search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister sekar babu"

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் வருகிற 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.
    • மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களுக்கு தனி வரிசை இந்தாண்டு புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (திங்கட்கிழமை), வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மின்சார வாரியம், சென்னை குடிநீர் வாரியம், தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் வருகிற 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக சுவாமி தரிசனம் மேற்கொண்டார்கள். இந்தாண்டு கூடுதலாக 20 சதவீத பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த வகையில் இந்தாண்டு வைகுண்ட ஏகாதசிக்கு செய்ய வேண்டிய முன் ஏற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போன்றவற்றை செய்து தருவதற்காக ஆலோசனை செய்து இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டோம்.

    வைகுண்ட ஏகாதசி அன்று கோவிலுக்கு கிழக்கு கோபுர வாசல் வழியாக பொது தரிசனமும், மேற்கு கோபுர வாசல் வழியாக சொர்க்க வாசல் சேவைக்கு வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களும் அனுமதிக்கப்படுவார்கள். டி.பி. கோவில் தெரு வழியாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களுக்கு தனி வரிசை இந்தாண்டு புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    சொர்க்க வாசல் திறப்புக்கு அதிகாலை 2.30 மணிக்கு 1,500 பக்தர்கள் அனுமதிப்பது என்றும், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் 850 நபர்கள் அனுமதிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கின்றது. அதன் பிறகு காலை 6 மணி முதல் இரவு நடை மூடுகின்ற வரையில் பொது தரிசனம் தான் இந்த ஆண்டு கடைபிடிக்கப்பட இருக்கின்றது. அன்றைய தினம் சிறப்பு தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது.

    கோவிலில் அன்றைய தினம் கூடுகின்ற பக்தர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்படும் நிலையில் உரிய சிகிச்சை அளிப்பதற்காக கோவிலுக்கு உள்ளேயும், வெளியிலும் 6 சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் தற்காலிக கழிவறைகள் 20 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றது.

    காவல்துறையின் சார்பில் 2 துணை ஆணையர்கள் தலைமையில் 3 ஷிப்ட்களாக, 18 உதவி ஆணையர்கள், 54 காவல் ஆய்வாளர்கள், 400-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எந்நேரமும் தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசர கால ஊர்திகள் நிறுத்தப்பட இருக்கின்றன.

    இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 2 கூடுதல் ஆணையர்கள், 6 இணை ஆணையர்கள், 4 துணை ஆணையர்கள், 6 உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் என 150 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

    ஆகவே இந்த ஆண்டு, கடந்தாண்டை விட அதிகமான அளவிற்கு பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்வதற்கும், காலை 6 மணி முதல் இரவு நடை மூடுகின்ற வரை பொது தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் ஏற்கனவே தீட்சிதர்கள் ஐகோர்ட்டில் கனக சபை தரிசனத்திற்கு தடை கோரி மனு செய்திருந்தார்கள். ஐகோர்ட்டு நீதிபதிகள் அதற்கு தடை விதிக்கவில்லை, வழக்கு தான் நிலுவையில் இருக்கின்றது. ஆகவே விசேஷ நாட்களில் கனக சபையின் மீதேறுவதில் அசவுகரியம் இருந்தால் அது தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்து சமய அறநிலையத்துறைக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதையே காரணம் காட்டி கனகசபை மீதேறி தரிசனம் செய்வதற்கு தடை செய்வதை இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்காது.

    கோவில்களில் படிப்படியாக சிறப்பு தரிசனக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணமும், இந்து சமய அறநிலையத்துறையின் எண்ணமும் ஆகும். கோவிலில் அனைவரும் சமமாக செல்வதற்காகவும், சிறப்பு தரிசனம் என்று வருகின்றபோது பொது வரிசையில் வருபவர்களுக்கு தரிசனத்திற்கு தாமதம் ஏற்படுவதாலும் விரைவாக தரிசனம் நடைபெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்திற்காகவும் இந்த சிறப்பு தரிசனக் கட்டணத்தை திருவிழா காலங்களில் ரத்து செய்வதென்று முடிவெடுத்தோம்.

