search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சமூக வலைதளம் பழக்கம்: வாலிபரை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய மாணவி- காதலன் கொடுமைப்படுத்தியதாக கண்ணீர்
    X

    சமூக வலைதளம் பழக்கம்: வாலிபரை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய மாணவி- காதலன் கொடுமைப்படுத்தியதாக கண்ணீர்

    • பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடினார்கள்.
    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    சென்னை வடபழனியைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    அவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் நேரில் சந்தித்து பேசினார்கள். இந்நிலையில் வீட்டிலிருந்த மாணவி மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார்கள்.

    ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடினார்கள். அப்போது மாணவி வாலிபருடன் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து மாணவியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக அவர் செல்போனில் யாருடனும் பேசாமல் இருந்து வந்தார். இதனால் அவரை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. ஒரு மாதமாக தேடியும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மாணவி, தனது தோழி ஒருவருக்கு செல்போனில் பேசினார். அவர் தனது தோழியிடம் காதலனை நம்பி வந்ததாகவும் அவர் தனது நகையை விற்று செலவு செய்து விட்டு, தற்பொழுது கொடுமைப்படுத்தி வருவதாகவும் கூறினார். மேலும் பக்கத்து வீட்டு பெண் ஒருவரின் செல்போனை வாங்கி பேசுவதாக கூறியதுடன் தான் குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தன்னால் கூற இயலவில்லை. எனவே பெற்றோரிடம் தெரிவித்து தன்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் மல்க பேசினார். இதையடுத்து மாணவியை அவரது தோழி சமாதானம் செய்தார். மேலும் மாணவியின் பெற்றோரிடம் நடந்த சம்பவத்ததையும் கூறினார். அவர்கள் இந்த தகவலை போலீஸ் நிலையத்தில் தெரிவித்தனர்.

    உடனே சென்னை போலீசார், வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாணவியை மீட்க வடசேரி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மாணவி கூறிய தகவலின் அடிப்படையில் வடசேரி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மாணவி இருந்தது தெரிய வந்தது. அவரை மீட்ட போலீசார், அங்கு இருந்த வாலிபரையும் பிடித்தனர். மீட்கப்பட்ட மாணவியையும் அந்த வாலிபரையும் போலீசார் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    மாணவி மீட்கப்பட்டது குறித்த தகவல் சென்னை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அவர்கள் மாணவியின் பெற்றோரை அழைத்துக் கொண்டு இன்று காலை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவியுடன் சமூக வலைதளம் மூலமாக பழகி தனது நண்பர் ஒருவரது ஏற்பாட்டில் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்ததாகவும் நாகர்கோவிலில் வாடகை வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் வாலிபர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்ற தகவலும் தெரியவந்தது.

    மாணவிக்கு 17 வயதே ஆவதால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வடசேரி வாடகை வீட்டில் மீட்கப்பட்ட மாணவியை போலீசார் நேற்று இரவு விசாரணைக்கு பிறகு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இன்று காலை மீண்டும் மாணவி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது சென்னையில் இருந்து போலீசாரும் மாணவியின் பெற்றோரும் அங்கு வந்தனர். மாணவி அவரது பெற்றோரை பார்த்ததும் கதறி அழுதார். இதையடுத்து அவர்கள் அவரை சமாதானம் செய்தனர். வாலிபரை நம்பி எனது வாழ்க்கையை இழந்து விட்டேன் என்று கூறி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    வடசேரியில் வாடகை வீட்டில் மீட்கப்பட்ட மாணவிக்கு 17 வயதே ஆவதால் அந்த மாணவியரிடம் குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. மீட்கப்பட்ட மாணவியிடம் நடந்த சம்பவத்தை அவர்கள் கேட்டறிந்தனர். விசாரணையின் போது அவரது பெற்றோர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    Next Story
    ×