search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity Board"

    • மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார்.
    • மின்கம்பிகளுக்கும் கட்டடங்களுக்கும் போதிய இடைவெளி இருக்குமாறு கட்ட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் பகுதியில் விவசாய தொழிலாளி ஒருவர் தென்னை மரத்தில் குச்சி மூலம் தேங்காய் பறிக்க சென்றபோது மின் கம்பியில் குச்சி பட்டதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்த நிலையில் மின்கம்பங்களின் அருகே செல்லும்போது கவனமுடன் செயல்பட மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து, பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு ) திருஞானசம்பந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள தெற்கு அவிநாசி பாளையத்தில் கடந்த 27 ந்தேதி அன்று, தென்னை மரத்தில் குச்சி மூலம் தேங்காய் பறிக்கச் சென்றபோது மின் கம்பிகளில், அந்த குச்சி பட்டதால் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார். எனவே இத்தகைய மின்விபத்துகளை தவிர்க்க விவசாயிகள், மின் கம்பிகள் அருகே செல்லும்போது மிகவும் எச்சரிக்கையுடன் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பொதுமக்கள் கட்டடங்கள் கட்டும் போதும் இருக்கும் கட்டடங்களை விஸ்தரிக்கும் போதும் மின்கம்பிகளுக்கும் கட்டடங்களுக்கும் போதிய இடைவெளி இருக்குமாறு கட்ட அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் வருகிற 10-ந் தேதி வேலைநிறுத்தம் நடத்தினர்.
    • கடந்த 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய விகித மாற்றத்தினை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    விருதுநகர்

    தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாநில பொதுச்செயலாளர் சேக்கிழார் விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளையும், சாமானிய மக்களையும் பாதிக்கக்கூடிய மின்சார சட்ட திருத்தம் 2022-ஐ திரும்ப பெற வேண்டும். மேலும் கடந்த 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய விகித மாற்றத்தினை உடனடியாக வழங்க வேண்டும். வாரியத்தில் உள்ள 58 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    கேங்மேன் பணி யிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 5,000 பேரை பணியமர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் ஜனவரி 10-ந் தேதியன்று அனைத்து தொழிற்சங்கத்தினரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தவும் வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசும், மின்வாரியமும் கோரிக்கை களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து தமிழ்நாடு விருதுநகர் மின் பகிர்மான வட்டக்கிளையின் பொதுக்குழு கூட்டம் திட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. மாநில நிர்வாகிகள் துரைப்பா ண்டியன், ஞானகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராதா கிருஷ்ணன் செயல் அறிக்கை சமர்ப்பித்தார்.

    பொருளாளர் பாலசுப்பி ரமணியன் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். மாநில நிர்வாகிகள் சேக்கிழார், மணிகண்டன், பாண்டியராஜ் ஆகியோர் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், விருதுநகர் கோட்ட நிர்வாகிகள் இளங்கோவன், மாயாண்டி, ராஜ்குமார் ஆகியோரை பாராட்டி பேசினர்.

    இதனை தொடர்ந்து 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலை வராக இளங்கோவனும், செயலா ளராக ஞான குருவும், செயல் தலை வராக தங்கவேலும், அமைப்பு செயலாளராக ராதாகிருஷ்ணனும், பொருளாளராக பாலசுப்பி ரமணியமும் தேர்வு செய்யப்பட்டனர்.

    • பெரும்பாலான இடங்களில் உதவியாளர் பணியிடமே நிரப்பப்படவில்லை.
    • தற்காலிக பணியாளர்களை வைத்துதான் மின்வாரியம் இயங்கி வருகிறது.

    திருப்பூர்:

    வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில் மின் கம்பிகள் அறுந்து விழுவது,மின்கம்பம் சாய்வது, மின் கம்பிகள் மீது மரக்கிளை, மரங்கள் விழுவது போன்ற காரணங்களால் மின் சப்ளை தடைபடும். இத்தகைய பிரச்சினைகளை உடனுக்குடன் எதிர்கொண்டு தடையில்லா மின் சப்ளை வழங்க ஒவ்வொரு மின் பகிர்மான கழக வட்டத்திற்கும் செயற் பொறியாளர் தலைமையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மேற்பார்வையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து திருப்பூர் மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், குறிப்பிட்ட ஒரு பிரிவிற்கு உட்பட்ட இடத்தில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு கூடுதல் பணியாளர்களின் உழைப்பு தேவைப்படும் போது, அருகேயுள்ள பிரிவில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படும் என்றனர்.

