search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "michigan cyclone"

    • தமிழக அரசு நிவாரண நிதியை ரேசன் கடைகள் மூலம் கொடுப்பதால் அதிகளவில் முறைகேடு ஏற்படும்.
    • வெள்ள நிவாரண நிதியை வங்கிக் கணக்கில் செலுத்துவதால் தமிழக அரசிற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6 ஆயிரம் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதைதொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

    இந்நிலையில், வெள்ள நிவாரண நிதியை வங்கிக்கணக்கில் செலுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு நிவாரண நிதியை ரேசன் கடைகள் மூலம் கொடுப்பதால் அதிகளவில் முறைகேடு ஏற்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. வெள்ள நிவாரண நிதியை வங்கிக் கணக்கில் செலுத்துவதால் தமிழக அரசிற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என கூறியுள்ளார்.

    • சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 4 மட்டும் இன்று செயல்படவில்லை.
    • வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடைசி தண்ணீர் வடியும் வரை பணிகள் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    மழை வெள்ள பாதிப்புக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்துவது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 4 மட்டும் இன்று செயல்படவில்லை. தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நாளை பள்ளியை திறக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும். குடிநீர், கழிவறை, கொசுக்கள் பாதிப்பு இல்லாமல் இருக்க பொது சுகாதாரத்துறை மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடைசி தண்ணீர் வடியும் வரை பணிகள் மேற்கொள்ளப்படும்.

    வெள்ளம் வடிந்த பகுதிகளில் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், சேற்றுப்புண், சுவாச பிரச்சனை போன்றவை ஏற்படும். எலி காய்ச்சல் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கான மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டும்.

    இதுவரை 35 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை அள்ளப்பட்டுள்ளது. களப் பணியாளர்கள் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எண்ணூரில் எண்ணெய் பாதித்த வார்டு 1, 2 பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சி.பி.சி.எல். நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தினர். தனிக்குழு ஆய்வு மேற்கொள்கிறது. எண்ணெய் பாதிப்பை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கூடுதலாக நிவாரண நிதி வழங்கப்படும்.

    நிவாரணப் பணிகள் முடிந்தாலும் மறுவாழ்வு பணி, மீட்பு பணி போன்றவை தொடர்ந்து நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளிகள், கல்லூரிகளில் மழை மற்றும் வெள்ளநீர் சூழ்ந்து இருந்தால், அங்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
    • மழை வெள்ளத்தால் மாணவ-மாணவிகளுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை ஓய்ந்த நிலையிலும், வெள்ள நீரால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மழை, வெள்ள நீரை கருத்தில் கொண்டு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் தொடர் விடுமுறை விடப்பட்டது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல் 2 நாட்களுக்கு பொது விடுமுறை விடப்பட்ட நிலையில், அதன் பிறகு வெள்ள நீர் அதிகம் சூழ்ந்திருந்த பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் தொடர் விடுமுறைக்கு பிறகு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் இயங்கத் தொடங்கின.


    பள்ளிகளை பொறுத்தவரையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 14 பள்ளிகளில் வெள்ள நீர் வடியாத நிலை இருப்பதாகவும், அதிலும் சென்னையில் மட்டும் 6 பள்ளிகள் உள்ளதாகவும் சொல்லப்பட்டது. அந்த பள்ளிகளில் கடந்த 2 நாட்களாக போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடந்தன.

    அதேபோல், இந்த 4 மாவட்டங்களில் இருக்கும் 17 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 கல்லூரிகளை தவிர பிற கல்லூரிகளில் தண்ணீர் வடிந்து, மாணவ-மாணவிகள் கற்கும் சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    அவ்வாறு மழைநீரால் சூழ்ந்து இருக்கும் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட கலெக்டர் முடிவு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள், கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பான கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்த கல்வித்துறை சார்பில் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பள்ளிகள், கல்லூரிகளில் மழை மற்றும் வெள்ளநீர் சூழ்ந்து இருந்தால், அங்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    4 மாவட்டங்களிலும் தமிழக அரசு சுமார் ரூ.2 கோடி செலவு செய்து பள்ளிகளை சீரமைத்து உள்ளது. 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்று திட்டமிட்டபடி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் பள்ளிகள் இயங்கின.

