என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஸ்பெண்ட்"

    • ரூ.34 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் மாணவிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
    • கழிப்பறையின் குறுக்கே தடுப்புச்சுவர் இன்றி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 6-ம் தேதி ரூ.34 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் மாணவிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

    அப்போது கழிப்பறையின் குறுக்கே தடுப்புச்சுவர் இன்றி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

    இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், தற்போது இளநிலை பொறியாளர் ரமேஷ், செயல் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    • இந்த வீடியோவை அவரது மனைவி யூடியூபில் வெளியிட்டார்.
    • இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பஞ்சாப் மாநிலத்தில் அலுவலகத்தில் மனைவியுடன் நடனமாடிய கல்வித்துறை அதிகாரியின் வீடியோ இணையத்தில் வைரலானது.

    தேவி பிரசாத் என்ற கல்வித்துறை அதிகாரி தனது மனைவியுடன் அலுவலகத்தில் ஜாலியாக நடனம் ஆடி அதை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை அவரது மனைவி யூடியூபில் வெளியிட்டார். இதனையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து கல்வித்துறை அதிகாரி தேவி பிரசாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இந்த விவகாரம் குறித்து பேசிய தேவி பிரசாத், "வீடியோ எடுக்கப்பட்ட நாளில் தனது அலுவலகத்தில் தேர்தல் பணியில் இருந்தேன். அன்று எங்கள் திருமண நாள் என்பதால் என் மனைவி என்னுடன் அலுவலகத்திற்கு வந்திருந்தார். இந்த வீடியோ வேடிக்கைக்காக மட்டுமே எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார். 

    • ஊழியர் மகேஷ் நீண்ட நேரமாக பேசிகொண்டு இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்த பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
    • நாங்கள் பொறுமையை இழந்த பிறகு தான் இந்த வீடியோவை வெளியிடுகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் மகேஷ் என்பவர் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணியில் இருந்த இவர் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பணி நேரத்தில் தனது செல்போனில் நீண்ட நேரம் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தார். மேலும் நாற்காலியில் ஹாயாக படுத்துக்கொண்டு பயணிகளை கண்டு கொள்ளாமல் இருந்தார்.

    ஊழியர் மகேஷ் நீண்ட நேரமாக பேசிகொண்டு இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்த பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் நேரம் ஆகிறது டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டும் ஊழியர் மகேஷ் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து அங்கு இருந்த பயணிகள் சிலர், டிக்கெட் எடுக்க பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும், அந்த நேரத்தில் ரெயில்வே ஊழியர் செல்போனில் அரட்டை அடித்துக் கொண்டு இருப்பதையும் வீடியோ எடுத்தனர்.

    பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். வீடியோவில் ஒரு பயணி 15 நிமிடமாக காத்திருக்கிறோம். டிக்கெட் கொடுக்காமல் ஊழியர் செல்போனில் அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறார். நேரமாகிறது டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டால் அமைதியாக காத்திருங்கள் என்று கூறுகிறார். நாங்கள் பொறுமையை இழந்த பிறகு தான் இந்த வீடியோவை வெளியிடுகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.

    இதுபற்றி குண்டக்கல் ரெயில்வே பிரிவு அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பணியின் போது செல்போனில் அரட்டை அடித்த ஊழியர் மகேசை நிலைய மேலாளர் பகீரத் மீனா சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். 

    • டி.எஸ்.பி. சுந்தரேசன் அலுவலகத்திற்கு நடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
    • லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிவதால் எனக்கு தண்டனை தருகிறார்கள்.

    மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வருபவர் சுந்தரேசன். அவருக்கு வழங்கப்பட்டிருந்த அலுவலக வாகனம் திரும்ப பெறப்பட்டதால், அவரது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்றதாக கூறி ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுந்தரேசன், "லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிவதால் எனக்கு தண்டனை தருகிறார்கள். எனது அலுவலக வாகனத்தை எடுத்துக்கொண்டு மனரீதியாக என்னை சித்ரவதை செய்கிறார்கள். நான் தன்னிச்சையாக பேட்டியளிப்பதால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் 'சஸ்பெண்டு' செய்யப்படுவேன் என்றும் தெரிந்துதான், இந்த பேட்டி அளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது ஊழியருக்கான விதிகளை மீறி ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • விபத்து நடந்த இடத்தில் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
    • கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார்,

    பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே, காவல்துறை முறையாக விசாரணை நடத்தும் என்றும் விசாரணைக்குப்பின் கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து தொடர்பாக கேட் கீப்பர் பங்கச் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    பணியில் அலட்சியமாக இருந்ததாகக்கூறி கேட் கீப்பர் பங்கச் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது இளைஞர் அஜித் உயிரிழந்தார்.
    • காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் பக்தர்களிடம் 10 சவரன் நகைகள் திருட்டு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோவில் ஊழியர் அஜித்தை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

    காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது இளைஞர் அஜித் உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து அஜித்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கோவில் ஊழியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 6 தனிப்படை போலீசாரை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. ஆஷித் ராவத் உத்தரவிட்டுள்ளார். கோவில் ஊழியர் உயிரிழந்தது குறித்த வெளிப்படையான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    • மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
    • கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். முழு ஆண்டு தேர்வு எழுதிய மாணவியை மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மாணவி வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளதால் அவரது தாய் நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக கேட்டுள்ளார்.

