search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் கேஎன் நேரு"

    • அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை கொசூர் பகுதியில் இருந்து பிரசாரம் மேற்கொண்டார்.
    • எனக்கு மயக்கமாக வருகிறது என்று கூறி உடனடியாக பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார்.

    கரூர்:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 21 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் கே.என்.நேரு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று (புதன்கிழமை) காலை கொசூர் பகுதியில் இருந்து பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனக்கு மயக்கமாக வருகிறது என்று கூறி உடனடியாக பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு, பிரசார வாகனத்திலிருந்து கீழே இறங்கி தனது காரில் ஏறி மருத்துவமனைக்கு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள்.
    • மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் சைவ உணவு மற்றும் அசைவ உணவு மதியம் வழங்கும் வகையில் உணவு சமைத்து பரிமாறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு தொடர்பாக இன்று மாநாட்டு திடலில் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை மாலை 5 மணி அளவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விமானத்தில் சேலம் வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வந்து விடுகிறார். மாலை 6 மணி அளவில் மாநாட்டு சுடர் திடலை வந்தடைகிறது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாநாடு திடலுக்கு வருகிறார்கள்.

    1500 பேர் பங்கேற்றுள்ள மோட்டார்சைக்கிள் பேரணி மாநாடு திடலை வந்தடைகிறது. 1000 டிரோன்கள் பங்கேற்கும் டிரோன் ஷோ நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சுமார் 1 மணி நேரம் நடைபெறுகிறது.

    மறுநாள் காலையில் (21-ந்தேதி) 9 மணி அளவில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மாநாடு திறப்பு விழா மற்றும் புகைப்பட கண்காட்சி ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதன் பிறகு காலை 10 மணி அளவில் மாநாடு தொடங்கியவுடன் தீர்மானங்கள் வாசிக்கப்படுகின்றன.

    இதையடுத்து பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள். காலையில் சுமார் 1 மணி நேரம் அமர்ந்து முதலமைச்சர் மாநாடு நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு தி.மு.க. முன்னணி தலைவர்கள் மாநாட்டில் பேசுகிறார்கள். 7 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேரூரை நிகழ்த்துகிறார்.

    இந்த மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, உணவு வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து மட்டும் 1200 பஸ்களில் தொண்டர்கள் மாநாட்டுக்கு வருகை தர உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஏற்பாட்டின் தொடக்கமாக அமையும் முன்னோட்டமாக இந்த மாநாடு அமையும். வெற்றி மாநாடாக அமையும். வாகனம் நிறுத்துவதற்கு 300 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ஊரில் இருந்தும் வாகனம் வரும்போது அவர்களுக்கு ஜி.பி.எஸ். நவீன வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

    மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் சைவ உணவு மற்றும் அசைவ உணவு மதியம் வழங்கும் வகையில் உணவு சமைத்து பரிமாறப்படுகிறது.

    இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தார்.

    • எத்தனை நாளைக்கு மத்திய அரசை குறை சொல்லி குறை சொல்லி வண்டியை ஓட்டுவார்கள்.
    • மக்களே சாலைக்கு வந்து மத்திய அரசு இதுவரை கொடுத்த நிதி எங்கே என்று கேள்வி கேட்கின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை மாநகராட்சி 15-வது மண்டலம் 198-வது வார்டுக்கு உட்பட்ட காரப்பாக்கம் பகுதியில் 5000 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி 198-வது வார்டு மாமன்ற உறுப்பினரும் ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவருமான லியோ என்.சுந்தரம் ஏற்பாட்டில் காரப்பாக்கம் கங்கையம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு 5000 பேருக்கு அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-

    மக்கள் கஷ்டத்தில் இருக்கும்போது பாரதிய ஜனதா தொண்டர்கள் முன்வந்து மக்களுக்கு உதவி செய்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு அதிகாரிகள் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகள் நேரில் வந்து மக்களை சந்திக்க வேண்டும்.

