search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயக்க ஊசி"

    • வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.
    • யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    தருமபுரி:

    ஒற்றை ஆண் யானை ஒன்று, கடந்த 15 நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல் வனப்பகுதியை விட்டு வெளியேறியது. இந்த யானை கிராமப் பகுதிகளில் சுற்றி திரிந்து, கடந்த வாரம் தருமபுரி நகர் பகுதி வரை சென்றது. மேலும் தருமபுரியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடனே தருமபுரிக்கு வந்து அட்டகாசம் செய்து வந்த ஒற்றை யானையை தொப்பூர் வனப் பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த ஒற்றை யானை மீண்டும் பொம்மிடி கிராமப் பகுதியில் நுழைந்தது.

    குறிப்பாக முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, காளிக்கரம்பு வழியாக சுற்றிய யானையை கம்பைநல்லூர் வழியாக கொண்டு சென்று பாலக்கோடு வனப்பகுதியில் விட வன துறை தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த யானை சில்லாரஅள்ளியில் இருந்து கொடகாரஅள்ளி பகுதியில் மைலாப்பூர் கிராமத்தில் தஞ்சம் புகுந்தது.

    வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வத்தல் மலை அடிவாரபகுதியில் நேற்று இரவு நேரத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டிலிருந்து வெளியேறிய யானை விவசாய தோட்டங்களை சேதப்படுத்தி உணவை உட்கொண்டது. அப்போது யானைக்கு வனத்துறையினர் இரண்டு மயக்க ஊசி செலுத்தினர்.

    உடனடியாக கிரேன் மூலம் யானையை மீட்டு ஒகேனக்கல் அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப் பகுதிகளுக்குள் விடுவதற்காக யானையை வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர்.

    கடந்த 3 வாரமாக மக்களை அச்சுறுத்தி வந்த யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    • ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் முன்னிலையில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு வேறு கூண்டுக்கு மாற்றப்பட்டது. அப்போது அந்த சிறுத்தை எதிர்பாராத விதமாக தப்பி ஓடியது.
    • சிறுத்தையை வேனில் ஏற்றி பவானிசாகர் வன சரகத்துக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியான தெங்குமரஹடா மங்கள பட்டி கொண்டு சென்றனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஆசனூர் மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் யானை, கரடி, புலி, சிறுத்தை என ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

    இந்த வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் புலி, சிறுத்தைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டை யாடி வருகிறது.

    மேலும் சிறுத்தைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராங்களில் புகுந்து கால்நடைகளை அடித்து கொன்று விட்டு அருகே உள்ள கல்கு வாரியில் பதுங்கி கொள்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதையடுத்து தாளவாடி அடுத்த ஓசூர் கிராமத்தின் அருகே உள்ள கல்குவாரில் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறை கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூண்டு வைத்தனர். கூண்டில் இறைச்சியை கட்டி வைத்து வந்தனர். ஆனால் சிறுத்தை சிக்காமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் போக்கு காட்டி வந்த அந்த சிறுத்தை கூண்டில் சிக்கிக் கொண்டது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் முன்னிலையில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு வேறு கூண்டுக்கு மாற்றப்பட்டது. அப்போது அந்த சிறுத்தை எதிர்பாராத விதமாக தப்பி ஓடியது.

    சிறுத்தை ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்வது அறியாமல் தலைதெறிக்க ஓடினார்கள்.

    தொடர்ந்து வனத்துறையினர் தப்பிய சிறுத்தையை அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் தேடினர். அப்போது கல்குவாரி கல்லுக்கு அடியில் சிறுத்தை படுத்து கிடந்தது தெரிய வந்தது.

    பின்னர் மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையை பிடித்தனர். பின்னர் சிறுத்தையை சாக்கு பையில் மூட்டைகட்டி மீண்டும் கூண்டில் அடைத்தனர்.

    இதையடுத்து நேற்று இரவு சிறுத்தையை வேனில் ஏற்றி பவானிசாகர் வன சரகத்துக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியான தெங்குமரஹடா மங்கள பட்டி கொண்டு சென்றனர். அங்கு கூண்டு திறந்து விடப்பட்டது.

    இதையடுத்து அந்த சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

    ×