search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amitshah"

    • அனைத்தையும் அவசர அவசரமாக செய்வதால் தவறு நடக்கிறது.
    • பாராளுமன்ற பாதுகாப்பு பணியாளர்களுக்கான 125 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்றம் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்ட தமிழக எம்பிக்களான கனிமொழி, ஜோதிமணி, சுப்பராயன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்க மறுக்கின்றனர்.

    * அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பாஸ் வாங்கித் தந்த எம்.பி.யின் பெயரை கூற சபாநாயகர் மறுக்கிறார்.

    * பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து கொடுத்த நோட்டீஸை காற்றில் பறக்கவிட்டனர்.

    * நாளைக்கு எங்களையும் சஸ்பெண்ட் செய்வார்கள்.

    * அனைத்தையும் அவசர அவசரமாக செய்வதால் தவறு நடக்கிறது.

    * விசாரணை நடத்துவதாக கூறுகின்றனர். என்ன விசாரணை நடத்த போகிறார்கள் என தெரியவில்லை.

    * பாராளுமன்ற பாதுகாப்பு பணியாளர்களுக்கான 125 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 301 பேரில் 176 பேர்தான் பணியில் உள்ளனர்.

    * பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழைக்கால கூட்டத்தொடரின்போது அமித் ஷா மசோதாக்களை அறிமுகம் செய்தார்.
    • நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகளுடன் மீண்டும் அவை அறிமுகப்படுத்தப்படும்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மூன்று முக்கியமான குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றம் குறித்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

    இது தொடர்பான பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023, பாரதிய நயாயா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்ஷியா 2023 ஆகிய மூன்று மசோதாகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

    இம்மசோதாக்கள் முறையே இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 1860, குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) 1973 மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1987 ஆகியவைகளுக்கு மாற்றாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றம் முடிவு திரும்பப்பெற இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகளுடன் மீண்டும் அவை (பழைய பெயர்) அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேசபக்தி அலையை மக்களிடம் தட்டி எழுப்பியவர்.
    • பாரதி அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதியவர்.

    புதுடெல்லி:

    மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்த நாளையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சுப்பிரமணிய பாரதி அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

    ஒரு கவிஞரான மகாகவியின் படைப்புகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே உலுக்கியது. தேசபக்தி அலையை மக்களிடம் தட்டி எழுப்பியவர். பாரதி அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதியவர். அவரது வாழ்க்கை சரித்திரமும் அவரது செயல்களும் என்றென்றும் நம்மை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.

    • ஐந்து மாநிலத் தேர்தலில் பா.ஜனதா மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைத்தது.
    • மக்களை தேர்தலுக்கு இந்த மாநிலத் தேர்தல்கள் முன்னோட்டமாக கருதப்பட்டது.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கு முன்னோட்டம் என அரசியல் விமர்சகர்களால் கருதப்பட்ட ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தலில் பா.ஜனதா மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது.

    இதனால் மக்களவை தேர்தல் பா.ஜனதா சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதற்கிடையே பா.ஜனதாவுக்கு எதிராக உருவாகியுள்ள இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலில் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் பீகார் மாநில முன்னாள் முதல்வரும், அரசியல் மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவிடம் ஐந்து மாநில தேர்தல் அடுத்த மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதலாமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு லாலு பிரசாத் யாதவ் "அவர்கள் (பா.ஜனதா) எப்படி வெற்றி பெற முடியும். மக்களவை தேர்தல் எங்களுடையதாக இருக்கும. அது மிகவும் பரந்த நிலையாக இருக்கும்" என்றார்.

    மேலும், பாராளுமன்றத்தில் அமித் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசும்போது, "ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது. ஒட்டுமொத்த காஷ்மீரையும் கட்டுக்குள் கொண்டு வராமல், போர் நிறுத்தம் அறிவித்தது நேருவின் தவறு" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்து லாலுவிடம் கேட்டதற்கு "அமித் ஷாவிற்கு என்ன தெரியும்? அவருக்கு எதுவுமே தெரியாது" என்றார்.

