என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜெயலலிதா"
- அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது
- அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.
மதுரையில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், பிரதமர் மோடி நன்றாக நடிக்கிறார். அவர்கள் கட்சி தலைவர்களான வாஜ்பாய், அத்வானிக்கு மாற்றாக அதிமுக தலைவர்களின் புகழை பாடுகிறார். அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற மோடி முயற்சிக்கிறார். கஜினி முகமது போல பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு படையெடுத்தாலும் சரி, மக்கள் ஏற்க மாட்டார்கள்.
அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது. அதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள். ராமர் கோயில் கட்டுவதை குறை சொல்லவில்லை. அதை மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்து செல்ல கூடாது. பாஜக எவ்வளவு உருண்டாலும் அவர்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் ஒரு அரசியல் நாடகம் தான். தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்த பிரதமர் ஏன் இந்த கட்டுமானம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை. எப்படியாவது மருத்துவமனையை கட்டி முடித்தால் சரி தான் என் அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார்.
இதனை அடுத்து, புதுச்சேரியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் பிரதமர் மோடி, அமித்ஷா, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரின் படங்களுடன், வாக்களிப்போம் தாமரைக்கே என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியிருந்தது பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
- ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் மார்ச் மாதம் 6, 7-ந் தேதிகளில் ஒப்படைக்குமாறு கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி உத்தரவிட்டது.
அதன்படி கர்நாடக அரசு ஜெயலலிதாவின் தங்க, வைர, வைடூரிய நகைகள், வெள்ளி பொருட்களை தமிழக அரசிடம் இன்று (புதன்கிழமை) ஒப்படைக்க ஏற்பாடுகளை செய்திருந்தது. முன்னதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஜெயலலிதாவின் வாரிசான தன்னிடம், அவரது பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி உரிமை கொண்டாடினார். ஆனால் அவரது மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜெ.தீபா மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு நேற்று நீதிபதி முகமது நவாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ஜெயலலிதாவின் வாரிசிடம் தான் அவரது பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பில் இருந்து ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதால், அவரை குற்றவாளியாக கருத முடியாது என்றும் வாதிட்டார்.
மேலும், ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்குமாறும் கோரினார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கிரண் ஜவலி, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்குமாறு கோரினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முகமது நவாஸ், ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் இதுதொடர்பான அடுத்த விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். ஐகோர்ட்டின் இந்த உத்தரவால், ஜெயலலிதாவின் பொருட்கள் திட்டமிட்டபடி இன்று தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
- நிர்வாகிகளை நீக்கி பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
- எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் படங்களை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களை பயன்படுத்திய 3 பாஜக நிர்வாகிகள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகிகளை நீக்கி பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் படங்களை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
- இதையடுத்து நாளை கோர்ட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கடந்த 1996-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அப்போது அவரது வீட்டில் இருந்து 11,344 புடவைகள், 750 காலணிகள், 91 கை கடிகாரம், 28 கிலோ மதிப்பிலான 468 வகையான தங்கம், வைர நகைகள் மற்றும் 700 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு கர்நாடக வுக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து கைவிடப்பட்டது. சசிகலா உள்பட மற்ற 3 பேரும் சிறை தண்டனையை அனுபவித்தனர்.
இந்த சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ஏலம் மூலம் விற்று அபராத தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த பொருட்களை நாளை, நாளை மறுநாள் (7-ந் தேதி)தமிழக அரசிடம் கர்நாடக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி நாளை (புதன்கிழமை) ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் கர்நாடக அரசு ஒப்படைக்க உள்ளது. இதற்காக மாநில அரசு தன்வசம் உள்ள பொருட்களை ஒப்படைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த பொருட்களை பெற்றுக்கொள்ள தமிழக, உள்துறை அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு பெங்களூரு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் நகைகள் மற்றும் உடமைகள் சரிபார்க்கப்பட்டு தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். 6 பெரிய டிரங்கு பெட்டிகளில் அந்த பொருட்கள் கண்டெய்னர் லாரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் இவை அனைத்தையும் பதிவு செய்ய வீடியோகிராபரும் அழைத்துச் செல்லப்படுகிறார்.
இதையடுத்து நாளை கோர்ட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- புதுவையில் பா.ஜனதாவின் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதியில் மும்முனைப்போட்டி உறுதியாகியுள்ளது.
ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா, இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் அல்லது தி.மு.க., அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடுகிறது.
