search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nainar nagendran"

    • நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.
    • வழக்கு விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.

    தாம்பரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நயினார் நாகேந்திரன் ஓட்டலில் வேலை பார்த்த சதீஷ், பெருமாள் உள்பட3 பேரை கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 3 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன், ஆசைதம்பி, சென்னை அபிராமிபுரத்தை சேர்ந்த பா.ஜனதா மாநில தொழில் துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஜெய்சங்கர், நவீன், பெருமாள் உள்ளிட்டோர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து நேற்று ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் ஆகியோர் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஆஜரானார்கள்.

    அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 2-வது சம்மன் அனுப்ப ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு.
    • நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்றுடன் இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேசிய கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் மாவட்டந்தோறும் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடும் பா.ஜனதா வெற்றி முனைப்பில் தீவிர வாக்கு வேட்டை நடத்தி வருகிறது.

    வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி வரை 7 முறை தமிழகத்திற்கு வந்து பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பேசியுள்ள நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக இன்று நெல்லை வருகிறார்.

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களிடையே பேச உள்ளார். அவர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே நெல்லையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    இந்நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக அவர் நெல்லைக்கு மீண்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த பொதுக்கூட்டத்தில் குமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மற்றும் தென்காசி தொகுதி கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரதமர் மோடி பேச உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • சென்னையில் 2 இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • பல்வேறு இடங்களில் இருந்து பணத்தை வாங்கி மொத்தமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் வைத்து பைகளில் அடுக்கி உள்ளனர்.

    தாம்பரம்:

    சென்னையில் இருந்து நெல்லை செல்லும் ரெயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்லப்படுவதாக பறக்கும் படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.

    இந்த பணம் நெல்லை தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக எடுத்துச் செல்லப்படுவதாகவும் தகவல் பரவியது.

    இதைத் தொடர்ந்து அந்த பணத்தை பிடிக்க பறக்கும் படையினர் அதிரடியாக களம் இறங்கினார்கள். நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்வதற்காக தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இதையடுத்து தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயிலை மடக்கி ரூ.4 கோடி பணத்தை கைப்பற்ற பறக்கும் படையினர் முடிவு செய்தனர்.

    நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.40 மணி அளவில் தாம்பரம் ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அங்கு ரெயிலை நிறுத்தி சோதனை செய்வதற்காக பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் தயார் நிலையில் இருந்தனர்.

    பறக்கும் படை அதிகாரியான செந்தில்பாலமணி, துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, உதவி கமிஷனர் நெல்சன் மற்றும் போலீஸ் படையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

    எஸ்-1 பெட்டியில் இருந்து எஸ்-10 பெட்டி வரைக்குள் ஏதாவது ஒரு ரெயில் பெட்டியிலேயே ரூ.4 கோடி பணத்தை எடுத்துச் செல்பவர்கள் பயணிப்பதாகவும் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவலை தெரிவித்தவர் கூறி இருந்தார்.

    இதையடுத்து பறக்கும் படையினர் சுமார் ½ மணி நேரம் ரெயிலை நிறுத்தி பயணிகளின் உடமைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது எஸ்-7 பெட்டியில் பயணம் செய்த 3 பேர் வைத்திருந்த 6 பைகளில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பறக்கும் படை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து அந்த பணத்தை அப்படியே பைகளோடு கைப்பற்றி பறக்கும் படை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். தாம்பரம் போலீஸ் நிலையத்துக்கு பலத்த பாதுகாப்போடு பைகளை கொண்டு சென்ற பறக்கும் படையினர் பணம் எண்ணும் எந்திரத்தின் மூலமாக எவ்வளவு பணம் உள்ளது? என்று எண்ணிப் பார்த்தனர்.

