என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் சேகர் பாபு"

    • பக்தர்களிடம் ரூ.2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
    • திராவிட ஆட்சியாளர்களின் அகராதியில் ‘ஆண்டவர்’களை ஆள்பவர்களே உயர்ந்தவர்கள் என்று எழுதப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரியாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பழனி முருகன் கோவிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ரூ.2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    அதைவிடக் கொடுமை என்னவென்றால், முருகன் வரலாறு என்று கூறி விற்பனை செய்யப்படும் நூலின் பெரும்பாலான பக்கங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரின் கருத்துகளும், அவர்களின் புகைப்படங்களும் நிறைந்திருப்பது தான்.

    முருகன் வரலாறு என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? என்ற வினா எழுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

    அய்யோ பாவம்... திராவிட ஆட்சியாளர்களின் அகராதியில் 'ஆண்டவர்'களை ஆள்பவர்களே உயர்ந்தவர்கள் என்று எழுதப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளார். 



    • பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
    • ஜூலை 7ம் தேதி நடக்கின்ற கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்ததின்படி ஆண்டுக்கு ரூ.50 லட்சம் செலவில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்பட 10 கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இத்திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை தொடங்கி வைத்து கோவில் பொது தரிசனப்பாதையில் வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பாலை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குட முழுக்கு பணிகளை இரவு 8 மணியில் இருந்து 12 மணி வரை ஆய்வு செய்தோம்.

    நடைபெறுகின்ற கட்டுமான பணிகள், பக்தர்களுக்கு தேவைப்படுகின்ற கூடுதல் வசதிகளை கூட்டம் இல்லாத போது ஆய்வு செய்தால்தான் முழு அளவிளான விபரங்கள் தெரியவரும் என்பதால் கூட்டம் இல்லாத நேரமான நேற்று இரவு முழுவதும் ஆய்வு செய்தோம்.

    சட்டமன்ற அறிவிப்பின்படி காய்ச்சிய சுடு பால் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் உத்தரவின் பேரில் அறிவித்திருந்த 10 கோவில்களுக்கு இன்றைய தினம் அந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

    கோவிலில் நடைபெறுகின்ற திருப்பணிகள், முடி காணிக்கை மண்டபம், அதே போல் நாழி கிணறு செல்லும் பாதையில் உள்ள மண்டபம், அறுபடை வீடுகளை ஒன்றாக பிரதிஷ்டை செய்து அந்த அறுபடை வீடுகளையும் தரிசித்து செல்லுகின்ற சூழல் அதேபோல் பக்தர்கள் தங்கும் விடுதி பக்தர்களுக்கு ஏற்படுத்தப் பட்டிருக்கின்ற கியூ லைன், அந்த கியூ லைனில் பக்தர்களுக்கு தேவைப்படுகின்ற குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், விழாக் காலங்களில் போக்குவரத்து நிறுத்தும் இடங்கள் சுமார் 4 இடங்களை நேற்று இரவு ஆய்வு செய்தோம்.

    சுமார் 20 ஆயிரம் வாகனங்கள் வந்தாலும் நிறுத்தக் கூடிய அளவுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்த முதலமைச்சர் உத்தரவின் பேரில் அந்த இடங்களையும் ஆய்வு செய்தோம். ஜூலை 7ம் தேதி நடக்கின்ற கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வருகிற பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் கழிப்பிட வசதி அதேபோல் சுகாதார வசதி போதிய மருத்துவ வசதி எந்த வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க நேற்று இரவு அனைத்து துறை அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்தோம்.

    குறிப்பாக நெடுஞ்சாலை துறையினரும் அதில் பங்கேற்றார்கள் கோவி லுக்கு வரும் சாலைகளில் உள்ள பழுதுகளை வருகிற கும்பாபி ஷேகத்திற்கு முன்பாக அனைத்து பழுதுக ளையும் நீக்கி தருவதாகவும் தேவைப் டுகின்ற இடங்களில் புதிய சாலைகள் அமைப்பதற்கும் அவர்கள் உறுதி அளித்திருக்கின்றார்கள்.

    அந்த வகையில் முருகன் கோவில் கும்பாபிஷேகம் எல்லாம் வல்ல எங்கள் அப்பன் முருகனுக்கு கடந்த முறை கும்பாபிஷேகம் கலைஞர் ஆட்சி காலத்தில் நடந்தது. இன்றும் கலைஞர் வழித்தோன்றல் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது.

