search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோனியா காந்தி"

    • விருப்ப மனு படிவத்தை ஆர்வமுடன் வாங்கி சென்று பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.
    • 9 தொகுதிகளில் களம் இறங்கும் காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, கடலூர், கரூர், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்த 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் கட்டணம் செலுத்தி நேற்று முதல் விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் வந்தனர். விருப்ப மனு படிவத்தை ஆர்வமுடன் வாங்கி சென்று பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.

    விருப்ப மனு கொடுப்பவர்கள் கட்டணத்துடன் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு ஆகியவற்றையும் இணைத்து கொடுத்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 100 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    இன்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்தனர். இதனால் காங்கிரஸ் களம் இறங்கும் 9 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து 200-க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    விருப்ப மனு கொடுப்பதற்கு நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணிவரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு விருப்ப மனு கொடுத்தவர்களில் இருந்து தலா 3 பேரை தேர்வு செய்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்புவார்கள்.

    மேலிட தலைவர்கள் அவற்றை ஆய்வு செய்து அதிகாரப்பூர்வ வேட்பாளரை விரைவில் அறிவிக்க உள்ளனர். தற்போதைய நிலவரப்படி கரூர் தொகுதியில் ஜோதிமணி, சிவகங்கை கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாக்கூர் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.

    மயிலாடுதுறை தொகுதியில் ராகுலுக்கு மிகவும் நெருக்கமான பிரவீண் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் மயிலாடுதுறை தொகுதியை மகிளா காங்கிரஸ் நிர்வாகி ஹசினா சையது, பட்டுக்கோட்டை ராஜேந்திரன் ஆகியோரும் கேட்கிறார்கள்.

    திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், காங்கிரஸ் ஐ.டி. பிரிவு தலைவருமான சசிகாந்த் செந்தில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் அந்த தொகுதியில் போட்டியிட தற்போதைய எம்.பி. ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், ரஞ்சன்குமார், இமயா கக்கன், விக்டரி ஜெயக்குமார் ஆகியோரும் முயற்சி செய்து வருகிறார்கள்.

    கடலூர் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி நிறுத்தப்படுவார் என்று தெரிய வந்துள்ளது. கிருஷ்ணகிரி தொகுதியில் டாக்டர் செல்லகுமார் போட்டியிட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    நெல்லை தொகுதியில் விஜய்வசந்த் போட்டியிடுவார் என்றும், கன்னியாகுமரி தொகுதியில் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் 9 தொகுதிகளில் களம் இறங்கும் காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

    கன்னியாகுமரி: விஜய் வசந்த் அல்லது ரூபி மனோ கரன், ராபர்ட் புரூஸ்

    நெல்லை: திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு, சிந்தியா.

    மயிலாடுதுறை: அசன் மவுலானா, பிரவீண் சக்கரவர்த்தி, ரமணி.

    கடலூர்: கே.எஸ்.அழகிரி, நாசே ராமச்சந்திரன், டாக்டர் விஷ்ணுபிரசாத்

    திருவள்ளூர் : ஜெயக்குமார், சசிகாந்த்செந்தில், பி. விசுவநாதன், ரஞ்சன் குமார்

    சிவகங்கை: கார்த்தி சிதம்பரம்.

    உத்தேச பட்டியலில் உள்ள இந்த தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதனால் டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்கள் 9 தொகுதிகளுக்கு யார்-யாரை தேர்வு செய்வது என்று கடும் திணறலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஏற்கனவே போட்டியிட்டு எம்.பி.யாக இருப்பவர்கள் மற்றும் வாரிசுகளை கடந்து புதுமுகங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    • ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.
    • தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு

    மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. ராகுல் காந்தியின் நடை பயணத்தின்போதும், அந்த கட்சியின் தலைவர் மல்லிகா அர்ஜூன கார்கேவும் பல உத்தரவாதங்களை அளித்துள்ளனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது. இன்னும் ஒருசில தினங்களில் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வீட்டை விட்டு வெளியே வராதவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
    • பிரதமர் வருகையால் தி.மு.க. கூட்டணியினர் தோல்வி பயத்தில் உள்ளனர்.