    • தமிழகத்திற்கு வெள்ளத்தடுப்பு திட்டத்திற்காக முதல் தவணையாக இதே தொகை வழங்கப்பட்டுள்ளது.
    • ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு 493.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.

    லட்சக்கணக்கான வீடுகள் இன்னும் தண்ணீருக்குள் உள்ளன. 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக பாதிப்பை சந்தித்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்துள்ளன.

    பால், குடிநீர் பற்றாக் குறையால் மக்களிடம் கடும் தவிப்பு நிலவுகிறது. வாகனப் போக்குவரத்து இன்று முதல் 90 சதவீதம் இயங்கத் தொடங்கியுள்ளது.

    பாதிப்படைந்த பல பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினார். வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அரசு எந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீர் செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிகமான மழை பெய்ததாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

    எனவே தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி தொகையை உடனே வழங்க வேண்டும் என்று அதில் உதவி கேட்டிருந்தார்.

    இந்த கடிதத்தை டி.ஆர்.பாலு எம்.பி. இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வழங்கினார். அப்போது பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புயல் சேத விவரங்களை கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு முதல் கட்டமாக ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

    மாநில பேரிடர் நிவாரண நிதியின் 2-வது தவணையில் மத்திய அரசின் பங்கான ரூ.450 கோடியை முன்கூட்டியே மத்திய அரசு விடுவித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

    மிச்சாங் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்புகள் வேறுபட்டாலும் இரு மாநிலங்களிலும் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநில அரசுகளுக்கு உதவ பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியின் 2-வது தவணை தொகையை முன்கூட்டியே வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்துக்கு ரூ.450 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த இரு மாநிலங்களுக்கும் ஏற்கனவே முதல் தவணை தொகை வழங்கப்பட்டு உள்ளது. புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர நான் பிரார்த்திக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.

    விரைவில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இதேபோல் முதல் முறையாக சென்னைக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்திற்கு ரூ.561.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமித்ஷா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடந்த 8 ஆண்டுகளில் 3-வது பெரிய வெள்ளத்தை எதிர் கொண்டு உள்ளது. அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்திற்கு தேசிய பேரிடர் தடுப்பு நிதியத்தின் கீழ் சென்னைக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள நடவடிக்கைகளுக்கு ரூ.561.29 கோடி ஒதுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

    இதில் மத்திய அரசு உதவியாக ரூ.500 கோடி வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் சென்னை மழை வெள்ளத்தை சமாளிக்க கூடியதாக மாற உதவும். நகர்ப்புற வெள்ளத் தடுப்பு முயற்சியில் இது முதன்மையானது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    மாநில பேரிடர் நிதியின் கீழ் ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை நகர்புற வெள்ள தடுப்பு நிதியாக ரூ.561.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் மத்திய அரசு ரூ.1011.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க ஆட்சி அமைத்ததும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
    • தன்னலம் பார்க்காமல் சுயநலம் பார்க்காமல் செயல்படுபவர்கள் தி.மு.க.வினர் தான்.

    ஊட்டி:

    ஊட்டியில் நடந்த இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    இந்தியாவிலேயே கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிய ஒரே கட்சி தி.மு.க. தான். தி.மு.க.வில் எத்தனை அணிகள் இருந்தாலும் முதன்மையான அணி இளைஞரணி தான்.

    நாட்டிலேயே இளைஞரணி என்பது முதன் முதலில் தி.மு.க.வில் தான் தொடங்கப்பட்டது.

    2 மாதத்திற்கு முன்பு மதுரையில் மாநாடு நடந்தது. ஒரு மாநாடு எப்படி நடக்க கூடாது என்பதற்கு அந்த மாநாடே உதாரணம். மதுரையில் நடந்தது கேலிக்கூத்தான மாநாடு.

    பா.ஜ.க.வினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம் தான். என்னை பற்றியே பேசி கொண்டிருக்கின்றனர். நான் ஒரு அரங்கத்தில் பேசினேன். அதில் பிறப்பால் அனைவரும் சமம் என்று மட்டுமே பேசினேன். ஆனால் நான் பேசாததை பேசியதாக திரித்து கூறி வருகின்றனர்.

