என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaikuntha Ekadashi"

    • போரில் பின்வாங்குவது போன்று நடித்து, ஹிமாவதி என்னும் குகைக்குள் சென்று யோக நித்திரையில் ஆழ்ந்தார்.
    • மகாவிஷ்ணு ஹயக்ரீவர் அவதாரம் எடுத்து, அசுரர்கள் திருடிச் சென்ற வேதங்களை மீட்டு வந்தார்.

    பெருமாளின் அருளை வேண்டி கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் ஏகாதசி விரதமும் ஒன்று. அனைத்து விரதங்களிலும் மிகவும் உயர்வான விரதமாக ஏகாதசி விரதம் கருதப்படுகிறது. ஏகாதசி விரதம் என்பது ஏகாதசி திதியில் தொடங்கி துவாதசி திதியில் முடியும். இந்த விரதத்தை பய பக்தியுடன் கடைப்பிடிப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு முறை ஏகாதசி வருகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்து வழிபட்டால் பெருமாளின் அருளைப் பெற முடியும். மாதத்திற்கு 2 முறை என வருடத்திற்கு 24 முறை வரும் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்க முடியாதவர்கள், மகாவிஷ்ணுவுக்கு மிகவும் பிடித்த மாதமான மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபட்டால் வருடத்தில் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலனைப் பெறலாம்.

    ஏகாதசி பிறந்த வரலாறு

    ஒரு சமயம் முரண் என்ற அசுரன், பல ஆண்டுகளாக கடுந்தவம் இயற்றி, இறைவனிடம் இருந்து பல அரிய வரங்களை பெற்றுக்கொண்டான். அதனால் மிகுந்த பலம் பெற்ற அந்த அசுரன், தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் மிகவும் துன்புறுத்தினான். இதனால் கவலை அடைந்த தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். எப்படியாவது முரணை அழித்து, தங்களை காத்தருள வேண்டும் என்று வேண்டினர். மகாவிஷ்ணுவும் அனைவரையும் காக்கும் பொருட்டு அரக்கனை அழிப்பதாக உறுதி அளித்தார்.

    அதன்படி, முரண் அசுரனுடன் போரிட்டார் மகாவிஷ்ணு. பல ஆண்டுகளாக கடுமையாக போரிட்டும் மகாவிஷ்ணுவால் முரணை கொல்ல முடியவில்லை. காரணம், பல வரங்களை பெற்றிருந்த முரண், 'தனக்கு பெண்ணால் மட்டும் தான் மரணம் நிகழ வேண்டும்' என்ற வரத்தையும் கொண்டிருந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு, இனியும் போர் புரிந்து பயனில்லை என்பதை உணர்ந்தார்.

    இதையடுத்து போரில் பின்வாங்குவது போன்று நடித்து, ஹிமாவதி என்னும் குகைக்குள் சென்று யோக நித்திரையில் ஆழ்ந்தார். விஷ்ணு இருக்கும் இடத்தை அறிந்து, அவரை கொல்ல குகையை நோக்கி வந்தான் முரண். அப்போது மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து ஒரு சக்தி தோன்றி, ஒரு அழகான பெண்ணாக மாறியது.

    அந்த பெண் முரணுடன் போரிட்டு கொன்றாள். இதையடுத்து, அசுரனை அழித்த அந்த பெண்ணுக்கு 'ஏகாதசி' என்று மகாவிஷ்ணு பெயர் சூட்டினார். மேலும் இந்த நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக வரமளித்தார். அதன்படியே அந்த தினம் வைகுண்ட ஏகாதசி என்ற பெயரில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    சொர்க்க வாசல்