    திருப்பூர்:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று திருப்பூரில் கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமியை நேரில் சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கேட்டதுடன், சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    வீட்டை விட்டு வெளியே வராதவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பிரதமர் கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழகத்திற்கு வருகை தருகிறார். அவையெல்லாம் தேர்தலை மனதில் வைத்து அல்ல. பிரதமர் வருகையால் தி.மு.க. கூட்டணியினர் தோல்வி பயத்தில் உள்ளனர்.

    கோவையில் பிரதமரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு திமு.க. தடை விதிக்க நினைத்தது. எல்லா மாநிலத்திலும் பிரதமர் மக்களை சந்திக்கிறார்


    பி.எம்ஸ்ரீ., பள்ளி திட்டத்திற்கு கையெழுத்து போடுவார்கள். ஆனால் புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என சொல்வது ஏற்கத்தக்கதல்ல. தேர்தல் முடிந்ததும் வேறு காரணம் சொல்லி ஏற்றுக்கொள்வர்.

    ஆ. ராசா 2 ஜி வழக்கில் ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தீர்ப்பு வரலாம். தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் மோடி வருகை புரிய வேண்டும் என்பது எங்கள் விருப்பம். தேதி கொடுக்க பிரதமரும் தயாராக இருக்கிறார். இந்தியா கூட்டணிக்கு எங்கேயும் எழுச்சி இல்லை. நாடு முழுவதும் ஜெய்ஸ்ரீராம் கோஷம்தான் எழுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.
    • மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2022-ம் ஆண்டு பாரத ஒற்றுமை யாத்திரையை செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த யாத்திரையை 2023-ம் ஆண்டு ஜனவரியில் ஸ்ரீநகரில் நிறைவு செய்தார்.

    அதன் பிறகு 'பாரத ஒற்றுமை நீதி யாத்திரை' என்ற பெயரில் 2-வது கட்ட யாத்திரையை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கி மும்பை தாராவி வழியாக சென்று அம்பேத்கர் சமாதியான சைத்ய பூமியில் நிறைவு செய்தார். இந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.

    இன்று காலையில் ராகுல் காந்தி மும்பையில் நியாய சங்கல்ப் பாதயாத்ரா என்ற பெயரில் மணிபவன் முதல் ஆகஸ்டுகிராந்தி மைதானம் வரை நடைபயணம் மேற்கொண்டார்.


    இதைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளார்.


    இதே போல் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி சம்பாய் சோரன் ஆகியோரும் மும்பை சென்றுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார், கட்சித் தலைவர் சரத்பவார் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசிய பிறகு இன்று இரவே சென்னை திரும்புகிறார்.

    • இந்தியா கூட்டணி வாரிசு அரசியலை மட்டுமே செய்து கொண்டிருக்கிறது.
    • இந்தியா கூட்டணி தலைவர்கள் எதற்கு முயற்சி செய்கிறார்கள் என்று பாருங்கள்.

    மும்பை:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மகாராஷ்டிர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்குள்ள ஜல்கான் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    இந்தியா கூட்டணி வாரிசு அரசியலை மட்டுமே செய்து கொண்டிருக்கிறது. அந்த கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியின் செயல்பாடுகளையும் பாருங்கள். உங்களுக்கே நன்றாக தெரியும்.


    அதே சமயத்தில் பிரதமர் மோடியின் ஆட்சியை பாருங்கள். எதிர்கால சிந்தனையுடன் மோடி எப்படி செயல்படுகிறார் என்று உங்களுக்கு தெரியும். உலகில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய சிறப்பு அவருக்கு உண்டு.

    சந்திரயானை நிலவுக்கு அனுப்பி உலகையே அவர் வியக்க வைத்தார். அதே சமயத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் எதற்கு முயற்சி செய்கிறார்கள் என்று பாருங்கள்.