    கும்பாபிஷேகம் பணிகள் எல்லாம் 90 சதவீதம் முடிந்திருக்கும் என்று சொல்ல முடியாது.

    எந்த எந்த பணிகள் எல்லாம் குடமுழுக்கிற்கு முன்பு முடியும் எந்த எந்த பணிகள் எல்லாம் கும்பாபிஷேகமிற்கு பின்னால் முடியும் என பட்டியலிட்டு அடுத்த முறை வருகின்றபோது தெளிவாக ஊட கத்துறையினரோடு கலந்து தெளிவாக சொல்ல இருக்கின்றோம்.

    குட முழுக்கு நடைபெறுகின்ற பணிகளில் குறிப்பாக கோவிலுக்கு வருகின்ற வழிப்பாதையில் இருக்கின்ற பணிகள் முழுவதுமாக கும்பாபிஷேகம் முன்பாக இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் என்று ஒப்பந்ததாரர்கள் கூறியிருக்கிறார்கள்.

    கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அன்னதான கூடம், முடி காணிக்கை மண்டபம் பக்தர்கள் தங்கும் விடுதி நாழி கிணறு போன்ற பணிகளை விரைவுபடுத்தி உள்ளோம்.

    அந்த பணிகள் அனைத்தும் கும்பாபிஷேகம் முன்பாக முடிக்கப்படும். மீதம் என்ன பணிகள் உள்ளதோ அது கும்பாபிஷேகம் பின்பு முடிகின்ற பணிகள் பட்டியலிட்டு எடுத்து கூறுகிறோம்.

    முக்கியமாக கும்பாபி ஷேகம் மட்டும் அல்லாமல் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அதே போல் கிருத்திகை போன்ற நாட்களில் அளவுக்கு அதிகமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகின்றார்கள்.

    தேவை கருதி பக்தர்கள் அதிகமாக வருகின்ற கால கட்டங்களில் தேவையான மருந்துவ வசதி போன்ற வற்றையும் கூடுதலாக செய்ய அறிவுறுத்தி இருக்கின்றோம்.

    எனவே இந்த குடமுழுக்கிற்கு முன்பு எவ்வளவு பணிகள் முடிக்க முடியுமோ அந்த பணிகள் போர்கால அடிப்படையில் நடத்தப்படும்.

    இந்த ஆய்வு கும்பாபிஷேகத்திற்கு முன்பாக ஒரு 4 முறையாவது அனைத்துத் துறை அலுவலர்களோடு இந்த மாவட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி.யும் அடுத்து நடக்கின்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார்கள்.

    அவர்களும்இந்த திருப்பணிக்கு முழு உதவியாக இருக்கின்றார்கள். எனவே இந்த திருப்பணி செம்மையாக நேர்த்தியாக எங்கு பார்த்தாலும் அரோகரா சத்தம் கேட்கின்ற அளவுக்கு இந்த கும்பாபிஷேகம் சீறோடும் சிறப்போடும் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலைஞர் இருக்கிற காலத்தில் இருந்தே எங்கள் வீட்டில் தொடர்ந்து காதல் திருமணம்.
    • மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மக்கள் முதல்வரின் மனித நேய விழா என்ற பெயரில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தினமும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று 72 ஜோடி திருமணத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து 50 வகையான சீர்வரிசைகளை மணமக்களுக்கு வழங்கினார்.

    இந்த விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு வரவேற்று பேசினார். மணமக்களை வாழ்த்தி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    சேகர்பாபுவுக்கு 2 முகங்கள் உண்டு. ஏனென்றால் அத்தனை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். எல்லா இடத்திலேயும் இருக்கிறீர்கள். எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக போட்டியாக இருக்கிறீர்கள். முழு நேர அரசியல்வாதி. அவர் நடத்துகிற நிகழ்ச்சிக்கு பக்கத்திலே யாருமே நிற்க முடியாது. யாருமே தெரிய மாட்டார்கள். இதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அது மேடையிலே இருக்கிற அத்தனை பேருக்கும் தெரியும். அவருக்கும் தெரியும். அமைச்சர் சேகர்பாபு ஆயிரக்கணக்கான திருமணங்களை செய்து வைத்து உள்ளார். 3 வருடத்தில் மட்டும் 1700 திருமணங்களை அவரது துறை சார்பாக நடத்தி வைத்துள்ளார். அந்த வகையில் இன்று 72 ஜோடி திருமணங்களை நடத்தி வைத்து உள்ளார்.

