search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruchendur Temple"

    • சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில் 6 இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • சூரசம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூர் கடற்கரையில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கினர்.

    விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜைக்கு பின்னர், யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, பின்னர் தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு பல்வேறு அபிஷேகத்துக்கு பின், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று சில பக்தர்கள் சிவன், கிருஷ்ணர், விநாயகர், முருகர், ஔவையார், நாரதர் உள்ளிட்ட சுவாமி வேடங்கள் அணிந்து கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வந்தனர்.

    கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் நடந்தது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்தி நாதருக்கும் அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கிரிப்பிரகார உலா வந்து கோவிலை சேர்ந்த பின் அங்கு சாயாபிஷேகம் நடக்கிறது.

    சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில் 6 இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூரசம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூர் கடற்கரையில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் 80 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நகரை சுற்றி 20 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    சூரசம்ஹாரத்தை காண வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் அலை கடலென திரண்டு வருகிறார்கள்.

    இன்று மாலை நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண வேண்டி நேற்று அதிகாலை முதலே உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். அவர்கள் கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் பக்தர்கள் அலைகடல் என கோவிலில் திரண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் திருச்செந்தூரில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் மற்றும் திருச்செந்தூர் நகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    திருசெந்தூர் கடற்கரை பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட 21 தற்காலிக கூடாரங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வரும் நிலையில் மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    7-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுகிறார். 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கிறார். பின்னர் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் திருத்தணிகை.
    • அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.

    திருப்பரங்குன்றம்:

    தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்ட இந்த தலத்தில் வந்து இறைவனை வணங்கி வழிபட்டு சென்றால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிட்டும்.

    திருச்செந்தூர்:

    அலை ஆடும் கடலோரம் அமைந்துள்ள இந்த திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் கடலில் புனித நீராடி பின்னர் முருகப்பெருமானை தரிசனம் செய்தால், மனிதர்கள் மனதில் உள்ள ரோகம், ரணம், கோபம், பகை போன்றவை நீங்கி, மனம் தெளிவு பெறும்.

    பழனி:

    ஞானப்பழம் கிடைக்காததால் ஆண்டிக்கோலத்தில் இங்கு வந்து அமர்ந்துள்ள பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.

    சுவாமிமலை:

    தந்தைக்கு உபதேசம் செய்து தகப்பன்சாமி என்று முருகப்பெருமான் பெயர் பெற்ற இந்த சிறப்பு மிக்க தலத்திற்கு வந்து ஆறுமுகனை தரிசனம் செய்தால், ஞானம், ராகம், உபதேசம் ஆகியவை கைகூடும்.

    திருத்தணி:

    சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் இந்த திருத்தணிகை. இந்த குன்றில் அமர்ந்த குமரனை திருத்தணிகை வந்து தரிசனம் செய்து சென்றால், எப்போதும் உடன்பிறந்தது போல் மனிதனின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் கோபமானது மறையும்.

    பழமுதிர்ச்சோலை:

    தமிழுக்கு தொண்டாற்றிய அவ்வையாருக்கு, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, அவரையே திகைக்கச் செய்த முருகப்பெருமான் திருவிளையாடல் நடந்த தலம் இதுவாகும். இங்கு வந்து அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.

    • பறிமுதல் செய்யப்படும் செல்போன்களை மீண்டும் ஒப்படைக்க கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து கோவிலுக்குள் செல்ல கூடாது என பக்தர்களுக்கு அறிவுரை.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், பறிமுதல் செய்யப்படும் செல்போன்கள் மீண்டும் ஒப்படைக்க கூடாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த கோயில் அறங்காவல் குழு தலைவர் அருள் முருகன், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட அனைத்து வழிமுறைகளும், திருச்செந்தூர் கோயிலில் மூன்று நாட்களில் அமல்படுத்தப் படும் என கூறினார். 

    எடுத்தவுடன் பறிமுதல் செய்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால், செல்போன் கொண்டு செல்ல கூடாது என்று பக்தர்களுக்கு முதலில் அறிவுரை வழங்கப்படும் என்றார். மேலும் பக்தர்களின் செல்போன்களை வைப்பதற்கு பலகைகள் மற்றும் செல்போன்கள் குறித்து அறிவதற்கான ஸ்கேனிங் மெஷின் போன்றவை ஆர்டர் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

    அதேபோல் பக்தர்கள் ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து கோயிலுக்குள் செல்ல கூடாது என்பது உள்பட உயர்நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் பக்தர்களிடம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மழை நீர் தேங்கியுள்ளது இதுவே முதன்முறையாகும்.
    தூத்துக்குடி:

    நெல்லை மற்றும்  திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய இடைவிடாத பலத்த கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கன மழையினால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

    கனமழை காரணமாக திருச்செந்தூர் கோவிலுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. பக்தர்கள் கோவிலை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் தவித்து வருகின்றனர். 

    கோவிலின் உள் மற்றும் வெளி ப்ரகாரங்களில் மழை நீர் வரத்து அதிகரித்து கொண்டேயிருப்பதால் ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மழை நீர் தேங்கியுள்ளது இதுவே முதன்முறையாகும்.

    திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் செட்டியாபத்து என்ற ஊரில் உள்ளது ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்.
    திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது செட்டியாபத்து என்ற ஊர். இங்கு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில் 4 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழிலுற அமைய பெற்றுள்ளது. கிழக்குபுறம் ஒரு வாசலும், மேற்குபுறம் ஒரு வாசலும், வடக்கு புறம் ஒரு வாசலுமாக மூன்று வாசல்களைக் கொண்டிருக்கிறது இந்த ஆலயம்.

