search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்வாய் பணி"

    • பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் கழிவு நீர் மழை நீரோடு கலந்து சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
    • பழவேற்காடு நெடுஞ்சாலை திருப்பாலைவனத்தில் மழையினால் சாலை சேதமடைந்து பெரிய பள்ளமாக காணப்படுகின்றன.

    பொன்னேரி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக விட்டு விட்டு கனமழை கொட்டுகிறது. நேற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

    பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 5 வருடத்திற்கு மேலாக நடை பெற்று வரும் நிலையில் முழுமையாக முடிக்கப்படாததால் என். ஜி. ஓ. நகர், பர்மா நகர், ஜீவா தெரு உள்ளிட்ட பல இடங்களில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கின. மேலும் அந்த இடம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறின. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    மேலும் 16-வது வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் குளம்போல் தேங்கி சகதியாக மாறிகாணப்படுகிறது. இதேபோல் ரயில் நிலையம் அருகில் மழைநீர் கால்வாய் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் கழிவு நீர் மழை நீரோடு கலந்து சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    பொன்னேரி-மீஞ்சூர் சாலை அருகே தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி காணப்படுவதால் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. பொன்னேரி-பழவேற்காடு சாலை திருவாயர்பாடி ரெயில்வே மேம்பாலம் அடியில் 4 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் இரண்டு பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துணைத் தலைவர் விஜயகுமார் தலைமையில் நகராட்சி நிர்வாக பணியாளர்கள் 3 மோட்டார்கள் வைத்து மழை நீரை அகற்றினர்.

    பலத்த மழை காரணமாக நேற்று இரவு பொன்னேரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் மூன்று மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. பொன்னேரி பழவேற்காடு நெடுஞ்சாலை திருப்பாலைவனத்தில் மழையினால் சாலை சேதமடைந்து பெரிய பள்ளமாக காணப்படுகின்றன. இதனால் அவ்வழியே வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்க வருகின்றன. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக பொன்னேரியில் 5 செ.மீட்டர் மழையும், கும்மிடிப்பூண்டியில் 3 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

    • சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது.
    • ஊழியர்களிடம் பணி குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.

    வண்டலூர்:

    சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. விரைவில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஸ்நிலையம் முன்பு தேங்கும் மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும்இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக இருந்தது. இதையடுத்து பஸ்நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பஸ்நிலையம் அருகில் தற்போது சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர் கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்தி புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் மீதி உள்ள கால்வாய் பணிகள் முழுவதையும் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் நடைபெறும் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அங்கிருந்த ஊழியர்களிடம் பணி குறித்த தகவல்களை கேட்டறிந்தார். மேலும் கால்வாய் பணியை அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் அபூர்வா செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மொத்த நீரும் ஜி.எஸ்.டி.சாலையில் வெள்ளமாக தேங்குகிறது.
    • பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே ஒரு நாள் மழைக்கு தண்ணீர் தேங்கியது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து தற்போது வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள், மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி.சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின்போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மேலும் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து இந்த மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும் இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக உள்ளது. இதனால் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மொத்த நீரும் ஜி.எஸ்.டி.சாலையில் வெள்ளமாக தேங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட 4 கல்வெட்டுகளும் குறுகலாக மற்றும் சிதலமடைந்து உள்ளதாலும், மழைநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாலும் தண்ணீர் தேங்கி நிற்பது தெரியவந்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதன் மூலம் பஸ்நிலைய பகுதியில் மழை நீர் தேங்காமல் எதிரில் உள்ள ரெயில்வே தடங்களை கடந்து அடையாறு ஆற்றுப்படுகைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மழைநீர் சுமார் 180 அடிநீளமுள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடந்து கிளாம்பாக்கம் ஏரி, மற்றும் வண்டலூர் ஏரிகளுக்கும் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஸ்நிலையம் அருகில் தற்போது சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர்கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்தி புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் மீதம் உள்ள பணிகள் முழுவதையும் முடிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளுதல், வெள்ளத்தடுப்பு நடவடிக்கை, சென்னையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக தலைமைசெயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    தலைமைசெயலாளர் சிவ்தாஸ்மீனா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது,கிளாம்பாக்கம் பஸ்நிலையம் எதிரில் ஜி.எஸ்.டி.சாலையில் மழைநீர் வடிகால் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்று 45 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

    இதனால் தற்போது கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, 'கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.

    பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே ஒரு நாள் மழைக்கு தண்ணீர் தேங்கியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதனை சரிசெய்து பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இல்லையெனில் புறநகர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைத்ததற்காக நோக்கம் நிறை வேறாமல் போய்விடும். பஸ்நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை எப்படி கையாள வேண்டும் என்றும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்' என்றனர்.

    • புஷ் அண்ட் துரோ என்ற நவீன முறையில் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதமாக நடைபெற்றது.
    • ஒரு கல்வெர்ட்டு 11 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும், 1.4 மீட்டர் உயரமும் கொண்டது.