பா.ஜனதா வேட்பாளர் யார்? என தெரியாத நிலையில் கிராமப்புற பகுதிகளில் தாமரை சின்னம் வரைந்து, மீண்டும் மோடி, வேண்டும் மோடி என தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் புதுவையில் பா.ஜனதாவின் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதில் மறைந்த அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தலைவர் நட்டா, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரின் படங்களை பிரசுரித்தும் வாக்களிப்போம் தாமரைக்கே எனவும் அச்சிட்டிருந்தனர்.
மேலும் சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரதமர் மோடி பேசிய போது, தரமான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். அதனால்தான் ஏழை மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவராக ஏற்றுக்கொண்டனர் என்ற வரிகளையும் குறிப்பிட்டுள்ளனர்.
இது கூட்டணியை விட்டு வெளியேறிய அ.தி.மு.க. தொண்டர்களின் வாக்குகளை இழுக்கும் தந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது புதுவை அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து இரவோடு, இரவாக புதுவை அ.தி.மு.க. சார்பில் பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுத்து ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், பிரதமர் மோடி, புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களுடன் பல்லடத்தில் பிரதமர் மோடி பேசிய வாசகங்களை குறிப்பிட்டுள்ளனர். எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது ஜெயலலிதாதான். அவர் தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தவர் என்று பிரதமர் மோடி பேசியதை அச்சிட்டுள்ளனர்.
மேலும் பிரதமர் மோடி பா.ஜனதா பொதுக்கூட்டத்தில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரின் ஒப்பற்ற புகழை பேசியதன் மூலம் எடப்பாடியார் தலைமையில் தமிழகம், புதுச்சேரி ஆகிய 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்துக்கு பா.ஜனதா அதன் கூட்டணி தொண்டர்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர்.
புதுவையில் அ.தி.மு.க. வெற்றியை உறுதி செய்துள்ள பா.ஜனதா கூட்டணி தொண்டர்களுக்கு நன்றி, நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பாஜக - அ.தி.மு.க. கட்சிகள் இடையிலான இந்த திடீர் போஸ்டர் யுத்தம் புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி, பாஜக வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது.
- தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என இதன்மூலம் தெரிகிறது. கொஞ்சம் கூட பாஜகவுக்கு வெட்கமாக இல்லையா?
சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் சந்தித்து பேசினார்.
அப்போது, "அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி, பாஜக வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது. தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என இதன்மூலம் தெரிகிறது. கொஞ்சம் கூட பாஜகவுக்கு வெட்கமாக இல்லையா?" என்று தெரிவித்தார்.
மேலும், புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை போட்டு வாக்கு சேகரித்ததற்கு புதுவை மாநில அதிமுக செயலாளர் ஏற்கனவே கண்டித்துள்ளார். அதிமுக தலைவர்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்க பாஜக வெட்கப்பட வேண்டும்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முகங்களைக் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது. அந்த இரண்டு முகங்களுக்கு அதிமுக மட்டுமே சொந்தமானது. இப்படியொரு கீழ்த்தரமான அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது.
திருச்சியில் அண்ணாமலை பேசுவதைப் பார்த்து இருப்பீர்கள். ஏதோ இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய எழுச்சி மாநாட்டை நடத்துவதாக அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால், நான் டிவியில் பார்த்தேன் எல்லா சேர்களும் காலியாக இருந்தது. காலி சேர்களை பார்த்து அண்ணாமலை பேசி வருகிறார். அந்தக் கூட்டத்தில் யாருமே இல்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எந்தவொரு ஆதரவும் இல்லை
தமிழகத்தில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் போட்டி. பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக எங்களை மிரட்ட நாங்கள் ஒன்றும் குழந்தைகள் கிடையாது. லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்" என்று அவர் தெரிவித்தார்
- எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது அம்மா ஜெயலலிதா அவர்கள்தான்.
- புதுச்சேரியில் இந்த முறைவாக்களிப்போம் தாமரைக்கே’ என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
புதுச்சேரி:
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி வைத்து போட்டியிட்டது. தற்போது இதில் விரிசல் ஏற்பட்ட நிலையில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா தனித்தனியே கூட்டணி அமைத்து களம்காண உள்ளன.
இந்த சூழலில் புதுவை பா.ஜனதா லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா படத்துடன் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்திலும் வெளிவந்துள்ளது.
அதில் பிரதமர் பேசிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 'தரமான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். அதனால்தான் ஏழை மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவராக ஏற்றுக் கொண்டனர்' என்றும், 'எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது அம்மா ஜெயலலிதா அவர்கள்தான்.
