search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "srirangam temple"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆசிர் பெற்ற பிரதமர் யானை பாகனிடம் யானை குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.
    • வாஞ்சையுடன் யானையை தடவி கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

    திருச்சி:

    ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் நரேந்திர மோடி, கோவில் யானை ஆண்டாளிடம் ஆசிர் பெற்றார். யானை நிறுத்தப்பட்டிருந்த 4 கால் மண்டபத்திற்கு வந்த பிரதமர் மோடி, ஆண்டாள் யானைக்கு பழங்கள் வழங்கினார். பின்னர் யானையிடம் ஆசிர் பெற்ற அவர், யானை பாகனிடம் யானை குறித்து விவரங்களை கேட்டறிந்தார். அப்போது யானைக்கு 44 வயதாவது குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் பாகன் எடுத்து கூறினார். மேலும் ஆண்டாள் யானை ஸ்ரீரங்கம் நவராத்திரி உற்சவத்தின் போது மவுத் ஆர்கன் வாசிக்கும் என்ற தகவலை கூறினார்.

    இதனை கேட்டு ஆச்சர்யமடைந்த பிரதமர் நரேந்திர மோடி வாசிக்க வைக்குமாறு கேட்டார். உடனே பாகன் யானை துதிக்கையில் மவுத் ஆர்கன் கொடுக்க, ஆண்டாள் வாசித்து காண்பித்தது. இதனை ரசித்த மோடி வாஞ்சையுடன் யானையை தடவி கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த ஆண்டாள் யானையானது, குட்டியாக காரமடை கோவிலில் இருக்கும் போது ரஜினிகாந்த நடித்த தம்பிக்கு எந்த ஊர் என்ற படத்தில் ரஜினிக்கு ஆசீர்வாதம் செய்யும் காட்சியில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெளி மாநிலத்தில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களும் மனிதர்கள் தானே.
    • பிரச்சனையை விவகாரமாக்காமல் சுமூகமாக தீர்த்து வைப்பதே அரசியல் தலைவர்களுக்கு அழகு.

    சென்னை:

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நேற்று சாமி தரிசனத்துக்கு சென்ற ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது.

    இதில் 3 ஐயப்ப பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. கோவில் காவலாளிகளும் தாக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அரசையும் விமர்சித்தார். இதுபற்றி அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

    எதிர்பாராமல் நடந்த சம்பவம். யாரையும் யாரும் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை.

    வெளி மாநிலத்தில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களும் மனிதர்கள் தானே. இந்த விவகாரத்தை தீர விசாரிக்கவும் அதேநேரம் சுமூகமாக கையாளும்படியும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். இந்த பிரச்சனை நேற்றே சுமூகமாகி விட்டது.

    இந்த பிரச்சனையை விவகாரமாக்காமல் சுமூகமாக தீர்த்து வைப்பதே அரசியல் தலைவர்களுக்கு அழகு. ஆனால் அண்ணாமலை வழக்கம் போலவே இந்த பிரச்சனையையும் ஊதி பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார். அவர் எந்த முக மூடியோடு வந்தாலும் மக்கள் ஏற்கப்போவது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பக்தர்களை அங்கிருந்து கோவில் தற்காலிக காவலாளிகள் மற்றும் போலீசார் ஒழுங்குபடுத்தினர்.
    • ஸ்ரீரங்கம் போலீசார் முன் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 55 பேரை கைது செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு நேற்று காலை ஆந்திர மாநிலத்தில் இருந்து 34 ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் கோவில் மூலஸ்தானம் எதிரே உள்ள காயத்ரி மண்டபம் அருகே வரிசையில் நின்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை ஆந்திரா ஐயப்ப பக்தர்கள் வேகமாக தட்டி ஒலி எழுப்பியுள்ளனர்.

    இதையடுத்து பக்தர்களை அங்கிருந்து கோவில் தற்காலிக காவலாளிகள் மற்றும் போலீசார் ஒழுங்குபடுத்தினர். இதில் ஐயப்ப பக்தர்களுக்கும் கோவில் தற்காலிக பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சென்னா ராவ் (வயது 45) என்பவரின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. இதனால் அவருடன் வந்த ஐயப்ப பக்தர்கள் கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கோவிலுக்குள் ரத்தம் சிந்தியதால் சிறிது நேரம் நடை சாத்தப்பட்டு பின்னர் பரிகார பூஜைகள் செய்த பின்னர் 3 மணி நேரம் கழித்து தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமிஷனர் நிவேதா லட்சுமி, இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட ஐயப்ப பக்தர்களை சமாதானம் செய்தனர்.