    ஒரு சமயம் படைக்கும் கடவுளான பிரம்ம தேவருக்கு கர்வம் ஏற்பட்டது. அந்த கர்வத்தை ஒடுக்க நினைத்தார் மகாவிஷ்ணு. பிரம்ம தேவரின் படைப்பு காலம் முடிந்து, ஊழிக்காலம் தொடங்கியதும் எல்லா உயிர்களும் இறைவனிடம் ஒடுங்கிவிடும். அதன்படி ஊழிக்காலம் தொடங்கியதும், பிரம்ம தேவர் மகாவிஷ்ணுவின் தொப்பிள் கொடியில் இருந்த தாமரையில் அடங்கினார். அப்பொழுது, மகாவிஷ்ணுவின் காதுகளில் இருந்து மது, கைடபர் என இரண்டு அசுரர்கள் தோன்றினர். இருவரும் கடும் தவம் புரிந்து இறைவனிடம் இருந்து பல வரங்களை பெற்றுக்கொண்டனர்.

    பிரளயக் காலம் முடிந்து, மீண்டும் உலக உயிர்களை தோன்றுவிக்க பிரம்மன் வந்தார். அப்போது பிரம்மாவிடம் ஒலி வடிவில் இருந்த வேதங்களை மது, கைடபர் அசுரர்கள் திருடி சென்றனர். இதையடுத்து, பிரம்மதேவர் மகாவிஷ்ணுவின் உதவியை நாடினார். மகாவிஷ்ணு ஹயக்ரீவர் அவதாரம் எடுத்து, அசுரர்கள் திருடிச் சென்ற வேதங்களை மீட்டு வந்தார்.

    பின்னர் இரண்டு அசுரர்களும் தேவர்கள், முனிவர்கள் என அனைவரையும் துன்புறுத்தினர். இதனால் மிகவும் வருந்திய தேவர்கள், உலக உயிர்களை காத்து அசுரர்களை அழிக்க வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். இதையடுத்து மகாவிஷ்ணு, மது, கைடபருடன் போரிட்டு அழித்தார். மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியவர்கள் என்பதால், இருவரும் வைகுண்டம் செல்லும் பாக்கியம் பெற்றனர். இவ்வாறு அவர்கள் இருவரும் வைகுண்டம் சென்றது மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ஆகும்.

    வைகுண்டம் சென்ற அவர்கள் மகாவிஷ்ணுவிடம், ''உங்களிடம் இருந்து உருவான எங்களுக்கு உங்கள் கருணையால் இந்த பாக்கியம் கிடைத்தது போன்று, பலரும் இந்த பலனை பெற அருள வேண்டும்'' என வேண்டினர். அதோடு ''மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று, சொர்க்க வாசல் வழியாக வந்து வழிபடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்க வேண்டும்'' என்று கேட்டனர். அதன்படியே, பகவானும் அருள் வழங்கினார். இதன்பொருட்டே பெருமாள் கோவில்களில் மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி விரதம்

    பெருமாளுக்கு மேற்கொள்ளப்படும் விரதங்களில் முதன்மை இடத்தை பிடிப்பது வைகுண்ட ஏகாதசி விரதம் ஆகும். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினொன்றாம் நாள், வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இது பகல் பத்து, இரா பத்து என்று இருபது நாள் திருவிழாவாக நடத்தப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி விரதம் மூன்று நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது தசமி திதியில் தொடங்கி, ஏகாதசி திதியில் விரதம் இருந்து, துவாதசி திதியில் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி இன்று (30-12-2025) செவ்வாய்க்கிழமை வருகிறது.

    இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று பகலில் மட்டும் உணவருந்த வேண்டும். ஏகாதசி அன்று, அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் எந்தவித உணவையும் உட்கொள்ளக்கூடாது. ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு இதில் இருந்து விலக்கு உண்டு.