    சோனியா தனது மகன் ராகுலை பிரதமராக்க முயற்சி செய்கிறார். உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்யாவை முதல்-மந்திரி யாக்க முயற்சி செய்கிறார். லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வியை முதல்-மந்திரியாக்க போராடுகிறார்.


    சோனியாகாந்தி இதுவரை 19 தடவை ராகுலை பிரதமராக்க முயற்சி செய்து விட்டார். அவரது ராகுல்யான் விண்கலம் 19 தடவையும் தோல்வியை தழுவி விட்டது. இப்போதும் முயற்சியில் இறங்கி உள்ளார்கள். இதிலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கப் போவதில்லை. ஏனெனில் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல தெளிவான சிந்தனையுடன் இருப்பது யார் என்பது மக்களுக்கு தெரியும்.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    • 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
    • வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக முதல்வரிடம் சோனியா காந்தி வலியுறுத்துவார் என அவர் என்னிடம் உறுதி அளித்தார்.

    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டம் தர்மஸ்தலா அருகே உள்ள பங்காலா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தப்ப கவுடா. இவரது மனைவி குசுமாவதி. இந்த தம்பதியின் மகள் கல்லூரியில் படித்து வந்தார். அவர் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

    இது தொடர்பான வழக்கை முதலில் கர்நாடக போலீசாரும் பின்னர் மாநில சிஐடி போலீசாரும் விசாரித்தனர். அதன் பிறகு இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட நபர் இந்த வழக்கிலிருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டார். கர்நாடகாவில் இப்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் தாய் குசுமாவதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது மகேஷ் ஷெட்டி (கர்நாடகா) மற்றும் யோகிதா பயானா உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் உடன் இருந்தனர். இதையடுத்து, சோனியாவின் உதவியாளர் குசுமாவதியை சந்தித்து அவருடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார்.இதுகுறித்து குசுமாவதி கூறும்போது, "சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடைய உதவியாளர் ஒருவர் என்னுடைய கோரிக்கைகளை கேட்ட றிந்தார். அப்போது என் மகள் கொல்லப்பட்ட வழக்கில் நீதி வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்தேன்.

    இதையடுத்து, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக முதல்வரிடம் சோனியா காந்தி வலியுறுத்துவார் என அவர் என்னிடம் உறுதி அளித்தார். என்னுடைய கோரிக்கைக்கு செவி சாய்த்த சோனியாவுக்கு நன்றி. எனது மகள் அனுபவித்த கொடுமைக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன்" என்றார்.

    • தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பல மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
    • பா.ஜ.க. எல்லா மாநிலங்களையும் போதை பழக்கங்கள் உள்ள மாநிலமாக மாற்றுவதற்காக முயற்சிக்கிறார்கள்.

    தூத்துக்குடி:

    தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நெல்லை, கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். அப்போது அவருக்கு மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பல மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மழை வெள்ளத்தை எதிர்கொள்வதற்காக தமிழக அரசு ரூ.27 ஆயிரம் கோடி நிவாரண உதவி கேட்டும், ஒரு பைசா கூட நிதி அளிக்காத பா.ஜ.க.வை தமிழக மக்கள் வரும் தேர்தலில் புறக்கணிப்பார்கள்.

    இன்று தமிழகம் வரக்கூடிய பிரதமர் மோடி இந்த மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார். தமிழகத்தில் தி.மு.க.வுடன், காங்கிரஸ் நம்பிக்கையான உறவு கொண்டுள்ளது. இந்த கூட்டணி தொடரும். நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என அந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    போதைப் பொருட்கள் மத்திய அரசின் உளவுத்துறை போன்ற துறைகளின் கட்டுப்பாடுகளை மீறி குஜராத், ஆந்திரா, தமிழகம் என அனைத்து பகுதிகளுக்கும் வருகிறது என்றால் இதற்கு காரணம் பா.ஜ.க. தான். பா.ஜ.க. எல்லா மாநிலங்களையும் போதை பழக்கங்கள் உள்ள மாநிலமாக மாற்றுவதற்காக முயற்சிக்கிறார்கள்.