    சீர்திருத்த முறையில், சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறோம். இதில் கலப்பு திருமணங்கள் மட்டுமின்றி, காதல் திருமணங்கள் இருக்கும் என நம்புகிறேன்.

    இந்த காலத்தில் கலப்பு திருமணம் நடப்பது பெரிய விசயம். அதில் காதல் திருமணம் என்பது இன்னும்... எனக்கும் காதல் திருமணம்தான். ஆனால் எங்கள் வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை.

    கலைஞர் இருக்கிற காலத்தில் இருந்தே எங்கள் வீட்டில் தொடர்ந்து காதல் திருமணம். கிட்டத்தட்ட இரண்டு தலைமுறையாக. எங்கள் வீட்டில் போய் யாராவது காதல் திருமணம் இல்லை, பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் என்றால் எங்கள் தாத்தா ஒரு மாதிரியாக பார்ப்பார். அந்த அளவுக்கு எங்கள் வீட்டில் காதல் திருமணம். பலருக்கும் பல அனுபவங்கள் இருக்கிறது.

    நமது அரசு அமைந்த பிறகு முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான கையெழுத்துதான். விடியல் பயணம் திட்டம். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம். கிட்டத்தட்ட 4 வருடங்களில் மட்டும் 625 கோடி முறை பயணங்கள் மேற்கொண்டு உள்ளனர். இதுதான் இந்த திட்டத்தோட வெற்றி. ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.800-ல் இருந்து 850 வரை சேமிக்கிறார்கள்.

    நம் தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டம், செயல்படுத்த முடியாத திட்டம் இப்போது கிட்டத்தட்ட 25 மாதமாக செயல்படுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கிக் கொண்டு இருக்கிறோம். இப்படி பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செய்து கொண்டு இருக்கிறார்.

    நம் தலைவர் 2019-ம் ஆண்டு முதல் சந்தித்த அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 11 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வெற்றியை தந்து உள்ளனர். மீண்டும் சட்டமன்ற தேர்தல் 2026-ல் வரப்போகுது. தலைவர் அதில் அத்தனை பேருக்கும் இலக்கு கொடுத்து உள்ளார். 243-ல் ஜெயித்து காட்ட வேண்டும் என்று சொல்லி உள்ளார். அது நீங்கள் இருக்கிற நம்பிக்கையில் தான்.

    எனவே மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். நிறைய பெற்றுக் கொள்ளாதீர்கள். அதிலும் மத்திய அரசு பார்த்து கொண்டிருக்கிறது.

    அதாவது ஒன்றிய அரசு குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி ஜனத்தொகை அதிகமாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லியது. அதை வெற்றிகரமாக செய்து கொடுத்தது தமிழக அரசு. அதற்காக இப்போது நாம் தண்டிக்கப்படுகிறோம்.

    இப்போது தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வரப் போகிறார்கள். இங்கு பாராளுமன்ற எம்.பி.க்கள் எண்ணிக்கை 39. இந்த மறுசீரமைப்பு வந்தால் 8 தொகுதி குறைந்து 31 தொகுதியாகி விடும்.

    தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7 கோடி. ஆனால் குடும்பக் கட்டுப்பாட்டை சரியாக செய்யாத, சரியாக விழிப்புணர்வை ஏற்படுத்தாத வட மாநிலங்கள் இதனால் பயன் அடைய போகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அன்னதான திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • 530 கோவில்களில் 1767 கையடக்க கருவிகள் மூலம் கட்டணச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    சென்னை :

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இணையதளம் மற்றும் கையடக்க கருவியின் மூலம் வழங்கப்பட்ட கட்டண சேவை டிக்கெட்டை, ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவதற்கான 'கியூஆர் கோடு ஸ்கேன்' வசதியை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் கோவில் வளாகத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள் ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    530 கோவில்களில் 1767 கையடக்க கருவிகள் மூலம் கட்டணச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கையடக்க கருவிகள் மூலம் கட்டணச் சீட்டுகள் வழங்கப்படுகின்ற போது கட்டணம் செலுத்தும் சேவை, எண்ணிக்கை மற்றும் அதற்கான கட்டணம் போன்ற விவரங்களை பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் குரல் ஒலி செய்தியாக அறிவிக்கப்படுகிறது.