    அப்போது அதில் ரூ.3 கோடியே 99 லட்சம் பணம் இருந்தது. இந்த பணத்தை தாம்பரம் தாசில்தார் நடராஜனிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    ரூ.4 கோடி பணத்தை எடுத்துச்சென்ற 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது பெயர் சதீஷ், நவீன், பெருமாள் என்பது தெரிய வந்தது. இவர்களில் சதீசும், நவீனும் சகோதரர்கள் ஆவர். சதீஷ் பா.ஜனதா கட்சி நிர்வாகியாக உள்ளார்.

    இருவரும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் வேலை செய்து வருவதும், பெருமாள் என்பவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும் தெரிய வந்தது.

    3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நெல்லை தொகுதி தேர்தல் செலவுக்காக பணத்தை கொண்டு செல்வதாக கூறினார்கள். சட்ட விரோதமாக ரெயிலில் கடத்தப்பட்ட இந்த பணத்துக்கு கணக்கு ஏதும் இல்லாத நிலையில் 3 பேர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    நெல்லையில் போய் இறங்கியதும் அங்கு ஒருவர் வருவார். அவரிடம் பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறியே எங்களிடம் இவ்வளவு பணமும் கொடுத்து அனுப்பப்பட்டிருப்பதாகவும் 3 பேரும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து இந்த பணத்தை நெல்லையில் வாங்குவதற்கு தயாராக இருந்த நபர் யார்? என்பது பற்றியும், பணம் எங்கிருந்து எடுத்து வரப்பட்டது? என் பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

    கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் இருந்தே ரூ.4 கோடி பணமும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் நெல்லை தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று பறக்கும் படை அதிகாரிகள் கருதுகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து ரூ.4 கோடி பணத்தின் முழு பின்னணியையும் அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.

    இதன்படி சென்னையில் 2 இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் என்பவர் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.

    அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள புளுடைமண்ட் ஓட்டலிலும் இன்று பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இந்த 2 இடங்களிலும் மேலும் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ரூ.4 கோடி பணம் எப்படி ஒரே இடத்துக்கு கொண்டு வரப்பட்டது? எங்கெல்லாம் வசூல் செய்யப்பட்டது? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்து உள்ளன. சென்னை கிரீன்வேஸ் ரோடு, யானைக்கவுனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பணத்தை வாங்கி மொத்தமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் வைத்து பைகளில் அடுக்கி உள்ளனர்.

    பின்னர் ரெயில் மூலமாக பணத்தை எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டு கைதான 3 பேருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    • தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திட குழு அமைத்துள்ளது பாஜக
    • இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திடவும். ஒருங்கிணைத்திடவும் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என பாஜக அறிவித்துள்ளது.

    இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இக்குழுவில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேத்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.இராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    ஏற்கனவே பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சபாநாயகர் மரவை மீறியதால், கவர்னர் புறப்பட்டு சென்றார்.
    • தேசிய கீதத்தை முதலில் பாடுவதில் தவறில்லை.

    சென்னை:

    சட்டசபை நிகழ்விற்கு பின்னர் வெளியே வந்த பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்தின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கவர்னர் முறைப்படி சட்டசபைக்கு அழைக்கப்பட்டார்.

    * கோட்சே, சாவர்க்கர் வழி வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் இல்லை தமிழ்நாட்டு சட்டமன்றமும் சரி என்று சபாநாயகர் கூறினார்.

    * சபாநாயகர் மரவை மீறியதால், கவர்னர் புறப்பட்டு சென்றார்.

    * பாஜக வெளிநடப்பு செய்திருக்கலாம், ஆனால் அவை மாண்புக்கான அமர்ந்திருந்தோம்.

    * கவர்னர் கூறிய திருத்தங்களை சபாநாயகர் ஏற்கவில்லை.

    * அவை மரபை மீறி, நிதி கோரிக்கை மற்றும் சாவர்க்கர், கோட்சே பற்றி சபாநாயகர் பேசி உள்ளார்.

    * கோட்சே என்று பேசி மரபில் இல்லாத வழியை சபாநாயகர் பின்பற்றி உள்ளார்

    * தேசிய கீதத்தை முதலில் பாடுவதில் தவறில்லை.

