search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "canal work"

    • பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மொத்த நீரும் ஜி.எஸ்.டி.சாலையில் வெள்ளமாக தேங்குகிறது.
    • பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே ஒரு நாள் மழைக்கு தண்ணீர் தேங்கியது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து தற்போது வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள், மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி.சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின்போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மேலும் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து இந்த மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும் இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக உள்ளது. இதனால் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மொத்த நீரும் ஜி.எஸ்.டி.சாலையில் வெள்ளமாக தேங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட 4 கல்வெட்டுகளும் குறுகலாக மற்றும் சிதலமடைந்து உள்ளதாலும், மழைநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாலும் தண்ணீர் தேங்கி நிற்பது தெரியவந்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதன் மூலம் பஸ்நிலைய பகுதியில் மழை நீர் தேங்காமல் எதிரில் உள்ள ரெயில்வே தடங்களை கடந்து அடையாறு ஆற்றுப்படுகைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மழைநீர் சுமார் 180 அடிநீளமுள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடந்து கிளாம்பாக்கம் ஏரி, மற்றும் வண்டலூர் ஏரிகளுக்கும் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஸ்நிலையம் அருகில் தற்போது சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர்கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்தி புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் மீதம் உள்ள பணிகள் முழுவதையும் முடிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளுதல், வெள்ளத்தடுப்பு நடவடிக்கை, சென்னையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக தலைமைசெயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    தலைமைசெயலாளர் சிவ்தாஸ்மீனா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது,கிளாம்பாக்கம் பஸ்நிலையம் எதிரில் ஜி.எஸ்.டி.சாலையில் மழைநீர் வடிகால் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்று 45 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

    இதனால் தற்போது கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, 'கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.

    பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே ஒரு நாள் மழைக்கு தண்ணீர் தேங்கியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதனை சரிசெய்து பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இல்லையெனில் புறநகர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைத்ததற்காக நோக்கம் நிறை வேறாமல் போய்விடும். பஸ்நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை எப்படி கையாள வேண்டும் என்றும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்' என்றனர்.

    • புஷ் அண்ட் துரோ என்ற நவீன முறையில் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதமாக நடைபெற்றது.
    • ஒரு கல்வெர்ட்டு 11 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும், 1.4 மீட்டர் உயரமும் கொண்டது.

    பூந்தமல்லி:

    பருவமழை தீவிரம் அடையும் போது போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தந்தி கால்வாய் மூலமாக வரும் தண்ணீர் காரணமாக அய்யப்பன் தாங்கல், பரணி புத்தூர், கொளுத்துவான்சேரி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்குவது வழக்கம்.

    மழை காலத்தில் இப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை யடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து மழை நீர் கால்வாய் அமைக்க உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ரூ.100 கோடி செலவில் கட் அண்ட் கவர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. தற்போது தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையை கடந்து மழை நீர் செல்ல வழி இல்லாததால் தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையை ஏதும் உடைக்காமல் புஷ் துரோ முறையில் தாம்பரம் - மதுரவாயல் பைபாசின் கீழ் 54 மீட்டருக்கு கல்வெர்ட்டு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது.

    தற்போது அதே பகுதியில் மீண்டும் 56 மீட்டர் தூரத்துக்கு கல்வெர்ட் கால்வாயை புஷ் அண்ட் துரோ என்ற நவீன முறையில் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதமாக நடைபெற்றது.

    இந்த முறையில் சாலையை உடைக்காமல் கல்வெர்ட்டு உள்ளே தரைக்கு கீழ் நுழைக்கப்படும். ஒரு கல்வெர்ட்டு 11 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும், 1.4 மீட்டர் உயரமும் கொண்டது.

    இந்த கல்வெர்ட்டின் மீது கனமான இரும்பு அமைக்கப்பட்டு கம்பரசர் மூலமாக அழுத்தம் கொடுத்து புஷ் துரோ முறையில் ஒன்றன்பின் ஒன்றாக செலுத்தப்படும். நாள் ஒன்றுக்கு 2 மீட்டர் மட்டுமே இதனை செலுத்த முடியும்.

    தற்போது வரை 56 மீட்டரில் சாலையின் நடுவே 44 மீட்டரும், சாலைக்கு வலது புறமும், இடது புறமும் தலா 6 மீட்டர் விட்டு புஷ் அண்ட் துரோ கல்வெர்ட்டு அமைக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் சாலை விரிவாக்க பணி நடந்தால் இந்த பகுதியில் கல்வெர்ட்டின் மீது சாலை அமைத்து கொள்ளலாம். இதற்காக இப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இந்த பணிகளை கூடுதல் தலைமை செயலர் சந்திப் சந்தீப்சக் சேனா ஆய்வு மேற்கொண்டார். தற்போது முடிந்துள்ள பணிகளை விரைந்து முடித்து, இந்த பகுதியின் மேலே தார் சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ரெயில்வே துறையில் மட்டுமே சாத்தியமான பணியை தற்போது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வாகன போக்குவரத்து மிகுந்த தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையை உடைக்காமலும் போக்குவரத்து தடை செய்யாமலும் தற்போது இந்த பகுதியில் புஷ் அண்ட் துரோ முறையில் கல்வெர்ட்டை அமைத்து சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தீவட்டிபட்டி அருகே சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • 6 மாதம் ஆகியும் பணிகள் நடக்காததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த நாச்சனம்பட்டி காலனி 12 - வது வார்டு பகுதியில் சுமார்100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் குடிநீர் மற்றும் சாக்கடை வசதி இன்றி வசித்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒப்பந்ததாரர் சார்பாக சாக்கடை வசதி அமைக்க ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது.

    ஒவ்வொரு குடியிருப்புகள் முன்பு சுமார் 5 அடி பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் மரப்பலகை வைத்து வீட்டுக்குள் சென்று வருகின்றனர்.

    முதியோர்கள் இதில் நடக்க இயலாமல் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. பள்ளம் தோண்டி வெகுநாட்கள் ஆகியும் சாக்கடை கால்வாய் பணிகள் முடிக்கப்படவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சாக்கடை வசதி மற்றும் குடிநீர் இணைப்பு ஆகிய பணிகளை உடனடியாக செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பெரியகுளம் அருகே கண்மாய் தூர்வாரும் பணி கிடப்பில் போடப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய் மூலம் சுற்றுவட்டார பகுதிகளான ஜெயமங்கலம், சில்வார்பட்டி, குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, நடுப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த கண்மாயை தூர்வார அரசு நிதி ஒதுக்கியது. அதற்காக பணிகளும் தொடங்கியது. அதன்பின்பு பணி கிடப்பில் போடப்பட்டது. மழை பெய்ததால் கண்மாய் நிரம்பியது. இதன் மூலம் அருகில் உள்ள குளத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடிக்கு தண்ணீரை பயன்படுத்தினர்.

    தற்போது கண்மாய் முற்றிலும் வறண்டு விட்டது. ஒரு சில விவசாயிகள் மோட்டார் மூலம் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் தூர்வாரும் பணி மீண்டும் நடைபெறாததால் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கி விடும். அதன்பின்பு கண்மாயிக்கு நீர்வரத்து அதிகரிக்கும். எனவே அதற்கு முன்பு கண்மாயை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×