    மாணவ-மாணவிகள் ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கமான உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால் இன்று பாடங்கள் நடத்தப்படவில்லை. அதற்கு மாறாக மழை வெள்ளத்தால் மாணவ-மாணவிகளுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    எத்தனை மாணவர்களுக்கு சீருடைகள் சேதமடைந்துள்ளன என்று ஆய்வு செய்யப்பட்டது. அதுபோல எத்தனை மாணவர்களுக்கு மழை வெள்ளத்தில் சிக்கி பாட புத்தகங்கள் நாசமாகி விட்டன என்று கணக்கிடப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் இன்று காலை தொடங்கி மாலை வரை இந்த பணி நடைபெறுகிறது.

    இன்று மாலை கணக்கெடுப்பு முடிந்த பிறகுதான் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு எந்தெந்த பொருட்கள் எவ்வளவு தேவை என்பது தெரியவரும். அதன் அடிப்படையில் பாட புத்தகங்கள், சீருடைகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    நாளை (செவ்வாய்க் கிழமை) மாணவ-மாணவிகளுக்கு புதிய பாட புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    • அதிக மழை பெய்ததால் சென்னை உள்பட 4 மாவட்ட மக்களும் தண்ணீரில் தத்தளித்து இப்போதுதான் பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர்.
    • தமிழ்நாடு முழுவதும் 2.19 கோடி அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை மற்றும் ரூ.1000 கடந்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பொருட்களுடன் ரொக்கப் பணம் ரூ.1000 வழங்கப்படுவது வழக்கம்.

    அதேபோல் அடுத்த மாதம் வர இருக்கிற பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் பொருட்களுடன் ரூ.1000 கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

    இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்து வந்த நிலையில் வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் சில நாட்களுக்கு முன்பு சென்னையிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இங்கு அதிக மழை பெய்ததால் சென்னை உள்பட 4 மாவட்ட மக்களும் தண்ணீரில் தத்தளித்து இப்போதுதான் பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர்.

    தமிழக அரசும் சென்னை உள்பட 4 மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. வருகிற 16-ந்தேதி டோக்கன் வழங்கி 10 நாட்களில் இந்த பணத்தை மக்களுக்கு வழங்க இருக்கிறார்கள்.

    ரேசன் கடைகள் மூலம் இந்த பணத்தை கொடுத்து முடித்ததும், அடுத்த மாதம் (ஜனவரி) பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1000 வழங்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் 2.19 கோடி அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை மற்றும் ரூ.1000 கடந்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்டது.

    அதேபோல் அடுத்த மாதம் (ஜனவரி) வர இருக்கிற பொங்கல் பண்டிகைக்கும் ரூ.1000 ரொக்கப் பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என தெரிகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை உணவுத்துறை இப்போதே செய்யத் தொடங்கிவிட்டது.

    தமிழகத்தில் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 குடும்பத் தலைவிகளுக்கு ஏற்கனவே மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த பணம் ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி அவரவர் வங்கி கணக்கிற்கு சென்று விடுகிறது. அதே போல் இந்த மாதம் 15-ந் தேதி பெண்களுக்கு ரூ.1000 அனுப்பப்படுகிறது. அடுத்த மாதமும் 15-ந்தேதி ரூ.1000 வந்து விடும்.

    இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) ரேசன் கடைகளில் பொங்கல் பொருட்களுடன் ரூ.1000 கிடைக்க உள்ளது. 2.19 கோடி ரேசன் கார்டுதாரர்களுக்கும் இவை வழங்கப்பட உள்ளது. பொங்கலுக்கு 1 வாரத்துக்கு முன்பே இவற்றை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஜனவரி மாதம் 2 முறை பொது மக்களுக்கு பணம் கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முறையற்ற குடிநீர் வழங்கப்படும் போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும்.
    • சென்னை நகரில் பிளிச்சிங் பவுடர் கூட போடவில்லை.

