search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kilambakkam Bus Terminus"

    • பேருந்து நிலையத்தை திறந்த 35 நாட்களுக்குள் தேவையான 90 சதவீத அடிப்படை வசதிகளை செய்துள்ளோம்.
    • ஏ.டி.எம். மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. மிகப்பெரிய பேருந்து நிலையமாக இருந்தபோதிலும், போதிய வசதிகள் இல்லை என பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    வசதிகள் அனைத்தும் படிப்படியாக செய்யப்பட்டு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கும் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும். ஆம்னி பேருந்துகள் நிறுத்திமிடம் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும்.

    ஏ.டி.எம். மையங்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து நிலையத்தை திறந்த 35 நாட்களுக்குள் தேவையான 90 சதவீத அடிப்படை வசதிகளை செய்துள்ளோம்.

    இவ்வாறு சேகர்பாபு தெரிவித்தார்.

    • தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டு நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது.
    • தகுதியான நபர்களை தேர்வு செய்ய சில நாட்கள் ஆகும்.

    சென்னை:

    போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிச்சுமை அதிகம் உள்ளது என்ற போக்குவரத்து சங்கங்களின் கோரிக்கை உண்மை தான். அதற்காகத்தான் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டு நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது.

    ஆனால் இன்றே ஓட்டுநரை பணிக்கு எடுத்துவிடலாம் என்று சிலர் கூறுகின்றனர். தகுதியான நபர்களை தேர்வு செய்ய சில நாட்கள் ஆகும்.

    ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும்.

    நிதி நிலை காரணமாக பல திட்டம் கொண்டு வர முடியவில்லை, அதற்கு காரணம் ஒன்றிய அரசு நமக்கு சேர வேண்டிய நிதியை கொடுக்காமல் இருப்பதால்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆம்னி பஸ்களை நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
    • ஆம்னி பஸ்களில் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

    சென்னை:

    சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிதாக பஸ் முனையம் திறக்கப்பட்டு உள்ளது.

    தென்மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகையின்போது அரசு விரைவு பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன. பொங்கலுக்கு பிறகு அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

    ஆம்னி பஸ்களையும் 24-ந்தேதி மாலை 7 மணியில் இருந்து கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையரகம் அறிவித்தது. இதுவரையில் ஆம்னி பஸ்கள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்பட்டு வருகிறது.

    வருகிற 25, 26 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாகும். அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள் வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறையாக உள்ளது. இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


    மேலும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க அரசு அறிவித்தப்படி ஆம்னி பஸ்களை நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக நேற்று இரவும் போக்குவரத்து ஆணையர் தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. அதனால் அங்கிருந்து பஸ்களை இயக்க வேண்டும், அரசின் உத்தரவை பின்பற்றாமல் இயக்கினால் போக்குவரத்து சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆம்னி பஸ்களில் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து கண்டிப்பாக ஆம்னி பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஆனால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அங்கு 850 பஸ்களை நிறுத்துவதற்கு இடமில்லை என்று தெரிவிக்கின்றனர்.

    ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்து காத்து இருக்கின்ற நிலையில் பயணம் செய்ய கிளாம்பாக்கம் செல்ல வேண்டுமா? கோயம்பேடு போக வேண்டுமா? என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

    இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து அரசு விரைவு பஸ்களை இயக்குவதற்கு வசதி உள்ளது. ஆனால் ஆம்னி பஸ்களை நிறுத்த இடமில்லை. தினமும் சென்னையில் இருந்து 850 ஆம்னி பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

    கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் விழாக் காலங்களில் 1200 பஸ்கள் வரை இயக்கப்படும். ஒட்டு மொத்தமாக எல்லா பஸ்களையும் அங்கு கொண்டு வந்து நிறுத்தவோ, பயணிகளை ஏற்றி, இறக்கவோ போதுமான வசதி இல்லை. வசதி செய்து கொடுத்தால் நாங்கள் செல்லத் தயார்.

    முடிச்சூர் வரதராஜபுரத்தில் 5 ஏக்கரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பஸ் நிலையத்தில் வசதிகள் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும். நாளை (புதன்கிழமை) கிளாம்பாக்கத்தில் இருந்து பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை. கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மொத்த நீரும் ஜி.எஸ்.டி.சாலையில் வெள்ளமாக தேங்குகிறது.
    • பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே ஒரு நாள் மழைக்கு தண்ணீர் தேங்கியது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து தற்போது வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள், மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி.சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின்போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மேலும் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து இந்த மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும் இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக உள்ளது. இதனால் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மொத்த நீரும் ஜி.எஸ்.டி.சாலையில் வெள்ளமாக தேங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட 4 கல்வெட்டுகளும் குறுகலாக மற்றும் சிதலமடைந்து உள்ளதாலும், மழைநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாலும் தண்ணீர் தேங்கி நிற்பது தெரியவந்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதன் மூலம் பஸ்நிலைய பகுதியில் மழை நீர் தேங்காமல் எதிரில் உள்ள ரெயில்வே தடங்களை கடந்து அடையாறு ஆற்றுப்படுகைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறும் மழைநீர் சுமார் 180 அடிநீளமுள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடந்து கிளாம்பாக்கம் ஏரி, மற்றும் வண்டலூர் ஏரிகளுக்கும் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஸ்நிலையம் அருகில் தற்போது சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர்கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்தி புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் மீதம் உள்ள பணிகள் முழுவதையும் முடிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளுதல், வெள்ளத்தடுப்பு நடவடிக்கை, சென்னையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக தலைமைசெயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    தலைமைசெயலாளர் சிவ்தாஸ்மீனா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது,கிளாம்பாக்கம் பஸ்நிலையம் எதிரில் ஜி.எஸ்.டி.சாலையில் மழைநீர் வடிகால் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்று 45 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

    இதனால் தற்போது கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, 'கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.

    பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே ஒரு நாள் மழைக்கு தண்ணீர் தேங்கியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதனை சரிசெய்து பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இல்லையெனில் புறநகர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைத்ததற்காக நோக்கம் நிறை வேறாமல் போய்விடும். பஸ்நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை எப்படி கையாள வேண்டும் என்றும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்' என்றனர்.

    • மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் கால்வாய் பணிகளும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.
    • கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் பின்புறத்தில் இருந்து பஸ்கள் அய்யன்சேரி வழியாகச் சென்று ஊரப்பாக்கம் நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கான சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

    வண்டலூர்:

    சென்னையில் தற்போது கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு அரசு விரைவு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை நகருக்குள் இயங்கும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. இதே போல் மாதவரத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசைலை கருத்தில் கொண்டு வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பஸ்களை புறநகர் பகுதியில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு நவீன வசதிகளுடன் பிரம்மாண்ட பஸ்நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையத்திற்கான கட்டுமான பணிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

    கொரோனோ பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பஸ் நிலைய கட்டுமான பணி மெதுவாக நடந்து வந்தது. இதனால் குறிப்பிட்ட காலத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலைய பணியை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலைய பணியை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கட்டுமான பணியை அவ்வப்போது ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

    பஸ் நிலையத்தில் 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில் மீதி உள்ள பணிகளை முடிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    பஸ் நிலையத்தில் பயணிகள் தங்குமிடம், சாதாரண அறை, குளிர்சாதன அறை மற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்குவதற்கான இடம் கட்டுமான பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

    இதேபோல் கழிவறைகள் மற்றும் பஸ் நிலையத்தை சுற்றி அமைய வேண்டிய கடைகளின் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. பயணிகளின் வாகனத்தை நிறுத்துவதற்கான பார்க்கிங் ஏரியா பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை. உணவகங்கள் பணியும் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது.

    பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருக்கும் வளைவு, அதனைச் சுற்றி பொறிக்க வேண்டிய கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் போன்ற எழுத்துக்களும் இன்னும் பொறிக்கப்படவில்லை.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் பின்புறத்தில் இருந்து பஸ்கள் அய்யன்சேரி வழியாகச் சென்று ஊரப்பாக்கம் நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கான சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

    இந்த சாலை அமைத்தால் வாகனங்கள் தொடர்ச்சியாக போகும் நிலையில் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் வாகன நெரிசல் அதிகமாக ஏற்படும் என்பதால் மாற்று சாலை திட்டத்தை கருத்தில் கொண்டு அந்த சாலை பணியும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் கால்வாய் பணிகளும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

    தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தத்திற்கான இடத்தை முதலில் படப்பை அருகில் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அங்கிருந்து ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரும் போதும், பயணிகளை ஏற்றி சென்று மீண்டும் செல்லும் போதும் இரண்டு முறை டோல்கேட்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த இடம் தேர்வு கைவிடப்பட்டது. எனவே ஆம்னி பஸ்களுக்கான இடத்தையும் தேர்வு செய்து ஆய்வு செய்யும் பணி இன்னும் முழுமையாக முடியாமல் உள்ளது.