    ஏகாதசி அன்று பெருமாள் கோவில்களில் நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை தரிசிக்க வேண்டும். மேலும் அன்றைய தினம் இரவு முழுவதும், தூங்காமல் கண் விழித்து இருந்து புராணங்கள், பெருமாளுக்குரிய பாடல்கள், இறைவனின் நாமங்கள் போன்றவற்றை படிக்க வேண்டும். மறுநாளான துவாதசி அன்று இறைவனுக்கு நைவேத்தியங்கள் படைத்துவிட்டு, பின்பு உணவருந்தி விரதத்தை முடிக்க வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், வீட்டில் இருந்தோ அல்லது கோவில்களுக்கு சென்றோ விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

    ஒருவரால் இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்க முடியவில்லை என்றால், அவருக்கு பதிலாக வேறொருவர் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். இதன்மூலம் இந்த விரதத்தின் முழுபயனும் யாருக்காக அந்த விரதம் இருக்கிறோமோ அவருக்கே போய் சேர்ந்துவிடும்.

    பொதுவாக எந்த விரதமாக இருந்தாலும் தீட்டு காலங்களில் அந்த விரதத்தை மேற்கொள்ளக்கூடாது என்பார்கள். ஆனால் வைகுண்ட ஏகாதசி விரதத்தை தீட்டு காலங்களிலும் மேற்கொள்ளலாம் என்பதே இந்த விரதத்தின் தனிச் சிறப்பாகும்.

    வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு, பாவங்கள், பலவிதமான துன்பங்கள் போன்றவை நீங்கி செல்வ வளம் பெருகும். இந்த பிறவியில் மட்டுமல்ல ஏழு பிறவிகளில் செய்த பாவங்களையும் போக்கலாம். இத்தனை சிறப்புகளை உடைய வைகுண்ட ஏகாதசி தினத்தில் பெருமாளின் நாமத்தை மனதில் நிறுத்தி, வழிபட்டு இறைவனின் முழு அருளையும் பெறுவோம்.

    • பகல்பத்து திருநாளில் ஒவ்வொரு நாளும் பார்த்தசாரதி பெருமாள் வெவ்வேறு அலங்காரத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • 31-ந்தேதியிலிருந்து ஜனவரி 7-ந்தேதி வரை 8 நாட்களுக்கு தினசரி மாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்தது. பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற தலமாகும். மூலவர் வேங்கடகிருஷ்ணன் சாமி நிற்க, ஒரு புறம் ருக்மணி தாயார், மறுபுறம் சாத்யகியும் (இளைய தனயன்), தாயாரின் பக்கம் பலராமரும், சாத்யகியின் பக்கம் மகன் பிருத்யும்னனும், பேரன் அநிருத்தன் ஆகியோருடன் அருள்பாலிக்கிறார்.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பகல் 2 மணிக்கு பகல்பத்து முதல் திருநாள் வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்குகிறது.

    பகல்பத்து திருநாளில் ஒவ்வொரு நாளும் பார்த்தசாரதி பெருமாள் வெவ்வேறு அலங்காரத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய திருநாளான சொர்க்கவாசல் திறப்பு வரும் 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 2.30 மணியிலிருந்து 4 மணி வரை மூலவர் தரிசனமும், காலை 4.15 மணிக்கு உள்பிரகார புறப்பாடும், காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும் நடக்கிறது.

    இதையடுத்து வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை செய்யப்படுகிறது. காலை 5.30 மணியிலிருந்து அன்றிரவு 10.30 மணி வரை மூலவர் பொது தரிசனம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம், இரவு 11.30 மணிக்கு பார்த்தசாரதி சாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடு நடக்கிறது. 31-ந்தேதியிலிருந்து ஜனவரி 7-ந்தேதி வரை 8 நாட்களுக்கு தினசரி மாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது.

    ஜனவரி 9-ந்தேதி வரை நடக்கும் இராப்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் பார்த்தசாரதி ஒவ்வொரு திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சொர்க்கவாசல் திறப்பையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    • வருகிற 30-ந் தேதி முதல் ஜனவரி 8 வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது.
    • ஒரு மணி நேரத்திற்கு 4,300 முதல் 4,700 பேர் வரை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதேசி தரிசன டிக்கெட் கவுண்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி தரிசனத்தில் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வருகிற 30-ந் தேதி முதல் ஜனவரி 8 வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது.