    விராலிமலை:

    புதுக்கோட்டையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் சுகாதாரத்துறை சுணக்கத்தில் உள்ளது. அரசு நிர்வாகம் செயல் இழந்து விட்டது. தேங்கியிருக்கும் மழை நீரால் மிகப்பெரிய நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது, இறந்து கிடக்கும் பிராணிகளால் பெரிய அளவிலான தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது,

    இயற்கை பேரிடர் என்பது ஒன்று தான், இயற்கை பேரிடரை எதிர்கொள்ள திறன் வேண்டும், மக்களுக்கு நம்பிக்கை என்பது அரசாங்கம் தான். ஆனால் தி.மு.க. அரசு இந்த இயற்கை பேரிடரை எதிர் கொள்வதில் தோல்வி அடைந்து விட்டது.

    தற்போதைய சூழலில் கூட சுகாதாரத்துறை ரொம்ப தாமதமாக இயங்குகிறது. சென்னை நகரில் பிளிச்சிங் பவுடர் கூட போடவில்லை.

    அதேபோல லாரிகளில் வழங்கப்படும் குடிநீரின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. குளோரின் கலந்த குடிநீர் வழங்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எந்த இடத்திலும் அது கண்காணிக்கப்படுவதாக தெரியவில்லை.

    முறையற்ற குடிநீர் வழங்கப்படும் போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும். எந்த பேரிடர் வந்தாலும் நோய் தொற்று ஏற்படும் என்பது உலக நியதி. அதனை தடுக்க அரசு தயாராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அரசு எதிர்கொள்ள எந்தவித திட்டமிடலையும் முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை அறிவித்து மக்களை ஏமாற்றி விட முடியாது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தான் கேள்வி கேட்க முடியும். இதில் எதிர்க்கட்சிகளை குறை சொல்லி பயனில்லை. இனியாவது சுகாதாரத்துறை விழித்துக் கொண்டு சென்னையில் சுகாதாரத்தை பேணி காக்க முன்வர வேண்டும். குறிப்பாக குடிநீரில் குளோரின் கலந்து உள்ளதா? என்பதை சரி செய்து குளோரின் கலந்து பரிசோதனை செய்து அதன் பிறகு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இயற்கை பேரிடர்களின் அத்தியாவசிய பொருளாக உள்ள குடிநீர் மற்றும் பாலுக்கு எந்த விதமான தட்டுப்பாடும் ஏற்படவில்லை. தற்போதைய தி.மு.க. அரசின் சரியான திட்டங்கள் இல்லாததால் அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் தண்ணீர் கூட கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திறமையாக கையாளாத காரணத்தால் இத்தகைய நிலைமை சென்னையில் ஏற்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல ரெயில்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வராத வகையில் நிறுத்தம் செய்யப்பட்டது.
    • ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகளிடமிருந்து வந்த வருமானத்தில் ரூ.35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    மிச்சாங் புயல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டி போட்டது. புயல் காரணமாக 650 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 4 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டன.

    40 ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. பல ரெயில்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வராத வகையில் நிறுத்தம் செய்யப்பட்டது.

    ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகளிடமிருந்து வந்த வருமானத்தில் ரூ.35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் கட்டணத்தை பயணிகள் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு வசதியாக ரெயில் நிலையங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பயணிகள் தங்களது டிக்கெட் மூலம் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னையில் ஆவடி ,கொருக்குப்பேட்டை, சென்னை கடற்கரை ,எழும்பூர், சென்னை சென்ட்ரல் ஆகியவை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

    குறிப்பாக பேசின் பாலத்தில் உள்ள 14-வது எண் பாலத்தின் உயரம் கனமழை பாதிக்காத வகையில் 2 ஆண்டுகளில் புனரமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    • படகில் நின்றபடியே சண்டை போட்டதால் படகை ஓட்டி சென்றவர் பரிதாபமாக தவித்தார்.
    • பெண் வீட்டார், கணவர் குடும்பத்தினரை அடிக்க பாய்ந்தனர்.