அவர் தன் வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார்'என்றும், 'புதுச்சேரியில் இந்த முறைவாக்களிப்போம் தாமரைக்கே' என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த போஸ்டரில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, புதுவை பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில பா.ஜனதா தலைவர் செல்வகணபதி எம்.பி., உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் பா.ஜனதா தலைவர் சாமிநாதன் ஆகியோரது படங்களும் இடம்பெற்றுள்ளன. அ.தி.மு.க. வாக்குகளை தங்கள்வசம் இழுக்கவே இதுபோன்ற நடவடிக்கையில் புதுச்சேரி பா.ஜனதா கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
கூட்டணி முறிந்துள்ள நிலையில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோரின் படங்களை போட்டு தாமரைக்கு வாக்கு கேட்கும் பா.ஜனதாவின் இந்த உத்தி, புதுவை அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
- பிரதமர் மோடி தன்னை நம்பவில்லை. தன் செல்வாக்கை நம்பவில்லை.
- அ.தி.மு.க. தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தூத்துக்குடி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். குறிப்பாக பல்லடத்தில் பேசிய பேச்சில் கடந்த 10 ஆண்டுகளில் அவர் மக்களுக்கு செய்தது என்ன என்பது பற்றி பெரிதாக குறிப்பிடவில்லை.
10 ஆண்டுகளில் இந்த நாடு என்ன முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதையும், என்ன வளர்ச்சி கண்டிருக்கிறது என்பது குறித்தும் அவர் குறிப்பிடவில்லை.
குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களை புகழ்ந்து பேசுவது என தனது உரையை அமைத்துக் கொண்டார்.
தமிழ்நாட்டில் கொள்கைகளை பேசி தன்னுடைய கட்சிகளை வளர்க்க வேண்டும் என்று பா.ஜனதா, பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இங்கு ஆட்சியில் இருக்கக்கூடிய தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது, அத்துடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களின் புகழை பேசுவது போன்ற யுக்தியை அவர் கையில் எடுத்திருக்கிறார்.
பிரதமர் மோடி தன்னை நம்பவில்லை. தன் செல்வாக்கை நம்பவில்லை. தன் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நன்மதிப்பை நம்பவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நம்பித்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு மோடி வந்து விட்டார் என்பதுதான் அவரது பல்லடம் உரை நமக்கு உணர்த்துகிறது.
எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்தால் அ.தி.மு.க.வின் வாக்கை பெற முடியும் என நினைக்கிறார்கள். இதன் மூலம் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த வேண்டும், அதன் வாக்கு சதவீதத்தை சரிய செய்ய வேண்டும் என பா.ஜனதா கணக்கு போடுகிறது என்று உணர முடிகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க கூடிய நிலை வந்தால் தமிழ்நாட்டிற்கு பெரிய தீங்கு விளையும். இதை தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் உணர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டி காட்டுகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
எத்தனை முறை பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்தாலும், சுற்றி சுழன்று வந்து பிரசாரம் மேற்கொண்டா லும் தமிழ்நாட்டு மக்கள் மோடி வித்தையை நம்ப மாட்டார்கள்.
பா.ஜனதாவுக்கு பெரிய செல்வாக்கு உருவாகாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து ஓரிரு நாட்களில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அப்படி சொல்பவர்களை செருப்பால அடிப்பேன் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.
- அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் இழுப்பதற்காகவும், அதிமுக வாக்குவங்கியை தன பக்கம் இழுப்பதற்கும் தான் பிரதமர் அவ்வாறு பேசி வருகிறார்
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் எம்.பி திருநாவுக்கரசர்.
அப்போது, பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சேர்வார்கள் என்று பாஜகவினர் சொல்கிறார்கள் அதன் வரிசையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக உங்களது பெயரையும் சொல்கிறார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "அப்படி சொல்பவர்களை செருப்பால அடிப்பேன். இனிமேல் சீமான் போல பேசலாம் என்று முடிவெடுத்து விட்டேன் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டிற்கு பிரதமர் வரும் போது எல்லாம் மறைந்த தலைவர்களை பாராட்டி பேசி வருகிறார். குறிப்பாக ஜெயலலிதா எம்ஜிஆர் அவர்களை பாராட்டி பேசியது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் இழுப்பதற்காகவும், அதிமுக வாக்குவங்கியை தன்பக்கம் இழுப்பதற்கும் தான் பிரதமர் அவ்வாறு பேசி வருகிறார்" என அவர் பேசியுள்ளார்.
- 1984ல் 2 எம்.பி.க்களை கொண்டிருந்த பா.ஜ.க. 2014ல் ஆட்சி அமைத்தது
- ஜெயலலிதா 39 மக்களவை தொகுதிகளையும் வெல்வதற்கு வியூகம் அமைத்தார்
2014 மக்களவை தேர்தல் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல திருப்புமுனைகளை உருவாக்கியது.
அந்த தேர்தலில் ஆட்சியை இழந்த தேசிய கட்சியான காங்கிரஸ், பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஆனால், 1984ல் 2 எம்.பி.க்கள் மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
2014ல் காங்கிரஸ் சார்பில் பிரதமரான மன்மோகன் சிங்கின் ஆட்சி, 2ஜி மற்றும் காமன்வெல்த் உள்ளிட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ள நேர்ந்தது.
தி.மு.க., காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருந்தது.
மன்மோகன் சிங் தேர்தலில் போட்டியிட விருப்பமின்றி விலகிய நிலையில், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பா.ஜ.க., பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது.
அந்த காலகட்டத்தில் தமிழகத்தில், ஜெயலலிதா 39 மக்களவை தொகுதிகளையும் வெல்வதற்கு வியூகம் அமைத்தார்.
நாடெங்கிலும் "மோடி, மோடி" எனும் பா.ஜ.க. ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் "மோடியா, இந்த லேடியா?" என ஜெயலலிதா தமிழக வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பி வாக்கு சேகரித்து வந்தார்.
பிற மாநில அரசியல் தலைவர்கள் காங்கிரஸ் கூட்டணி (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) அல்லது பா.ஜ.க. கூட்டணி (தேசிய ஜனநாயக கூட்டணி) எனும் நிலைப்பாட்டை எடுத்து வந்த நிலையில் ஜெயலலிதாவின் "மோடியா?, லேடியா?" முழக்கம், அரசியல் விமர்சகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
ஆச்சரியம் அளிக்கும் வகையில் அ.தி.மு.க. 37 இடங்களில் வென்றது.
இந்நிலையில், 18-வது மக்களவைக்கான தேர்தல் வரும் மாதங்களில் நடைபெறவுள்ளது.
இன்று, தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில், மாதப்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் தனது உரையில், "ஜெயலலிதா ஆட்சிக்கு பிறகு நல்லாட்சி தமிழகத்தில் அமையவில்லை" என கூறியது அரசியல் விமர்சகர்களால் பெரிதும் விவாதிக்கப்படுகிறது.
தன்னை எதிர்த்து "மோடியா? இந்த லேடியா?" என முழக்கமிட்டு வென்ற ஜெயலலிதாவை புகழ்வதன் மூலம் ஜெயலலிதாவின் ஆளுமைக்கு முன் தனது ஆளுமை தமிழகத்தில் வெற்றிக்கு வழிவகுக்காது என மோடி கருதுகிறாரா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், கல்லூரி மாணவர்களுக்கும் மாணவியர்களுக்கும் மடிக்கணினி, தாலிக்கு தங்கம் திட்டம், பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறை என ஜெயலலிதாவின் பெரும்பாலான திட்டங்கள் அவருக்கு கணிசமாக பெண்கள் வாக்குவங்கியை உருவாக்கி இருந்தது.
பெண்கள் வாக்குகள் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.விற்கு செல்லாமல் பா.ஜ.க.விற்கே கிடைக்க செய்யும் முயற்சியாகவும் இது இருக்கக் கூடும் என சில விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்.ஜிஆர்
- எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல திமுக ஆட்சி நடைபெறுகிறது என்று மோடி பேசியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா நடைபெற்று வருகிறது. அக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.
அதில், "இன்று தமிழகம் வந்துள்ள நான் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்.ஜிஆர். அதனால்தான் அவர் இன்னமும் மக்களால் நினைத்து பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல திமுக ஆட்சி நடைபெறுகிறது" என்று மோடி பேசியுள்ளார்.
மேலும், "எம்.ஜி.ஆரை போலவே ஜெயலலிதாவும் மக்கள் மனதில் நிலை பெற்றுள்ளார். ஜெயலலிதாவுடன் நட்புறவுடன் பழகியவன் என்ற முறையில் நான் கூறுகிறேன். ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களோடு எந்த வகை தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியும். தமிழகத்தில் கடைசி நல்லாட்சியை கொடுத்தவர் ஜெயலலிதாதான். அவருக்கு இந்த இடத்தில் நான் அஞ்சலி செலுத்துகிறேன்" என்று அவர் பேசியுள்ளார்.
- ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.வி. சண்முகம் இன்று காலையில் வந்தார்.
- நான் யாரையும் சந்திக்கவில்லை என்றும், ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானது.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாசை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் மாநிலங்களைவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் நேற்று இரவு சந்தித்து பேசியதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்தது.
இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த தீவனூரில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.வி. சண்முகம் இன்று காலையில் வந்தார். நிகழ்ச்சி முடித்து அங்கிருந்த கிளம்பிய சி.வி. சண்முகத்திடம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். நான் யாரையும் சந்திக்கவில்லை என்றும், ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானது என்று கூறிய அவர், அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்