின் உதவியாளர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் நீராட வைக்கப்படுகின்றன. மற்ற யானைகள் இரண்டு நாளுக்கு ஒரு முறை இந்த நீர் சிகிச்சை குளத்திற்கு அழைத்து வரப்படுகின்றன. அவை குளத்தில் நீராடி மகிழ்கின்றன.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'யானைகளின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் இந்த குளத்தில் நிரப்பப்படுகிறது. குளத்து நீரால் அளிக்கப்படும் சிகிச்சையின் மூலம் கால்வலியால் அவதிப்பட்ட யானைகளின் நடவடிக்கையில் சிறிது மாற்றத்தை காண முடிகிறது' என்றனர்.
- ஒற்றை யானை ஒன்று கரும்பு வாகனத்தை எதிர்பார்த்து சாலையில் நின்று கொண்டிருந்தது.
- விவசாயிகள் கிராம மக்கள் ஒன்ற ணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக தாளவாடி, ஆசனூர், பர்கூர் வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சக்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து நின்று அங்கு கரும்புகளை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை ருசிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
சில சமயம் வாகன ஓட்டிகளை துரத்தும் சம்பவமும் நடந்து வருகிறது.
இதனால் லாரியில் கரும்பு பாரங்களை ஏற்றி வரும் டிரைவர்கள் கரும்புகள் வெளியே தெரியாமல் இருப்பதற்காக லாரி சுற்றிலும் தார்ப்பாயை போட்டு மூடி வருகின்றனர். இருந்தாலும் கரும்பின் வாசனையை பிடித்து அந்த லாரிகளை யானைகள் வழிமறிப்பது நடந்து வருகிறது.
நேற்று தாளவாடி அடுத்த அரேப்பாளையம் பிரிவில் ஒற்றை யானை ஒன்று கரும்பு வாகனத்தை எதிர்பார்த்து சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது ஒரு லாரி கரும்பு பாரங்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.
கரும்பை சுற்றியும் வெள்ளை கலர் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது. எனினும் கரும்பு வாசனையை பிடித்த அந்த ஒற்றை யானை அந்த லாரியை வழிமறித்து நிறுத்தி தார்பாயை தும்பிக்கையால் பிரித்து தூர எறிந்து கரும்பு கட்டிகளை எடுத்து கீழே போட்டு ருசித்தது.
இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடங்களுக்கு யானை அந்த இடத்தை விட்டு சென்றதும் போக்குவரத்து சீரானது.
இதேபோல் நேற்று இரவு தாளவாடி அடுத்த அருள்வாடி கிராமத்துக்குள் ஒற்றை யானை புகுந்தது. அங்கு தோட்டங்களில் இருந்த பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கிராம மக்கள் ஒன்ற ணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதன் காரணமாக இரவு நேர தூக்கத்தை தொலைத்து கிராம மக்கள் அவதி அடைந்தனர்.
- மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் யானை விழுந்தது.
- அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம், கோட்டப்பாடியில் இரவு நேரத்தில் ஒரு காட்டு யானை வீட்டுக் கிணற்றில் விழுந்தது.
மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் யானை விழுந்ததால் அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை மீட்க போராடி வருகின்றனர்.