    பாரதிய ஜனதா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று கூறியது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்தது. எந்த வாக்குறுதியும் செயல்படுத்தவில்லை. ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழகத்திற்கு உள்ள நிதியை ஒதுக்கீடு செய்யாதது ஏன்?.

    ஊழலில் திளைத்துள்ள பா.ஜ.க.வினர் ஊழலைப் பற்றி பேச அருகதை இல்லாத கட்சி. எனவே பா.ஜ.க. அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    நாங்கள் தி.மு.க. கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் சுமூகமாக இருக்கிறோம். அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம். நாங்கள் 5 தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறோம். தி.மு.க.- காங்கிரஸ் உறவு நம்பிக்கையான உறவாக இருக்கிறது. எங்களை ஒருபோதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறைத்து மதிப்பிட மாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது விஜயதாரணி பா.ஜ.க.வில் சேர்ந்தது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரே தோல்வி பயத்தில் ஓட்டம் பிடிக்கிறார். இவர் போய் அங்கே என்ன பண்ணப் போகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றார்.

    • ராகுல், பிரியங்கா உள்பட நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகளை தேர்வு செய்யும் அதிகாரம் காங்கிரசின் மத்திய தேர்தல் குழுவுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
    • வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் தினத்தன்று தேர்தல் அறிக்கையையும் வெளியிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அட்டவணை இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதற்கு முன்னாக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட பாரதிய ஜனதா கட்சி தயாராகி உள்ளது. நேற்று முன்தினம் இரவு பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா மத்திய குழு விடிய விடிய ஆலோசனை நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது.

    பாரதிய ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியலில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்பட சுமார் 120 பேர் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் பாரதிய ஜனதாவுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் கட்சியும் தயாராகி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் மிக விரைவில் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளது.

    இதற்காக காங்கிரஸ் செயற்குழுவும் மத்திய தேர்தல் குழுவும் அடுத்த வாரம் டெல்லியில் கூட இருக்கின்றன. காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா, ராகுல் முன்னிலையில் நடக்கும் இந்த கூட்டங்களில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு ஏற்கனவே ஆய்வு குழு அமைக்கப்பட்டு இருந்தன. அந்த ஆய்வு குழுக்கள் ஒவ்வொரு தொகுதியிலும் ஆய்வு செய்து தலா 3 வேட்பாளர்களின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது.

    அந்த 3 பேரில் இருந்து ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய காங்கிரஸ் செயற்குழு மற்றும் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

    காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியலில் சுமார் 100 பேர் இடம் பெறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. முதல் வேட்பாளர் பட்டியலில் கேரளா, மத்திய பிரதேசம், கோவா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று தெரிகிறது.

    பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆய்வு குழுக்கள் வேட்பாளர்களை துல்லியமாக தேர்வு செய்து விட்டன. கூட்டணி கட்சிகள் இருக்கும் மாநிலங்களில் மட்டும் வேட்பாளர் பெயர் விவரங்கள் சற்று தாமதமாக வெளியிடப்படும் என்று தெரிகிறது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தடவை பெரும்பாலான தொகுதிகளில் கள ஆய்வு செய்து குழுக்கள் மூலம் வேட்பாளர்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த குழுக்கள் மாநில தலைவர்களிடமும், பொறுப்பாளர்களிடமும் பேசி ஆலோசித்துள்ளது.