    அப்போதுதான் இங்கு என்ன நடக்கிறது என தெரியும். சென்னையில் உள்ள மையப் பகுதியை விட புறநகர் பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை மைய பகுதியை மட்டும் முதலமைச்சர் பார்வையிடுகிறார்.

    அரசு உதவிகள் மக்களுக்கு வராமல் உள்ளது. அதனால்தான் அந்தப் பொறுப்பை நாங்கள் கையில் எடுத்து செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என கூறுவதால் தான் மக்கள் ஆத்திரமடைந்து மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

    அமைச்சர் கே.என்.நேரு நான்கு மாதங்களுக்கு முன்பு 98 சதவீதம் வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக கூறினார். நேற்று அவர் கூறிய கருத்தின் படி 42 சதவீதம் தான் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளது.

    ஒரு பொறுப்புள்ள மூத்த அமைச்சர் இது போன்று மாற்றி மாற்றி பேசுகிறார். அரசே பொய் சொல்ல ஆரம்பித்தால் மக்கள் யாரை நம்புவார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சென்னை மக்கள் பொறுமையாக இருப்பார்கள் என்று நேற்று கே.என்.நேரு பேசிய பேச்சால் மக்கள் சாலைக்கு வந்து எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களை கேள்வி கேட்டு மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

    மத்திய அரசு ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு கொடுத்த நிதி எங்கே போனது என தெரியவில்லை. எத்தனை நாளைக்கு மத்திய அரசை குறை சொல்லி குறை சொல்லி வண்டியை ஓட்டுவார்கள். மக்களே சாலைக்கு வந்து மத்திய அரசு இதுவரை கொடுத்த நிதி எங்கே என்று கேள்வி கேட்கின்றனர். அதற்கே இவர்களால் கணக்கு கொடுக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடியாத நிலையில் உள்ள சில இடங்களில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது.
    • இன்று மதியம் முதல் சென்னையில் கருமேகம் அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    `மிச்சாங்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ரிப்பன் மாளிகையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, அங்கு அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் மழைக்காலங்களில் அதிகமாக மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களில் ரூ.2 ஆயிரத்து 43 கோடி செலவில், 267 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய் பணி முடிந்த காரணத்தால், பிரகாசம் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, வால்டாக்ஸ் சாலை, ராஜாஜி சாலை, போலீஸ் கமிஷனர் சாலை உள்பட பல்வேறு பிரதான சாலைகளில் மழைநீர் வழக்கம் போல தேங்கவில்லை.

    மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடியாத நிலையில் உள்ள சில இடங்களில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. அவற்றை அகற்றும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    'மிச்சாங்' புயல் எச்சரிக்கை இருப்பதால் பொதுமக்கள் யாரும், பூங்கா மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. மேலும், இன்று (ஞாயிறு) மதியம் முதல் சென்னையில் கருமேகம் அதிகமாக இருக்கும். அதனால் கனமழை அதிகமாகவே இருக்கும் எனவே, எந்த இடத்தில் தண்ணீர் தேங்கினாலும் அவற்றை அகற்ற முன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.7.85 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரம் உபயதாரர் நிதியில் இரண்டு நிலையோடு கூடுதலாக 5 நிலைகள் அமைக்கும் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டினர்.
    • ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தேக்கு மரத்தினால் உருவாக்கப்பட்ட மரத்தேரின் வெள்ளோட்டத்தினை அமைச்சர் சேகர் பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    சென்னை:

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி கோவிலில் உபகோவிலான திருவெள்ளரை, புண்டரிகாட்ச பெருமாள் கோவிலானது 108 திவ்ய தேசங்களில் 4-வது திருத்தலமாகும். 13-ம் நூற்றாண்டில் ஹொய்சால மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் வடக்கில் நிறைவுபெறாத 2 நிலை ராஜகோபுரமாக அமையப் பெற்றதில் கூடுதலாக 5 நிலைகள் அமைக்க அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பின்படியும், மக்களின் நீண்டநாள் விருப்பத்தின்படியும் பணிகள் மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மாநில வல்லுநர் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

    அதன்படி இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ரூ.7.85 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரம் உபயதாரர் நிதியில் இரண்டு நிலையோடு கூடுதலாக 5 நிலைகள் அமைக்கும் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டினர்.

