என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "premalatha"
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நேற்று பிரேமலதா பிரசாரம் செய்தார்.
அவர் தக்கலை அருகே வேர்கிளம்பி சந்திப்பில் திறந்த வேனில் நின்றபடி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டு சேகரித்தார். பிரேமலதா தேர்தல் பிரசாரம் செய்த இடம் 4 சாலைகள் சந்திக்கும் பகுதி என்பதால் அந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
நேரம் செல்லச் செல்ல அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்தது. இதனால் 4 சக்கர, இரு சக்கர வாகனங்களில் அந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் தவித்தனர். ஒரு மணிநேரத்திற்கு மேல் காத்துக்கிடந்ததால் பொறுமை இழந்த சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் ஹாரனை ஒலிக்கச் செய்தனர்.
அவர்கள் தொடர்ந்து ஹாரனை ஒலித்தபடி இருந்த தால் பிரேதமலதா பேசுவதற்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் அவர் ஆவேசம் அடைந்தார்.
அதை தனது பேச்சின் மூலம் அவர் வெளிப்படுத்தினார். பிரேமலதா பேசும்போது கூறியதாவது:-
நான் தேர்தல் பிரசாரம் செய்வதை பார்த்து பயப்படுபவர்கள் இதுபோல ஹாரன் ஒலித்து இடையூறு செய்கிறார்கள். இது எல்லாம் என்ன சவுண்டு? இது கேவலமான செயல். நாங்கள் தேர்தல் பிரசாரம் செய்ய முறைப்படி அனுமதி வாங்கி உள்ளோம். அதை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.
நாங்கள் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டோம். இதை வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள். எங்களிடம் இது எல்லாம் நடக்காது.
போர் களம் என்றால் நேருக்கு நேர் மோதுபவர்கள் தான் வீரர்கள். போருக்கு பயந்து பின்னால் நின்று கொண்டு ஹாரன் ஒலிப்பவர்கள் கோழைகள். நான் இங்கு 2 மணிநேரம் கூட பேசுவேன். எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன்.
எதிர்ப்புகளை சந்தித்தே வளர்ந்த கட்சிதான் தே.மு.தி.க. நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம். இந்த ஹாரன் ஒலி எங்களை ஒன்றும் செய்துவிடாது. இங்கு நடப்பதை பார்க்கும்போதே எதிர் அணியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது தெரிகிறது. பொன்.ராதா கிருஷ்ணன் வெற்றியும் உறுதியாகி விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரேமலதா தேர்தல் பிரசாரத்தின் போது அவரை பேசவிடாமல் ஹாரன் ஒலித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பிரசாரத்தை முடித்து சென்றபிறகு அந்த வழியாக போக்குவரத்து வழக்கம் போல நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து பிரேமலதா அஞ்சுகிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த தே.மு.தி.க. தொண்டர்கள், ‘கேப்டன் எப்படி இருக்கிறார்?‘ என்று கேட்டனர். அதற்கு பிரேமலதா விஜயகாந்த், ‘கேப்டன் சூப்பராக உள்ளார். அவர் வெகு விரைவில் உங்கள் முன் வருவார். 5 நிமிடம் முன் கூட அவருடன் செல்போனில் பேசினேன். அப்போது அடுத்து எங்கு செல்கிறாய் என்று கேட்டார். நான் அஞ்சுகிராமம் என்றதும், அனைவரையும் கேட்டதாக கூறும்படி சொன்னார்’ என்று பதில் அளித்தார். உடனே அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
களக்காடு:
நெல்லை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று இரவு களக்காடு, பாளை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். களக்காட்டில் திரண்டு நின்ற மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
‘எங்கள் கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல. மக்கள் போற்றும் மகத்தான கூட்டணி. இளைஞர்கள் கூட்டணி, தொழிலாளர்கள் கூட்டணி, நான் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து மக்களை நேரடியாக சந்தித்து விட்டு தற்போது களக்காடு வந்துள்ளேன். செல்லும் இடங்களில் எல்லாம் அமோக வரவேற்பு உள்ளது. இந்த தேர்தலில் நல்ல தீர்ப்பு தாருங்கள்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வகையில் அமோக வெற்றியை தர வேண்டும். நெல்லையில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் நச்சு நீர் கலக்கிறது. நாங்கள் வெற்றி பெற்றால் தாமிரபரணியை மீட்டெடுப்போம். களக்காட்டில் மூடப்பட்டுள்ள பொது மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்துவோம். பூவும், இலையும், பழமும் சேர்ந்து வெற்றி முரசு கொட்டுவது உறுதி.
பிரதமர் நரேந்திர மோடி இன்று உலக நாடுகளுக்கே சவால் விடும் வகையில் வலிமையுடன் திகழ்கிறார். அவர் மீண்டும் பிரதமராக வேண்டும். நாங்கள் வெற்றி பெற்றால் ஜி.எஸ்.டி வரியை பொதுமக்கள் பாதிக்காத வகையில் மறுபரிசீலனை செய்ய பிரதமரிடம் வலியுறுத்துவோம். 100 நாள் வேலை திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்
பிரேமலதா பேசும்போது, கூட்டத்தில் இருந்த ஒரு தொண்டர் விஜயகாந்த் எப்படி உள்ளார்? என்று நலம் விசாரித்தார். அதற்கு பிரேமலதா கேப்டன் நலமுடன் உள்ளார். சூப்பராக உள்ளார். உங்களை எல்லாம் கேட்டதாக சொல்ல சொன்னார் என்று மைக்கிலேயே பதில் அளித்தார்.
பிரேமலதா வருகையை முன்னிட்டு மாலை 6.30 மணி முதலே பொதுமக்கள் களக்காடு அண்ணாசாலையில் குவிய தொடங்கியதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து களக்காடு புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அண்ணா சிலை பழைய பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் திரும்பி சென்றன. இதனால் பயணிகள் சிரமப்பட்டனர்.
இதன்பிறகு நெல்லை வந்த பிரேமலதா பாளையங்கோட்டை மார்க்கெட் திடல் ஆகிய பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களின் ஆதரவு பெற்ற கூட்டணி அ.தி.மு.க. கூட்டணி. இந்த கூட்டணியை அமைக்க விடாமல் தி.மு.க. எவ்வளவோ சூழ்ச்சி செய்து பார்த்தது. ஆனால் முடியவில்லை. அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. நமது கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வருவார். நலத் திட்ட பணிகள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #premalatha #admk #parliamentelection
கோபி பஸ் நிலையம் அருகே தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது. இந்த கூட்டணி அமைய கூடாது என திமுக பல்வேறு சூழ்ச்சிகளை செய்தது. அதையெல்லாம் முறியடித்து வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக, தேமுதிக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. வெற்றி பெற்று செல்லும் எங்கள் கூட்டணி எம்.பி.க்கள் தமிழகத்திற்கான திட்டங்களை மத்திய அரசை வலியுறுத்தி செயல்படுத்துவார்கள்.
மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி தான் அமையும். அப்போது நதிகளை இணைக்க வலியுறுத்துவோம். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை எடுத்துக்கூறி மறுபரிசீலனை செய்ய வலியறுத்துவோம்.
உலக நாடுகளில் 4-வது வல்லரசு நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. இதற்கு காரணமே பிரதமர் மோடி தான்.
இவ்வாறு அவர் கூறினார். #PremaLatha
விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
விஜயகாந்தின் ரோல்மாடல் எம்.ஜி.ஆர். தான். நாங்கள் வீட்டில் படுக்கையறையில் மாட்டியிருப்பது எம்.ஜிஆர்., ஜானகி அம்மாள் உள்ள படம்தான். எங்கள் திருமணம் மதுரையில் நடந்ததை தொடர்ந்து சென்னையில் எங்கள் வீட்டிற்கு வந்த ஜானகிஅம்மாள் எம்.ஜி.ஆர். பெயர் பொறித்த மோதிரத்தை பரிசாக தந்தார். அதை நாங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறோம். அதே போன்று ஜானகிஅம்மாள் விஜயகாந்திடம் யார் யாரோ வந்து எம்.ஜி.ஆரிடம் வேண்டியதை பெற்றுச்செல்கிறார்கள், நீ வந்தால் என்ன என்று கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர். பயன்படுத்திய வேனையும், உலகம் சுற்றும் வாலிபனில் பயன்படுத்திய பேன்ட் மற்றும் கோட்டையும் கொடுத்தார். அதையும் நாங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறோம்.