    அதன் அடிப்படையில் காங்கிரஸ் மேலிடத்துக்கு ஆய்வு குழுக்கள் வேட்பாளர்களை பரிந்துரைத்து உள்ளன. காங்கிரஸ் சார்பில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். எனவே வேட்பாளர் தேர்வில் எந்த குழப்பமும் வராது. வேட்பாளர்கள் தேர்வு பயனுள்ளதாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் சுனில் தலைமையில் தேர்தல் நிபுணர்கள் நாடு முழுவதும் சர்வே நடத்தி அறிக்கை கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையிலும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். கேரளாவில் தற்போது இருக்கும் 15 காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம் என அந்த குழு பரிந்துரை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    உத்தரபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்களில் ஆய்வு குழுக்கள் அடுத்த வாரம் ஆய்வு செய்து வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை கொடுக்க உள்ளன. தோழமை கட்சிகள் வலிமையாக இருக்கும் மாநிலங்களில் இன்னும் 10 நாட்களில் இறுதி முடிவு செய்யப்பட்டு வேட்பாளர்களை அறிவிக்க உள்ளனர்.


    ராகுல், பிரியங்கா உள்பட நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகளை தேர்வு செய்யும் அதிகாரம் காங்கிரசின் மத்திய தேர்தல் குழுவுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் தினத்தன்று தேர்தல் அறிக்கையையும் வெளியிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. விவசாயிகள், ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்து காங்கிரஸ் வாக்குறுதிகளை வெளியிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே அடுத்த வாரம் நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தேர்தல் தொடர்பான வியூகங்களும் வகுக்கப்பட உள்ளன. குறிப்பாக அதிரடி பிரசாரத்தை கையில் எடுப்பதற்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதனால் அடுத்த வாரம் நடை பெற உள்ள காங்கிரஸ் செயற்குழு மற்றும் மத்திய தேர்தல் குழு கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன.

    • திமுக-காங்கிரஸ் இடையே ஓரிரு நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்தை நடக்க போகிறது.
    • தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு இன்று பிற்பகல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை டெல்லி செல்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    திமுக-காங்கிரஸ் இடையே ஓரிரு நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்தை நடக்க போகிறது.

    இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு இன்று பிற்பகல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை டெல்லி செல்கிறார்.

    அங்கு டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை நேரில் சந்திக்கிறார்.

    • சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.
    • அவர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி தலைவருமான சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்காக அவர் மனுதாக்கல் செய்தார். அப்போது அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் இருந்தனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வானார்.

    சோனியா காந்தி கடந்த 1999 -ம் ஆண்டில் இருந்து மக்களவை எம்.பி.யாக இருந்து வருகிறார். தற்போது முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகி இருக்கிறார்.

    • 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் பொது மக்களை சந்திக்க உள்ளனர்.
    • 750-க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான 11 பேர் கொண்ட குழு பிப்ரவரி 5-ந் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளை அறிந்து வருகின்றனர்.

    உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்-பாராளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ் நாட்டின் கருத்துக்கள் என்ற தலைப்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு கோரிக்கை மனுக்களையும் பெற்று வருகின்றனர்.

    பிப்ரவரி 5-ந் தேதி தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள், 6-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள், பிப்ரவரி 7-ந் தேதி மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், 9-ந்தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள், 10-ந் தேதி காலையில் கோவை, நீலகிரி, பிற்பகலில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள், 11-ந் தேதி சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து பரிந்துரைகளை பெற்றனர்.

    அடுத்தக்கட்டமாக 23-ந் தேதி வேலூர், ஆரணியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கவுள்ளனர். 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் பொது மக்களை சந்திக்க உள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை எழுத்துப்பூர்வமாகவும், தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள், ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகளை அனுப்புவதற்கான முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த பதிவீடுகளுக்கான காலக்கெடு பிப்ரவரி 25-ந் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு மதிப்பீடு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பார்வைக்கு கொண்டு சென்று அதன்பிறகு அதிகாரப்பூர்வத் தேர்தல் அறிக்கையாக தயாரிக்கப்பட உள்ளது.

    இப்போது வணிகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பெண்கள் நல அமைப்பு நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், ஓட்டல் உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள், மாற்று திறனாளிகளின் அமைப்பு நிர்வாகிகள், மற்றும் பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் நேரிலும், எழுத்துப்பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாக, ஆன்லைன் மூலமாகவும் தங்கள் கோரிக்கைகளை அளித்து வருகின்றனர்.