    * சபாநாயகர் தேவையில்லாத விஷயங்களை பேசியதால், கவர்னர் அவையில் இருந்து வெறியேறினார் என்று அவர் கூறினார்.

    • மோசடியாக ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயன்ற பாஜக எம்எல்ஏ மகன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
    • இந்திய தண்டனை சட்டம் 463, 470 ஆகியவற்றின்படி பத்திரப்பதிவு மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பா.ஜனதாவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் இருந்து வருகிறார். இவரது மூத்த மகன் நயினார் பாலாஜி.

    இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சென்னை விருகம்பாக்கம் அருகே ஆற்காட்டில் உள்ள சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.3 ஏக்கர் நிலத்தை ரூ.46 கோடிக்கு பேரம் பேசி அதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி மோசடியாக ஒப்பந்த பத்திரம் போட்டதாகவும், அதற்கு முன்தொகையாக ரூ.2.50 கோடி கொடுத்ததாகவும் அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்திருந்தது.

    அவர்களது புகாரில், ஆற்காட்டில் தற்போது சர்ச்சைக்குரிய இடம் குலாப்தாஸ் நாராயணன் என்பவரது பேரன் ஜெயேந்திர ஓராவுக்கு சொந்தமானது என்று கூறி அவரிடம் இருந்து இளையராஜா என்பவர் அந்த இடத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ந்தேதி பத்திரம் கிரயம் முடித்துள்ளார். பின்னர் அந்த இடத்தை அவரிடம் இருந்து வாங்க முடிவு செய்து நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகன் நயினார் பாலாஜி ஆகியோர் இணைந்து நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலியாக ஒப்பந்த பதிவு செய்துள்ளனர்.

    இதில் குலாப்தாஸ் நாராயணன் என்பவர் கடந்த 1946 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் வைத்து இறந்துவிட்டார் என்று கூறி அதற்கான இறப்பு சான்றிதழை இளையராஜாவும், நயினார் பாலாஜியும் காட்டுகின்றனர். ஆனால் அவர் சென்னையில் கடந்த 1944-ம் ஆண்டு இறந்ததாக சென்னை மாநகராட்சி இணையதளத்தில் இறப்பு சான்றிதழ் ஆதாரம் இருக்கிறது. எனவே இந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும். மோசடியாக ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயன்ற நயினார் பாலாஜி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை கவனத்தில் எடுத்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, இதுகுறித்து 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி மோசடி நிரூபணமாகும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் முழுமையான விசாரணைக்கு பின்னர், இந்திய தண்டனை சட்டம் 463, 470 ஆகியவற்றின்படி இந்த பத்திரப்பதிவு மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

    இதையடுத்து நெல்லை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வின் மகன் நயினார் பாலாஜி பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    • காவல்துறை அதிகாரிகளுக்கு அதிக மன உளைச்சல் உள்ளது.
    • காவல்துறைக்கு சுதந்திரமாக செயல்பட முழு அதிகாரத்தை வழங்க வேண்டும்.

    நெல்லை:

    பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொது சிவில் சட்டம் எல்லோருக்கும் வேண்டும். உங்களுக்கு ஒரு சட்டம், எனக்கு ஒரு சட்டம் என்பது ஏற்புடையதாக இருக்காது. பொது சிவில் சட்டம் நாட்டில் கண்டிப்பாக தேவை.

    பா.ஜ.க. தலைவர்கள் எங்களுடன் கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஓ.பி.எஸ். தெரிவிப்பதாக கூறுகின்றனர்.

    தேர்தல் காலங்களில் எங்களோடு இருந்தவர்களை நாங்கள் நினைத்துப் பார்ப்போம் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்லியுள்ளார். ஆனால் ஓ.பி.எஸ். சொல்வது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை கலைக்க போவதாக யாரும் இதுவரை சொல்லவில்லை. ஆட்சி கலைப்பது தொடர்பான வார்த்தையை முதலமைச்சர் பயன்படுத்தி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    காவல்துறை அதிகாரிகளுக்கு அதிக மன உளைச்சல் உள்ளது. அவர்களின் மன உளைச்சலை குறைப்பதற்கு முதலமைச்சர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு சுதந்திரமாக செயல்பட முழு அதிகாரத்தை வழங்க வேண்டும்.

    ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நாளில் இருந்து மகளிர் உதவித்தொகை ரூ. 1000 வழங்கப்படும் என தெரிவித்தார்கள். இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்ற பிறகு அண்ணா பிறந்த நாளில் கொடுக்கப் போகிறோம் என சொல்லி உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு மகளிர் உரிமைத்தொகை கொடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மகளிர் உரிமைத்தொகையை அனைத்து மகளிர்க்கும் கொடுக்க வேண்டும்.

    பொது மக்கள் மகளிர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த திட்டம் பெயரளவில் தான் செயல்படுத்தப்படும். பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற்றபின் இந்த திட்டம் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் 48.90 கோடி விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
    • நடிகர்கள் மட்டுமல்ல, எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம்.

    நெல்லை:

    பாரதிய ஜனதா சட்டமன்ற குழு தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை, செய்யவில்லை என சொல்லி வருகிறார். இலவச வீடு கட்டும் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம், மகளிருக்கான வேலைவாய்ப்பு திட்டம், 59 லட்சம் கழிவறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

    ஆயூஸ்மான் பாரத் திட்டத்தில் ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பயனாளிகள் தமிழகத்தில் பயன்பெற்றுள்ளனர். சுமார் 1.43 கோடி வங்கி கணக்குகள் மத்திய அரசால் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தில் தமிழகத்தில் ரூ1.32 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மலிவு விலை மருந்தகம் தமிழகத்தில் 820 கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 48.90 கோடி விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு அதிகமான திட்டத்தை தந்துள்ளது. விலைவாசி உயர்வை மாநில அரசுகள் தான் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

    பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கான புதிய திட்டங்கள் உருவாக்குவதற்கான செலவுகளும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் காரணம். அமலாக்கதுறை தனி நிர்வாகம்.

    அடுத்த முதலமைச்சர் என நடிகர் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அவர் ரசிகர்கள் ஆசைப்படுவது தவறில்லை. பா.ஜனதா எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களுடைய விருப்பம்.

    நடிகர்கள் மட்டுமல்ல, எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் அரசியல் இருக்கையில் அமர்ந்த பின்னர் அவர்களது திறமை வெளிப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நடிகர் விஜயை பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுப்பீர்களா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றார்.

    • நெல்லை மாவட்டம் போதிய மழை இல்லாததால் வறட்சியாக உள்ளது என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.
    • அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆனந்தபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சத்தில் சமூதாய நலக்கூடம் கட்ட இன்று அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

    இதில் நயினார் நாகேந்தி ரன் எம்.எல்.ஏ., துணைமேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். பின்னர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-

    வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

    வேளாண் பட்ஜெட்டில் பரவலாக அதிக திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளது. வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிட்ட சில நபர்களுக்கும், சில மாவட்டங்களுக்கும் மட்டுமே திட்டங்கள் ஒதுக்கப் பட்டுள்ளது. போதிய மழை இல்லாததால் நெல்லை மாவட்டம் வறட்சியாக உள்ளது. அதனை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

    நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நெல் ஆராய்ச்சி மையத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தடுப்பணைகள் இதுவரை செயல்படுத்தபடாமல் உள்ளது. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப இருக்கி றோம்.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி

    தமிழகத்தில் மிகப்பெரிய கட்சிகளில் அ.தி.மு.க.வும் ஒன்று. தற்போது வரை அ.தி.மு.க.வுடன் உள்ள கூட்டணி யில் தான் பா.ஜ.க. உள்ளது.இந்திய அளவில் பா.ஜ.க. மிகப்பெரிய கட்சி.

    உலக அளவில் அதிக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை கொண்ட கட்சி. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. கீழ் மட்டத்தில் ஒன்றிண்டு பேர் அங்கொன்றும், இங்கொன்று மாக சில பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர்.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கொள்கை அடிப்படையில் உள்ள கூட்டணிகட்சிகள். தேர்தல் அறிவிக்கும்போது பிரச்சனைகள் இருக்கலாம். வேட்பாளர்கள் அறிவிக் கும்போது ஒன்றுபட்டு வேலைபார்ப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • ஸ்ரீபுரம் முதல் ஊருடையான்குடியிருப்பு வரை சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • தாமரை சின்னம் பொறித்த குடையை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லையில் ஸ்ரீபுரத்தில் இருந்து தச்சநல்லூர் செல்லும் ஊருடையான் குடியிருப்பு சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை மற்றும் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வந்தது.

    எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தார்

    இதன் காரணமாக அப்பகுதி வியாபாரிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். மந்த நிலையில் நடைபெற்று வந்த அந்த பணியை விரைந்து முடிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது பணிகள் முடிவடைந்து. இன்று தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    அதன்படி ஸ்ரீபுரம் முதல் ஊருடையான்குடியிருப்பு வரை 831 மீட்டர் சாலை ரூ.1 கோடியில் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதனை எம்.எல்.ஏ. க்கள் அப்துல்வகாப், நயினார்நாகேந்திரன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இதில் மாநகராட்சி துணை மேயர் ராஜூ, கவுன்சிலர் ரவீந்தர், தச்சை மண்டல உதவி கமிஷனர் வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சலசலப்பு

    ஸ்ரீபுரத்தில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைப்பதற்காக அப்துல்வகாப் எம்.எல்.ஏ. மற்றும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் வந்திருந்த நிலையில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக நயினார் நாகேந்திரனுக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் பா.ஜனதா கட்சி கொடி கலரில் இருந்த குடையை விரித்து பிடித்தனர்.

    அப்போது அங்கு வந்த அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் தாமரை சின்னம் பொறித்த குடை பிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

    பேட்டி

    பின்னர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைவரையும் ஒன்றிணைத்து போட்டியிடுகிறோம். பா.ஜனதா ஆதரவு கொடுத்துள்ள அ.தி.மு.க ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கடலில் தான் பேனா சின்னம் வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை. கடலில் பேனா சின்னம் அமைத்தால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். அதிகமான செலவு ஏற்படும். அதற்கு மாற்றாக அதே செலவில் வேறொரு இடத்தில் பேனா சின்னத்தை நிறுவலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது.
    • குறிப்பாக கஞ்சா மற்றும் போதை பழக்கங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமாகவே உள்ளது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. சட்டசபை குழு தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அபரீதமான வளர்ச்சி அடைந்துள்ளது. அதை நாங்கள் சொல்வதை விட தி.மு.க அமைச்சரே கூறியிருக்கிறார்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தமட்டில் மாநில தலைவர் அண்ணாமலை எடுக்கும் முடிவிலேயே போட்டியானது இருக்கும்.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் நாங்கள் ஏற்கனவே ஒரு முறை வெற்றி பெற்றுள்ளோம்.

    வருகிற தேர்தலிலும் கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடும் போது நிச்சயம் தாமரை சின்னத்தில் இங்கு தேர்தலில் போட்டியிடுவோம்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது. குறிப்பாக கஞ்சா மற்றும் போதை பழக்கங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமாகவே உள்ளது.

    இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    டாஸ்மாக் கடைகள் முன்பு பள்ளி, மாணவர்கள் பெண்கள் அதிகமாக நிற்பதை காண முடிகிறது. இது தொடர்பாக வீடியோ காட்சிகளும் வந்துள்ளது.

    இதுகுறித்து நான் பலமுறை சட்டசபையில் கருத்து தெரிவித்துள்ளேன். ஆனால் இதுவரை அதற்கு தீர்வு கண்டதாக தெரியவில்லை.

