search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்- பிரேமலதா பிரசாரம்
    X

    40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்- பிரேமலதா பிரசாரம்

    தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தில் பேசியுள்ளார். #premalatha #admk #parliamentelection

    களக்காடு:

    நெல்லை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று இரவு களக்காடு, பாளை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். களக்காட்டில் திரண்டு நின்ற மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    ‘எங்கள் கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல. மக்கள் போற்றும் மகத்தான கூட்டணி. இளைஞர்கள் கூட்டணி, தொழிலாளர்கள் கூட்டணி, நான் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து மக்களை நேரடியாக சந்தித்து விட்டு தற்போது களக்காடு வந்துள்ளேன். செல்லும் இடங்களில் எல்லாம் அமோக வரவேற்பு உள்ளது. இந்த தேர்தலில் நல்ல தீர்ப்பு தாருங்கள்.

    இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வகையில் அமோக வெற்றியை தர வேண்டும். நெல்லையில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் நச்சு நீர் கலக்கிறது. நாங்கள் வெற்றி பெற்றால் தாமிரபரணியை மீட்டெடுப்போம். களக்காட்டில் மூடப்பட்டுள்ள பொது மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்துவோம். பூவும், இலையும், பழமும் சேர்ந்து வெற்றி முரசு கொட்டுவது உறுதி.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று உலக நாடுகளுக்கே சவால் விடும் வகையில் வலிமையுடன் திகழ்கிறார். அவர் மீண்டும் பிரதமராக வேண்டும். நாங்கள் வெற்றி பெற்றால் ஜி.எஸ்.டி வரியை பொதுமக்கள் பாதிக்காத வகையில் மறுபரிசீலனை செய்ய பிரதமரிடம் வலியுறுத்துவோம். 100 நாள் வேலை திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்

    பிரேமலதா பேசும்போது, கூட்டத்தில் இருந்த ஒரு தொண்டர் விஜயகாந்த் எப்படி உள்ளார்? என்று நலம் விசாரித்தார். அதற்கு பிரேமலதா கேப்டன் நலமுடன் உள்ளார். சூப்பராக உள்ளார். உங்களை எல்லாம் கேட்டதாக சொல்ல சொன்னார் என்று மைக்கிலேயே பதில் அளித்தார்.

    பிரேமலதா வருகையை முன்னிட்டு மாலை 6.30 மணி முதலே பொதுமக்கள் களக்காடு அண்ணாசாலையில் குவிய தொடங்கியதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து களக்காடு புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அண்ணா சிலை பழைய பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் திரும்பி சென்றன. இதனால் பயணிகள் சிரமப்பட்டனர்.

    இதன்பிறகு நெல்லை வந்த பிரேமலதா பாளையங்கோட்டை மார்க்கெட் திடல் ஆகிய பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களின் ஆதரவு பெற்ற கூட்டணி அ.தி.மு.க. கூட்டணி. இந்த கூட்டணியை அமைக்க விடாமல் தி.மு.க. எவ்வளவோ சூழ்ச்சி செய்து பார்த்தது. ஆனால் முடியவில்லை. அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. நமது கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வருவார். நலத் திட்ட பணிகள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #premalatha #admk #parliamentelection 

    Next Story
    ×