    திருவண்ணாமலையில் கூட பவுர்ணமி தினத்தன்று சிறப்பு தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டிருக் கின்றது. கடந்த நான்கு மாதங்களாக பவுர்ணமி தினங்களில் அனைவரும் பொது தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்ற சூழல் தவிர்க்கப்பட்டு விரைவாக சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக இருப்பதால் இதனை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இந்த ஆண்டு பார்த்தசாரதி கோவில் சிறப்பு தரிசனக் கட்டணத்தை ரத்து செய்கிறோம்.

    மேலும், எங்கெல்லாம் இதுபோன்ற சாத்தியக் கூறுகள் இருக்கின்றதோ அந்தந்த கோவில்களில் விழா காலங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து சிறப்பு தரிசனத்தை படிப்படியாக ரத்து செய்வதற்கு துறை முயற்சிக்கும். பக்தர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது தான் இந்த அரசின் கடமையாகும். கடந்தாண்டை போலவே இந்தாண்டும் பார்த்தசாரதி கோவிலில் மார்கழி மாதத்தில் இசைக் கல்லூரி மாணவ, மாணவிகளின் திருப்பாவை பாசுரம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெளி மாநிலத்தில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களும் மனிதர்கள் தானே.
    • பிரச்சனையை விவகாரமாக்காமல் சுமூகமாக தீர்த்து வைப்பதே அரசியல் தலைவர்களுக்கு அழகு.

    சென்னை:

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நேற்று சாமி தரிசனத்துக்கு சென்ற ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது.

    இதில் 3 ஐயப்ப பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. கோவில் காவலாளிகளும் தாக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அரசையும் விமர்சித்தார். இதுபற்றி அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

    எதிர்பாராமல் நடந்த சம்பவம். யாரையும் யாரும் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை.

    வெளி மாநிலத்தில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களும் மனிதர்கள் தானே. இந்த விவகாரத்தை தீர விசாரிக்கவும் அதேநேரம் சுமூகமாக கையாளும்படியும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். இந்த பிரச்சனை நேற்றே சுமூகமாகி விட்டது.

    இந்த பிரச்சனையை விவகாரமாக்காமல் சுமூகமாக தீர்த்து வைப்பதே அரசியல் தலைவர்களுக்கு அழகு. ஆனால் அண்ணாமலை வழக்கம் போலவே இந்த பிரச்சனையையும் ஊதி பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார். அவர் எந்த முக மூடியோடு வந்தாலும் மக்கள் ஏற்கப்போவது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செம்பரம்பாக்கம் ஏரியில் 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டபோதும் குடிசை பகுதி மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
    • எவ்வளவு கனமழை பெய்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த பிறகு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு நிருபர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அதை வடிய வைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறில் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்த போதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரே ஒரு பாதிப்பு, மாம்பலம் கால்வாய் அதை எதிர்கொள்ள திணறியதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்பரம்பாக்கம் தண்ணீரை 4 ஆயிரம் கனஅடியாக குறைக்க சொல்லி உள்ளார்.

    அதனால் 6 ஆயிரம் கன அடியில் இருந்து 4 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மாம்பலம் பகுதியில் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் அதாவது தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட தெருக்களின் தண்ணீர் படிப்படியாக குறைய தொடங்கும்.

    இது சம்பந்தமான விளக்கங்களை முதலமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்து கூறினார்கள்.

    இப்போது நாம் எவ்வளவு பெரிய கால்வாய் கட்டி இருந்தாலும், கடந்த 1 மாத காலமாக ஒவ்வொரு நாளும் 5, 6 செ.மீ. மழை பொழிந்தது. அப்போது மழைநீர் ஏதும் தேங்கவில்லை. 15 செ.மீ. மழை பெய்திருந்தாலும், பாதிப்பு என்பது ஒரு சில இடங்களில் தெரிய தொடங்கி உள்ளது.

    அந்த பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய அடுத்து 2, 3 நாட்களில் வர இருக்கிற கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள ஏதுவாக இன்றைக்கே பாதிப்புக்கான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கெங்கு பாதிப்பு உள்ளதோ, அங்கெல்லாம் மோட்டார்களை வைப்பது போன்ற பல்வேறு நிலைகளை மேற்கொள்ள முதலமைச்சர் கூறி உள்ளார்.

    அதனால் மீட்பு படையினரும் ஏராளமான வகையில் தயார் நிலையில் உள்ளனர். 