    எங்கு போனாலும் தி.மு.க.வை பற்றி பேசுவதே அமித்ஷாவுக்கு வேலையாக உள்ளது. பொய் குற்றச்சாட்டுகளை சொல்வதில் அமித்ஷா வல்லவர். அதுபோல பிரதமரும் இதையே பேசி வருகின்றனர்.

    ஒட்டுமொத்த தமிழ்நாடும் கலைஞரின் குடும்பம் தான்.

    தன்னலம் பார்க்காமல் சுயநலம் பார்க்காமல் செயல்படுபவர்கள் தி.மு.க.வினர் தான்.

    தி.மு.க ஆட்சி அமைத்ததும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தி.மு.க. அளித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    பள்ளி மாணவர்களின் பசியை போக்கிய ஆட்சி தான் தி.மு.க. மாணவ சமுதாயத்தினருக்கு பல்வேறு நலத்திடங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். தமிழ்நாட்டு குழந்தைகளின் பாதுகாவலராக தி.மு.க அரசு உள்ளது.

    மத்திய அரசு 9 வருடங்களில் செய்த ஊழல்களை சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலமாகிவிட்டது. மத்திய அரசால் பலன் அடைந்தது என்று பார்த்தால் அது அதானி குடும்பம் மட்டுமே. கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தல் போன்று, 2024 பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • டெல்லியில் இன்று இரவு பா.ஜ.க. மேலிடத் தலைவர்களை அண்ணாமலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    • பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணியை முடிவு செய்வோம் என்று அறிவித்துள்ளன.

    தமிழகத்தில் அ.தி.மு.க.- பாரதிய ஜனதா இடையே இருந்த கூட்டணி முறிந்து போனதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்த கடுமையான விமர்சனங்கள்தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களை தொடர்ந்து அண்ணாமலை விமர்சித்ததால் ஏற்கனவே கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜனதா இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. விலகி சென்றதால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை டெல்லிக்கு வருமாறு அழைத்துள்ளனர். அதை ஏற்று இன்று காலை அண்ணாமலை கோவையில் இருந்து டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால் கோவையில் தூய்மை பணி திட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றதால் காலையில் அவர் செல்வதாக இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3.20 மணிக்கு கோவையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் அண்ணாமலை புறப்பட்டு செல்கிறார்.

    டெல்லியில் இன்று இரவு பா.ஜ.க. மேலிடத் தலைவர்களை அண்ணாமலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இல்லையெனில் நாளை காலை முதல் மதியம் வரை அடுத்தடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர்களான அமித்ஷா, ஜே.பி.நட்டா, பி.எல். சந்தோஷ் ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    இதற்காக அண்ணாமலை அறிக்கை ஒன்றை தயார் செய்து கொண்டு செல்வதாக தெரிய வந்துள்ளது. அந்த அறிக்கையில் அவர் தமிழக பா.ஜ.க. தொடர்பான பல்வேறு தகவல்களை தொகுத்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழக பா.ஜ.க.வில் முடிவுகள் எடுக்கப்பட்டால் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று வலியுறுத்த உள்ளார்.

    இதுவரை இருந்த அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னே்றறக் கழகம், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இடம்பெற்று இருந்தன.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்டதும், இந்த தோழமைக் கட்சிகள் என்ன முடிவு எடுப்பது? யார் பக்கம் போவது? என்பதில் தொடர்ந்து குழப்பத்துடன் உள்ளன. கூட்டணி தொடர்பாக இந்த கட்சிகள் இதுவரை உறுதியாக முடிவு எடுக்கவில்லை.

    பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணியை முடிவு செய்வோம் என்று அறிவித்துள்ளன. எனவே இந்த கட்சிகள் அ.தி.மு.க. பக்கம் சாயுமா? அல்லது பா.ஜனதா பக்கம் சாயுமா? என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது.

    ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் ஆகியோர் தற்போது வரை நடுநிலையுடன் உள்ளனர். அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி நீடிக்க வேண்டும் என்பது இவர்களின் விருப்பமாக உள்ளது. மீண்டும் கூட்டணி ஏற்படாவிட்டால் இவர்கள் பா.ஜனதா பக்கம் சாய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் தோழமை கட்சிகளை அரவணைத்து 3-வது அணியை உருவாக்கலாம் என்று அண்ணாமலை மேலிடத் தலைவர்களிடம் நாளை வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டால்தான் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று அண்ணாமலை வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க. ம.தி.மு.க., ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி, பாரிவேந்தர் கட்சி, ஈஸ்வரன் கட்சி இடம்பெற்றிருந்தன. அந்த தேர்தலின் போது பா.ஜனதாவுக்கு 18 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன.

    தற்போது உள்ள சூழ்நிலையில் 20 முதல் 23 சதவீத வாக்குகளை பா.ஜனதா பெற முடியும் என்று அண்ணாமலை தனது அறிக்கையில் சுட்டிக்காட்ட உள்ளார். டெல்லி மேலிடத் தலைவர்கள் அண்ணாமலையின் இந்த கூட்டல், கழித்தல் கணக்குகளை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் 3-வது அணி உருவாக வாய்ப்பு ஏற்படலாம்.

    2 நாள் பயணமாக டெல்லி செல்லும் அண்ணாமலை தனது திட்டத்தை டெல்லி மேலிடத் தலைவர்களிடம் விலக்கி கூறி அனுமதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நாளை மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வர உள்ளார். நாளை மறுநாள் சென்னையில் பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    அந்த கூட்டத்தில் டெல்லி மேலிட தலைவர்களின் கருத்துக்களை அண்ணாமலை விளக்கி கூறுவார். 3-வது அணிக்கு பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் அனுமதி அளிக்கும் பட்சத்தில் கூட்டணி கட்சிகள் என்ன முடிவு எடுக்கும் என்பது அடுத்தக்கட்ட எதிர்பார்ப்பாக அமையும்.

    புதிய அணிக்கு பா.ஜனதா முயற்சி செய்தால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சம்பவங்கள் நிகழ வாய்ப்பு உள்ளன.

    • பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க.வுக்கு இணையான இடங்களில் போட்டியிட காய் நகர்த்தியுள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடனான சந்திப்பின் போது கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாகவும் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.

    தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பலமான அணியை உருவாக்க பாரதிய ஜனதா கட்சி காய் நகர்த்தி வருகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று உள்ள பாரதிய ஜனதா கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான பணிகளை அந்தக் கட்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது.

    இதன் எதிரொலியாகவே தமிழகத்தில் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தலைமை பதவியில் முழுமையாக அமர்ந்த பிறகு முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதால் தனது செல்வாக்கு என்ன? என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    மதுரையில் பிரமாண்டமான முறையில் அ.தி.மு.க. மாநாட்டை நடத்திக் காட்டிய எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார். பாரதிய ஜனதாவுடன் இணைந்து பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் அ.தி.மு.க. கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி என்ற முறையில் கூடுதல் இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியும் கூடுதல் இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய மந்திரியுமான அமித்ஷாவை தனியாக சந்தித்து பேசினார். அப்போது இருவரும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க.வுக்கு இணையான இடங்களில் போட்டியிட காய் நகர்த்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் (அ.தி.மு.க.) 20 இடங்களில் போட்டியிடுங்கள்.

    எங்களுக்கு 20 தொகுதிகளை கொடுத்து விடுங்கள். இந்த இடங்களில் நாங்களும் போட்டியிட்டுக் கொண்டு கூட்டணி கட்சிகளுக்கும் பிரித்து கொடுத்து விடுகிறோம் என்று கேட்டதாக தெரிகிறது.

    அமித்ஷாவின் இந்த கூட்டணி வியூகத்துக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிக்காமல், கூட்டணியில் யார்-யாருக்கு எத்தனை இடங்கள்? என்பது பற்றி பின்னர் பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த கட்சிகளை அப்படியே மீண்டும் கூட்டணியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.