    முன்னதாக திருச்சி மாவட்டம், மலைக்கோட்டை, தாயுமானசுவாமி கோவிலில் வீற்றிருக்கும் மாணிக்க விநாயகருக்கு உபயதாரர் நிதியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தேக்கு மரத்தினால் உருவாக்கப்பட்ட மரத்தேரின் வெள்ளோட்டத்தினை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சிகளில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், இணை ஆணையர்கள் மாரியப்பன், பிரகாஷ், உதவி ஆணையர்கள் ஹரிஹர சுப்பிரமணியன், லட்சுமணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • சென்னை மக்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட வேண்டிய குடிநீரின் தரம் மற்றும் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்

    பொன்னேரி:

    சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் மீஞ்சூர், காட்டுப்பள்ளியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், இந்த கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நேற்று மாலை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை எவ்வித தொய்வுமின்றி மேற்கொள்ள வேண்டும் எனவும், சென்னை மக்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட வேண்டிய குடிநீரின் தரம் மற்றும் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், செயல் இயக்குநர் செ.சரவணன், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருவள்ளூர் எம்.பி.கே.ஜெயகுமார், எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி, டி.ஜெ.கோவிந்த ராஜன், துரை சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சனையை நானும் அறிவேன்.
    • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வழங்கப்படும் குடிநீரின் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. சுதர்சனம் (தி.மு.க.) கேள்வி ஒன்றை எழுப்பினார். மாதவரம் தொகுதிக்கு உள்பட்ட புழல் மற்றும் சோழவரம் ஏரிகள் முக்கியமான குடிநீர் ஆதாரமாக திகழ்கின்றன. இருப்பினும், மாதவரம் தொகுதிக்கு உள்பட்ட அப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைப்பதில்லை.

    எனவே அப்பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம் ஒன்று உருவாக்கப்படுமா? என்றார்.

    அதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சனையை நானும் அறிவேன். அப்பகுதிக்கு குடிநீர் திட்டம் தேவையில்லை. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வழங்கப்படும் குடிநீரின் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த பணிகள் முடிந்த பின்னர் குழாய் மூலமாக திருவள்ளூர் மாவட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம் இருக்கிறது. அதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டத்தில் நூற்றுக்கு 75 சதவீதம் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் பணிகள் சரியாக நடைபெறவில்லை என்று கூறுவது தவறு.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் தொடர்பான ஆலோசனை கூட்டம் அதிகாரிகளுடன் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் கே.என். நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இன்று நெல்லை மாவட்டத்திற்கு வந்துள்ளேன். தென் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? எந்தெந்த இடங்களில், எந்தெந்த பணிகளை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டத்தில் நூற்றுக்கு 75 சதவீதம் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர கடந்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் பழுதடைந்துள்ளன. அவை புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இது தவிர புதிய மின் மோட்டார்களும் பொருத்தப்பட்டு வருகிறது.

    மழை பொய்த்த காலத்தில் குடிதண்ணீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வர ஆலோசனையில் உள்ளது.

    காவிரி ஆற்றின் மூலம் ரூ.4,800 கோடி மதிப்பில் திண்டுக்கல், ராமநாதபுரம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

    இது தவிர கடலோர மாவட்டங்கள் வழியாக குழாய் பதித்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் பணிகள் சரியாக நடைபெறவில்லை என்று கூறுவது தவறு. மத்திய அரசே இந்த திட்டத்தை தமிழகத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக எனக்கு விருது வழங்கியுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி பகுதியான ராதாபுரம் தொகுதியில் ரூ.65 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடங்கி 3 மாதங்கள் முடிவடைந்து விட்டன. இன்னும் 15 மாதங்களில் அந்த பணிகள் முடிவடையும். அதற்கு முன்பாகவே ஒரு மாதத்தில் தற்காலிகமாக வேறு ஒரு திட்டத்தில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த திட்டம் நிறைவேறிய பின்னர் இடையன்குடி, விஜயாபதி, கூடங்குளம் உள்ளிட்ட 11 கிராமங்கள் குடிநீர் வசதி பெறும்.

    நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திறப்பு விழா காணப்பட்ட பாளை பல்நோக்கு அரங்கம், பேட்டை சரக்கு முனையம் உள்ளிட்டவை விரைவில் செயல்பட தேவையான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் மாயனூர் கடந்து நேற்று முக்கொம்பை அடைந்தது.
    • கல்லணைக்கு வந்த தண்ணீரை பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர் நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் மாயனூர் கடந்து நேற்று முக்கொம்பை அடைந்தது. அங்கிருந்து தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு காவிரி நீர் நள்ளிரவில் வந்தடைந்தது. இதையடுத்து இன்று காலை கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு விழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு கல்லணையில் உள்ள ஆதிவிநாயகர், ஆஞ்சநேயர், கருப்பண்ண சுவாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    கல்லணைக்கு வந்த தண்ணீரை பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, பொத்தானை அமுக்கி தண்ணீர் திறந்து விட்டார். பின்னர் நவதானியங்கள் மற்றும் மலர்களை தூவப்பட்டன. இதேப்போல் விவசாயிகள் காவிரி ஆற்றை வணங்கி மலர்களையும், நவதானியங்களையும் தண்ணீரில் தூவி, விவசாயம் செழிக்க வேண்டிக் கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மதகுகளில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. கல்லணை மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3.42 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இன்று காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் தலா 500 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 100 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது .

    நீர் வரத்துக்கு ஏற்றவாறு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும். இந்த தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு 10 நாட்களில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கல்லணை திறப்பை முன்னிட்டு கல்லணையில் உள்ள அகத்தியர் சிலை, காவிரி அன்னை சிலை, சர் ஆர்தர் காட்டன் சிலை, கரிகால சோழன் சிலை ஆகிய சிலைகளுக்கு வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காணப்பட்டது. இந்த சிலைகளுக்கு அதிகாரிகள் மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.

    கல்லணை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலெக்டர்கள் தீபக்ஜேக்கப் ( தஞ்சாவூர் ), பிரதீப்குமார் (திருச்சி), ஜானிடாம் வர்கீஸ் (நாகை) , மகாபாரதி (மயிலாடுதுறை), சாருஸ்ரீ (திருவாரூர்) , அருண்தம்புராஜ் (கடலூர்), எம்.பி.க்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், கல்யாணசுந்தரம், ராமலிங்கம், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் , மற்றும் பொதுப்பணித்துறை ,நீர்வளத்துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் , விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 91 சதவீதம் முடிந்துள்ளது.
    • பாதாள சாக்கடை திட்டத்தில் 29 கிலோமீட்டர் மட்டுமே பணிகள் முடிக்கப்பட வேண்டி உள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை திட்ட பணிகள் குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    வேலூர் மாநகராட்சி சாலைகளுக்காக ரூ.280 கோடி வழங்க உள்ளோம். மேலும் பல்வேறு திட்டங்களில் மொத்தம் ரூ.314 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கேற்ப பணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 91 சதவீதம் முடிந்துள்ளது. 23 பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. விரைவில் அந்தபணிகள் முடிக்க தீவிரம் காட்டப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் 29 கிலோமீட்டர் மட்டுமே பணிகள் முடிக்கப்பட வேண்டி உள்ளது.

    அந்த பணிகளும் முடிக்கப்படும்.பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள் அமைக்கும் பணி மற்றும் சீரமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட உள்ளது.

    ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். ரூ.7 ஆயிரம் கோடி செலவில் பணிகள் நடந்துள்ளது. காவிரி குடிநீர் வழங்கும் பொருட்டு வேலூர் (ஒரு பகுதி), திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் (ஒரு பகுதி) ரூ.14 கோடி மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். கடன் வரப்பெற்ற பின்னர் பணிகள் தொடங்கும்.

    வேலூர் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளிலிருந்து வீடுகளுக்கு செல்லும் சப்ளை குழாய் இன்னும் சரிவர பணிகள் நிறைவடையாததால் தண்ணீர் வழங்க முடியவில்லை.

    பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கபடவில்லை மேலும் ஒப்பந்ததாரரும் ஓடிவிட்டார் அவரை நான் என்ன செய்ய முடியும்

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏரிகளை பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்படுவார்களா? கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
    • ஏரிகளில் கழிவு நீர் மற்றும் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறினார்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் பேசியதாவது:-

    சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளை சுற்றி உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குப்பைகளையும் கழிவுகளையும் ஏரிகளில் கொட்டுவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் கேடு ஏற்படுவதாகவும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் ஏரிகளைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்படுமா? ஏரிகளை பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்படுவார்களா? கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

    சென்னை மக்களுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 200 எம்.எல்.டி குடிநீர் கூடுதலாக வழங்கப்பட்டு வருவதாகவும், ஏரிகள் அனைத்தும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், ஏரிகளில் கழிவு நீர் மற்றும் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறினார்.

    மேலும், கழிவுநீர் எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதோடு, லாரிகள் எங்கு செல்கிறது என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அம்மா உணவகம் கொண்டு வரப்பட்டது.
    • ஒரு நாள் கூட அம்மா உணவகத்தை நிறுத்த எண்ணவில்லை.

    சென்னை:

    சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி:- அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அம்மா உணவகம் கொண்டு வரப்பட்டது. இது இந்தியாவில் அதிக மாநிலங்களில் வரவேற்பை பெற்றது. ஆனால் 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அம்மா உணவகத்தை நிறுத்தும் வகையில் கலைஞர் உணவகம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 பட்ஜெட்டுகளில் இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

    அமைச்சர் கே.என்.நேரு:- ஒரு நாள் கூட அம்மா உணவகத்தை நிறுத்த எண்ணவில்லை. அம்மா உணவகத்தில் ஒரு கடையில் ரூ.4 ஆயிரம் வருமானம் வருகிறதென்றால், ரூ.6 ஆயிரம் சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவேதான் சீர்செய்ய, பணியாளர்களை மாற்றி மாற்றி வேலை கொடுக்கிறோம். அனைத்து இடத்திலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகத்தை மூட முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- பல்வேறு அம்மா உணவகத்தில் இருந்து எங்களுக்கு புகார் வந்து கொண்டிருக்கிறது. அங்கு தரமான உணவுப்பொருள் வழங்கப்படுவதில்லை. அதனால் ருசியான உணவு கிடைக்காததால், வாடிக்கையாளர்கள் குறைந்து வருகிறார்கள். அங்கு அரசு தரமான பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:- எதிர்க்கட்சி தலைவர், ஆதாரத்தோடு சொன்னால் நிச்சயமாக, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்கேயாவது தவறு நடக்கலாம், நான் இல்லை என்று மறுக்கவில்லை. எந்த இடத்தில் குறைபாடு இருக்கிறது என்று சொன்னால் அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு நிச்சயமாக எடுக்கும்.

    உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி:- அம்மா உணவகத்தை சிறப்பாக செயல்படுத்த அ.தி.மு.க. அரசு ரூ.100 கோடி நிதியை ஒதுக்கியது. கடந்த 2 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கப்படவில்லை.

    அமைச்சர் கே.என்.நேரு:- மாநகராட்சி மூலம்தான் அம்மா உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. அம்மா உணவகத்துக்கு சென்னை மாநகராட்சி மூலம் இந்த ஆண்டு ரூ.129 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வருவாய் என்பது ரூ.15 கோடியாகத்தான் இருக்கிறது.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    ×