    குடியிருப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும், பம்பிங் ஸ்டேஷன் முழு நேரமும் இயங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.

    தற்போது பல பகுதிகளில் கால்வாய் தூர்வாரப்பட்டதன் காரணமாக மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் பலன் அளித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் விரைந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை பெய்யும் கனமழையை எதிர்கொள்ள அரசு நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
    • அரசின் நடவடிக்கையால் வால்டாக்ஸ் சாலையில் தண்ணீர் நிற்கவில்லை.

    சென்னை:

    யானைக்கவுனி பகுதியில் மழை பாதிப்புகளை குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அவருடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவும் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    * 2,700 கி.மீ. அளவுக்கு புதிய மற்றும் பழைய மழைநீர் வடிகால்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன.

    * சென்னையில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களும் தூர்வாரப்பட்டுள்ளன.

    * மழைநீர் வடிந்து செல்லும் அளவிற்கு கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

    * அரசின் நடவடிக்கையால் வால்டாக்ஸ் சாலையில் தண்ணீர் நிற்கவில்லை.

    * தொடர் மழையால் ஒரு சில தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்படுகிறது.

    * அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

    * சென்னை மாநகராட்சியில் 21 ஆயிரம் ஊழியர்கள் மழைநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.7.85 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரம் உபயதாரர் நிதியில் இரண்டு நிலையோடு கூடுதலாக 5 நிலைகள் அமைக்கும் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டினர்.
    • ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தேக்கு மரத்தினால் உருவாக்கப்பட்ட மரத்தேரின் வெள்ளோட்டத்தினை அமைச்சர் சேகர் பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    சென்னை:

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி கோவிலில் உபகோவிலான திருவெள்ளரை, புண்டரிகாட்ச பெருமாள் கோவிலானது 108 திவ்ய தேசங்களில் 4-வது திருத்தலமாகும். 13-ம் நூற்றாண்டில் ஹொய்சால மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் வடக்கில் நிறைவுபெறாத 2 நிலை ராஜகோபுரமாக அமையப் பெற்றதில் கூடுதலாக 5 நிலைகள் அமைக்க அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பின்படியும், மக்களின் நீண்டநாள் விருப்பத்தின்படியும் பணிகள் மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மாநில வல்லுநர் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

    அதன்படி இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ரூ.7.85 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரம் உபயதாரர் நிதியில் இரண்டு நிலையோடு கூடுதலாக 5 நிலைகள் அமைக்கும் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டினர்.

    முன்னதாக திருச்சி மாவட்டம், மலைக்கோட்டை, தாயுமானசுவாமி கோவிலில் வீற்றிருக்கும் மாணிக்க விநாயகருக்கு உபயதாரர் நிதியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தேக்கு மரத்தினால் உருவாக்கப்பட்ட மரத்தேரின் வெள்ளோட்டத்தினை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சிகளில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், இணை ஆணையர்கள் மாரியப்பன், பிரகாஷ், உதவி ஆணையர்கள் ஹரிஹர சுப்பிரமணியன், லட்சுமணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவில்களின் வளர்ச்சிக்காக கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.100 கோடியும், 2023-24-ம் ஆண்டு ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த வெள்ளித்தேர் மற்றும் தங்கத்தேர் பழுது நீக்கம் செய்து தற்போது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பழுது நீக்கம் செய்யப்பட்ட தங்கத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு தங்கத்தேரை இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    அதன் பிறகு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2010-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியின்போது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் புதிதாக தங்கத்தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு சிறு பழுது காரணமாக தங்கத்தேர் பவனி நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தமிழக கோவில்களில் ஓடாமல் இருக்கும் தங்கத்தேர், வெள்ளித்தேர், மரத்தேர் ஆகியவற்றை பழுது நீக்கி சாமிகள் பவனி வர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன்படி ராமேஸ்வரம், சமயபுரம் மாரியம்மன், திருத்தணி முருகன் கோவில்களில் ஓடாமல் இருந்த தங்கத்தேர் பழுது நீக்கி, பக்தர்களின் நேர்த்திக் கடன் செலுத்தும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த வெள்ளித்தேர் மற்றும் தங்கத்தேர் பழுது நீக்கம் செய்து தற்போது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.