    பின்னர் ஐயப்ப பக்தர் சாந்தாராவ் சந்தா புகாரின் அடிப்படையில் கோவில் தற்காலிக பணியாளர்கள் பரத் (30), விக்னேஷ் (32), செல்வா (31) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஆந்திர ஐயப்ப பக்தர்கள் மீதான தாக்குதல் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திருச்சி மாவட்ட இந்து முன்னணி தலைவர் போஜராஜன் தலைமையில் கோவில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பின்னர் ஸ்ரீரங்கம் போலீசார் முன் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 55 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கோவில் தற்காலிக பணியாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஐயப்ப பக்தர்கள் சென்னா ராவ், சாந்தாராவ் மற்றும் சிலர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் கைகளால் தாக்குவது, தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே பிரிவுகளில் தான் கைதான 3 பணியாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அதன் மாநில பொதுச்செயலாளர் சுந்தரவடிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்த வெளி மாநில பக்தர்கள் கோவில் ஊழியர்களாலும், காவலர்களாலும் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டது கண்டிக்க்கத்தக்கது. பக்தர்களை அடிமைகளாகவும், அலட்சியமாகவும் நடத்தும் அறநிலையத்துறையின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    பக்தர் ஒருவர் ரத்தம் சொட்டும் அளவுக்கு தக்கப்பட்டு, அதற்காக பரிகார பூஜை செய்யும் அளவுக்கு வன்முறை நடந்துள்ளது. இதற்கு காரணமான கோவில் பணியாளர்கள் அனைவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • 3 பெண்கள் உள்பட 94 பேருக்கு அமைச்சர் சேகர் பாபு சான்றிதழ் வழங்கினார்.
    • 6 மாத வகுப்பு முடிந்ததும் பஞ்சராத்ர ஆகமத்தின் கீழ் மன்னார்குடி ஜீயரிடம் தீட்சை பெற்றுள்ளார்கள்.

    சென்னை:

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், சென்னை ஆகிய இடங்களில் தலா ஒரு பயிற்சி பள்ளி நடத்தப்படுகிறது.

    இந்த பள்ளிகளில் சேருபவர்களுக்கு ஒரு ஆண்டு ஆகமம், பூஜை உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

    அந்த வகையில் இந்த ஆண்டு 94 பேர் பயிற்சியில் சேர்ந்தனர். அவர்களில் 3 பேர் பெண்கள்.

    முதுகலை பட்டதாரியான ரம்யா, இளங்கலை கணிதவியல் பட்டதாரியான கிருஷ்ணவேணி, இளங்கலை பட்டதாரியான ரஞ்சிதா. இவர்கள் 3 பேரும் ஒரு வருடம் பயிற்சி முடித்து உள்ளார்கள். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பெண்கள் உள்பட 94 பேருக்கு அமைச்சர் சேகர் பாபு சான்றிதழ் வழங்கினார்.

    கோவில்களில் பாகுபாடு இருக்கக்கூடாது. ஆண்-பெண் பேதம் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் இந்த திட்டத்தில் ஆர்வப்படும் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவதாக அறநிலையத்துறை கூறுகிறது. தற்போது பயிற்சி பெற்றுள்ள 3 பெண்களும் 6 மாத வகுப்பு முடிந்ததும் பஞ்சராத்ர ஆகமத்தின் கீழ் மன்னார்குடி ஜீயரிடம் தீட்சை பெற்றுள்ளார்கள்.

    பயிற்சி முடித்துள்ள 3 பேரும் ஸ்ரீரங்கம் கோவிலில் உதவி அர்ச்சகர்களாக பயிற்சி பெறுவார்கள். அதன்பிறகு தேவைப்படும் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 25-ந்தேதி கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் உள்ள கொடுங்கையின் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டது.
    • விரிசல் விழுந்திருந்த கோபுரத்தின் கொடுங்கை நள்ளிரவில் இடிந்து விழுந்தது.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் என்றும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் திகழ்கிறது. இங்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. இதில் தற்போது பக்தர்கள் தரிசனம் செய்யும் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது.

    தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 21 கோபுரங்களில் மற்றவை வண்ணமயமாய் காட்சி அளிக்க, ஒன்று மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

    இதில் கடந்த 25-ந்தேதி கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் உள்ள கொடுங்கையின் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டது.

    இதனால் அந்த கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும், மேற்கூரை பூச்சுகளும், அதனை தாங்கி நிற்கும் தூண்களும் இடிந்து எப்போது வேண்டுமானாலும் இடியும் அபாயம் இருந்தது.

    இந்த பகுதியை பக்தர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர். கார்கள், ஆட்டோக்கள், பள்ளி வேன்கள் அவ்வழியாக சென்று வந்தன.

    இந்த நிலையில் தற்காலிகமாக கம்புகளைக் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டது. இருந்த போதிலும் ஒருவித அச்சத்துடன் அந்த பாதையை அனைவரும் பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் விரிசல் விழுந்திருந்த கோபுரத்தின் கொடுங்கை நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதில் அருகில் இருந்த மின் விளக்கு கம்பங்கள் சேதமடைந்தன. நள்ளிரவு ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இடிந்ததால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை.

    இடிந்து கீழே விழுந்த செங்கல் மற்றும் கொடுங்கையின் இடிபாடுகளையும், சேதம் அடைந்த மின் கம்பத்தையும் அங்கிருந்து அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோபுரத்தில் உள்ள கொடுங்கை இடிந்து விழுந்தது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆகவே கோபுரங்கள் மற்றும் மதில் சுவர்களை அவ்வப்போது ஆய்வு செய்து, பாராமரிப்பு பணிகளை மேற்கொண்டு புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் புனிதத்தை பாதுகாக்க வேண்டுமென பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் கூறும் போது,

    ரூ.98 லட்சம் செலவில் கொடுங்கை சரி செய்து கோபுரத்தை புனரமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும் என்றார்.

    • கோவிலில் இருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார்.
    • நம்பெருமாள் அணிந்திருந்த மாலை, புடவை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் காவிரியில் விடப்பட்டது.

    ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி நதி பாயும் பகுதிகள் முழுவதும் பொதுமக்கள் காவிரித் தாயை வணங்கி வழிபடுவது வழக்கம். அதேபோல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் நம்பெருமாள், காவிரித் தாயாருக்கு ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் அல்லது 28-ம் நாளில் அம்மா மண்டபம் படித்துறையில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார்.

    அவ்வகையில் ஆடி 18-ம் நாளான இன்று நம்பெருமாள், காவிரி தாய்க்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 4 மணிவரை அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதன்பின்னர் நம்பெருமாள் அணிந்திருந்த மாலை, புடவை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து மேளதாளங்கள் முழங்க காவிரி படித்துறைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த சீர்வரிசை பொருட்களை காவிரி தாய்க்கு வழங்கும் வகையில், காவிரி ஆற்றில் விடப்பட்டு, சீர்வரிசை கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி தாயையும், நம்பெருமாளையும் தரிசனம் செய்தனர்.

    பின்னர் நம்பெருமாள் அம்மா மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேலஅடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    • இந்தாண்டு ஆடி 18-ம் நாளான இன்று நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் அல்லது 28-ம் நாளில் நம்பெருமாள் அம்மா மண்டபம் படித்துறையில் காலை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    பின்னர் மாலை காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார். அதன்படி இந்தாண்டு ஆடி 18-ம் நாளான இன்று நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதற்காக நம்பெருமாள் கோவில் மூலஸ்தானத்திலிருந்து காலை 6.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிவரை நம்பெருமாள் அங்கு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இதனை தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பட்டுசேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பின்னர் நம்பெருமாள் அம்மா மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேலஅடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பூத்தட்டுகள் எடுத்து செல்லப்பட்டது.
    சக்தி தலங்களில் புகழ் பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். தன்னை நாடிவருவோர் மட்டுமின்றி மண்ணுலகில் உள்ள அனைத்து உயிர்களை காக்கவும், உலக நன்மைக்காகவும், அனைத்து மக்களுக்கும் சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மன் 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டுள்ளார்.