    பல்வேறு பணிகள் முடிவடையாமல் உள்ளதால் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை திறக்க மேலும் தாமதாகும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பஸ்நிலையத்தில் கட்டுமான பணிகள் முடிந்து ஒரு பகுதியை மட்டும் முதலில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    முதல் கட்டமாக திருநெல்வேலிக்கு விரைவு பஸ்களும் அடுத்த கட்டமாக மதுரைக்கும் பஸ்களை இயக்க முடிவு செய்து உள்ளனர். பின்னர் படிப்படியாக பஸ் நிலையம் முழுவதையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலைய கட்டுமான பணி வேகமாக நடந்து வருகின்றன. பணிகள் இன்னும் முடியாததால் திறப்பு தள்ளிப்போகும்.

    மொத்தம், 10 பணிகள் நிலுவையில் உள்ளது. எனவே தீபாவளி வரை பஸ் நிலைய பணி நீடிக்கும். எனினும் முன்னதாக பஸ் நிலையத்தை படிப்படியாக திறக்க அரசு முடிவு செய்து உள்ளது. நிலுவையில் உள்ள 10 பணிகளில் சிலவற்றுக்கு டெண்டர் விடப்பட்டு இருக்கிறது. சில பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து முதல்கட்டமாக திருநெல்வேலிக்கு பஸ்கள் இயக்கப்படும். அடுத்த கட்டமாக மதுரைக்கும், 3-வது கட்டமாக விழுப்புரம் செல்லும் பஸ்கள் அனுமதிக்கப்படும். இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். புதிய பணிகள் திட்டத்தால் 25 சதவீதம் செலவு அதிகரித்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிளாம்பாக்கம் பஸ் நிலையம் சுமார் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது
    • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த பஸ் நிலையத்தில் பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை :

    சென்னை திரு.வி.க.நகர் ஸ்டீபன்சன் சாலையில் ரூ.66.83 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பால பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இணை கமிஷனர் (பணிகள்) சமீரன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம் சுமார் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல், மழை காலங்களில் தண்ணீர் தேக்கம், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை திட்டமிடப்படாமல் இந்த பஸ் நிலையம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த பஸ் நிலையத்தில் பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பஸ் நிலையம் திறக்கப்பட்டவுடன் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக தற்போது புதிதாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தையும், அயனஞ்சேரியையும் இணைக்கின்ற வகையில் 1.20 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒரு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு செல்லும் வண்டலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது, மாற்றுப்பாதையாக 6 கிலோ மீட்டர் அளவுக்கு சாலை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவைகள் இல்லாமல் சமீபத்தில் பெய்த சிறு மழைக்குகூட பெருமளவு தண்ணீர் தேங்கிநின்ற காரணத்தால் சுமார் ரூ.13 கோடியில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளது.

    கிளாம்பாக்கத்தில் ரூ.12 கோடியில் பூங்கா அமைக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு புதிய பூங்கா சுமார் ரூ.6 கோடியில் ஏற்படுத்தப்பட உள்ளது. கிளாம்பாக்கத்தில் போலீஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்குண்டான கட்டுமான பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

    நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்வார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளதால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் முதலுதவிக்காக ஒரு மருத்துவ மையம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    பஸ் நிலையம் திறப்பிற்கு பிறகு எந்தவகையிலும் மக்களுக்கு அசவுகரியம் ஏற்படக்கூடாது என்பதற்காக திட்டமிடப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆம்னி பஸ் நிலையத்துக்கு என்று தனியாக ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.30 கோடியில் அமைப்பதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. பஸ் நிலையத்தை ஒட்டி பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் சுமார் ரூ.70 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பஸ்நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருதல், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் நிறைவேற்றி, விரைவில் இந்த பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்ல வசதியாக அங்கு மின்சார ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது.
    • மின்சார ரெயிலில் இருந்து வரும் பயணிகளும், ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து வரும் பயணிகளும் சாலையை கடந்து பஸ் நிலையத்துக்குள் வருவதில் சிரமம் உள்ளது.

    வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தென் மண்டலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த பஸ்நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. ஜூலை மாதத்துக்குள் பஸ் நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தினமும் தென்மண்டலங்களில் இருந்து 65 ஆயிரம் பயணிகள் இந்த பஸ் நிலையத்துக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சம் வரை உயரும்.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்ல வசதியாக அங்கு மின்சார ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது. மின்சார ரெயிலில் இருந்து வரும் பயணிகளும், ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து வரும் பயணிகளும் சாலையை கடந்து பஸ் நிலையத்துக்குள் வருவதில் சிரமம் உள்ளது.

    இதையடுத்து கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் மற்றும் ஜி.எஸ்.டி. சாலையை புதிய பஸ் நிலையத்துடன் இணைக்கும் வகையில் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆகாய நடை மேம்பாலத்துக்கான வடிவமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

    கும்டா நிறுவனம் இந்த ஆகாய நடை மேம்பாலத்துக்கான வடிவமைப்பை உருவாகி உள்ளது. புதிய பஸ் நிலையத்தை, ரெயில் நிலையத்துடன் இணைக்கும் வகையிலும், ஜி.எஸ்.டி. சாலையை பயணிகள் எளிதாக கடக்கும் வகையிலும் இந்த ஆகாய நடை மேம்பாலம் வடிவமைக்கப்பட உள்ளது.

    ஆகாய நடை மேம்பாலம் அமைப்பதற்காக 1.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் ரெயில் நிலையம் அமைக்கவும் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

    நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்ததும் ஆகாய நடைமேம்பாலம் அமைப்பதற்காக டெண்டர்கள் விடப்படுகிறது. இதையடுத்து ஆகாய நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கி ஒரு வருடத்தில் முடிவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட உள்ள ஆகாய நடைமேம்பாலம் 450 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்டது. ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரம் பேர் இந்த ஆகாய நடை மேம்பாலத்தில் சென்று வர முடியும். இந்த பாலம் பல இடங்களில் தரையில் இறங்கும் வகையில் அமைக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. சாலை, ரெயில் நிலையம், பஸ் நிலையத்தில் பிரதான நுழைவு வாயில், மாநகர பஸ்கள் நிறுத்துமிடம் ஆகிய இடங்களிலும் இறங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கேளம்பாக்கம் பஸ் நிலையம் கட்டிடமும் முடிவடையும் தருவாயில் உள்ளது.
    • பொங்கல் பண்டிகைக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    வண்டலூர்:

    பரனூர் சுங்கச்சாவடி அருகே சுமார் 2 ஏக்கர் 58 சென்ட் பரப்பளவில் ரூ.25 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 971 மதிப்பீட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 116 அறைகள் வருகின்றன. இதில் எல்.ஐ.ஜி. 26 அறைகளும், எம்.ஐ.ஜி. 90 அறைகளும் கொண்ட 13 தளங்கள் ஒரு பிரிவாகவும், 15 தளங்கள் ஒரு பிரிவாகவும் கட்டப்படுகிறது.

    புதிய கட்டிடப் பணிகளை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த கட்டிடத்தில் 80 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. வருகிற மார்ச் மாத இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. கட்டிடத்தின் அருகே உள்ள 13.73 ஏக்கர் பரப்பளவில் காலி மனைகளையும் 145 அறைகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும்.

    ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி 121 குடியிருப்புகளில் 61 குடியிருப்புகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து மறுசீரமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இதற்கான பணியும் நடந்து வருகிறது.

    ரெயில்வே துறையில் வாங்க வேண்டிய அனுமதியும் விரைவில் முறையாக பெற்று வருகிற மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். இதேபோல் கேளம்பாக்கம் பஸ் நிலையம் கட்டிடமும் முடிவடையும் தருவாயில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சஞ்சீவனா, ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், துணைத் தலைவர் ஆராமுதன், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், தலைமை பொறியாளர் சீனிவாச ராவ் உடன் இருந்தனர்.

    ×