    எனவே தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் நேரங்களை குறைப்பதுடன் மதுக்கடைகளையும் குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக் கொண்டால் அக்கட்சி வளரும். அ.தி.மு.க.வில் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினால் பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம். அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஏன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்று தி.மு.க. கூறியது. ஆனால் இரண்டு முறை தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்து விட்டது, இருப்பினும் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க தயாராக இல்லை. பெயரளவிற்கு பெட்ரோல் விலையை மட்டும் சிறிது குறைத்து விட்டு அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு வருகின்றனர்.

    மத்திய அரசு என்று கூறுவதை தி.மு.க.வினர் பெருமையாக கருதுகின்றனர். தி.மு.க. தங்களை பெருமைப்படுத்திக் கொள்வதை முன்னெடுத்து செல்கிறதே தவிர, மக்கள் பிரச்சினையை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை

    தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வர் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது கையில் உள்ள துண்டு சீட்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் பொய்யானது என்று பிரதம மந்திரியை வைத்துக்கொண்டு ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை குறித்து பேசியது ஒரு சாட்சி. ஜி.எஸ்.டி. இழப்பு நிலுவைத் தொகை தமிழகத்திற்கு ஜூன் மாதம் மட்டும் தான் பாக்கி உள்ளது.

    கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் தான் அருகதை உண்டு. ஏனென்றால் 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரை வார்த்த போது அதை எதிர்த்து வழக்குப் போட்டது பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி தான். அதை பாராளுமன்றத்தில் எதிர்த்தது அடல் பிகாரி வாஜ்பாய் தான்.

    தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் கச்சத்தீவு நமக்கு வந்து விடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தாங்கள் தான் முயற்சி செய்தோம் என்று பொய் பி ரசாரம் செய்வதற்காக தமிழக முதல்வர் தற்போது பிரதம மந்திரி முன்னிலையில் கச்சத்தீவு குறித்து பேசி நாடகம் நடத்தியுள்ளார்.

    கச்சத்தீவு குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஊராட்சி தலைவர் அதாவது முதல்வருக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. தமிழ் மொழியை வழக்கிலும் என்று கூறிக்கொண்டு பிற மொழியை வெறுக்கின்ற வெறுப்பு அரசியல் தமிழகத்தில் நடைபெறுகிறது. இதனை தி.மு.க. கைவிட வேண்டும்.

    தமிழ் மொழிக்கு ஆட்சியில் இருக்கும் தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை. மொழிகளுக்கு இடையே உள்ளது தேசிய மாடல். அதை தான் பா.ஜ.க. செய்து வருகிறது. பிறமொழிகளை எதிர்ப்பது திராவிட மாடல். இது தமிழ் மொழி வளர்ச்சிக்கு பயன்படாது.

    பா.ஜ.க.வின் 8 ஆண்டு கால சாதனையை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பூத்திற்கும் சென்று பொதுமக்களிடையே எடுத்து கூறுவதுதான் பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு. தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும். அதுவரை பா.ஜ.க.வின் போராட்டமானது தொடரும்.

    மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்படாமலேயே அரசு அதிகாரிகள் நிதி முறைகேடு செய்துள்ளனர். இதுதான் திராவிட மாடல். ஒன்றரை லட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் சுட்டுக் கொன்றபோது உண்ணாவிரதம் என்ற பெயரில் நான்கு மணி நேரம் நாடகம் போட்டது கருணாநிதி தான். அது தான் தற்போது தமிழ் சமுதாயத்தையே பாதித்துக் கொண்டு இருக்கிறது.

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் 5-க்கும் மேற்பட்ட லாக்கப் டெத் கொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதுதான் அமைதிப் பூங்கா லட்சணமா? தமிழ்நாடு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் காட்சியாக நடந்து வருகிறது, அதற்கு முடிவு கட்ட வேண்டும். இருபத்தி நான்கு மாதத்திற்குள் இதற்கு ஒரு முடிவு கட்டி பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகத்திற்கும் தேர்தல் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×