search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "love"

    • இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்தாகவும் அமையும்.
    • பொல்லாதவைகளை எல்லாம் பேசுவது பாவம் என்று வேதாகமம் சொல்கிறது.

    "மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்". (நீதிமொழிகள் 18:21)

    அன்பானவர்களே, நம் ஒவ்வொருவருடைய நாவில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்கும் ஒரு வல்லமை உண்டு. இனிய சொற்கள் தேன்கூடு போல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்தாகவும் அமையும்.

    அதனால் தான் நமது நாவில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் நன்மை நிறைந்ததாக, ஆசிர்வாதம் அளிப்பதாக இருக்க வேண்டும் என்று முன்னோர்களும், பெரியோர்களும் சொல்லி இருக்கிறார்கள்.

    நாம் அனுதினமும் நாவினால் 'என்னுடைய வாழ்க்கையில் நான் நிச்சயமாக நன்றாக இருப்பேன், சுகமாக இருப்பேன், வாழ்வில் உயர்வுகள் வரும்' என்று பேசி, அதற்கான முயற்சிகள் செய்யும் போது நாம் விரும்பியவை நிச்சயமாக நம்மைத் தேடி வரும்.

    அதை விட்டு மாறாக நாவினால் ஒருவருக்கு முன்பாக முகஸ்துதியுடன் பேசுவது, அவர் அந்த இடத்திலிருந்து சென்ற உடன் அவர்களைப் பற்றி குறை கூறுவது, இல்லாத, பொல்லாதவைகளை எல்லாம் பேசுவது பாவம் என்று வேதாகமம் சொல்கிறது.

    புதிய ஏற்பாட்டில் வேதம் சொல்கிறது: "கப்பல்களைப் பாருங்கள், அவைகள் மிகப் பெரியவைகளாயிருந்தும், கடுங்காற்றுகளால், புயல்களால், அலைகளால் அடிபட்டாலும் அவைகளை நடத்துகிறவன், போகும் படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகச் சிறிய சுக்கானாலே திருப்பப்படும்".

    ஒரு சிறிய நெருப்பு பொறி எவ்வளவு பெரிய காட்டையும் கொளுத்தி விடுவதுபோல சிறிய உறுப்பான நாக்கில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் நல்ல, கெட்ட செயல்களுக்கு காரணமாக அமைகிறது.

    உருவத்தில் பெரிய யானை, காட்டுக்கு ராஜாவான சிங்கம் உள்பட பல்வேறு உயிரினங்களை மனிதன் தன் திறமையால் அடக்கி ஆள்கின்றான். ஆனால் அவனால் தன் நாக்கை அடக்க முடியவில்லை. அதில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் மரணத்தை தரும் விஷத்தை போன்று உள்ளது.

    ஒரே நாவினாலே பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம், அதே நாவினாலே தேவனுடைய சாயலின் படி உண்டாக்கப்பட்ட மனுசனை சபிக்கிறோம். ஒரு நபரை நேரில் பார்க்கும் போது இனிக்க இனிக்க பேசுகிறோம், அவர் அவ்விடத்தில் இருந்து சென்றவுடன், அவரைப் பற்றி தவறாக, கேவலமாக, பொய்யாக, கெட்ட வார்த்தைகளுடன் பேசுகிறோம். வீண் பேச்சுக்கள், கட்டுக்கதைகளை நமக்கேற்றவாறு புனைந்து உண்மை போல மற்றவர்களை நம்ப வைத்து பேசுகிறோம்.

    ஒரே நீரூற்றிலிருந்து, இனிப்பும், கசப்புமான தண்ணீர் சுரக்குமா யோசித்துப் பார்ப்போம். நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் இறைவனின் கணக்கில் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

    வேதம் சொல்கிறது: 'சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் இறைவனுடைய கட்டளைகளை, போதனைகளை குற்றப்படுத்துகிறவனாக இருப்பான். மற்றவர்களைக் குறை சொல்லி குற்றப்படுத்துவதற்கு நாம் யார்?. யோசித்துப் பாருங்கள், அன்பானவர்களே.

