ஒடிசா சட்டசபையில் இருந்து 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோஷங்கள் எழுப்பினர். பிஜு ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒடிசா சட்டசபையில் இருந்து 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
Published on

புவனேஷ்வர்:

ஒடிசா சட்டசபை இன்று கூடியதும் சமீபத்தில் இறந்த எம்.எல்.ஏ தேபேந்திர சர்மாவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

அதன்பின், சபையின் மையப்பகுதிக்குள் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் தனித்தனி கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.

கடந்த 9 மாதத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

பல்வேறு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் எஸ்.டி, எஸ்.சி மற்றும் ஓ.பி.சி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பி.ஜே.டி. எம்.எல்.ஏக்கள் மாநில அரசிடம் உத்தரவாதம் கோரினர்.

தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோஷங்கள் எழுப்பியும், பிஜேடி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சபாநாயகர் சுராமா பதேய் ஆர்ப்பாட்டக்காரர்களை தங்கள் இருக்கைகளுக்குத் திரும்புமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து சபாநாயகர் பல முறை அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், சட்டசபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி ராமச்சந்திர கடாம், சாகர் சரண் தாஸ், சத்யஜித் கோமாங்கோ, அசோக் குமார் தாஸ் உள்ளிட்ட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com