    இதற்கு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்துள்ளது. எங்களது பள்ளியில் இப்படிதான் நடக்கும். முடியாது எனில் வேறு பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள் என கூறி உள்ளது.

    மாணவி வகுப்பறைக்கு வெளியில் அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ வெளியான நிலையில், பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    பின்னர், மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.

    மேலும், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில், பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்து தேர்வு எழுத்த வைத்த விவகாரத்தை அடுத்து சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோவை செங்குட்டைபாளையம் சுவாமி சித்பவானந்தர் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தியை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோஷங்கள் எழுப்பினர்.
    • பிஜு ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா சட்டசபை இன்று கூடியதும் சமீபத்தில் இறந்த எம்.எல்.ஏ தேபேந்திர சர்மாவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

    அதன்பின், சபையின் மையப்பகுதிக்குள் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் தனித்தனி கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.

    கடந்த 9 மாதத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

    பல்வேறு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் எஸ்.டி, எஸ்.சி மற்றும் ஓ.பி.சி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பி.ஜே.டி. எம்.எல்.ஏக்கள் மாநில அரசிடம் உத்தரவாதம் கோரினர்.

    தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோஷங்கள் எழுப்பியும், பிஜேடி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சபாநாயகர் சுராமா பதேய் ஆர்ப்பாட்டக்காரர்களை தங்கள் இருக்கைகளுக்குத் திரும்புமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து சபாநாயகர் பல முறை அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.

    இந்நிலையில், சட்டசபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி ராமச்சந்திர கடாம், சாகர் சரண் தாஸ், சத்யஜித் கோமாங்கோ, அசோக் குமார் தாஸ் உள்ளிட்ட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    • பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார்.
    • கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கோத்தக்கோட்டையில் அரசு பஸ் உரிய இடத்தில் நிற்காமல் சென்றதால் அதன் பின்னாலேயே பிளஸ் 2 மாணவி நீண்ட தூரம் ஓடினார்.

    பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார். மாணவி அதில் ஏறிய வீடியோ வைரலானது.

    கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.

    பொதுத்தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி பஸ் பின்னாலேயே ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பஸ் ஓட்டுநர் - நடத்துநரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

    • சம்பவத்தன்று இவர் வகுப்பறைக்குள் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
    • 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரத்துக்கு உட்பட்ட ஆர். பாலக்குறிச்சியில் வைரவன்பட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எம். அந்தோணி பணியாற்றி வந்தார்.

    10-க்கு உட்பட்ட மாணவர் எண்ணிக்கை கொண்ட இந்த பள்ளியில் அந்தோணி ஒற்றை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று இவர் வகுப்பறைக்குள் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக விடுமுறை எடுத்து வந்துள்ளார். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. பெற்றோர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்தனர்.

    தொடர் புகாரின் காரணமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சண்முகம், பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர் ராம திலகத்திடம் முறையான விசாரணை நடத்த உத்தரவிட்டார். பின்னர் நடைபெற்ற விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி அந்தோணியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் அருகாமையில் உள்ள இன்னொரு பள்ளி ஆசிரியரை பணியமர்த்தி உள்ளனர். இது தொடர்பாக பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர் இந்திரா கூறும் போது, தலைமை ஆசிரியரின் செயல்பாடுகள் தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். ஆனால் அந்தோணியின் நடத்தையால் தற்போது 7 குழந்தைகள் மட்டுமே கல்வி பயின்று வருகிறார்கள். ஆகவே தலைமை ஆசிரியர் பிரச்சனையை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • நடத்தை விதிகளை மீறி அரசியல் பேரணியில் கலந்து கொண்டதாக கூறி பாஜக அரசு நடவடிக்கை.
    • அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக காங்கிரஸ் புகார்

    பர்வானி:

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் பர்வானி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    கனஸ்யாவில் உள்ள பழங்குடியினருக்கான தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ள ராஜேஷ் கண்ணோஜ், முக்கியமான வேலையைக் காரணம் காட்டி விடுப்பு எடுத்திருந்தார். ஆனால் அவர் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டதாகவும், பழங்குடியினர் விவகாரத் துறையின் உதவி ஆணையர் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.

    அரசு ஊழியர்களுக்கான சேவை நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரகுவன்ஷி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ராஜேஷ் சஸ்பெண்ட் உத்தரவு சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து தற்போது இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் மாநில காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் மிஸ்ரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிவராஜ் சிங் சவுகான் அரசு, அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்க அனுமதித்துள்ளது, ஆனால் பழங்குடியினரான ராஜேஷ் கண்ணோஜ், அரசியல் சாராத அணிவகுப்பில் பங்கேற்றதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

    • பெரம்பலூர் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யபட்டார்
    • ஆசிரியர் செல்வகுமார் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த பட்டதாரி ஆங்கில ஆசிரியர் செல்வகுமார் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கோபிநாத் கொடுத்த புகார் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆசிரியர் செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அறிவுறுத்தலின் பேரில் ஆசிரியர் செல்வக்குமாரை தற்காலிக பணிநீக்கம் செய்து பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டுள்ளார்.


    ×