    வைகுண்ட துவார தரிசனத்தின் முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் தரிசன டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    மீதமுள்ள 7 நாட்களுக்கு வைகுண்ட ஏகாதேசி தரிசனத்திற்கான டோக்கன் நேரடியாக வழங்கப்படும் பக்தர்கள் நேரடியாக திருமலையை அடைந்து வைகுண்ட துவார தரிசனம் செய்யலாம்.

    இந்த 10 நாட்களில் சுமார் 8 லட்சம் பேருக்கு தரிசனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 4,300 முதல் 4,700 பேர் வரை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை முதல் 3 நாட்கள் தரிசனத்திற்கான டோக்கன்களுக்கு பக்தர்கள் தெலுங்கு, தமிழ், கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தேவஸ்தான வலைத்தளம், மொபைல் செயலி மற்றும் வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்யலாம். டிசம்பர் 2-ந்தேதி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

    வைகுண்ட ஏகாதசி தரிசனம் செய்வதற்கு முதல் 3 நாட்களில் ஆன்லைன் டோக்கன் இல்லாத பக்தர்கள் திருப்பதி மலைக்கு நேரடியாக வர வேண்டாம் என தெரிவித்தனர்.

    திருப்பதி கோவிலில் நேற்று 66,966 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 21.535 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடியாக இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் வருகிற 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.
    • மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களுக்கு தனி வரிசை இந்தாண்டு புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (திங்கட்கிழமை), வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மின்சார வாரியம், சென்னை குடிநீர் வாரியம், தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் வருகிற 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக சுவாமி தரிசனம் மேற்கொண்டார்கள். இந்தாண்டு கூடுதலாக 20 சதவீத பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த வகையில் இந்தாண்டு வைகுண்ட ஏகாதசிக்கு செய்ய வேண்டிய முன் ஏற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போன்றவற்றை செய்து தருவதற்காக ஆலோசனை செய்து இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டோம்.

    வைகுண்ட ஏகாதசி அன்று கோவிலுக்கு கிழக்கு கோபுர வாசல் வழியாக பொது தரிசனமும், மேற்கு கோபுர வாசல் வழியாக சொர்க்க வாசல் சேவைக்கு வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களும் அனுமதிக்கப்படுவார்கள். டி.பி. கோவில் தெரு வழியாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களுக்கு தனி வரிசை இந்தாண்டு புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    சொர்க்க வாசல் திறப்புக்கு அதிகாலை 2.30 மணிக்கு 1,500 பக்தர்கள் அனுமதிப்பது என்றும், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் 850 நபர்கள் அனுமதிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கின்றது. அதன் பிறகு காலை 6 மணி முதல் இரவு நடை மூடுகின்ற வரையில் பொது தரிசனம் தான் இந்த ஆண்டு கடைபிடிக்கப்பட இருக்கின்றது. அன்றைய தினம் சிறப்பு தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது.

    கோவிலில் அன்றைய தினம் கூடுகின்ற பக்தர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்படும் நிலையில் உரிய சிகிச்சை அளிப்பதற்காக கோவிலுக்கு உள்ளேயும், வெளியிலும் 6 சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் தற்காலிக கழிவறைகள் 20 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றது.

    காவல்துறையின் சார்பில் 2 துணை ஆணையர்கள் தலைமையில் 3 ஷிப்ட்களாக, 18 உதவி ஆணையர்கள், 54 காவல் ஆய்வாளர்கள், 400-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எந்நேரமும் தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசர கால ஊர்திகள் நிறுத்தப்பட இருக்கின்றன.

    இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 2 கூடுதல் ஆணையர்கள், 6 இணை ஆணையர்கள், 4 துணை ஆணையர்கள், 6 உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் என 150 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

    ஆகவே இந்த ஆண்டு, கடந்தாண்டை விட அதிகமான அளவிற்கு பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்வதற்கும், காலை 6 மணி முதல் இரவு நடை மூடுகின்ற வரை பொது தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் ஏற்கனவே தீட்சிதர்கள் ஐகோர்ட்டில் கனக சபை தரிசனத்திற்கு தடை கோரி மனு செய்திருந்தார்கள். ஐகோர்ட்டு நீதிபதிகள் அதற்கு தடை விதிக்கவில்லை, வழக்கு தான் நிலுவையில் இருக்கின்றது. ஆகவே விசேஷ நாட்களில் கனக சபையின் மீதேறுவதில் அசவுகரியம் இருந்தால் அது தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்து சமய அறநிலையத்துறைக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதையே காரணம் காட்டி கனகசபை மீதேறி தரிசனம் செய்வதற்கு தடை செய்வதை இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்காது.

    கோவில்களில் படிப்படியாக சிறப்பு தரிசனக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணமும், இந்து சமய அறநிலையத்துறையின் எண்ணமும் ஆகும். கோவிலில் அனைவரும் சமமாக செல்வதற்காகவும், சிறப்பு தரிசனம் என்று வருகின்றபோது பொது வரிசையில் வருபவர்களுக்கு தரிசனத்திற்கு தாமதம் ஏற்படுவதாலும் விரைவாக தரிசனம் நடைபெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்திற்காகவும் இந்த சிறப்பு தரிசனக் கட்டணத்தை திருவிழா காலங்களில் ரத்து செய்வதென்று முடிவெடுத்தோம்.

    திருவண்ணாமலையில் கூட பவுர்ணமி தினத்தன்று சிறப்பு தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டிருக் கின்றது. கடந்த நான்கு மாதங்களாக பவுர்ணமி தினங்களில் அனைவரும் பொது தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்ற சூழல் தவிர்க்கப்பட்டு விரைவாக சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக இருப்பதால் இதனை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இந்த ஆண்டு பார்த்தசாரதி கோவில் சிறப்பு தரிசனக் கட்டணத்தை ரத்து செய்கிறோம்.

    மேலும், எங்கெல்லாம் இதுபோன்ற சாத்தியக் கூறுகள் இருக்கின்றதோ அந்தந்த கோவில்களில் விழா காலங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து சிறப்பு தரிசனத்தை படிப்படியாக ரத்து செய்வதற்கு துறை முயற்சிக்கும். பக்தர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது தான் இந்த அரசின் கடமையாகும். கடந்தாண்டை போலவே இந்தாண்டும் பார்த்தசாரதி கோவிலில் மார்கழி மாதத்தில் இசைக் கல்லூரி மாணவ, மாணவிகளின் திருப்பாவை பாசுரம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன.
    • சூரியனிலிருந்து சந்திரன் தொலைவில் விலகிச் செல்லுவதால் புவிஈர்ப்பு சக்தி அதிகமாகிறது.

    ஏகாதசியன்று முக்கியமாக உபவாசம் இருப்பது ஏன்? துவாதசியன்று அகத்திக் கீரையும், நெல்லிக்காயும் சாப்பிடவேண்டும் என்பது எதற்காக?

    சந்திரன் பூமியை ஒருதடவை சுற்றிவர ஏறக்குறைய இருபத்தொன்பதரை நாட்கள் ஆகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு திதி எனப்படும். ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன.

    அமாவாசையிலிருந்து பவுர்ணமி வரையில் உள்ள 15 திதிகள் சுக்லபட்சம் (வளர்பிறை) எனப்படும். பவுர்ணமியிலிருந்து அமாவாசை வரையில் உள்ள 15 திதிகள் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) எனப்படும். 

    அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி வீதம் சந்திரன் சூரியனிலிருந்து பிரிந்து செல்லுகிறது.

    நான்காவது நாள் - அதாவது, சதுர்த்தசியன்று சந்திரன் சூரியனிலிருந்து 36 டிகிரி முதல் 48 டிகிரி வரை பின்னால் உள்ளது.