    'இன்னும் கோள் சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும், ஆனால் அவைகள் மற்றவர்கள் மனதை முள் போல குத்தும். மூடருடைய வார்த்தைகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அவனுக்கு அடிகளை வரவழைக்கும். அவனுடைய வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளே அவனுக்கு கேடாக அமைந்து விடும்'.

    'ஒருவனுடைய வாயின் இனிய வார்த்தைகளால் அவனுடைய வயிறு நிரம்பி, அவன் வாழ்வில் திருப்தி அடைவான். இனிய வாய்மொழிகள் ஆழமான நீரூற்றுப் போலிருக்கும், அதிலிருந்து ஆசீர்வாதமான வற்றாத ஜீவ நதி புரண்டோடும். இனிய சொற்கள் தேன்கூடு போல ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு அரு மருந்தாகவும் அமையும்'.

    ஆம் பிரியமானவர்களே, நாம் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு அருமருந்தாக அமைய வேண்டும். நம் வாயின் வார்த்தைகள் எதிர்மறையான காரியங்களை பேசாமல், நேர்மறையான காரியங்களை மட்டுமே பேச வேண்டும். நம் வாயின் வார்த்தைகளுக்கு வல்லமை உண்டு. நன்றாயிருப்போம், வாழ்ந்து சுகமாயிருப்போம். சிறப்பான, வளமான எதிர்காலம் நமக்கு உண்டு என்று அனுதினமும் அதைப் பற்றி பேசி, அதற்கான முயற்சிகளை எடுத்து வந்தால், நிச்சயமாக காரியங்கள் கைகூடும்.

    ஆகவே நம் வாயின் வார்த்தைகளால் நம்மையும், நாம் சந்திக்கும் அனைத்து நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி, ஆறுதல்படுத்தி, அன்பு செலுத்தினால் நிச்சயமாக நன்மைகள் நம்மைத் தேடி வரும், இறைவனின் ஆசிர்வாதங்களும் நதி போல நம்மைச் சுற்றி வரும். அது ஒரு வற்றாத ஜீவ நதி, அது பாயும் இடமெல்லாம் செழிப்பை உண்டாக்கி,அனேகருக்கு ஆசிர்வாதமாக விளங்கும்,

    அது போல நம் நாவின் வார்த்தைகள் நமக்கும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் ஆசிர்வாதமாக, செழிப்பாக விளங்க, நம்மை மாற்றுவோம், மாறுவோம். ஆமேன்.

    "சொற்களின் மிகுதியால் பாவமில்லாமல் போகாது, தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான், பேசாதிருந்தால் மூடனும் ஞானியெனப்படுவான், நீதிமானுடைய வாய் ஜீவ ஊற்று".

    அன்பானவர்களே தேவையான, நலமான விஷயங்களை மட்டும் பேசுவோம், நன்மைகள் பெறுவோம், உலகெங்கும் அன்பை பரவச்செய்வோம்.

    • ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை.
    • பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது.

    ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை. பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது. உலகெங்கும் பல்வேறு நிறங்களில் ரோஜாக்கள் பூத்துக்குலுங்குகின்றன. கூந்தலை அலங்கரிப்பதோடு அன்பு, பாராட்டு மற்றும் நன்றியை வெளிப்படுத்துவதற்கு ரோஜாக்கள் பரிமாறப்படுகின்றன. அவற்றுள் தனித்துவ குணம் கொண்ட சில ரோஜாக்கள் உங்கள் பார்வைக்கு..

    பீச் வண்ண ரோஸ்:

    மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்ற நிறங்களின் கலவையை பிரதிபலிக்கும் பீச் வண்ண ரோஜாக்கள் நன்றியுணர்வை குறிக்கின்றன. அடக்கம், அனுதாபம் போன்றவற்றை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

    மஞ்சள்:

    மஞ்சள் நிற ரோஜாக்கள் நட்பு மற்றும் மகிழ்ச்சியை குறிக்கின்றன. நண்பர்களுக்கிடையேயான அன்பையும், பாராட்டுகளையும் வெளிப்படுத்த இவை சிறந்த தேர்வாக அமைகின்றன.

