search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • இந்திய ஜனநாயகத்தையும், மத சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் தேர்தல்.
    • புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசு மறுத்துவிட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் இன்று புதுவை உழவர்கரை நகராட்சி ஜவகர் நகரில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நாடுமுழுவதும் 18-வது பொதுத்தேர்தல் நடக்கிறது. சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இது 2 வேட்பாளர்களுக்கு இடையில் நடக்கும் தேர்தல் அல்ல. இந்திய ஜனநாயகத்தையும், மத சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் தேர்தல்.

    இது வழக்கமான தேர்தலும் அல்ல. இது தேர்தல் யுத்தம். புதுவைக்கு பிரதமர் மோடி பிரசாரத்துக்கு வருவதாக தெரியவில்லை. ஒரு வேளை வந்தால், அவரிடம் கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறதிகள் என்ன ஆச்சு? என புதுவை மக்கள் கேள்வியாக கேட்க வேண்டும்.

    பாராளுமன்றத்தில் சுப்புராயன் எம்.பி., புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பினார். அப்போது புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசு மறுத்துவிட்டது. தற்போது எப்படி மாநில அந்தஸ்து கெடுப்போம்? என எதை வைத்து சொல்கின்றனர்.

    புதுவையில் 800 மதுக்கடைகள் இருந்தது. தற்போது கூடுதலாக 250 ரெஸ்டோபார்கள் திறந்துள்ளனர். இளைஞர்களை சீரழிக்கவே ரெஸ்டோபார்கள் திறக்கப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. கஞ்சா போதையால் சிறுமி பாலியல் வன்கொடு மையால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

    புதுவையின் உள்துறை அமைச்சர் யார்? அவருக்கும், கஞ்சா வியாபாரிகளுக்கும் என்ன தொடர்பு என? அவர்தான் விளக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிசயமான மாநிலம் புதுவை. இங்குதான் ரேஷன்கடைகள் இல்லை.


    ரங்கசாமி நல்ல மனிதர்தான். ஆனால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என புலம்புகிறார். சுயமரியாதை இல்லை என புலம்புகிறார். தன் கைகள் கட்டுப் பட்டுள்ளதாகவும், சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் கூறுகிறார்.

    சுதந்திரமாக செயல்பட முடியாத முதலமைச்சரால் மாநில மக்களுக்கு என்ன செய்ய முடியும்?இந்தியா கூட்டணி தவிர்த்து தேர்தலில் 2 கூட்டணி நிற்கிறது.

    மோடி தலைமையிலான நள்ளிரவு கூட்டணி ஒன்று, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கள்ளக் கூட்டணி மற்றொன்று. மோடியை பற்றி எந்த இடத்திலும் பழனிசாமி விமர்சிப்பதில்லை. பாராளுமன்ற தேர்தலில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தது அதிமுக. இந்தியா கூட்டணி கட்சிகள் தனித்தனியே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம்.

    10 ஆண்டுக்கு மேல் ஒரே கூட்டணியாக செயல்பட்டு வருகிறோம். தேர்தல் அறிக்கை தனித்தனியே விட்டிருந்தாலும், அதில் எந்த முரண்பாடும் கிடையாது.

    நெல்லையில் சமீபத்தில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.

    ஆனால் நயினார் நாகேந்திரன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் விதி மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கும் பிற மாநிலங்களில் இருந்து பணம் வந்துள்ளது. எனவே பாஜனதா வேட்பாளர்கள் வீடுகளில் தேர்தல் துறை சோதனையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுச்சேரியில் முழுக்க முழுக்க ஒரு ஓட்டுச்சாவடி பசுமை ஓட்டுச்சாவடியாக செயல்பட உள்ளது.
    • ஓட்டுச்சாவடி வாயிலில் வாழை மரங்கள், இளநீர் கட்டப்பட்டு, பச்சை மா, தென்னங்கீற்று பந்தல், தோரணங்கள் கட்டப்படுகிறது.

    புதுச்சேரி:

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக, புதுச்சேரி தேர்தல் துறை மாநிலம் முழுவதும் ஓட்டுச்சாவடிகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    ஓட்டு போட வருபவர்கள் வரிசையில் நிற்கும்போது வெயிலில் இருந்து தப்பிக்க ஓட்டுச்சாவடி வாயில்களில் பெரிய இரும்பு ஷீட் கூரை பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக வீல் சேர் உள்ளிட்ட வசதிகள் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலை பசுமை தேர்தலாக மாற்றுவதற்கு ஏதுவாக ஓட்டுச்சாவடிக்கு வருபவர்கள் வாகனங்களை தவிர்த்து விட்டு நடந்து வருமாறும் தேர்தல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் முழுக்க முழுக்க ஒரு ஓட்டுச்சாவடி பசுமை ஓட்டுச்சாவடியாக செயல்பட உள்ளது.

