search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் செயற்குழு அடுத்த வாரம் கூடுகிறது
    X

    காங்கிரஸ் செயற்குழு அடுத்த வாரம் கூடுகிறது

    • ராகுல், பிரியங்கா உள்பட நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகளை தேர்வு செய்யும் அதிகாரம் காங்கிரசின் மத்திய தேர்தல் குழுவுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
    • வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் தினத்தன்று தேர்தல் அறிக்கையையும் வெளியிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அட்டவணை இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதற்கு முன்னாக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட பாரதிய ஜனதா கட்சி தயாராகி உள்ளது. நேற்று முன்தினம் இரவு பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா மத்திய குழு விடிய விடிய ஆலோசனை நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது.

    பாரதிய ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியலில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்பட சுமார் 120 பேர் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் பாரதிய ஜனதாவுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் கட்சியும் தயாராகி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் மிக விரைவில் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளது.

    இதற்காக காங்கிரஸ் செயற்குழுவும் மத்திய தேர்தல் குழுவும் அடுத்த வாரம் டெல்லியில் கூட இருக்கின்றன. காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா, ராகுல் முன்னிலையில் நடக்கும் இந்த கூட்டங்களில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு ஏற்கனவே ஆய்வு குழு அமைக்கப்பட்டு இருந்தன. அந்த ஆய்வு குழுக்கள் ஒவ்வொரு தொகுதியிலும் ஆய்வு செய்து தலா 3 வேட்பாளர்களின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது.

    அந்த 3 பேரில் இருந்து ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய காங்கிரஸ் செயற்குழு மற்றும் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

    காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியலில் சுமார் 100 பேர் இடம் பெறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. முதல் வேட்பாளர் பட்டியலில் கேரளா, மத்திய பிரதேசம், கோவா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று தெரிகிறது.

    பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆய்வு குழுக்கள் வேட்பாளர்களை துல்லியமாக தேர்வு செய்து விட்டன. கூட்டணி கட்சிகள் இருக்கும் மாநிலங்களில் மட்டும் வேட்பாளர் பெயர் விவரங்கள் சற்று தாமதமாக வெளியிடப்படும் என்று தெரிகிறது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தடவை பெரும்பாலான தொகுதிகளில் கள ஆய்வு செய்து குழுக்கள் மூலம் வேட்பாளர்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த குழுக்கள் மாநில தலைவர்களிடமும், பொறுப்பாளர்களிடமும் பேசி ஆலோசித்துள்ளது.

    அதன் அடிப்படையில் காங்கிரஸ் மேலிடத்துக்கு ஆய்வு குழுக்கள் வேட்பாளர்களை பரிந்துரைத்து உள்ளன. காங்கிரஸ் சார்பில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். எனவே வேட்பாளர் தேர்வில் எந்த குழப்பமும் வராது. வேட்பாளர்கள் தேர்வு பயனுள்ளதாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் சுனில் தலைமையில் தேர்தல் நிபுணர்கள் நாடு முழுவதும் சர்வே நடத்தி அறிக்கை கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையிலும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். கேரளாவில் தற்போது இருக்கும் 15 காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம் என அந்த குழு பரிந்துரை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    உத்தரபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்களில் ஆய்வு குழுக்கள் அடுத்த வாரம் ஆய்வு செய்து வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை கொடுக்க உள்ளன. தோழமை கட்சிகள் வலிமையாக இருக்கும் மாநிலங்களில் இன்னும் 10 நாட்களில் இறுதி முடிவு செய்யப்பட்டு வேட்பாளர்களை அறிவிக்க உள்ளனர்.


    ராகுல், பிரியங்கா உள்பட நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகளை தேர்வு செய்யும் அதிகாரம் காங்கிரசின் மத்திய தேர்தல் குழுவுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் தினத்தன்று தேர்தல் அறிக்கையையும் வெளியிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. விவசாயிகள், ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்து காங்கிரஸ் வாக்குறுதிகளை வெளியிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே அடுத்த வாரம் நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தேர்தல் தொடர்பான வியூகங்களும் வகுக்கப்பட உள்ளன. குறிப்பாக அதிரடி பிரசாரத்தை கையில் எடுப்பதற்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதனால் அடுத்த வாரம் நடை பெற உள்ள காங்கிரஸ் செயற்குழு மற்றும் மத்திய தேர்தல் குழு கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன.

    Next Story
    ×