    இதுவரை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சந்தித்துள்ளனர். 750-க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

    கோரிக்கைகள் தொடர்பாக தொலைபேசி வாயிலாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் மக்களிடம் இருந்து வந்துள்ளதுடன், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள்; சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு 500க்கும் மேற்பட்ட கடிதங்களும் பெறப்பட்டு உள்ளதாக இக்குழுவினர் தெரிவி்த்துள்ளனர்.

    • 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நிதியாக சுமார் ரூ. 2½ கோடி வழங்கினர்.
    • பல்வேறு சிறப்பு அம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை ம.தி.மு.க வரவேற்கிறது.

    நெல்லை:

    ம.தி.மு.க. நெல்லை மண்டலம் சார்பில் தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மஹாலில் இன்று நடைபெற்றது.

    இதில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தேர்தல் நிதியினை பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நிதியாக சுமார் ரூ. 2½ கோடி வழங்கினர்.

    நெல்லை மத்திய மாவட்டம் சார்பில் மட்டும் ரூ.35 லட்சம் நிதியாக வழங்கப்பட்டது. இதில் துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் கே.எம்.ஏ. நிஜாம், புதுக்கோட்டை செல்வம், ஆர்.எஸ். ரமேஷ், சுதா பாலசுப்பிரமணியன், ராம.உதயசூரியன், வக்கீல் வெற்றிவேல், ரவிச்சந்திரன், வேல்முருகன், கண்ணன், பகுதி செயலாளர் பொன் வெங்கடேஷ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான், செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலை நாட்ட சிறப்பான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தில் முழுமையாக வறுமையை ஒழிக்க தாயுமானவர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடிசை இல்லா தமிழகம் என்ற திட்டத்தை நிறைவேற்ற கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

    தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதுடன் வேலை வாய்ப்பு உருவாக்க பல ஜவுளி பூங்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை ம.தி.மு.க வரவேற்கிறது. மாற்றான் தாய் மனப் பான்மையுடன் மத்திய அரசு தமிழகத்தை நடத்தி வருகிறது. கடுமையான நிதி நெருக்கடி, மத்திய அரசின் குறுக்கீட்டை கடந்து தமிழக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.


    மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்காத காரணத்தால் மாநில அரசே நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    தமிழகத்திற்கு பெரிய நிதி நெருக்கடி உள்ளது. மழை வெள்ளத்தால் தமிழகத்திற்கு ரூ. 37 ஆயிரம் கோடி நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மின்வாரியம் கடுமையான நஷ்டத்தில் இயங்குகிறது. கடந்த ஆண்டு மட்டும் 17 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை தமிழக அரசு தான் செலுத்தி உள்ளது.

    எதிர்கட்சிகளை தவிர அனைவரும் இந்த பட்ஜெட்டை பாராட்டுகின்றனர். மழை வெள்ள பாதிப்பு, ஜி.எஸ்.டி. வரி வருவாய் இழப்பு, நிலுவை தொகை வராதது போன்றவையே தமிழகத்தின் வருவாய் குறைய காரணம். நிதி பற்றாக்குறை தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

    தமிழக அரசு, முதலமைச்சரின் சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதியிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    விருதுநகர் தொகுதி, திருச்சி மையப்படுத்திய தொகுதி, சென்னையை மையப்படுத்திய தொகுதி, ஈரோட்டை மையப்படுத்திய தொகுதி என 4 பாராளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

    எண்ணிக்கை முடிவான பின்னர் தொகுதி குறித்து ம.தி.மு.க. அறிவிக்கும். விருதுநகர் தொகுதியில் நான் (துரை வைகோ) போட்டியிட வேண்டும் என்பது ம.தி.மு.க. தொண்டர்களது விருப்பம்.

    கூட்டணி தலைவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்து வேட்பாளர் அறிவிப்பு இருக்கும். இந்த முறை எங்களது பம்பரம் சின்னத்தில் போட்டியிட தி.மு.க. தலைமையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×