    இணையதளம் மற்றும் கையடக்க கருவிகள் மூலம் வழங்கப்பட்ட கட்டண சேவைக்கானச் டிக்கெட்டை கோவில்களில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையில் 'கியூஆர் கோடு' ஸ்கேன் வசதியினை தொடங்கி வைத்துள்ளோம். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 530 கோவில்களில் ஒரு முறை விற்பனை செய்யப்பட்ட கட்டண டிக்கெட்டை மீண்டும், மீண்டும் உபயோகிக்க முடியாது.

    பக்தர்கள் கோவிலின் தல வரலாறு மற்றும் ஆன்மிக குறித்த செய்திகளை அறிந்து கொள்கின்ற வகையில் 48 முதுநிலை கோவில்களில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 50 கோவில்களுக்கு விரிவுபடுத்த இருக்கின்றோம். தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் 'திருக்கோவில்' என்ற செயலியை ஓரிரு நாட்களில் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

    கோவில்களில் உண்டியல் எண்ணும்போது குற்றச்சாட்டுகள் ஏதும் ஏற்படாத வகையிலும், அதனை தடுக்கின்ற வகையிலும் உண்டியல் எண்ணுவதை இணையத்தில் நேரடியாக பக்தர்கள் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்னதான திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மகா சிவராத்திரி விழாவை சென்னை, கோவை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், நெல்லை ஆகிய 5 இடங்களில் சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக பயணமாக பிப்ரவரி 22-ந் தேதி 62 பக்தர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இந்த ஆன்மிக பயணத்துக்கான செலவு தொகை ரூ.50 லட்சத்தை அரசு மானியமாக வழங்கியுள்ளது.

    அனைவரும் போற்றி மதிக்கக்கூடிய நமது தேசத்தின் உரிமைகளை, நிலைப்பாட்டினை எடுத்து கூறுகின்ற தேசிய கீதத்தை எந்த வகையிலும், யாரும் அவமதிக்க கூடாது என்பதுதான் அனைவரின் கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன், சென்னை மண்டல இணை ஆணையர் கே.ரேணுகாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பழனி கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
    • பழனியில் 2-வது ரோப்கார் அமைக்கும் பணி கும்பாபிஷேக பணிகளுக்கு பிறகு தொடரும்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருப்பணிகள் தொடர்பாக இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வருகிற 27-ந்தேதி பழனி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையடுத்து 15 நாட்களுக்கு ஒருமுறை திருப்பணிகள் தொடர்பாக என்னை முதல்-அமைச்சர் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி இன்று திருப்பணிகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, செந்தில்குமார் எம்.எல்.ஏ, கலெக்டர் விசாகன், எஸ்.பி பாஸ்கரன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுரு ஆகியோரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் விழா நேர்த்தியாகவும், சிறப்பாகவும் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்தை காணவரும் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 65 நிழற்குடைகளில் 19 நிழற்குடைகள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் நிறுவப்பட்டுள்ளன. கும்பாபிஷேக வேள்வி நடைபெறும் இடத்தில் 90 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்ய பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    அதன்படி கடந்த 2 நாட்களாக 47 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 2000 பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் மட்டுமின்றி முக்கிய பிரமுகர்கள், நீதியரசர்கள் ஆகியோருக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. வாகனங்கள் நிறுத்துமிடம், தற்காலிக ஆஸ்பத்திரி, குடிநீர், கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக பணிகள் குறித்து நாளை மதியம் துறை சார்ந்த அலுவலர்களுடன் காணொலி மூலம் ஆய்வு நடத்த உள்ளேன். கும்பாபிஷேக பணியில் மேலும் 4 இணைஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவிஆணையர்கள் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுடன் கோவில் பணியாளர்களும் இணைந்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பார்கள். சென்னையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்மீக புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த புத்தகங்கள் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். குறைந்த விலையில் இந்த நூல்கள் பக்தர்களுக்கு கிடைக்கும். இதுதவிர ஓலைச்சுவடிகள் குறித்த ஆராய்ச்சி நிலையத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இது பொன் எழுத்துக்களால் குறிக்கப்பட வேண்டிய நல்ல நாளாகும்.