    கோவில்களின் வளர்ச்சிக்காக கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.100 கோடியும், 2023-24-ம் ஆண்டு ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் என கூறுகிறார்கள். இது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல் உள்ளது. இது திராவிட மண். அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க. ஆட்சி அமையும் என்பது அனைவருக்கும் தெரியும்.

    இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

    • இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இங்கு இடமில்லை.
    • மதத்தால், இனத்தால் மக்களை பிளவுபடுத்த பா.ஜனதா முயல்கிறது.

    சென்னை:

    பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் கோவில்கள் முன்பு வைக்கப்பட்டுள்ள கடவுள் நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்கள் அகற்றப்படும். பெரியார் சிலைகளையும் அகற்றி பொது இடங்களில் அமைப்போம் என்று அண்ணாமலை கூறினார்.

    அவரது இந்த கருத்துக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதற்கும் அண்ணாமலை பதிலளித்தார். அவர் கூறும்போது, கடவுளை நம்புபவர்கள்தான் கோவிலுக்கு செல்கிறார்கள். அந்த நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையில் கடவுளை நம்புபவன் முட்டாள் என்று கோவில்கள் முன்பு வைத்திருப்பதும், கடவுள் நம்பிக்கை இல்லாத பெரியாரின் சிலையை வைத்திருப்பதும் எந்த வகையில் நியாயம்? அப்படி பார்த்தால் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் பற்றி மிக மோசமாக பெரியார் விமர்சித்துள்ளார்.

    அந்த கருத்துக்களை அவரவர் கட்சி அலுவலகங்கள் அருகில் வைத்துக் கொள்வார்களா? என்று கூறினார்.

    இதற்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    பெரியாரின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். பா.ஜனதாவும் அதை விமர்சனமாகவும் கருத்தாகவும் ஏற்க வேண்டியதுதானே.

    இது கருத்து சுதந்திரம் இருக்கும் மண். திராவிட மண். ஆஸ்திகரும், நாஸ்திகரும் இணைந்து வாழும் மண்.

    இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இங்கு இடமில்லை. மதத்தால், இனத்தால் மக்களை பிளவுபடுத்த பா.ஜனதா முயல்கிறது. அவர்களின் ஆசை கானல் நீர் போன்றது. பா.ஜனதா போடும் எந்த திட்டமும் இங்கு நிறைவேறாது என்றார்.

    • பல்வேறு கோட்பாடுகள், நம்பிக்கைகள் கொண்ட பல்வேறு மக்கள் வாழும் நாடு என்ற அடையாளத்தை நம் நாடு பெற்றுள்ளது.
    • எந்த மதத்துக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் எப்போதும் அனுமதிக்காது.

    சென்னை:

    சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதன தர்மத்துக்கு எதிராக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சனாதன ஒழிப்பு பற்றி பேசிய அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

    சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், 'மாதவரம் பால் பண்ணை பகுதியில் உள்ள அரங்கத்தில் திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த போலீசார் தனக்கு அனுமதி வழங்கவில்லை. எனவே மாநாட்டுக்கு அனுமதி வழங்க கோரி ஆவடி போலீசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறி இருந்தார்.

    இந்த மனு ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுபற்றி போலீசாரிடம் நீதிபதி விளக்கம் கேட்டார். அதற்கு போலீசார் விளக்கம் அளித்தனர்.

    போலீசார் அளித்த விளக்கத்துக்கு பிறகு நீதிபதி ஜெயச்சந்திரன் தனது உத்தரவில் கூறியதாவது:-

    பல்வேறு கோட்பாடுகள், நம்பிக்கைகள் கொண்ட பல்வேறு மக்கள் வாழும் நாடு என்ற அடையாளத்தை நம் நாடு பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் கெட்ட எண்ணத்தை உருவாக்கும் பிரசாரம் செய்ய இந்த ஐகோர்ட்டின் உதவியை யாரும் நாட முடியாது. இது போன்ற கூட்டத்தை நடத்துவது அடிப்படை உரிமை என்று மனுதாரர் கூறினாலும், இந்த நாட்டில் மக்களின் நம்பிக்கைகளை, கோட்பாடுகளை ஒழிக்கும் விதமாக பிரசார கூட்டம் நடத்துவதற்கு இந்த கோர்ட்டு அனுமதி வழங்காது. மக்களின் நம்பிக்கைகள், கோட்பாடுகளை அழிப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

    சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர்கள் பேசியது தொடர்பாக எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இப்படி பேசினால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற அடிப்படையில் தான் திராவிட கொள்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கும், கூட்டம் நடத்துவதற்கும் அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

    அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது எந்தவித வேறுபாடு இல்லாமலும், சாதி, மதம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படுத்தாமலும் கவனத்துடன் பேச வேண்டும். எந்த சித்தாந்தத்தையும் யாராலும் ஒழிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என்று பேசுவதற்கு பதிலாக சமூகத்தில் தீய பழக்கங்களாக உள்ள போதை, மது போன்றவற்றை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும். சமுதாயத்தை சீரழிக்கும் ஊழல், தீண்டாமை கொடுமை உள்ளிட்ட சமுதாய கொடுமைகளையும் அழிப்பதற்கு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எந்த மதத்துக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் எப்போதும் அனுமதிக்காது. சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமலும், வழக்கு பதிவு செய்யாமலும் இருந்த போலீசார் தவறு இழைத்து இருக்கிறார்கள். சனாதன ஒழிப்பு பற்றி பேசிய அமைச்சர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அமைச்சர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது அவர்கள் கடமையில் இருந்து தவறியது போன்றதாகும். அதன் அடிப்படையில் தான் இந்த வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இதை அனுமதிக்கும் பட்சத்தில் சமூகத்தில் மீண்டும் ஒரு பதட்டமான சூழ்ந்லை ஏற்படுத்தக்கூடும். தற்போதைய நிலையில் இந்த மனுவை அனுமதிக்க முடியாது. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறி இருந்தார்.

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.
    • 18-ந் தேதி சூரசம்ஹாரமும், 19-ந் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.

    18-ந் தேதி சூரசம்ஹாரமும், 19-ந் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. கந்த சஷ்டிவிழாவையொட்டி முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று கோவிலுக்கு வந்தனர்.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் ரூ.49.50 லட்சம் மதிப்பீட்டில் யானை நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல்லை அமைச்சர் சேகர்பாபு நட்டு கல்வெட்டை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • ராமேசுவரம், சமயபுரம், திருத்தணி ஆகிய கோவில்களில் பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தங்கத் தேர்களை பக்தர்களின் நேர்த்திக்காக உலா வரச் செய்துள்ளோம்.
    • இந்து சமய அறநிலையத்துறைக்கு அரசிடமிருந்து மானியமாக சுமார் ரூ.450 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

    பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்திட 2016-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு பல்வேறு காரணங்களினால் குடமுழுக்கு தள்ளிப் போனது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கடந்த 2021 ஜூலை மாதம் கோவிலுக்கு வருகை தந்து ஆய்வு செய்தோம்.

    அதனைத் தொடர்ந்து கடந்த 2022 செப்டம்பர் மாதம் மீண்டும் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தியதன் காரணமாக ரூ.4.57 கோடி மதிப்பீட்டில் 21 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் சேலம் மாவட்டம் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் விமரிசையாக குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. தமிழிலும் குடமுழுக்கு நடந்தது.

    இக்கோவிலை பொருத்தளவில் கடைசியாக எப்பொழுது குடமுழுக்கு நடைபெற்றது என்ற வரலாறே இல்லை. 1993-ம் ஆண்டு ராஜகோபுரத்திற்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

    இப்படி நீண்ட ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாத கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துகின்ற ஆட்சி இந்த ஆட்சி என்பதற்கு இதுவே சான்றாகும். இந்த ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை 1,118 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்தேறி இருக்கின்றது.

    அதேபோல கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டதால் தங்கத்தேரானது பவனி வரவில்லை. தற்போது உபயதாரர்கள் நிதியுதவிடன் ரூ.3.04 லட்சம் மதிப்பீட்டில் தங்கத்தேர் புனரமைக்கப்பட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் இன்றைக்கு வெள்ளோட்டம் விடப்பட்டது.

    கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கும் பணிகளில் இதுவரை ரூ.5,473 கோடி மதிப்பிலான 5,820 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 68 தங்கரதங்களும், 57 வெள்ளி ரதங்களும் பயன்பாட்டில் இருக்கின்றன.