    திருப்பூர் தனி மாவட்டமாக இருந்தாலும் கோவை மண்டல மின் வாரிய கட்டுப்பாட்டில் தான் உள்ளது. கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், உடுமலை, பல்லடம், நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியத்தால் ஒரு பிரிவிற்கு 14 கம்பியாளர், 14 உதவியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஒவ்வொரு பிரிவிலும் அதிகபட்சம் 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதிலும் பெரும்பாலான இடங்களில் உதவியாளர் பணியிடமே நிரப்பப்படவில்லை.

    ஒட்டு மொத்த கோவை மண்டலத்தில் மின்வாரியம் அனுமதித்துள்ள கம்பியாளர், உதவியாளர்கள் எண்ணிக்கை 5,921 பேர். ஆனால் பணியில் இருப்பவர்கள் வெறும் 482 பேர் மட்டுமே. 92 சதவீதம் காலி பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது என்ற புள்ளி விபரத்தை மின்வாரிய தொழிற்சங்கத்தினர் வெளியிட்டு பணியாளர் பற்றாக்குறையால் ஊழியர்கள் படும் சிரமத்தை விளக்கும் வீடியோவை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். தற்காலிக பணியாளர்களை வைத்துதான் மின்வாரியம் இயங்கி வருகிறது.

    இது குறித்து மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கூறுகையில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மின் ஊழியர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பணிச்சுமையால், பணிபுரியும் ஊழியர்களுக்கு மன உளைச்சல அதிகரித்துள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

    • பொதுமக்கள் இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்க வேண்டாம்.
    • மின் கம்பிகள், மின் சாதனங்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தால், உடனடியாக மின்சாரத்தை நிறுத்த வேண்டும்.

    பல்லடம் :

    தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், மின்சார விபத்துக்களை தடுப்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.ஜவகர் செய்தியாளரிடம் கூறியதாவது: -

    பொதுமக்கள் இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்க வேண்டாம். கான்கிரீட் கூரையிலான கட்டடங்களிலோ, உலோகத்தால் மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களில் பாதுகாப்பாக இருக்கலாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை பார்த்தால், அவற்றை மிதிக்கவோ,தாண்டவோ செய்யாமல்,அங்கிருந்து உடனடியாக வெளியேறி, மின் வாரியத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பிகள், மின் சாதனங்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தால், உடனடியாக மின்சாரத்தை நிறுத்த வேண்டும்.

    ஈரக்கையாலும், வெறுங்காலுடனும், மின்சாரம் சார்ந்த எதையும் தொடக்கூடாது. மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள வயர் அல்லது மின் கம்பத்தின் மீது கயிறு கட்டி, துணி காய வைக்கவும், மின்கம்பங்களை, பந்தல்களாகவும், விளம்பர பலகைகள் அமைக்கவும் கூடாது. மின்மாற்றி, மின்கம்பம், மின்பகிர்வு பெட்டி மற்றும் ஸ்டே ஒயர்கள் அருகில், செல்லக்கூடாது. வீடுகளில், குளியலறை மற்றும் கழிப்பறையில், ஈரமான இடங்களில், மின் சுவிட்சுகளை பொருத்த கூடாது.

