search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Canal Works"

    • சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது.
    • ஊழியர்களிடம் பணி குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.

    வண்டலூர்:

    சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. விரைவில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஸ்நிலையம் முன்பு தேங்கும் மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும்இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக இருந்தது. இதையடுத்து பஸ்நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பஸ்நிலையம் அருகில் தற்போது சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர் கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்தி புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் மீதி உள்ள கால்வாய் பணிகள் முழுவதையும் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் நடைபெறும் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அங்கிருந்த ஊழியர்களிடம் பணி குறித்த தகவல்களை கேட்டறிந்தார். மேலும் கால்வாய் பணியை அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் அபூர்வா செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கால்வாய் கரைகள் வலுவிழந்து கான்கிரீட் சிலாப்புகள் படிப்படியாக விழத்துவங்கியது.
    • மண் கொட்டி வழித்தடத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

    உடுமலை :

    பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் உடுமலை புதுப்பாளையம் கிளை கால்வாய் கடந்த 1964ல் கட்டப்பட்டது. இந்த கால்வாயில் இரண்டாம் மண்டல பாசனத்தில் 7,219 ஏக்கர், 4-ம் மண்டல பாசனத்தில் 7,310 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.பிரதான கால்வாயில் இருந்து பூசாரிபட்டி ஷட்டரில் பிரிந்து 40 கி.மீ., தொலைவுக்கு இந்த கால்வாய் அமைந்துள்ளது. ஆங்காங்கே ஷட்டர் அமைத்து 30 பிரிவு கால்வாய்கள் வாயிலாக விளைநிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் களிமண் பகுதியில் கால்வாய் கரைகள் வலுவிழந்து கான்கிரீட் சிலாப்புகள் படிப்படியாக விழத்துவங்கியது.

    மழைக்காலங்களில் களிமண்ணில் அதிக தண்ணீர் தேங்கி நிற்பதால் கரைகள் சீரற்றதாக மாறி மண் சரிவும் ஏற்பட்டது.சில ஆண்டுகளுக்கு முன் 2இடங்களில் கரை உடைந்து நீர் நிர்வாகம் பாதித்தது. இதையடுத்து, புதுப்பாளையம் கிளை கால்வாயை முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    அவ்வகையில் நீர் வள நில வள திட்டத்தின் கீழ் கால்வாயில் குறிப்பிட்ட தூரம் கரைகள் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மிகவும் சேதமடைந்த பகுதியில் கரைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பொதுப்பணித்துறையினர் கூறியதாவது:- புதுப்பாளையம் கிளை கால்வாயில் 5 கி.மீ., தொலைவுக்கு களிமண் நிலங்கள் அமைந்துள்ள பகுதியில் கரைகள் வலுவிழந்துள்ளது கண்டறியப்பட்டது.அந்த இடத்தில் கரைகளை புதுப்பிக்க அரசால் 4 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிதியில் கரை ஸ்லாப் கற்கள் முதலில் அகற்றப்படுகிறது.கரையை ஒட்டியுள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் களிமண்ணை முழுமையாக அப்புறப்படுத்தி அந்த இடத்தில் செம்மண் கொட்டி சீராக்கப்படுகிறது.பின்னர் சமன்படுத்தி அதன் மேல் கான்கிரீட் ஸ்லாப்கள் பதிக்கப்படுகின்றன.

    மேலும் தரைத்தளத்திலும் சிமென்ட் கரை அமைக்கப்படுகிறது.இதனால் மழைக்காலத்தில் களிமண்ணால் கரைகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். தற்போது 2 கி.மீ., தொலைவுக்கு பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.வரும் 4-ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்புக்கு முன் பணிகள் நிறைவு பெறும் என்றனர்.

    கிளை கால்வாய் கரையில் பொதுப்பணித்துறை ரோந்து வாகனங்கள் செல்ல வழித்தடம் உள்ளது.இந்த தடம் குறிப்பிட்ட இடைவெளியில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. தற்போது இந்த வழித்தடம் பல இடங்களில் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுவதால் எவ்வித வாகனங்களும் அவ்வழியாக செல்ல முடியாது. ரோந்து பணிகளும் பாதிக்கிறது. பொதுப்பணித்துறை சார்பில் தற்காலிக தீர்வாக மண் கொட்டி வழித்தடத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ×