என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சனாதன சர்ச்சையின் பின்னணி பற்றி மத்திய அரசு விசாரிக்க வேண்டும்: அமித்ஷாவுக்கு பா.ஜனதா கடிதம்
- சுய விளம்பரத்துக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் உள்நோக்கத்துடன் மத ரீதியான பிளவுகளை உண்டாக்கும் வகையில் தி.மு.க. செயல்படுகிறது.
- மக்களிடையே ஒற்றுமை உணர்வை குலைக்கும் போக்கை தி.மு.க. தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
சென்னை:
சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுக்கு ஒப்பிட்டு அதை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னரிடம் பா.ஜனதா சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
இதற்கிடையில் சனாதனம் பற்றிய அமைச்சரின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தமிழகத்தில் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜனதா ஊடக பிரிவின் முன்னாள் தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர் உதயநிதியின் பேச்சு இந்து மதத்தின் புனிதத்தை இழிவுபடுத்தும் வகையில் தவறான வகையில் மக்களின் பொது அமைதிக்கும் தேச ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
சுய விளம்பரத்துக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் உள்நோக்கத்துடன் மத ரீதியான பிளவுகளை உண்டாக்கும் வகையில் தி.மு.க. செயல்படுகிறது.
மக்களிடையே ஒற்றுமை உணர்வை குலைக்கும் இந்த போக்கை தி.மு.க. தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இப்போது இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.
இதன் பின்னணி, பின்புலத்தின் நோக்கம் கண்டறியப்பட வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