    பழனி கோவிலில் ஆகம விதிகளுக்குட்பட்டு தமிழிலும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பழனி கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. பழனியில் 2-வது ரோப்கார் அமைக்கும் பணி கும்பாபிஷேக பணிகளுக்கு பிறகு தொடரும்.

    மேலும் பழனி-இடும்பன் மலைக்கோவில் இடையே ரோப்கார் அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.

    கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்ளுக்கு ஹெலிகாப்டர் மூலம் தீர்த்தம் தெளிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுசெய்து வருகிறோம். ராஜகோபுரம் உள்ளிட்ட மற்ற கோபுரங்களில் வானத்தில் இருந்து தீர்த்தம் மற்றும் மலர்களை தூவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழனி வையாபுரி குளம் தூர்வாரப்பட வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் அதுகுறித்த அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் விசாகன், கோவில் இணைஆணையர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில்களை நிர்வாகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை உள்ளது.
    • கோவில்களில் எந்த காலத்திலும் உருவாக்க முடியாத பொக்கிஷங்கள் பல உள்ளன.

    கோவை :

    பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கார் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவில்களை நிர்வாகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை உள்ளது. எனவே அரசின் கட்டுப்பாட்டில் கோவில்கள் இருந்தால் தான் கட்டுப்பாட்டுடன் இருக்கும். மேலும் கோவில்களில் எந்த காலத்திலும் உருவாக்க முடியாத பொக்கிஷங்கள் பல உள்ளன. அவை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் கோவில்கள் கண்டிப்பாக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்.

    நாட்டில் ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியலில் தி.மு.க.வுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தினால் அதன் மூலம் இந்துக்கள் தங்கள் பக்கம் திரும்பி விடுவார்கள் என்று நினைத்து சிலர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த ஆட்சியை பொருத்தவரை தடுமாறாத, ஒரு இரும்பு மனிதர் வழிநடத்திக்கொண்டு இருக்கிறார். எனவே அவர்களின் எதிர்பார்ப்பு எந்த காலத்திலும் நடக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஞாயிறு கிராமத்தில் உள்ள கோவில் திருப்பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • அருமந்தை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 90 ஏக்கர் இடத்தில் முறையாக பேசி வாடகை வசூலிக்கப்படும்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சொர்ணாம்பிகை உடனுறை புஷ்பதீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் இன்று காலை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து பார்வையிட்டார். அப்போது பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கும்பாபிஷேகம் ,கோவில் குளத்தை சீரமைப்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கண்டெடுக்கப்பட்ட காளீஸ்வரர் லிங்கத்தை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்.

    பின்னர் அருகில் அருமந்தை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை அவர் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஞாயிறு கிராமத்தில் உள்ள கோவில் திருப்பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நிதி தேவைப்பட்டால் ஒதுக்கீடு செய்யப்படும். இங்குள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டித் தரப்படும். அருமந்தை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 90 ஏக்கர் இடத்தில் முறையாக பேசி வாடகை வசூலிக்கப்படும்.

    அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் தகுதி அடிப்படையில் 26 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். முறையாக பள்ளியில் பயின்று சான்றிதழ் வைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைப்பு நிதி தொகை ரூ.520 கோடி உள்ளது. சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் அதற்கேற்ப அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அறநிலையத்துறை ஆணையர், குமரகுருபரன், இணை ஆணையர் லட்சுமணன், பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், செயல் அலுவலர்கள் செந்தில்குமார், மாதவன் பிரகாஷ் உடன் இருந்தனர்.

    • சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 274-வது குழுமக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 274-வது குழுமக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பொது மக்களின் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்துதல், சென்னை தீவுத் திடலை மேம்படுத்துதல், விளையாட்டு நகரம் அமைத்தல், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த நிதியளித்தல் போன்றவை குறித்து பேசப்பட்டது.

    சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

    2023-2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறி விக்கப்பட்ட திட்டங்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழு மத்தின் நிர்வாக நடவடிக்கை கள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தொழில், முதலீட்டு ஊக்கு விப்பு மற்றும் வர்த்தக துறை சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி, சட்டமன்ற உறுப்பினர்கள் (மாதவரம்) எஸ்.சுதர்சனம், (திரு.வி.க.நகர்) பி.சிவக்குமார் என்கிற தாயகம் கவி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர், சி.எம்.டி.ஏ முதன்மை செயல் அலுவலர் கவிதா ராமு, , நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் பா.கணேசன், குழும உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்து ஆலோசனை செய்தார்.
    • கூட்டத்தில் பஸ்களை இயக்கும் பணியினை படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் மற்றும் சாலைப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தில் கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திலிருந்து பஸ்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்து ஆலோசனை செய்தார். மேலும் இக்கூட்டத்தில் பஸ்களை இயக்கும் பணியினை படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, போக்குவரத்து ஆணையர் அ.சண்முக சுந்தரம், தலைமை வனப்பாது காவலர் கீதாஞ்சலி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கோவில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யும் பணிகளும் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
    • நூல்கள் எதிர்காலத்தில் கோவில்களின் சொத்துகளை பாதுகாக்க அடிப்படை ஆதாரமாக விளங்கும்.

    சென்னை:

    சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில்களின் சொத்துகள் விவரம் அடங்கிய 2-வது புத்தகத்தை வெளியிட்டார்.

    அப்போது நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 07.05.2021 முதல் 31.03.2022 வரை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 167 கோவில்களின் ரூ.2,566.94 கோடி மதிப்பிலான சொத்துகள் குறித்த விவரங்களை தொகுத்து, வெளிப்படைத்தன்மையுடன் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முதல் புத்தகம் 17.05.2022 அன்று வெளியிட்டோம்.

    அதனை தொடர்ந்து, 01.04.2022 முதல் 31.03.2023 வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்துகளின் விவரம், தனிநபர் பெயரிலும், கணினி சிட்டாவிலும் தவறுதலாக பதிவான பட்டா மாறுதல்களை சரிசெய்து கோவில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யப்பட்ட விவரம் ஆகியவற்றை உள்ளடக்கிய 2-வது புத்தகத்தை இன்று வெளியிட்டு இருக்கிறோம்.

    இப்புத்தகத்தில் 01.4.2022 முதல் 31.3.2023 வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 330 கோவில்களுக்குச் சொந்தமான ரூ.1,692.29 கோடி மதிப்பிலான 3386.06 ஏக்கர் நிலம், மனை, கட்டிடம் மற்றும் திருக்குளம் விவரங்கள், நிலவுடைமை பதிவு மேம்பாட்டு திட்ட நடவடிக்கையின் போது தனிநபர் பெயரில் தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட நிலத்திற்கு மீண்டும் பட்டா பெற்ற 145 கோவில்களுக்குச் சொந்தமான 801.63 ஏக்கர் நிலங்களின் விவரம், கணினி சிட்டாவில் பதிவான தவறுகளை சரிசெய்து 180 கோவில்களுக்கு சொந்தமான 1,434.43 ஏக்கர் நிலங்களுக்கு கோவில் பெயரில் பட்டா பெற்ற விவரம், நவீன தொழில்நுட்ப கருவியான டி.ஜி.பி.எஸ். மூலம் 74514.48 ஏக்கர் கோவில் நிலங்களில் அளவீடு செய்யப்பட்டுள்ள விவரம், அவற்றின் புகைப்படங்கள், அதுகுறித்து நாளிதழ்களில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இந்நூல்கள் எதிர்காலத்தில் கோவில்களின் சொத்துகளை பாதுகாக்க அடிப்படை ஆதாரமாக விளங்கும்.

    கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கும் பணிகளும், தனிநபர் பெயரிலும், கணினி சிட்டாவிலும் தவறுதலாக பதிவான பட்டா மாறுதல்களை சரிசெய்து கோவில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யும் பணிகளும் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்தமாக, கடந்த 07.05.2021 முதல் 07.09.2023 வரை 653 கோவில்களுக்கு சொந்தமான ரூ.5,171 கோடி மதிப்பீட்டிலான 5,721.19 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு உள்ளதோடு, நவீன தொழில்நுட்ப கருவியான டி.ஜி.பி.எஸ். ரோவர் மூலம் 1,48,956.20 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது முதன்மைச் செயலர் டாக்டர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், ந.திருமகள், ஹரிப் ரியா, தனி அலுவலர்கள் விஜயா, ஜானகி, குமரேசன் உடன் இருந்தனர்.