    பூந்தமல்லி:

    பருவமழை தீவிரம் அடையும் போது போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தந்தி கால்வாய் மூலமாக வரும் தண்ணீர் காரணமாக அய்யப்பன் தாங்கல், பரணி புத்தூர், கொளுத்துவான்சேரி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்குவது வழக்கம்.

    மழை காலத்தில் இப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை யடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து மழை நீர் கால்வாய் அமைக்க உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ரூ.100 கோடி செலவில் கட் அண்ட் கவர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. தற்போது தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையை கடந்து மழை நீர் செல்ல வழி இல்லாததால் தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையை ஏதும் உடைக்காமல் புஷ் துரோ முறையில் தாம்பரம் - மதுரவாயல் பைபாசின் கீழ் 54 மீட்டருக்கு கல்வெர்ட்டு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது.

    தற்போது அதே பகுதியில் மீண்டும் 56 மீட்டர் தூரத்துக்கு கல்வெர்ட் கால்வாயை புஷ் அண்ட் துரோ என்ற நவீன முறையில் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதமாக நடைபெற்றது.

    இந்த முறையில் சாலையை உடைக்காமல் கல்வெர்ட்டு உள்ளே தரைக்கு கீழ் நுழைக்கப்படும். ஒரு கல்வெர்ட்டு 11 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும், 1.4 மீட்டர் உயரமும் கொண்டது.

    இந்த கல்வெர்ட்டின் மீது கனமான இரும்பு அமைக்கப்பட்டு கம்பரசர் மூலமாக அழுத்தம் கொடுத்து புஷ் துரோ முறையில் ஒன்றன்பின் ஒன்றாக செலுத்தப்படும். நாள் ஒன்றுக்கு 2 மீட்டர் மட்டுமே இதனை செலுத்த முடியும்.

    தற்போது வரை 56 மீட்டரில் சாலையின் நடுவே 44 மீட்டரும், சாலைக்கு வலது புறமும், இடது புறமும் தலா 6 மீட்டர் விட்டு புஷ் அண்ட் துரோ கல்வெர்ட்டு அமைக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் சாலை விரிவாக்க பணி நடந்தால் இந்த பகுதியில் கல்வெர்ட்டின் மீது சாலை அமைத்து கொள்ளலாம். இதற்காக இப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இந்த பணிகளை கூடுதல் தலைமை செயலர் சந்திப் சந்தீப்சக் சேனா ஆய்வு மேற்கொண்டார். தற்போது முடிந்துள்ள பணிகளை விரைந்து முடித்து, இந்த பகுதியின் மேலே தார் சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ரெயில்வே துறையில் மட்டுமே சாத்தியமான பணியை தற்போது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வாகன போக்குவரத்து மிகுந்த தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையை உடைக்காமலும் போக்குவரத்து தடை செய்யாமலும் தற்போது இந்த பகுதியில் புஷ் அண்ட் துரோ முறையில் கல்வெர்ட்டை அமைத்து சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அண்ணா மார்க்கெட் அருகே கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
    • மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் மஞ்சகுப்பம் நேதாஜி சாலையில் அண்ணா மார்க்கெட் அருகே கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    இப்பணியினை மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

    இதனை தொடர்ந்து அண்ணா மார்க்கெட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை ஆணையாளர் மற்றும் துணை மேயரிடம் தெரிவித்தனர். அப்போது நகர் நல அலுவலர் ஜாபர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கால்வாய் கரைகள் வலுவிழந்து கான்கிரீட் சிலாப்புகள் படிப்படியாக விழத்துவங்கியது.
    • மண் கொட்டி வழித்தடத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

    உடுமலை :

    பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் உடுமலை புதுப்பாளையம் கிளை கால்வாய் கடந்த 1964ல் கட்டப்பட்டது. இந்த கால்வாயில் இரண்டாம் மண்டல பாசனத்தில் 7,219 ஏக்கர், 4-ம் மண்டல பாசனத்தில் 7,310 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.பிரதான கால்வாயில் இருந்து பூசாரிபட்டி ஷட்டரில் பிரிந்து 40 கி.மீ., தொலைவுக்கு இந்த கால்வாய் அமைந்துள்ளது. ஆங்காங்கே ஷட்டர் அமைத்து 30 பிரிவு கால்வாய்கள் வாயிலாக விளைநிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் களிமண் பகுதியில் கால்வாய் கரைகள் வலுவிழந்து கான்கிரீட் சிலாப்புகள் படிப்படியாக விழத்துவங்கியது.