    இடி, மின்னலின் போது குடிசை வீட்டில், மரத்தின் அடியில், பேருந்து நிறுத்த நிழற்கூரையின் கீழ் நிற்கக்கூடாது. ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற, வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய, மூன்று பின் கொண்ட "சாக்கெட்" பிளக்குகள் மூலமாக மட்டுமே, மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

    வீடுகளில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டில் மின் கசிவு தடுப்பான் பொருத்தினால், மின்கசிவால் உண்டாகும் விபத்தை தவிர்க்கலாம். உடைந்துபோன சுவிட்ச் மற்றும் பிளக்குகளை, உடனே மாற்ற வேண்டும். பழுதான மின்சார சாதனங்களை, உபயோகப்படுத்த வேண்டாம்.வீட்டில், எர்த் பைப் போடுவதுடன், அதை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில், சரியாக பராமரிக்கவும், சுவிட்சுகள் மற்றும் பிளக்குகளை, குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.சுவற்றின் உள்பகுதியில், மின்சாரம் எடுத்துச்செல்லும் ஒயர்களுடன் கூடிய, பி.வி.சி., பைப்புகள், பதிக்கப்பட்டிருந்தால், அப்பகுதிகளில், ஆணி அடிப்பதை தவிர்க்கவும்.

    மின்சார தீ விபத்திற்கேற்ற தீயணைப்பான்களை மட்டுமே, மின்சாதனங்களில், தீ விபத்து உண்டாகும் போது பயன்படுத்த வேண்டும்.உலர்ந்த மணல், கம்பளி போர்வை, உலர்ந்த ரசாயன பொடி அல்லது கரியமில வாயு ஆகிய தீயணைப்பான்களை பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தால் ஏற்பட்ட தீயை தண்ணீர் கொண்டு அணைக்கக்கூடாது.மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக மெயின் சுவிட்சை நிறுத்தி விட வேண்டும். மின்கம்பங்கள் சேதம், மழை காலங்களில் மின் கம்பிகள் அறுந்து கிடந்தால், 'மின்னகம்' மொபைல் எண் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
    • வட்டம் மற்றும் மண்டலங்களை உருவாக்குவது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் .

    பல்லடம் :

    பல்லடம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக அரசு 1.12. 2019 முதல் மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பிரிவுகளுக்கு மின் இணைப்பு எண்ணிக்கையையும், வட்டம் மற்றும் மண்டலங்களை உருவாக்குவது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்து மின்வாரிய தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். காத்திருப்பு போராட்டத்தை தமிழ்நாடு மின்வாரிய அனைத்து மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பல்லடம் கிளை நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.

    • ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைஉடனடியாக தொடங்க வேண்டும்.
    • 2022முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படியையும் வழங்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரியஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மின்வாரிய பணியாளர்களுக்கு 1.12.2019 முதல் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைஉடனடியாக தொடங்க வேண்டும். மின்வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மின்வாரியத்திற்கு சொந்தமான வட சென்னை அனல் மின்நிலையம் அலகு-3ன் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளைமுழுவதுமாக அயல்பணிக்கு ஒப்படைக்கும் முறையை கைவிட வேண்டும். மின்வாரியத்திற்குசொ ந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள தரவுகளை தனியார் ஏஜென்சியிடம்ஒப்படைக்கக்கூடாது. நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பையும் மற்றும் ஜனவரி 2022முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படியையும் வழங்க வேண்டும். தரமான தளவாட பொருட்கள்தடையின்றி தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் பி .என்.ரோட்டில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் இன்று காலை முதல் கா த்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • மின்சார வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பாவந்தூர் ஊராட்சி ஆக்கனூர் கிராமத்தில் பாவந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்சாமி(வயது 21). இவர் மின் வாரியத்திற்கு சொந்தமான 3 மின் கம்பம், மின் வயர் ஸ்டே கம்பி உள்ளிட்ட பொருட்களை அறுத்து அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக திருவெண்ணைநல்லூர் உதவி மின் பொறியாளர் கிராமப்புறம் விவேக் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • மின்வாரியத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
    • தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் அனைவருக்கும் நடப்பு ஆண்டு தீபாவளி போனஸ் வழங்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சரவணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மின்வாரியத்தில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த 2011 - 2020 வரையிலான 10 ஆண்டுகளாக வெறும் 18 ஒப்பந்த தொழிலாளர்களே இருப்பதாக கூறி அவர்களுக்கு மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பு ஆண்டு வரும் அக்டோபர்24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கவேண்டும். மாவட்டத்திலிருந்து இன்றளவும் ஒப்பந்த தொழிலாளர் விவர பட்டியல் மின்வாரிய தலைமை பொறியாளர் பணியமைப்பு அலுவலகத்துக்கு அனுப்பவில்லை.