ஜெயலலிதாவிற்கும், விஜயகாந்திற்கும் படங்களில்தான் நடிக்கதெரியுமே தவிர அரசியலில் நடிக்கத் தெரியாது. ஜெயலலிதா திறமையான பெண்மணி. அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என நானும் விஜயகாந்தும் பேசிக்கொண்டிருந்தோம்.
அதைத்தான் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் எங்களை சந்திக்க வரும்போது குறிப்பிட்டோம்.
தற்போது அமைந்துள்ள கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெற்றிபெறும். நாளை நமதே 40-ம் நமதே. தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணி அடுத்துவரும் உள்ளாட்சி தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் இனி வருங்காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தலிலும் உறுதியாக தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சாமானியனை கூட அரசியலில் உயர்த்துபவர்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் விஜயகாந்தும்தான். பிரசாரத்தின் போது தொண்டர்களோடு தொண்டராக அமர்ந்து விஜயகாந்த் சாப்பிடக்கூடியவர்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Premalatha
சென்னை:
நீண்ட இழுபறிக்கு இடையே அ.தி.மு.க. - தே.மு.தி.க. தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. அ.தி. மு.க. கூட்டணியில் தே.மு.தி. க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த தொகுதிகள் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்குவது என இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. என்றாலும் வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
அதனை அ.தி.மு.க. தலைமை ஏற்று கொண்டதாக தெரிகிறது. வட சென்னையில் அ.தி.மு.க. போட்டியிட முடிவு செய்திருந்தது.
ஆனால் தே.மு.தி.க. வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் வடசென்னையை விட்டு கொடுத்துள்ளது. தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர்களையும் நாளை அல்லது நாளை மறுநாள் 18-ந்தேதி வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்து அறிவித்து விட்டதால் இன்னும் தாமதம் செய்யக்கூடாது என அ.தி. மு.க. முடிவு செய்து நாளை (17-ந்தேதி) அறிவிக்க திட்டமிட்டுள்ளது.
தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் விருப்பப்படி கொடுக்கப்பட்டதால் வேட்பாளர்களையும் தேர்வு செய்து தயாராக வைத்துள்ளனர்.
வடசென்னையில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் நிறுத்தப்படுகிறார்.
கள்ளக்குறிச்சியில் துணை பொதுச்செயலாளர் எல்.கே. சதீஷ் போட்டியிடுகிறார். திருச்சியில் டாக்டர் இளங்கோவன் அறிவிக்கப்படுகிறார்.
விருதுநகர் தொகுதியில் சென்னையைச் சேர்ந்த அப்துல்லா சேட் அல்லது அழகர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தலில் பிரேமலதா நிற்கவில்லை. விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் களம் இறங்குகிறார். #parliamentelection #dmdk #lksudhish
கோவை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களால் பலனில்லை என்ற பிரேமலதா விஜயகாந்தின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியை சேர்ந்த பிரதமர் இல்லாததால், இவ்வளவு எம்.பி.க்கள் இருந்தும் ஒன்றும் செய்ய முடிய வில்லை என்று தான் தெரிவித்துள்ளார். அவர் சொன்னதன் கருவை புரிந்து கொள்ள வேண்டும்.
தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் கூட்டணி உறுதி செய்யப்படும் என்று நம்புகிறோம். கூட்டணி அமைத்தால் ஒன்றிபோக வேண்டும். அப்போது தான் கூட்டணி வலுபெறும். கூட்டணி அமைத்தவர்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டும்.
கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் தமிழக அரசை குறை கூறி தான் அரை சதவீத ஓட்டு வாங்குகின்றனர். கூட்டணி சேரவில்லை என்றால் கம்யூனிஸ்டு கட்சி காணாமல் போய்விடும். அவர்கள் கூறும் பொய்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அரசு விழாக்களில் தேர்தல் பிரசாரம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகத்தான் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அது குற்றமா?. தற்போது எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணியை தொடங்கி வைத்து உள்ளார். இதனால் எதிர் கட்சிகளுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த போது எத்தனை முறை பிரதமர் வந்து தமிழகத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகள் வைப்பார்கள். அதுகுறித்து பொதுமக்களும், நீங்களும் சிந்திக்க வேண்டும்.
தற்போதைய தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சரியான கூட்டணியா? இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது யார் ஆட்சியில் இருந்தார்கள். அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பது வெட்கக் கேடான ஒன்று. பா.ஜனதா கட்சியை தி.மு.க. மதவாத கட்சி என்கிறார்கள். அவர்களுடன் மத்தியில் அங்கம் வகித்து 5 ஆண்டு ஆட்சி சுகத்தை அனுபவித்து விட்டு தற்போது மதவாத கட்சி என்று குறை கூறுவதை ஏற்க முடியாது. இதுகுறித்து நீங்கள் தான் அவர்களிடம் கேட்க வேண்டும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்கள். அவர்களை தி.மு.க. ஆட்சியில் பரோலில் விட்டார்களா? ஆனால் அவர்களின் உடல்நலன் கருதி உறவினர்கள் கேட்டுக்கொண்டதால் அ.தி.மு.க. ஆட்சியில் தான் பரோலில் விடுவிக்கப்பட்டனர்.
7 பேர் விடுதலைக்காக தி.மு.க. எதையும் செய்யவில்லை. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சில அமைப்புகள் வேண்டும் என்றே மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறார்கள். தேர்தலுக்காக இதுபோன்ற நாடகம் ஆடுகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் மீது பாசம் இருந்திருந்தால் தி.மு.க. ஆட்சியில் விடுதலை செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை. தற்போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, அதை கவர்னரிடம் கொடுத்துள்ளோம். அவர் மத்திய அரசிடம் ஆலோசித்து உரிய முடிவை அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் ம.தி.மு.க. நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ரூ. 55 லட்சமும், நாமக்கல் மாவட்டம் சார்பில் ரூ. 10 லட்சமும் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவிடம் வழங்கப்பட்டது.
பாராளுமன்றம் மற்றும் 21 சட்ட சபை தொகுதிகளுக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணி நிச்சயம் மகத்தான வெற்றி பெறும். கடந்த 2004-ம் ஆண்டு தி.மு.க. அணி 40 எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெற்றதோ அது போல் மீண்டும் வரலாறு திரும்ப உள்ளது.
தற்போது ஆட்சியில் உள்ள மத்திய அரசானது அதிகாரத்தை கையில் வைத்து கொள்ள எத்தகைய தவறான முறைகளையும் கையாள வாய்ப்பு உள்ளது.
போலீஸ் வாகனம், 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவற்றில் பணம் கொண்டு செல்ல அதிகார வர்க்கம் திட்டமிட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் அணியினர் ஒரு ஓட்டுக்கு ரூ. ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவு செய்வார்கள்.
நீட் தேர்வு விவகாரம், உயர் மின்னழுத்த கோபுரம், முல்லை பெரியாறு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற விவகாரங்களில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துள்ளது.
முதன்மை மாநிலமாக செழித்து வளர்ந்துள்ள தமிழகத்தை அழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ராணுவத்தினரை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளோம். அபிநந்தனை நினைத்து பெருமைப்படுகிறோம்.
ஆனால் ரபேல் விவகாரத்தில் பிரதமர் மீதான சந்தேகம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில் கவர்னரும், தமிழக அரசும் இதுவரை முறையான பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் 130 இடங்களை மட்டுமே பாரதீய ஜனதா பெறும். மாநில அரசுகளின் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.