    மழைக்காலங்களில் களிமண்ணில் அதிக தண்ணீர் தேங்கி நிற்பதால் கரைகள் சீரற்றதாக மாறி மண் சரிவும் ஏற்பட்டது.சில ஆண்டுகளுக்கு முன் 2இடங்களில் கரை உடைந்து நீர் நிர்வாகம் பாதித்தது. இதையடுத்து, புதுப்பாளையம் கிளை கால்வாயை முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    அவ்வகையில் நீர் வள நில வள திட்டத்தின் கீழ் கால்வாயில் குறிப்பிட்ட தூரம் கரைகள் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மிகவும் சேதமடைந்த பகுதியில் கரைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பொதுப்பணித்துறையினர் கூறியதாவது:- புதுப்பாளையம் கிளை கால்வாயில் 5 கி.மீ., தொலைவுக்கு களிமண் நிலங்கள் அமைந்துள்ள பகுதியில் கரைகள் வலுவிழந்துள்ளது கண்டறியப்பட்டது.அந்த இடத்தில் கரைகளை புதுப்பிக்க அரசால் 4 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிதியில் கரை ஸ்லாப் கற்கள் முதலில் அகற்றப்படுகிறது.கரையை ஒட்டியுள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் களிமண்ணை முழுமையாக அப்புறப்படுத்தி அந்த இடத்தில் செம்மண் கொட்டி சீராக்கப்படுகிறது.பின்னர் சமன்படுத்தி அதன் மேல் கான்கிரீட் ஸ்லாப்கள் பதிக்கப்படுகின்றன.

    மேலும் தரைத்தளத்திலும் சிமென்ட் கரை அமைக்கப்படுகிறது.இதனால் மழைக்காலத்தில் களிமண்ணால் கரைகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். தற்போது 2 கி.மீ., தொலைவுக்கு பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.வரும் 4-ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்புக்கு முன் பணிகள் நிறைவு பெறும் என்றனர்.

    கிளை கால்வாய் கரையில் பொதுப்பணித்துறை ரோந்து வாகனங்கள் செல்ல வழித்தடம் உள்ளது.இந்த தடம் குறிப்பிட்ட இடைவெளியில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. தற்போது இந்த வழித்தடம் பல இடங்களில் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுவதால் எவ்வித வாகனங்களும் அவ்வழியாக செல்ல முடியாது. ரோந்து பணிகளும் பாதிக்கிறது. பொதுப்பணித்துறை சார்பில் தற்காலிக தீர்வாக மண் கொட்டி வழித்தடத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    • 200 அடி நீளமுள்ள சாக்கடை கால்வாய் பணியை முழுமையாக முடிக்காமல் சுமார் 70 அடி மட்டுமே கட்டியுள்ளனர்,
    • மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே , ஒ.ஜி. அள்ளி பஞ்சாயத்தில் உள்ளது மாக்கனூர் கிராமம். இக்கிரமத்தில் சுமார் 200 வீடுகளில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் நீண்டகாலமாக சாக்கடைகால்வாய் இன்றி இருந்தது.

    இந்நிலையில் பஞ்சாயத்து சார்பில் ரூ. 1.10 லட்சம் மதிப்பீட்டில்புதிய சாக்கடை கால்வாய் அமைப்பதாக கூறி பணியை தொடங்கினார்.

    200 அடி நீளமுள்ள சாக்கடை கால்வாய் பணியை முழுமையாக முடிக்காமல் சுமார் 70 அடி மட்டுமே கட்டியுள்ளனர்,

    மீதி பணியை செய்ய நிதி இல்லை என சாக்கடை கால்வாய் திட்டத்தை கைவிட்டதால் கழிவு நீர் வெளியேறாமல் வீடுகளின் முன்பு மற்றும் கிராமத்தின் நுழைவாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.

    இது குறித்து அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளிக்கூட வாசலை மறித்து கால்வாய் கட்டும் பணி நடைபெறுவதால் மாணவர்கள்-பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
    • நாவினிப்பட்டி ஊராட்சி கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது மேலூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனையொட்டி சாலையோரம் உயரமான அளவில் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. பள்ளிக்கூட வாசலை மறித்து கால்வாய் கட்டப்படுவதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்குள் சென்று வர முடியாத நிலையில் உள்ளனர்.

    இது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் ஊராட்சி நிர்வாகத்திற்கும், நெடுஞ்சா லைத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இருந்தபோதும் மாணவர்கள் பணிகள் நடைபெறும் சாக்கடை கால்வாயில் ஏறி, இறங்கி பள்ளிக்குள் சென்று வர முடியாத நிலை தொடர்ந்தது.

    இதை கண்டித்து இன்று காலை பள்ளி முன்பு பெற்றோர்கள், மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர், நாவினிப்பட்டி ஊராட்சி கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • தீவட்டிபட்டி அருகே சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • 6 மாதம் ஆகியும் பணிகள் நடக்காததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த நாச்சனம்பட்டி காலனி 12 - வது வார்டு பகுதியில் சுமார்100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் குடிநீர் மற்றும் சாக்கடை வசதி இன்றி வசித்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒப்பந்ததாரர் சார்பாக சாக்கடை வசதி அமைக்க ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது.

    ஒவ்வொரு குடியிருப்புகள் முன்பு சுமார் 5 அடி பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் மரப்பலகை வைத்து வீட்டுக்குள் சென்று வருகின்றனர்.

    முதியோர்கள் இதில் நடக்க இயலாமல் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. பள்ளம் தோண்டி வெகுநாட்கள் ஆகியும் சாக்கடை கால்வாய் பணிகள் முடிக்கப்படவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சாக்கடை வசதி மற்றும் குடிநீர் இணைப்பு ஆகிய பணிகளை உடனடியாக செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×