    ஆரஞ்சு:

    ஆரஞ்சு நிற ரோஜாக்கள் உற்சாகம், ஆசை மற்றும் கவர்ச்சியை குறிக்கின்றன. ஈர்ப்பை வெளிப்படுத்துவதற்கு அவை பகிரப்படுகின்றன.

    வெள்ளை:

    வெள்ளை நிற ரோஜாக்கள் தூய்மை, அப்பாவித்தனம் மற்றும் வாழ்வின் புதிய தொடக்கங்களை குறிக்கின்றன. தம்பதியினரிடையே நிலவும் தூய அன்பை குறிக்க திருமண நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    இளஞ்சிவப்பு:

    இளஞ்சிவப்பு நிற ரோஜாக்கள் வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு உணர்ச்சிகளை குறிப்பிடுகின்றன. வெளிர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் போற்றுதலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கின்றன. அதே சமயம் அடர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் நன்றியையும், பாராட்டையும் குறிப்பிடுகின்றன.

    நீலம்:

    நீல நிற ரோஜாக்கள் மர்மம், சாத்தியமில்லாதது போன்ற உணர்வை குறிக்கின்றன.

    சிவப்பு:

    இது காதலின் அடையாள சின்னமாக விளங்குகிறது. இரு மனங்களுக்கு இடையே புதைந்திருக்கும் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், காதல், அன்பு, ஆசையின் வெளிப்பாட்டை பகிரவும் உதவும் தூதுவனாக பயன்படுகிறது, சிவப்பு ரோஜா.

    • அனிதா பி.ஏ.முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
    • பண்ருட்டி போலீசில் அவரது தாய் அஞ்சலாட்சிபுகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிகுப்பம் அடுத்த அன்னக்காரன் குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் அனிதா (23). இவர், பி.ஏ.முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.நேற்று அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்தவர் காணாமல் போனார். பல இடங்களில் தேடி யும் கிடைக்காததால். பண்ருட்டி போலீசில்வஅவரது தாய் அஞ்சலாட்சிபுகார் கொடுத்தார். புகாரில் பெத்தான்குப்பத்தை சேர்ந்த சிவமணியை (30) அனிதா காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொண்டதாகவு ம்கூறியுள்ளார்.

    • திருமணத்திற்கு முன்பு சஞ்சய் தனது காதலியிடம் உனக்கு நிலாவில் நிலம் வாங்கி தருகிறேன் என கூறியிருந்தாராம்.
    • காதல் மனைவிக்கு நிலாவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி மனைவிக்கு பிறந்தநாள் பரிசளித்துள்ளார்.

    மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மகாட்டோ. இவர் காதல் திருமணம் செய்தவர். திருமணத்திற்கு முன்பு சஞ்சய் தனது காதலியிடம் உனக்கு நிலாவில் நிலம் வாங்கி தருகிறேன் என கூறியிருந்தாராம். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் காதலியை கரம் பிடித்தார்.

    இந்நிலையில் தனது வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் சஞ்சய் தனது காதல் மனைவிக்கு நிலாவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி மனைவிக்கு பிறந்தநாள் பரிசளித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் கூறுகையில், திருமணத்துக்கு முன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக தனது மனைவிக்கு நிலாவில் இடம் வாங்கி பரிசளிக்க திட்டமிட்டேன். இதுதொடர்பாக எனது நண்பர்களிடம் ஆலோசித்தேன். அவரது உதவியுடன் லூனா சொசைட்டி இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் நிலாவில் நிலம் வாங்கினேன். பின்னர் நிலம் வாங்கியதற்கான பதிவு சான்றை எனது மனைவியிடம் கொடுத்தபோது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாக கூறினார்.

    • போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
    • பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே கீரமங்கலம் தர்மர் கோவிலை சேர்ந்தவர் சரவணன் மகன் மணிகண்டன் (வயது 23). சிவகங்கை மாவட்டம், புதுவயல் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கணேசன் மகள் பிரதீபா (20). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர்.

    இந்நிலையில் பிரதீபாவை காணவில்லை என்று அவரது தாய் உமா சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மணிகண்டன்-பிரதீபா இருவரும் பழனி கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து ஆலங்குடி போலீசார் சாக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் காதல் ஜோடி இருவரையும் சாக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    • சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
    • புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.

    ராகு கால பூஜைக்கான மலர்கள்

    ராகு கால நேரம் என்பது வாரத்தில் அனைத்து நாட்களிலும் உண்டு.

    இதில் செவ்வாய் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் செய்யப்படும் ராகு கால பூஜை மிகவும் சிறப்பானது.

    இதைத்தவிர மற்ற நாட்களிலும் ராகு கால பூஜை செய்யலாம்.

    ஒவ்வொரு கிழமைகளில் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு பூஜை செய்வதால் வாழ்வில் நிம்மதியும் வளங்களும் பெருகும்.

    சூரிய கிரகத்துக்கு ஞாயிற்று கிழமைகளில் பாரிஜாதம் மற்றும் வில்வ மலர்களைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் கிழமைகளில் செவ்வரளி, செந்தாமரை மற்றும் செம்பருதி மலர் கொண்டு ராகு கால பூஜை செய்வது செவ்வாய் தோஷம் விலகும்.

    புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.

    வியாழக்கிழமைகளில் குரு கிரகத்துக்கு மஞ்சள் நிற மலர்கள் மற்றும் சாமந்தி மலர் கொண்டு பூஜை செய்யவேண்டும்.

    சுக்கிரனுக்கு வெள்ளிக் கிழமைகளில் வெள்ளை அரளி கொண்டு பூஜை செய்யலாம்.

    சனி பகவானுக்கு சனிக் கிழமைகளில் நீல நிற சங்கு மலர் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

    மேற் கண்ட ஒவ்வொரு தினத்திலும் குறிப்பிட்ட மலர்களைக் கொண்டு பூஜை செய்தால் இல்லத்தில் அமைதி மற்றும் சுபிட்சம் பெருகும்.

    • மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.
    • மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.

    இறைவன் காலடியில் மலர் போடுங்கள்!

    ஒரு கூடை அரளியைச் சேகரித்துக்கொண்டு, ஒவ்வொரு நாமமாகச் சொல்லி நிதானமாக இறைவனுக்கு அர்ப்பணம் செய்து பாருங்கள்.

    அதுவும் மலர்களை சுவாமியின் மீது தூக்கி வீசாமல், அழகாக ஒவ்வொரு மலராக அலங்காரம் செய்வது போல் சுவாமி காலடியில் வைத்துப்பாருங்கள்.

    உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும், இனம் புரியாத ஆனந்தம் உள்ளுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும்.

    நாள் முழுவதும் சந்தோஷமாகக் கழியும்.

    மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.

    அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி

    மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதும் முதலில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும்.

    மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.

    தாமரை, செண்பகம், முல்லை, பிச்சி, அரளி, துளசி உள்பட பல்வேறு மலர்கள் புஷ்பாஞ்சலிக்கு பயன்படுத்தப்படும்.

    புஷ்பாஞ்சலி செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.8,500 செலுத்தி ரசீது பெற்று சென்றால் அவர்கள் பெயரில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்படும்.

    புஷ்பாஞ்சலிக்கு தேவையான மலர்களை பக்தர்கள் கொண்டு செல்ல வேண்டியதில்லை.

    கோவில் சார்பில் மலர்கள் பயன்படுத்தப்படும்.

    தரமற்ற பூக்கள் பூஜைக்கு பயன்படுத்துவதை தடுக்கவே இந்த ஏற்பாட்டை திருவாங்கூர் தேவசம் போர்டு செய்துள்ளது.

    • வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் பின்னர் திரும்பி வரவில்லை.
    • கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவருடன் பழகிவந்தது தெரியவந்தது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த காட்டாவூர் பகுதியை சேர்ந்த 28 வயது இளம் பெண் கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2019 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் பின்னர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவிலலை.

    இதுகுறித்து பொன்னேரி போலீஸ்நிலையத்தில் இளம்பெண்ணின் கணவர் புகார் செய்தார். விசாரணையில் மாயமான இளம்பெண் கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவருடன் பழகிவந்தது தெரியவந்தது.

    இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த மாதவரம் முஸ்லிம் நகரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி மாயமானார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடினார்கள்.
    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    சென்னை வடபழனியைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    அவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் நேரில் சந்தித்து பேசினார்கள். இந்நிலையில் வீட்டிலிருந்த மாணவி மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார்கள்.

    ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடினார்கள். அப்போது மாணவி வாலிபருடன் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து மாணவியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக அவர் செல்போனில் யாருடனும் பேசாமல் இருந்து வந்தார். இதனால் அவரை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. ஒரு மாதமாக தேடியும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மாணவி, தனது தோழி ஒருவருக்கு செல்போனில் பேசினார். அவர் தனது தோழியிடம் காதலனை நம்பி வந்ததாகவும் அவர் தனது நகையை விற்று செலவு செய்து விட்டு, தற்பொழுது கொடுமைப்படுத்தி வருவதாகவும் கூறினார். மேலும் பக்கத்து வீட்டு பெண் ஒருவரின் செல்போனை வாங்கி பேசுவதாக கூறியதுடன் தான் குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தன்னால் கூற இயலவில்லை. எனவே பெற்றோரிடம் தெரிவித்து தன்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் மல்க பேசினார். இதையடுத்து மாணவியை அவரது தோழி சமாதானம் செய்தார். மேலும் மாணவியின் பெற்றோரிடம் நடந்த சம்பவத்ததையும் கூறினார். அவர்கள் இந்த தகவலை போலீஸ் நிலையத்தில் தெரிவித்தனர்.

    உடனே சென்னை போலீசார், வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாணவியை மீட்க வடசேரி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மாணவி கூறிய தகவலின் அடிப்படையில் வடசேரி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மாணவி இருந்தது தெரிய வந்தது. அவரை மீட்ட போலீசார், அங்கு இருந்த வாலிபரையும் பிடித்தனர். மீட்கப்பட்ட மாணவியையும் அந்த வாலிபரையும் போலீசார் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    மாணவி மீட்கப்பட்டது குறித்த தகவல் சென்னை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அவர்கள் மாணவியின் பெற்றோரை அழைத்துக் கொண்டு இன்று காலை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவியுடன் சமூக வலைதளம் மூலமாக பழகி தனது நண்பர் ஒருவரது ஏற்பாட்டில் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்ததாகவும் நாகர்கோவிலில் வாடகை வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் வாலிபர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்ற தகவலும் தெரியவந்தது.

    மாணவிக்கு 17 வயதே ஆவதால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வடசேரி வாடகை வீட்டில் மீட்கப்பட்ட மாணவியை போலீசார் நேற்று இரவு விசாரணைக்கு பிறகு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இன்று காலை மீண்டும் மாணவி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது சென்னையில் இருந்து போலீசாரும் மாணவியின் பெற்றோரும் அங்கு வந்தனர். மாணவி அவரது பெற்றோரை பார்த்ததும் கதறி அழுதார். இதையடுத்து அவர்கள் அவரை சமாதானம் செய்தனர். வாலிபரை நம்பி எனது வாழ்க்கையை இழந்து விட்டேன் என்று கூறி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    வடசேரியில் வாடகை வீட்டில் மீட்கப்பட்ட மாணவிக்கு 17 வயதே ஆவதால் அந்த மாணவியரிடம் குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. மீட்கப்பட்ட மாணவியிடம் நடந்த சம்பவத்தை அவர்கள் கேட்டறிந்தனர். விசாரணையின் போது அவரது பெற்றோர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார்.
    • பேட்டி டுவிட்டரில் வைரலாகி 2,200-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது.

    காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் இப்படியும் காதல் மலருமா? என கேட்கும் வகையில் ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த இமானுவேலா என்ற இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் இமானுவேலாவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருடன், திருடன் என கத்தினார். ஆனாலும் கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார்.

    இந்நிலையில் செல்போனை பறித்த வாலிபர் அதை எடுத்து பார்த்த போது, அதில் இமானுவேலாவின் புகைப்படத்தை பார்த்தார். இவ்வளவு அழகான பெண்ணிடம் செல்போனை பறித்துவிட்டோமே என வருந்திய அவர், இமானுவேலாவை நேரில் சந்தித்து அவரிடம் போனை திருப்பி கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த இமானுவேலா, திருடனை மன்னித்ததோடு அவருடன் நட்பாக பழக தொடங்கினார். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறி உள்ளது. கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாக கூறுகிறார்கள். இவர்களது பேட்டி டுவிட்டரில் வைரலாகி 2,200-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர், அன்பால் எதையும் சாதிக்க முடியும் எனவும், மற்றொருவர் இது ஒரு நகைச்சுவை போல் தெரிகிறது, ஆனால் உண்மையானது என பதிவிட்டுள்ளார்.

    • நடிகர் பரத் தற்போது ‘லவ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பரத், தற்போது லவ் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார். ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இப்படத்தை இயக்கியுள்ளார். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28-ஆம் தேதி திரைக்கு வரவுள்து. இப்படம் பரத்தின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.




    இந்நிலையில் "லவ்" படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கோடையின் வாசலிலே என்று தொடங்கும் பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.



    • காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மாணவியின் பெற்றோர் மகளை தங்களுடன் வா என அழைத்தனர்.

    கோவை:

    கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் 23 வயது மாணவி.

    இவர் கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் படித்து வந்தார்.

    இந்த நிலையில் மாணவிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இடுக்கியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் அனீஸ் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மாணவி தனது காதலை தொடர்ந்து வந்தார்.

    நேற்றுடன் மாணவியின் பட்டப்படிப்பு முடிந்தது. எனவே தன்னை அழைத்து செல்ல வருமாறு மாணவி அவரது காதலனுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனையடுத்து அனீஸ் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 9 பேருடன் கல்லூரிக்கு வந்தார்.

    மாணவியின் பெற்றோரும் தங்களது மகளை அழைத்து செல்வதற்காக கல்லூரிக்கு வந்திருந்தனர்.

    மாணவி தனது பெற்றோர் வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை. மாணவியின் பெற்றோர் மகளை தங்களுடன் வா என அழைத்தனர். ஆனால் அவருக்கு தான் வீட்டிற்கு சென்றால் காதலை மறந்து விடு என்பார்கள்.

    அத்துடன் வேறு யாருக்காவது தன்னை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என நினைத்து பயந்தார். இதனால் அவர்கள் கூப்பிட்டதற்கு மறுப்பு தெரிவித்தார்.

    நான் உங்களுடன் வரமாட்டேன். எனது காதலருடன் தான் செல்வேன் என கூறினார். இதனால் பெற்றோர் மீண்டும் அவரிடம் பேசி பார்த்தனர். ஆனால் மாணவி தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார்.

    இதனை பார்த்த கல்லூரி நிர்வாகத்தினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். கல்லூரி நிர்வாகம் பெற்றோருடனே செல்லவே நாங்கள் அனுமதிப்போம் என தெரிவித்தனர். அப்போதும் அவர் பெற்றோருடன் செல்வதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

    இதுபற்றிய தகவல் ஆனைமலை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவி, அவரது பெற்றோர், மாணவியின் காதலன், காதலனின் பெற்றோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போதும் மாணவி தான் காதலனுடன் தான் செல்வேன். பெற்றோருடன் செல்லமாட்டேன் என தெரிவித்ததால், போலீசார் மாணவியை அவரது காதலனுடன் அனுப்பி வைத்தனர்.

    ×