    குறிப்பாக தே.மு.தி.க.வை மீண்டும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க.வை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை என்று கூறியதாகவும் தெரிகிறது.

    இதன் மூலம் கூட்டணியை பலப்படுத்த அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி இருவருமே வரும் நாட்களில் தீவிரம் காட்ட களம் இறங்க உள்ளனர்.

    இதன்படி அமித்ஷா அடுத்த மாதம் இறுதியில் அல்லது நவம்பரில் தமிழகத்துக்கு வருகை தர திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது அவர் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசி கூட்டணியை உறுதி செய்ய முடிவு செய்துள்ளார். இதன் மூலம் அடுத்தடுத்த மாதங்களில் தமிழகத்தில் கூட்டணி தொடர்பான காய் நகர்த்தல்கள் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடனான சந்திப்பின் போது கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாகவும் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    கொடநாடு கொலை-கொள்ளை விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தனது பெயர் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் தன்னை களங்கப்படுத்த சிலர் திட்டமிட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி எண்ணுகிறார்.

    இதை தொடர்ந்து வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அவர் ஏற்கனவே கூறியிருக்கிறார். இது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

    பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் தனது மீதான விமர்சனங்கள் விஸ்வரூபம் எடுப்பதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.

    இதன் காரணமாகவே அவர் தன் மீது களங்கம் கற்பிப்பவர்கள் மீது வழக்கு தொடருவேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடனான சந்திப்பின் போது கொடநாடு விவகாரம் பற்றியும் பேசி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • சுய விளம்பரத்துக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் உள்நோக்கத்துடன் மத ரீதியான பிளவுகளை உண்டாக்கும் வகையில் தி.மு.க. செயல்படுகிறது.
    • மக்களிடையே ஒற்றுமை உணர்வை குலைக்கும் போக்கை தி.மு.க. தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

    சென்னை:

    சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுக்கு ஒப்பிட்டு அதை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னரிடம் பா.ஜனதா சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

    இதற்கிடையில் சனாதனம் பற்றிய அமைச்சரின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தமிழகத்தில் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜனதா ஊடக பிரிவின் முன்னாள் தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர் உதயநிதியின் பேச்சு இந்து மதத்தின் புனிதத்தை இழிவுபடுத்தும் வகையில் தவறான வகையில் மக்களின் பொது அமைதிக்கும் தேச ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    சுய விளம்பரத்துக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் உள்நோக்கத்துடன் மத ரீதியான பிளவுகளை உண்டாக்கும் வகையில் தி.மு.க. செயல்படுகிறது.

    மக்களிடையே ஒற்றுமை உணர்வை குலைக்கும் இந்த போக்கை தி.மு.க. தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இப்போது இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.

    இதன் பின்னணி, பின்புலத்தின் நோக்கம் கண்டறியப்பட வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பா.ஜனதாவின் தேசிய தலைமையானது பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • கடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அல்லாத கட்சிகள் ஜெயித்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுவை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவடே, தேசிய செயலாளர் சத்திய குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய். ஜெ.சரவணன்குமார் செல்வகணபதி எம்.பி. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளர்களான வினோத் தாவடே, சத்தியகுமார் ஆகியோர் பேசும்போது அனைத்து தொகுதிகளிலும் கிளைகளை வலிமைப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.

    வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் புதுச்சேரிக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    பா.ஜனதாவின் தேசிய தலைமையானது பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அல்லாத கட்சிகள் ஜெயித்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அந்த தொகுதிகளை கைப்பற்ற குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறது. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி உள்ள நிலையில் புதுவை எம்.பி. தொகுதியை கைப்பற்றியே தீரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

    ஏற்கனவே, மத்திய மந்திரி எல்.முருகனை பொறுப்பாளராக நியமித்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அவரும் அவ்வப்போது புதுச்சேரி வந்து கூட்டங்களை நடத்துவது, பொதுமக்களை சந்தித்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

    • அமித்ஷா உள்பட பா.ஜனதாவில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் வாருங்கள்.
    • சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான் அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை வீராம்பட்டினத்தில் கருணாநிதி சிலையை முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்தார்.