    ராமேசுவரம், சமயபுரம், திருத்தணி ஆகிய கோவில்களில் பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தங்கத் தேர்களை பக்தர்களின் நேர்த்திக்காக உலா வரச் செய்துள்ளோம். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பெரியபாளையம், புரசைவாக்கம் மற்றும் நங்கநல்லூர் ஆகிய திருக்கோவில்களுக்கு புதிய தங்கத்தேர் செய்திடவும், திருத்தணி, இருக்கன் குடி, சென்னை காளிகாம்பாள், திருக்கருக்காவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய கோவில்களுக்கு புதிய வெள்ளித்தேர்கள் செய்திடவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் திருத்தணி வெள்ளித் தேர் பணி நிறைவுற்று வெள்ளோட்டம் நடைபெற்றுள்ளது.

    அதேபோல் ரூ.41.53 கோடி மதிப்பீட்டில் 71 புதிய மரத்தேர்கள் உருவாக்கிடவும், ரூ.7.83 கோடி மதிப்பீட்டில் 41 மரத்தேர்களை மராமத்துப் பணிகள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆட்சியானது இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு புரட்சி ஏற்படுத்தி வசை பாடியவர்கள் எல்லாம் வாழ்த்துகின்ற நிலையை உருவாக்கி உள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம், எம்மதமும் சம்மதமே என்று ஆட்சி நடத்துகின்றார். அதற்கு சாட்சியாக இன்றைக்கு நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்கு அருகில் உள்ள மசூதியில் இருந்து பக்தர்களுக்கு இலவசமாக குடிநீர் பாட்டில்களை வழங்கிய நிகழ்வே அமைந்துள்ளது. அனைத்து மதத்தினரும் அவரவர் சுதந்திரமாக மத வழிபாடுகளை செய்வதற்கு இந்த ஆட்சியிலே பாதுகாப்பு இருக்கின்றது என்பதற்கும் இதனை சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 7,036 கோவில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 3000-க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 4 ஆயிரம் கோவில்களுக்கும் திட்டமதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

    இந்து சமய அறநிலையத்துறைக்கு அரசிடமிருந்து மானியமாக சுமார் ரூ.450 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒருகால பூஜைத் திட்டத்திற்கு ரூ.200 கோடியும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான கோவில்களை புனரமைக்க ரூ. 200 கோடியும், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கோவில்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாக செலவினத்திற்கு ரூ.37 கோடியும், வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடிட ரூ.3.25 கோடியும், ராமேசுவரம், காசி ஆன்மிகப் பயணத்திற்கு ரூ. 1.25 கோடியும் என பல்வேறு திட்டங்களுக்கு அரசு மானியங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

    கடந்த ஆட்சி காலங்களில் இந்த அளவிற்கு அரசு மானியம் வழங்கப்பட்டதே இல்லை. எங்களை பொறுத்தளவில் சிறிய கோவில்கள், பெரிய கோவில்கள் என்று பாகுபாடு இல்லாமல் அனைத்து கோவில்களிலும் திருப்பணிகளை முழு வீச்சில் செய்துக் கொண்டிருக்கின்றோம். நீண்ட காலங்களாக குடமுழுக்கு நடைபெறாத கோவில்கள் குறித்து தகவல் தெரிவித்தால் அதனை ஆய்வு செய்து திருப்பணி மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் கோவில்கள் அத்தனையும் புனரமைக்கின்ற பணிகளில் முழு வீச்சோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
    • தமிழக கவர்னரை பொறுத்தளவில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட முடியுமோ அப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    கோயம்பேடு, குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் திருப்பணி மற்றும் கட்டுமானப் பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

    பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆட்சி பொறுப்பேற்றபின் 6 ராஜகோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன. தற்போது 6 ராஜகோபுரங்கள் கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. 15 ராஜகோபுர பணிகள் தொடங்கப்படும் நிலையில் இருக்கின்றன. ரூ.41.53 கோடி மதிப்பீட்டில் 71 புதிய மரத்தேர்கள் உருவாக்கிடவும், ரூ.7.83 கோடி மதிப்பீட்டில் 41 மரத்தேர்களை மராமத்துப் பணிகள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த வகையில் கோயம்பேடு, குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலுக்கு உபயதாரர் நிதி மற்றும் கோவில் நிதியின் மூலம் ரூ.53.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய மரத்தேர் உருவாக்கும் திருப்பணி, ரூ.85.40 லட்சம் மதிப்பீட்டிலான ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் ரூ. 49 லட்சம் மதிப்பீட்டிலான அன்னதானக் கூடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் சுமார் ரூ. 4.08 கோடி மதிப்பீட்டில் 14 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ.800 கோடி அளவிற்கு உபயதாரர்கள் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 1,093 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றிருக்கின்றது. கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கும் பணிகளில் இதுவரை ரூ.5472 கோடி மதிப்பிலான 5,820 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில் நிதியின் மூலம் ரூ.29 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    இதுவரை 1,093 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறோம். இப்பணி தொடர்ந்து கொண்டே இருக்கும். அதற்கு ஒரு எல்லையே கிடையாது. இந்த ஆட்சி ஏற்பட்டபின் 7,336 கோவில்களுக்கு மண்டல மற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழுக்களால் திருப்பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும். ஆகவே, 5 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவிற்கு கும்பாபிஷேகங்கள் இருக்கும்.

    இந்த திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் கோவில்கள் அத்தனையும் புனரமைக்கின்ற பணிகளில் முழு வீச்சோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். 5 ஆண்டுகள் நிறைவுறுகின்ற போது அனைவரும் புருவத்தை உயர்த்தி, வசை பாடுபவர்களும் வாழ்த்துகின்ற ஒரு நல்ல சூழ்நிலை உருவாகும்.

    பொன்மாணிக்கவேல் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் பல அப்பாவிகள் சிறை சென்றார்கள். மீடியாவின் விளம்பரத்திற்காக இது போன்ற தவறான செய்திகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார். தற்போது பணியில் இல்லாத காலத்திலும் அவர் மீது சி.பி.ஐ. முதற்கொண்டு நீதிமன்ற வழக்குகள் நிறைய இருக்கின்றன. தன்னுடைய விளம்பரத்திற்காக துறையின்மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு இருக்கின்றார். அவர் குற்றம் அல்லது தவறுகளை குறிப்பிட்டு சொன்னால் நிச்சயமாக அதற்கு விளக்கம் தரவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கின்றது.

    தமிழக கவர்னரை பொறுத்தளவில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட முடியுமோ அப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

    அவர் தமிழகத்தினுடைய கவர்னராக செயல்படவில்லை ஆர்.எஸ்.எஸ். - ன் தமிழ்நாடு மாநில தலைவராகவும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராகவும், அவர்களுடைய கொள்கைகளைப் பின்பற்றி இந்த ஆட்சிக்கு எப்படி எல்லாம் தொந்தரவு தர முடியுமோ அந்த வகையில் தொந்தரவு கொடுத்து, மனிதனை பிரித்தாள்வது, சாதி, மத துவேஷங்களை இடுவது போன்றவற்றை தான் ஆளுநர் தன்னுடைய பணியாக மேற்கொண்டு இருக்கின்றார். ஆளுநருக்குண்டான பணிகளிலிருந்து அவர் தவறி விட்டு இது போன்ற காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

    இவ்வாறு சேகர்பாபு தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. வி.பிரபாகர்ராஜா, இணை கமிஷனர் ரேணுகாதேவி, மாநகராட்சி உறுப்பினர் லோகு, கோவில் செயல் அலுவலர் கேசவ ராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது.
    • ஊழியர்களிடம் பணி குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.

    வண்டலூர்:

    சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. விரைவில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஸ்நிலையம் முன்பு தேங்கும் மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும்இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக இருந்தது. இதையடுத்து பஸ்நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பஸ்நிலையம் அருகில் தற்போது சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர் கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்தி புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் மீதி உள்ள கால்வாய் பணிகள் முழுவதையும் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் நடைபெறும் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அங்கிருந்த ஊழியர்களிடம் பணி குறித்த தகவல்களை கேட்டறிந்தார். மேலும் கால்வாய் பணியை அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் அபூர்வா செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×