    சென்னை:

    'மிச்சாங்' புயல் மற்றும் பலத்த மழை காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் இங்கு வசிக்கும் ஒரு பெண்ணுக்கு கடந்த 3 வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இந்த பெண்ணின் கணவர் குடும்பத்தினர் வேளச்சேரி பகுதியில் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் மழை வெள்ளம் தேங்கவில்லை.

    எனவே மனைவியை குழந்தையுடன் வெள்ளத்தில் இருந்து பத்திரமாக அழைத்து வர கணவர் விரும்பினார். இதை தனது தாயாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த வாலிபர், அவரது தாயார், சகோதரி ஆகியோர் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட படகில் சென்றனர். அந்த பெண்ணின் வீட்டை அடைந்ததும், மாமியார் படகில் இருந்தபடியே மருமகளை அழைத்தார்.

    உடனே வீட்டை விட்டு வெளியே வந்த மருமகள், மாமியாரை வீட்டுக்குள் வருமாறு கூறினார். ஆனால் மாமியாரோ வீட்டுக்குள் செல்லவில்லை. படகில் இருந்தபடியே மருமகளிடம், 'குழந்தையை எடுத்துக்கொண்டு வாம்மா... வீட்டுக்கு போகலாம்' என்றார். இதைக்கேட்டு வெளியே வந்த பெண்ணின் தந்தை, 'உங்கள் வீட்டுக்கு எனது மகளை அனுப்ப முடியாது' என்று கூறினார்.

    உடனே அந்த பெண்ணிடம் நாத்தனார், 'இப்ப வருவியா, மாட்டியா' என்று கேள்வி எழுப்பினார். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஆரம்பித்தது. கணவர் குடும்பத்தினரும், மனைவி குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து சண்டை போட்டனர்.

    படகில் நின்றபடியே சண்டை போட்டதால் படகை ஓட்டி சென்றவர் பரிதாபமாக தவித்தார். படகை விட்டு இறங்குமாறும், வேறு இடத்தில் மீட்பு பணிக்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அதை கண்டு கொள்ளாத அவர்கள் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே இருந்தனர்.

    இதற்கிடையே அந்த பச்சிளம் குழந்தையின் தந்தையோ, குழந்தையை எப்படியாவது அழைத்து சென்று விடலாம் என்று அமைதியாக நின்றபடியே பாசப்போராட்டம் நடத்தினார். ஒரு கட்டத்தில் நாத்தனார் கடும் ஆத்திரம் அடைந்து, 'இந்த பெண்ணே வேண்டாம். நாம் வீட்டுக்கு போவோம்' என்று சகோதரனை அழைத்தார். அதன்பிறகு சண்டை உச்சத்தை எட்டியது.

    இதனால் பெண் வீட்டார், கணவர் குடும்பத்தினரை அடிக்க பாய்ந்தனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த படகோட்டி கணவர் குடும்பத்தினருடன் படகை அங்கிருந்து ஓட்டி சென்றார். இதன் மூலம் அவர்களுக்குள் ஏற்பட இருந்த அடிதடி சண்டை தடுக்கப்பட்டது.

    வேளச்சேரியை சேர்ந்த அந்த வாலிபருக்கும், பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகரை சேர்ந்த அந்த பெண்ணுக்கும் திருமணம் முடிந்ததில் இருந்தே இந்த இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பெண் பிரசவத்துக்காக தனது தாய் வீட்டுக்கு சென்றார். கடந்த 3 வாரங்களுக்கு முன்புதான் அவருக்கு குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் அவர்களின் வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால் தனது குழந்தையை பத்திரமாக மீட்டு அழைத்து வருவதற்காகத்தான் தந்தை, தனது குடும்பத்தினருடன் சென்றார். தனது மனைவியையும், குந்தையையும் பத்திரமாக வீட்டுக்கு அழைத்துவர பாசப்போராட்டம் நடத்தினார். ஆனால் குடும்ப உறுப்பினர்களின் சண்டையாலும், புயல் தாக்கத்தையும் மிஞ்சிய குடும்ப பிரச்சனையாலும் வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை அழைத்து வர முடியாமல் போய் விட்டது.