    பச்சை பட்டினி விரதத்தின்போது கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர், பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இதனால், அம்மன் உடல் உஷ்ணத்தில் கொதிப்பதை கட்டுப்படுத்தவே பூச்சொரிதல் விழாவின் போது பல்வேறு வகையிலான மலர்களை கொண்டு அம்மன் சிலை உள்ள கருவறை முழுவதும் நிரப்பி வைக்கப்படும். இந்த பூச்சொரிதல் விழாவின் போது திருச்சி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபடுவர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஊழியர்கள் சார்பில் நேற்று காலை கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து பூத்தட்டுகளை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் பூத்தட்டுகளை கையில் சுமந்து தெற்குவாசல் வழியாக ராஜகோபுரம் வரை ஊர்வலமாக சென்றனர்். பின்னர் அங்கிருந்து 25-க்கும் மேற்பட்ட பூத்தட்டுகளை சமயபுரம் கோவிலுக்கு எடுத்து சென்றனர். 
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, இன்று நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடக்கிறது. நாளைதேரோட்டம் நடக்கிறது.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் உற்சவரான நம்பெருமாள் ஸ்ரீரங்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் உபநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்திலிருந்து திருச்சி விகையில் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள திருகொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார்.

    இதைத்தொடர்ந்து ஆதி பிரம்மோற்சவத்தின் 9-ம் நாளான இன்று (வியாழக் கிழமை) பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று நம்பெருமாள்-தாயார் சமேதராக காட்சி அளிக்கும் சேர்த்தி சேவை நடக்கிறது.

    இன்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தங்க பல்லக்கில் புறப்பாடு நடக்கிறது. சித்திரை வீதிகள், உள்திருவீதி வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியே தாயார் சன்னதியை காலை 9.30 மணிக்கு பல்லக்கு வந்து சேருகிறது. பின்னர் சமாதானம் கண்டருளி தாயார் சன்னதி முன்மண்டபத்திற்கு பகல் 12 மணிக்கு சேருகிறது. மதியம் 12.30 மணி முதல் 1.15 மணிவரை முதல் ஏகாந்தம், 1.30 மணிவரை தளிகை அமுது செய்து புறப்பாடும், பிற்பகல் 2 மணிக்கு பங்குனி உத்திர மண்டபத்தை பல்லக்கு அடைகிறது.

    பின்னர் அங்கிருந்து தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு சேர்த்தி மண்டபத்தை சேருகிறார். அங்கு பிற்பகல் 3 மணி முதல் இரவு 10.30 மணிவரை நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலிக் கின்றனர். நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவையையொட்டி, இன்று தாயார் மற்றும் பெருமாள் சன்னதிகளில் மூலஸ்தான சேவை கிடையாது. இரவு 10 மணிக்கு சின்னப்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி தாயார் சன்னதி சேருகிறார்.

    இரவு 11.30 மணிக்கு 2-வது ஏகாந்தம் நடக்கிறது. நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் (அதாவது நாளை) திருமஞ்சனமும், அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணிவரை 3-வது ஏகாந்தமும் நடக்கிறது. காலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    பங்குனி உத்திர 10-ம் திருநாளான இன்று அதிகாலை 5.45 மணிக்கு நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோரதத்திற்கு சென்றடைகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் ரதயாத்திரையும், தொடர்ந்து ‘கோ’ ரதம் என்னும் பங்குனி தேரோட்டமும் நடக்கிறது.

    நாளை மறுநாள்(சனிக்கிழமை) ஆளும் பல்லக்கு புறப்பாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவில் இணை ஆணையர் ஜெயராமன் செய்து வருகிறார். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு நேற்று இரவு ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் சீர்வரிசை வழங்கப்பட்டது.
    சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் சார்பு கோவிலாக இருந்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு வரும் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழ வகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று காலை சமயபுரம் கோவிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நொச்சியம் வழியாக ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடக்கரை வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி அம்மன் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கருட மண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழ வகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய தட்டுகளை அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள், அறங்காவலர்கள், அதிகாரிகள் தலையில் சுமந்தும், கையில் ஏந்தியவாறும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக புறப்பட்டு வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றில் அம்மன் எழுந்தருளியிருந்த பந்தலுக்கு வந்தனர்.