    எனவே இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டும். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளரை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் சுமை உயர்ந்தது.
    • தமிழகத்தில் 20 ஆண்டுகளாக 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருந்தனர்.

    கோவை:

    மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மின்சார வாரிய நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியினால் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக சீர்கேடே இதற்கு காரணம். இதன் காரணமாக மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் சுமை உயர்ந்தது.

    ஆண்டுக்கு 16 ஆயிரத்து 500 கோடி வட்டி செலுத்தும் நிலைமைக்கு தமிழக மின்சார வாரியம் தள்ளப்பட்டது. அப்போது மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் மின்சார வாரியம் உற்பத்தி செய்தது.

    மீதி 2 பங்கு மின்சாரத்தை வெளியில் தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கி விட்டு தமிழகம் மின்மிகை மாநிலம் என்று கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தவறான பிரசாரம் மக்கள் மத்தியில் வைக்கப்பட்டது.

    தமிழகத்தில் 20 ஆண்டுகளாக 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருந்தனர். தமிழகம் மின்மிகை மாநிலம் என்றால் பதிவு செய்திருந்த அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பை வழங்கி இருக்கலாம். ஆனால் அப்படி கொடுக்கவில்லை. கிடப்பில் போடப்பட்டது.

    இந்த நிலையில் நாளை மற்றும் மறுநாள் சில அரசியல் கட்சியினர் மின்சார கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா?.

    மேலும் மின் கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடன் கொடுக்க கூடாது என ரிசர்வ் வங்கிக்கே மத்திய அரசு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கி உள்ளோம். அடுத்த கட்டமாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.

    தற்போது மின் கட்டணம் மாற்றத்தின் மூலமாக 2 கோடியே 28 லட்சம் பேருக்கு நிலை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் வகையில் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. டிரான்ஸ்பார்மரில் மீட்டர் பொருத்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு டெண்டர் வரை சென்று உள்ளது.

    எனவே மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தஞ்சை நீதிமன்ற சாலையில் உள்ள துணை மின் நிலையம் மற்றும் மின்பாதைகள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
    • இதேபோல் மார்க்கெட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நீதிமன்ற சாலையில் உள்ள துணை மின் நிலையம் மற்றும் மின்பாதைகள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    எனவே அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன்சாலை, தென்றல் நகர், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதர் நகர் ஆகிய இடங்களிலும், திலகர் திடல் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் மேலவீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி சாலை, மேல அலங்கம் ஆகிய பகுதிகளிலும், வண்டிக்கார தெரு மின்பாதையில் மின்வினியோகம் பெறும் ரெயிலடி, சாந்தபிள்ளைகேட், மகர் நோம்புச்சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வெள்ளைபிள்ளையார் கோவில், சேவியர் நகர், சோழன் நகர், ஆகிய இடங்களிலும், சர்க்யூட் ஹவுஸ் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் ஜி.ஏ.கெனல் சாலை, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன் சர்ச் சாலை, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இதேபோல் மார்க்கெட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பர்மா பஜார், ஜுபிடர் தியேட்டர் சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம்.ரஹ்மான் நகர், அரிசிக்கார தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு ஆகிய பகுதிகளிலும், கீழவாசல் மின்பாதையில் பழைய மாரியம்மன் கோவில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரதெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜ பாளையம் ஆகிய பகுதிகளிலும், வ.உ.சி.நகர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் இடங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது
    • மின் நுகர்வோர்கள் கலந்து கொள்ளலாம்.


    திருப்பூர்,

    தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்டசெயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- அவினாசி மின்வாரிய அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். மின்நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தாராபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கிறது. மின் நுகர்வோர்கள் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்படடுள்ளது.

    மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்த போது எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    கன்னிவாடி:

    கன்னிவாடி அருகேயுள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் முத்தையா (வயது 45). இவர் அம்மாபட்டியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ரெட்டியபட்டியை சேர்ந்த சின்னப்பொண்ணு என்பவரின் விவசாய தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முத்தையா மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவலறிந்த கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முத்தையாவுக்கு ரேவதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். 
    ×