    • எத்தனை நாளைக்கு மத்திய அரசை குறை சொல்லி குறை சொல்லி வண்டியை ஓட்டுவார்கள்.
    • மக்களே சாலைக்கு வந்து மத்திய அரசு இதுவரை கொடுத்த நிதி எங்கே என்று கேள்வி கேட்கின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை மாநகராட்சி 15-வது மண்டலம் 198-வது வார்டுக்கு உட்பட்ட காரப்பாக்கம் பகுதியில் 5000 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி 198-வது வார்டு மாமன்ற உறுப்பினரும் ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவருமான லியோ என்.சுந்தரம் ஏற்பாட்டில் காரப்பாக்கம் கங்கையம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு 5000 பேருக்கு அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-

    மக்கள் கஷ்டத்தில் இருக்கும்போது பாரதிய ஜனதா தொண்டர்கள் முன்வந்து மக்களுக்கு உதவி செய்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு அதிகாரிகள் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகள் நேரில் வந்து மக்களை சந்திக்க வேண்டும்.

    அப்போதுதான் இங்கு என்ன நடக்கிறது என தெரியும். சென்னையில் உள்ள மையப் பகுதியை விட புறநகர் பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை மைய பகுதியை மட்டும் முதலமைச்சர் பார்வையிடுகிறார்.

    அரசு உதவிகள் மக்களுக்கு வராமல் உள்ளது. அதனால்தான் அந்தப் பொறுப்பை நாங்கள் கையில் எடுத்து செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என கூறுவதால் தான் மக்கள் ஆத்திரமடைந்து மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

    அமைச்சர் கே.என்.நேரு நான்கு மாதங்களுக்கு முன்பு 98 சதவீதம் வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக கூறினார். நேற்று அவர் கூறிய கருத்தின் படி 42 சதவீதம் தான் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளது.

    ஒரு பொறுப்புள்ள மூத்த அமைச்சர் இது போன்று மாற்றி மாற்றி பேசுகிறார். அரசே பொய் சொல்ல ஆரம்பித்தால் மக்கள் யாரை நம்புவார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சென்னை மக்கள் பொறுமையாக இருப்பார்கள் என்று நேற்று கே.என்.நேரு பேசிய பேச்சால் மக்கள் சாலைக்கு வந்து எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களை கேள்வி கேட்டு மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

    மத்திய அரசு ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு கொடுத்த நிதி எங்கே போனது என தெரியவில்லை. எத்தனை நாளைக்கு மத்திய அரசை குறை சொல்லி குறை சொல்லி வண்டியை ஓட்டுவார்கள். மக்களே சாலைக்கு வந்து மத்திய அரசு இதுவரை கொடுத்த நிதி எங்கே என்று கேள்வி கேட்கின்றனர். அதற்கே இவர்களால் கணக்கு கொடுக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை உள்ளிட்ட பகுதிகளில் குறை கூறவில்லை என்றாலும் நிறைவாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
    • தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் பல்வேறு கொலைகள் நடந்திருக்கிறது. மிகவும் வேதனையாக இருக்கிறது.

    தூத்துக்குடி:

    சமத்துவ மக்கள் கட்சி பாராளுமன்ற, சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் பாளையில் இன்று மாலை நடைபெறுகிறது.

    இதில் கலந்து கொள்வதற்காக சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் இன்று மதியம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவருக்கு விமான நிலைய வாசலில் தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பொறுப்பாளர்களை அறிவிப்பதற்காக இங்கு வந்து இருக்கிறேன்.