    • 1,030 கோவில்கள் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்ற புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு மலரை விரைவில் இந்து சமய அறநிலையத்துறை வெளியிடும்.
    • ஒரு கால பூஜை திட்டத்தில் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை மேற்கு மாம்பலத்தில் புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோவிலில் இன்று காலை 7.15 மணியளவில் ராஜ கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களின் மீதும் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் கலந்து கொண்ட இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ஆதீனங்களுக்கும், உபயதாரர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கினார்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், தொன்மை வாய்ந்த கோவில்களை புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ளவும், ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் முடிந்த பிறகு குடமுழுக்கு நடைபெற வேண்டிய கோவில்களுக்கு உடனடியாக திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்திடவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள்.

    அந்த வகையில் குடமுழுக்கு 400 ஆண்டுகளுக்கு பிறகு திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கும், 300 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி, கரிய மாணிக்க வரதராஜ பெருமாள் கோவிலுக்கும், 150 ஆண்டுகளுக்கு பிறகு ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம், கங்காதீஸ்வரர் கோவிலுக்கும், 100 ஆண்டுகளுக்கு பிறகு எண்ணற்ற கோவில்களுக்கும் இந்த ஆட்சியில் தான் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றுள்ளது.

    கிராமப்புற கோவில்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ஆண்டு தோறும் தலா 1,000 என்ற எண்ணிக்கை 1,250 ஆகவும், நிதியுதவி தலா ரூ.1 லட்சம் என்பது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு இதுவரை 2,500 கிராமப்புற கோவில்களுக்கும் 2,500 ஆதி திராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோவில்களுக்கு ரூ.100 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1,000 ஆண்டுகள் முற்பட்ட தொன்மையான கோவில்களை புனரமைத்து திருப்பணி மேற்கொள்ள 2022 2023-ம் நிதியாண்டில் ரூ.100 கோடியும், 2023-24-ம் நிதியாண்டிற்கு ரூ.100 கோடியும் அரசு மானியமாக வழங்கியுள்ளார்கள். அதன்படி 2022 2023-ம் நிதியாண்டில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் 113 தொன்மையான கோவில்களும், 2023-24-ம் நிதியாண்டில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 84 கோவில்களும் அரசு மானியம், கோவில் நிதி மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்த கோவில்களின் வைப்பு நிதி ரூ.ஒரு லட்சத்தை 2 லட்சமாக உயர்த்தி அதற்கான நிதியுதவி ரூ.129.50 கோடியை ஒரே தவணையில் வழங்கியவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    மேலும், ஒரு கால பூஜை திட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டில் 2,000 கோவில்களை இணைத்திட ரூ.40 கோடி வழங்கியதோடு, 2023-2024-ம் நிதியாண்டில் 2,000 கோவில்களை இணைக்க அரசு நிதியாக ரூ.30 கோடியும், இந்து சமய அறநிலையத்துறை பொது நல நிதியாக ரூ.10 கோடியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 15,000 கோவில்கள் பயன்பெற்று வருகின்றன.

    ஒரு கால பூஜை திட்டத்தில் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் மு.கஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை 1,030 கோவில்களுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா மகிழ்ச்சியோடு நிறைவடைந்துள்ளது. வெகு விரைவில் 1,030 கோவில்கள் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்ற புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு மலரை விரைவில் இந்து சமய அறநிலையத்துறை வெளியிடும்.

    இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

    • சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது.
    • ஊழியர்களிடம் பணி குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.

    வண்டலூர்:

    சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. விரைவில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஸ்நிலையம் முன்பு தேங்கும் மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும்இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக இருந்தது. இதையடுத்து பஸ்நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பஸ்நிலையம் அருகில் தற்போது சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர் கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்தி புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் மீதி உள்ள கால்வாய் பணிகள் முழுவதையும் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் நடைபெறும் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அங்கிருந்த ஊழியர்களிடம் பணி குறித்த தகவல்களை கேட்டறிந்தார். மேலும் கால்வாய் பணியை அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் அபூர்வா செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×