    பதினொன்றாவது நாள் ஏகாதசியன்று சூரியனிலிருந்து 132 டிகிரி பின்னால் இருக்கிறது. பவுர்ணமியன்று சந்திரன் சூரியனிலிருந்து 180 டிகிரியில் இருக்கிறது.

    மேற்கூறிய நாட்களில் சூரியனிலிருந்து சந்திரன் தொலைவில் விலகிச் செல்லுவதால் புவிஈர்ப்பு சக்தி அதிகமாகிறது. அந்த சமயத்தில் எப்போதும்போல உணவு அருந்தினால் அது சரியாக செரிக்காது.

    ஆகையால் நமது முன்னோர்கள் அந்த நாட்களில் விரதம் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள். வைகுண்ட ஏகாதசியன்று சந்திரன் சூரியனுக்கு 135 டிகிரி பின்னால் இருக்கிறது. அன்று சூரியன் நடுவரைக்குத் தெற்கே மிக அதிகமான தூரத்தில் இருக்கிறான். அன்று புவி ஈர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் உபவாசம் இருக்கிறோம். 

    ஏகாதசியன்று விரதமிருந்தால், முதல் பத்து நாட்கள் உணவு உட்கொண்டு, அதனால் உள்ளே சேர்ந்துள்ள கழிவுப்பொருட்கள் கரைந்து வெளியேறுகின்றன. அன்று ஜீரணக் கருவிகளுக்கும் ஓய்வு கிடைக்கிறது.

    பின் நமக்கு வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. முக்கியமாக வைட்டமின் "ஏ" வும், "சி" யும் தேவைப்படும். ஆகவேதான், துவாதசியன்று வைட்டமின் "ஏ" சத்து நிறைந்த அகத்திக் கீரையையும், வைட்டமின் "சி" சத்து நிறைந்த நெல்லிக்காயையும் உணவுடன் சேர்த்துக் கொள்ளுகிறோம்.

    ஒவ்வொரு நாளும் நாம் செய்யவேண்டிய சூரிய நமஸ்காரமும், இருமுறை எகாதசியோடு தொடர்ந்து வருகிற துவாதசி உணவும், நம்முடைய கண்ணொளியைக் காத்து உடல் நலத்தை பேணி வருகின்றன.

    • முதல் நாளான திருமொழி திருவிழா நாளை மறுநாள் ஆரம்பமாகிறது.
    • பகல் பத்தின் முதல் நாளில் இருந்து மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார்.

    திருச்சி:

    108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா மொத்தம் 21 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையடுத்து பகல்பத்து உற்சவம் தொடங்குகிறது. இதன் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது. அன்று காலை 7.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைவார்.

    காலை 8.30 மணி முதல் பகல் 12 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். இரவு 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    பகல் பத்தின் முதல் நாளில் இருந்து மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். இதேபோல் பகல்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான வருகிற ஜனவரி 9-ந் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுவார். மறுநாள் 10-ந் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுவார்.

    இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்று இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    11-ந் தேதி முதல் 15ம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், 16-ந் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். ராப்பத்து 8-ம் திருநாளான 17-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை.

    18-ந் தேதி பகல் 1 முதல் இரவு 8 மணி வரையும், 19-ந் தேதி காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் திறப்பு தினமான 10-ந் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.

    ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    ராப்பத்து 7-ம் திருநாளான 16-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 8-ம் திருநாளான 17-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 10-ம் திருநாளான 19-ந் தேதி தீர்த்தவாரியும் நடைபெறும். 20-ந் தேதி நம்மாழ்வார் மோட்சம், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைஉண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோவில் வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவில் கோபுரங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன. 

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது.
    • இந்த விழா மொத்தம் 21 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா மொத்தம் 21 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று தொடங்கியது. இந்நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை ஒட்டி ஜனவரி 10ம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.

    ×