    வடக்கு புற வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் முதலில் பெரியசாமி சன்னிதியும், அடுத்து வயனப்பெருமாள் மற்றும் அனந்தம்மாள் வீற்றிருக்கும் சன்னிதியும் காணப்படுகிறது. அடுத்ததாக ஆத்தி சுவாமி சன்னிதியும், தொடர்ந்து திருப்புளி ஆழ்வார் சன்னிதியும், அதன் அருகில் பெரியபிராட்டி சன்னிதியும் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரே கோட்டை சுவருக்குள் 6 தெய்வங்களும், 5 சன்னிதிகளும் அமைந்து உள்ளதால், இந்த ஆலயமானது ‘ஐந்து வீட்டு சுவாமிகள் திருக் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. பெரிய சுவாமி சன்னிதியின் எதிர்புறம் ஆஞ்சநேயர் சன்னிதியும், ஆத்தி சுவாமி அருகே குதிரை சுவாமி சன்னிதியும் அமைந்துள்ளன.

    பெரியசாமி சன்னிதி தவிர மற்ற சன்னிதிகளில் மூல வருக்கு விக்கிரகங்கள் கிடையாது. பெரியசாமிக்கு மட்டுமே மூலவர் விக்கிரகம் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். ஜாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் மூலஸ்தானம் வரை சென்று வணங்கும் சிறப்பு, இந்தக் கோவிலுக்கு மட்டுமே உள்ளது என்று சொல்லப்படுகிறது.

    ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் தினசரி 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெறுகின்றன. மேலும் மாலை நேரத்தில், ‘மாலை சாத்துதல்' பூஜையும் செய்யப்படுகிறது. இடைப்பட்ட நேரங்களில் பணிவிடை (படையல் போடுபவர்கள்) செய்கிறவர்களுக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது. இதுதவிர தினசரி அதிகாலை 4 மணிக்கு சங்கநாதமும், சேகண்டி ஓசையும் முழங்கப் படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் தங்களால் முடிந்த பணிவிடைகளை (ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு), படையல் போடுவார்கள். முன்னதாக ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு இந்த படையல்கள் போடப்படும். அதன்பிறகு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

    300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், விரதம் இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் வேண்டுவோர், பெரியபிராட்டி அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்தினால் வேண்டியது நிறைவேறும். மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆத்தி சுவாமியை வழிபட்டு ஆத்தி மர இலையை அரைத்து நீரில் கலந்து குடித்து வந்தால் அவர்கள் குணம் பெறுவார்கள்.

    கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், ஆத்தி சுவாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செருப்பு மற்றும் கதாயுதம் காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் செருப்புகளை அணிந்ததின் அடையாளமாக, கோவிலில் உள்ள செருப்புகளில் ஆத்தி சுவாமியின் கால் விரல்கள் பதிந்த தடங்களை இன்றும் காணலாம். பெரியசாமி சன்னிதியில் கட்டில், தலையணை வைக்கப்பட்டு இருக்கும். இதில் இரவு நேரத்தில் பெரியசாமி படுத்து ஓய்வு எடுப்பதாக நம்பப்படுகிறது. காலையில் நாம் இதனை பார்த்தால் இந்த படுக்கை விரிப்புகள் கலைந்து இருப்பதை காணலாம்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோவிலில் சித்திரை திருவிழாவும், தைத்திருவிழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படு கிறது. இதேபோல் அமாவாசை, பவுர்ணமி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன. சித்திரை திருவிழாவின் இறுதி நாள் அன்று ஆலயத்தில் வழங்கப்படும் அன்னமுத்திரி என்ற பிரசாதம் மிகவும் மகிமை பெற்றதாக கருதப்படுகிறது.

    திருமணிக்கட்டி மகிமைகள் :

    ஐந்து வீட்டு சுவாமி பக்தர்கள் நெற்றியில் திருமணி என்னும் வெள்ளைப்பொட்டு இட்டுக்கொள்வார்கள். இந்த திருமணி என்பது நாமக்கட்டி போன்று வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்கும் திருமண்ணாகும். இதை தண்ணீரில் குழைத்து பொட்டு இட்டுக்கொள்வர். இந்த கோவிலில் பிரசாதமாக திருமணிக்கட்டியே வழங்கப்படுகிறது. கோவிலில் முடி காணிக்கை செலுத்தியவர்கள் கூட, தலையில் சந்தனத்திற்கு பதிலாக திருமணிக்கட்டியை குழைத்து தான் பூசிக்கொள்கின்றனர். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த திருமணியை தண்ணீரில் குழைத்து சாப்பிடுவார்கள். இதன் மூலம் நோய் குணமாகுவதாக பக்தர்கள் இன்றளவும் நம்பி வருகிறார்கள்.

    இந்த கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணி என்று பெயர் சூட்டியிருப்பதில் இருந்தே திருமணிக்கட்டி பிரசாதத்தின் மகிமையை நாம் உணர முடியும்.

    பூஜை கால அட்டவணை

    காலசந்தி நடைதிறப்பு - காலை 7 மணி.
    பூஜை ஆரம்பம் - காலை 8 மணி.
    உச்சி காலை நடைதிறப்பு - பகல் 11 மணி.
    பூஜை ஆரம்பம் - பகல் 12 மணி.
    இராக்காலம் நடைதிறப்பு - மாலை 5.30 மணி.
    பூஜை ஆரம்பம் - இரவு 7 மணி.

    ×