    அதைத்தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-

    கருணாநிதி தனது அறிவால், ஆற்றலால், தியாகத்தால், உழைப்பால் தமிழக முதல்-அமைச்சராக இந்திய அரசியலுக்கு ஆற்றியுள்ள பங்கு ஏராளம். அவர் எத்தனையோ பிரதமர், ஜனாதிபதிகளை உருவாக்கியுள்ளார்.

    அகில இந்திய அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் கருணாநிதியின் பங்கு அதிகம்.

    சனாதனம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நான் புதுவையிலிருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சவால் விடுகிறேன்.

    அமித்ஷா உள்பட பா.ஜனதாவில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் வாருங்கள். டெல்லியில் திறந்த வெளியில் விவாதிப்போம். தி.மு.க சார்பில் நானும் பேசுகிறேன்.

    நாங்கள் சனாதனம் வேண்டாம் என போராடியதால்தான் தமிழிசை கவர்னர், வானதி சீனிவாசன் வக்கீல், அண்ணாமலை ஐ.பி.எஸ் அதிகாரியாக ஆனார்கள்.

    சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான் அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ளார். இல்லாவிட்டால் வேறு வேலைக்கு சென்றிருப்பார்.

    மோடியை விட அமித்ஷாவை விட பா.ஜனதாவில் உள்ள அனைத்து அமைச்சர்களையும் விட ஆர்.எஸ்.எஸ்.சில் இருப்பவர்களை விட வெள்ளையர்கள் நல்லவர்கள், நாணயமானவர்கள், யோக்கியமானவர்கள். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டின் பிரதமர் இங்கு வந்து, எங்கள் அரசு உங்களுக்கு பாவம் செய்துவிட்டது என கூறி மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார்.

    ஆனால் மணிப்பூரில் 200-க்கும் மேற்பட்டவர்களை கொன்றுவிட்டு, பழங்குடியினத்தை சேர்ந்த இளம்பெண்களை ஆடைகள் இல்லாமல் அழைத்து சென்று காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டனர்.

    இதை நியாயப்படுத்தும் அங்குள்ள முதல்-அமைச்சரை பாராளுமன்றத்தில் மோடி, அமித்ஷா பாராட்டுகின்றனர். ஊழலும், மதவாதமும் வளர்ந்து கொண்டிருக்கிற இந்த ஆட்சியை தூக்கி எறிய நாம் எல்லோரும் உறுதியேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குஜராத் ஹராமி நாலா பகுதி மற்றும் அங்குள்ள எல்லை கண்காணிப்பு சாவடி பகுதிகளில் ஆய்வு
    • இந்தியாவின் சர்வதேச எல்லை பகுதிக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார்

    மத்திய மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக குஜராத் சென்றார். அப்போது குஜராத் ஹராமி நாலா பகுதி மற்றும் அங்குள்ள எல்லை கண்காணிப்பு சாவடி பகுதிகளில் ஆய்வு செய்தார். அங்குள்ள எல்லை பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பார்வையிட்டார்.

    கட்ச் பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப்படையின் வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

    ரூ.257 கோடி செலவில் கட்டப்படும் இந்த வளாகத்தில் நிர்வாக கட்டிடம், உணவகம், அலுவலர்கள் மெஸ், பயிற்சி மையம், அணிவகுப்பு மைதானம் மற்றும் 450-க்கும் மேற்பட்ட உப கரணங்களை பராமரிக்கும் பணிமனை ஆகியவை அடங்கும்.

    மேலும், ஹராமி நாலா மற்றும் எல்லைப் புறக்காவல் நிலையத்தை பார்வையிட்ட அவர், மேற்கில் உள்ள இந்தியாவின் சர்வதேச எல்லை பகுதிக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார். இந்த எல்லையில் பாதுகாப்புப் படையினருக்கு 7 கண்காணிப்பு கோபுரங்களை உருவாக்க இருப்பதாக அமித்ஷா தெரிவித்தார்.

    ×