    மழையால் சென்னையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் முழுமையான அடிப்படையான வசதிகளை செய்ய முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறோம். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் குறை கூறவில்லை என்றாலும் நிறைவாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

    ஒருவரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலும், மேலும் வீட்டை விட்டு வெளியே போக முடியாத நிலை உள்ளது. தொலைதொடர்பு துண்டிப்பு, மின்சார துண்டிப்பால் மிகப்பெரிய பாதிப்பு மற்றும் இழப்பை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இது போன்ற நிலைமை தொடர்ந்து வராமல் எப்படி தடுக்க வேண்டும் என கண்டறிந்து அரசு அதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர் மீட்புக்காக மிகப்பெரிய படையை உருவாக்க வேண்டும் என அறிக்கை கொடுத்திருக்கிறேன்.

    மக்களின் வேதனை எங்களுக்கு புரிகிறது. ஆனால் வேதனையிலும் அதனை சகித்துக் கொண்டு எதிர்ப்புகளை தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த எதிர்ப்பை தேர்தல் களத்தில் காண்பிக்க மாட்டார்கள்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்க கூடிய அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பில்லை. தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் பல்வேறு கொலைகள் நடந்திருக்கிறது. மிகவும் வேதனையாக இருக்கிறது. தென் மாவட்டங்களில் தொழில் வளத்தை உருவாக்க வேண்டும். வேலையில்லா திண்டாட்டமே இதற்கு காரணமாக அமைகிறது. இதனை தடுப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் 300 ஏரிகள் காணவில்லை.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பா.ம.க. நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்.

    மதுரை:

    சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பீகார், கர்நாடகாவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடந்துள்ளது. 2-க்கும் உள்ள வித்தியாசத்தை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். பின் தங்கி உள்ள மக்களை கண்டறிந்து சிறப்பு சலுகைகள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இது தான் உண்மையான சமூக நீதி. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் தி.மு.க. சமூக நீதி பற்றி பேசக்கூடாது.

    சென்னையில் புயலுக்கு பிறகு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. பலர் பால், குடிநீர் கூட கிடைக்காமல் அவதியடைகிறார்கள். 2015-ம் ஆண்டு வந்த வெள்ளத்தை பார்த்த பிறகு இன்னும் தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இனிமேலும் கற்றுக் கொள்ளப்போவதில்லை. தமிழக அரசு விலை நிலங்களை கைப்பற்றி நாசப்படுத்தி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 65 சதவீத தொழிற்சாலைகள் சென்னையில் இருந்து 100 கி.மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வருகிறது.

    சென்னையில் நீர்நிலைகளை தொழிலதிபர்களும், அரசும் தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. தமிழகத்தில் 300 ஏரிகள் காணவில்லை. அடுத்த தலைமுறைகளை பற்றி இவர்களுக்கு கவலையில்லை. ஆனால் அடுத்த தேர்தலை பற்றி தான் சிந்திக்கிறார்கள். சென்னை வெள்ள பாதிப்பு தடுப்பு பணிக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவிட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் அமைச்சர் ரூ.1,900 கோடி செலவிட்டதாக சொல்கிறார். இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    மதுரை வைகை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலக்கப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் பட்டியலின மக்கள் தாக்கப்படுகிறார்கள் இது கண்டிக்கத்தக்கது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பா.ம.க. நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். சென்னை வெள்ள பாதிப்புக்கு பா.ம.க. சார்பாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் 5 எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளத்தை கொடுக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாம்பு ஊர்ந்து வருவதை தடுக்கலையே....
    • இன்று சென்னையை கூவமாக மாற்றி படகு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்...

    சென்னை:

    சென்னையின் மழை பாதிப்புகள் பற்றி தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஒரு கவிதை எழுதி உள்ளார். 2015 வெள்ளத்தின்போது அவர் நிவாரண பணிகளில் ஈடுபட்ட புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார். அந்த கவிதை வருமாறு:-

    இது மழையின் தண்ணீர் கவிதையல்ல....

    இது மக்களின் கண்ணீர் கவிதை....

    என்னை....