கருணாநிதியை மருத்துவமனைக்கு சென்று பார்க்க விரும்பிய விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் பார்க்க அனுமதிக்கவில்லை என பிரேமலதா கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மனிதாபிமானம் உள்ளவர். அவர் அவ்வாறு நடந்து இருக்க மாட்டார்.
அவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. பத்திரிகையாளர்களை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா ஒருமையில் பேசியிருப்பது தவறானது. இவ்வாறு பேசுவது முறையல்ல. இதனை அவர் தவிர்க்க வேண்டும்.
கட்சி நிதி அளிக்கும் நிகழ்ச்சியில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாநகர செயலாளர் சிவபாலன், மாவட்ட துணை செயலாளர் முத்து ரத்தினம், பல்லடம் நகர செயலாளர பாலு, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம்,பொங்கலூர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். #vaiko #parliamentelection #dmk #premalathavijayakanth
தாம்பரம் மாடம்பாக்கத்தை சேர்ந்த விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி உள்ளார். அவரை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
தாம்பரத்தில் உள்ள அபினந்தன் வீட்டில் அவரது தந்தை வரதமான், தாயார் டாக்டர் ஷோபா ஆகியோர் வசித்து வருகிறார்கள். வரதமான் ஓய்வு பெற்ற விமானப்படை ஏர்மார்ஷல் ஆவார்.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. ராமச்சந்திரன், போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் நேற்று அபினந்தன் வீட்டுக்கு சென்றனர். அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று அபினந்தனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் இன்று அபினந்தன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சார்பில் அபினந்தனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்கள் 1942-ம் ஆண்டு முதல் 3 தலைமுறையாக விமானப்படை பிரிவில் நாட்டுக்காக சேவை செய்து வருவதை அறிந்து பெருமைப்படுகிறேன்.
தங்கள் மகன் பாகிஸ்தானில் பிடிபட்டுள்ள நேரத்தில் இந்திய மக்கள் அனைவரும் மொழி, மதம் கடந்து அபினந்தன் பத்திரமாக நாடு திரும்ப பிரார்த்திப்பதை அறிந்து நெகிழ்ச்சி அடைவதாக கூறினார்கள். இந்தியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.
அதேநேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு தக்க நேரத்தில் பதிலடி கொடுத்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் தே.மு.தி.க. சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அபினந்தன் பத்திரமாக நாடு திரும்ப தே.மு.தி.க. சார்பில் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு இன்று அபினந்தன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா சென்றிருந்தார். ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்த டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. சார்பிலும் மு.க.ஸ்டாலின் சார்பிலும் அபினந்தன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினேன். அபினந்தன் வீரதீர செயல் மூலம் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் ஜெனிவா ஒப்பந்தம் 13-வது பிரிவின்படி துன்புறுத்தாமல் நடத்தப்பட வேண்டும். அவரது குடும்பத்தினர் தைரியமாக உள்ளனர். அவர்கள் தான் நமக்கு தைரியம் சொல்கிறார்கள். அபினந்தன் விரைவில் நாடு திரும்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Abinandhan #Premalatha #TamilisaiSoundararajan
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது சிங்கப்பூர் சென்று சிகிச்சைபெற்று திரும்பினார். 2015-ம் ஆண்டு சிங்கப்பூர் சென்று வந்தார். 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந்தேதி, சென்னை தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கும் மேல் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.
2017 நவம்பர் இறுதியிலும் சிங்கப்பூர் சென்று இருந்தார். பின்னர் குரல் மோசமானதை அடுத்து அமெரிக்காவில் தங்கி சிகிச்சைப் பெற்றார். அவ்வப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் வரும் 2019-ம் ஆண்டு வருவதையொட்டி விஜயகாந்த் மீண்டும் உடல் நலத்துடன் வந்து புத்துணர்வுடன் தமிழ்நாடு முழுக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் அவர் உடல்நலம் தேறி வந்த பிறகு பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்வார் என்றும் தெரிவித்தனர்.
விஜயகாந்தும் பிரேமலதாவும் திரும்பும் வரையில் அவர்களது மகன் விஜய பிரபாகரன் கட்சி பணிகளை கவனிப்பார். #DMDK #Vijayakanth
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்