    அங்கு சீர்வரிசை பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் அலுவலர்களிடம் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் வழங்கினர்.

    இதையடுத்து அம்மனுக்கு ரெங்கநாதர்கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மங்களப்பொருட்களுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன் மற்றும் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ம் நாளான கடந்த 15-ந் தேதி தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்திரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 8-ம் நாளான நேற்று முன்தினம் மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்தார். 4.30 மணி முதல் 5.15 மணி வரை ரதரோஹணம்(தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது.

    தேரில் சிறப்பு அலங்காரத்தில் உபநாச்சியார்களுடன் நம்பெருமாள்.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகள் வழியாக வலம் வந்து, காலை 9 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, விளக்கு மற்றும் சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர். தேர் திரு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடை பெறுகிறது. நிறைவு நாளான நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார்.

    வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவதோடு தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். 
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சாமி தரிசனம் செய்தார். #SrirangamTemple #Edappadipalaniswami
    திருச்சி:

    கரூர், திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெறும் அ.தி. மு.க. நிர்வாகிகளின் இல்ல திருமண விழாக்களில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார்.

    கரூர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு திருச்சி வந்த அவருக்கு மாவட்ட எல்லையான பெட்டவாய்த் தலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு பயணியர் விடுதியில் தங்கிய அவர் இன்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    முன்னதாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவில் இணை ஆணையர் ஜெயராமன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் தலைமையில் பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக முதல்வர் பழனிசாமி கோவிலுக்குள் வந்தார். அங்குள்ள பிரகாரத்தில் கோவில் யானை ஆண்டாள் அவரை ஆசீர்வாதம் செய்தது. யானைக்கு அவர் பழங்கள் வழங்கினார்.

    அதனை தொடர்ந்து ஆரியப்பட்டாள் வாசல் வழியாக முதல்வர் பழனிசாமி சென்று மூலவர் ரெங்கநாதரை தரிசனம் செய்தார். பின்னர் தாயார் சன்னதியில் உள்ள ரெங்கநாச்சியாரை தரிசனம் செய்துவிட்டு உபகோவிலான மேட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலுக்கு வந்தார். அங்கு பயபக்தியுடன் அவர் சாமி கும்பிட்டார்.

    இதையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்த பேட்டரி காரில் ஏறி பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு சென்றார். தொடர்ந்து ராமானுஜர் சன்னதிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் ரெங்கநாதர் கோவில் புத்தகம் மற்றும் மூலவர் படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

    முதல்வர் வருகையையொட்டி உதவி கமி‌ஷனர் ராமச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிவசுப்பிரமணியன், உமாசங்கர் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் இருந்தனர்.

    அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், சரோஜா, வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள் ப.குமார், ரத்தினவேல், கலெக்டர் ராசா மணி, முன்னாள் அமைச்சர் பூனாட்சி, உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் முதல்வருடன் சென்றனர்.

    முன்னதாக கோவிலுக்கு வந்த முதல்வருக்கு கட்சி நிர்வாகிகள் அணிவிக்க வைத்திருந்த சால்வைகள் மற்றும் பரிசு பொருட்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரகாரத்தை அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி சுற்றி வந்தபோது எடுத்தபடம்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவிலினுள் தரிசனம் செய்த நேரத்தில் பாதுகாப்பு கருதி பக்தர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

    முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரெங்கநாதரை தரிசனம் செய்து முடித்த பின்னர் அவர் கோவிலை சுற்றி வலம் வருவதற்காக இரண்டு பேட்டரி கார்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவர் ரெங்கநாதரை தரிசனம் செய்த பிறகு ரெங்கநாச்சியார் என்று அழைக்கப்படும் தாயார் சன்னதிக்கு மேள, தாளம் முழங்க நடந்தே வந்து சாமி தரிசனம் செய்தார். #SrirangamTemple #Edappadipalaniswami
    ×