    உன்னை.... வளர்த்த சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது

    மழை நின்ற பின்பும் தண்ணீர் வடியவில்லை...

    மக்களின் கண்ணீர் வற்றவில்லை....

    விடியல் இருக்கும் என்றார்கள்...

    தண்ணீர் வடியல் கூட இல்லையே...

    அவகாசம் இல்லை என்று சாவகாசமாய் சொல்கிறார்கள்...

    இன்றா இவர்களிடம் சென்னை இருக்கிறது...

    அன்றே மேயராக சென்னையில் இருந்தவர்கள் தானே?

    சிங்கப்பூராக ஆக்குகிறோம் என்றார்கள்...

    பூராக தண்ணீர் வடியும் ஊராககூட ஆக்கவில்லையே....

    பம்பு வைத்து தண்ணீர் எடுக்கலையே....

    பாம்பு ஊர்ந்து வருவதை தடுக்கலையே....

    கூவத்தில் படகு விடுவோம் என்றார்கள்....

    இன்று சென்னையை கூவமாக மாற்றி படகு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்...

    குழிக்குள்ளும், புதருக்குள்ளும் மனித உடல்கள்....

    பழிக்குள்ளாக்குகிறார்கள் இன்றைய மழையை....

    பள்ளம் தோண்டி வடிகால் இடுகிறோம் என்றார்கள்....

    ஆனால் விடிவு காலம் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்....

    தண்ணீர் வடியும் காலம் தெரியாமல் பரிதவிக்கிறார்கள்....

    பாலுக்கு அழும் குழந்தையை பார்த்திருக்கிறோம்....

    இன்று பாலுக்காக குடும்பங்களே அழுவதை பார்த்து பரிதவிக்கிறோம்....

    பொருளை இழந்து வாடும் மக்களுக்கு மீண்டும் பொருள் கிடைக்க அருளைக் கொடு....

    இன்று இந்தக் கொடுமையை தாங்கும் பலத்தை கொடு....

    பின்பு மழையை தாங்கும் கட்டமைப்பை கொடு....

    ஆண்டு கொண்டிருப்பவர் செய்ய தவறியதால்....

    ஆண்டவனே உன்னை வேண்டுகிறேன்....

    கூப்பிடும் தூரத்தில் நான் இருந்திருந்தால்....

    துயர் துடைக்க முடியவில்லை என்றாலும்....

    கண்ணீர் துடைக்கவாவது ஓடோடி வந்திருப்பேன்....

    அன்று வந்தது போல் படகோடவாது வந்திருப்பேன்....

    நம் மாநில மழைக்காட்சி கண்டாலும்....

    பணி மாநில ஆட்சிப்பணி இருப்பதால்....

    தூரத்தில் இருந்தே உங்கள் துயரத்தில் பங்கெடுக்கிறேன்....

    தொலைவில் இருந்தாலும் மழை வடியும் தொலை நோக்கு திட்டத்தை திட்டமிட வேண்டுமென்ற வேண்டுகோளோடு....

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க அரசு மழை பாதிப்பு, பிரச்சனைகளை முறையாக கையாளவில்லை.
    • அ.தி.மு.க. ஆட்சியின் போது மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொண்டோம்.

    சென்னை:

    திருவொற்றியூர் பகுதியில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * அரசின் மெத்தன போக்கால் வெள்ள பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டுள்ளது.

    * மக்களுக்கு தேவையான உணவு, பால், தண்ணீர் பெரும்பாலான இடங்களில் கிடைக்கவில்லை.

    * தி.மு.க அரசு மழை பாதிப்பு, பிரச்சனைகளை முறையாக கையாளவில்லை.

    * ஒரு சொட்டு நீர் கூட தேங்காது என தமிழக அரசு சொன்னது.

    * அ.தி.மு.க. ஆட்சியின் போது மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொண்டோம்.

    * அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டங்கள் நடத்தி நடவடிக்கைகள் எடுத்தோம்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் வெள்ள நீர் தடுப்பு நடவடிக்கையாக 3 திட்டங்கள் கொண்டு வந்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×