    இந்த பசுமை ஓட்டுச்சாவடி புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள 138 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹெரிட்டேஜ் கட்டிடமான வ.உ.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட உள்ளது.

    இந்த பள்ளி வளாகத்தில் 2 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. ஓட்டுச்சாவடி வாயிலில் வாழை மரங்கள், இளநீர் கட்டப்பட்டு, பச்சை மா, தென்னங்கீற்று பந்தல், தோரணங்கள் கட்டப்படுகிறது.

    ஓட்டு போட வருபவர்களின் தாகம் தணிக்க மண் பானையில் குடிநீர், மோர் மற்றும் கேப்பை கூழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது. மேலும் அந்த ஓட்டுச்சாவடி வளாகமே முழுக்க குளிர்ச்சியாக காட்சியளிப்பதற்கு பல்வேறு பணிகளை தேர்தல் துறை செய்து வருகிறது.

    • பொதுமக்களுக்கு தேர்தல் துறையின் வாக்காளர் கையேடுகள் வழங்கினர்.
    • தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் செல்பி பாயின்ட் கார்னர்களும் அமைக்கப்பட்டு இருந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில தேர்தல் துறையின், முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் மூலமாக 100 சதவீத மற்றும் நேர்மையான வாக்குப்பதிவுக்காக பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

    அந்தவகையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் ஸ்கேட்டிங் மற்றும் தப்பாட்டம் மூலமாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்கேட்டிங் வீரர்கள் கலந்து கொண்டு ஸ்கேட்டிங் செய்து கொண்டே பொதுமக்களுக்கு தேர்தல் துறையின் வாக்காளர் கையேடுகள் வழங்கினர். மேலும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும் சென்றனர்.

    வாக்காளர் உறுதி மொழியை ஏற்பதற்கான கையெழுத்து பிரசாரமும் நடந்தது. இதில் தேர்தல் துறை அதிகாரிகளை தொடர்ந்து பொதுமக்களும் தேர்தல் ஆணைய உறுதிமொழியை ஏற்று கையொப்பம் இட்டனர்.

    மேலும் புதுச்சேரி மாநில விலங்கான அணில் வேட மணிந்து துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் செல்பி பாயின்ட் கார்னர்களும் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும், புதுச்சேரி மக்களும் செல்பி எடுத்து கொண்டதுடன், தேர்தல் துறையின் வாசகங்களை படித்து விழிப்புணர்வும் அடைந்தனர்.

    • பிரத்யேக அறையில் அவர் தனது வாக்கை பதிவு செய்தார். அந்த ஓட்டு சீட்டை அதிகாரிகள் வாக்கு பெட்டியில் போட்டனர்.
    • வாக்குபதிவு அதிகாரி கந்தசாமி வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் 100 சதவீத வாக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் 100 வயது மூதாட்டி தனது வாக்கை தபால் மூலம் பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட எல்லையம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை (வயது100). இவரது கணவர் ராயப்பன். அவர் இறந்துவிட்டார்.

    மூதாட்டி அஞ்சலை பாராளுமன்ற தேர்தலையொட்டி தனது வாக்கை தபால் ஓட்டு மூலம் பதிவு செய்தார். அவரது வீட்டுக்கு தபால் ஓட்டு பெட்டியுடன் அதிகாரிகள் சென்றனர். அங்குள்ள பிரத்யேக அறையில் அவர் தனது வாக்கை பதிவு செய்தார். அந்த ஓட்டு சீட்டை அதிகாரிகள் வாக்கு பெட்டியில் போட்டனர்.

    அவர் 2-வது முறையாக தபால் ஓட்டு போட்டுள்ளார். 2021-ம் ஆண்டு நடந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வாக்களித்துள்ளார்.

    இதையொட்டி அவருக்கு வாக்குபதிவு அதிகாரி கந்தசாமி வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

    நிகழ்ச்சியின் போது தேர்தல் சிறப்பு அதிகாரி செந்தில்குமார் மற்றும் தபால் வாக்கு பதிவு அதிகாரி பாரதிதாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

      புதுச்சேரி:

      புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பொதுகூட்டத்தில் பிரசாரம் செய்தார்.

      அப்போது அவர் பேசியதாவது:-

      புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் மண்ணுக்கு வந்துள்ளேன். விடுதலை இயக்க தளபதி மக்கள் தலைவர் வ.சுப்பையாவை போற்றி பாதுகாத்த புரட்சி மண்ணுக்கு வந்துள்ளேன். கடல் அழகும், இயற்கை அழகும் கொஞ்சும் புதுவைக்கு வந்துள்ளேன். புதுவை காங்கிரஸ் வேட்பாளராக, இந்தியா கூட்டணி வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு அறிமுகம் தேவையில்லை. புதுவை மக்களின் நலனுக்காக பாடுபட்ட விடுதலை போராட்ட குடும்பத்தை சேர்ந்தவர்.

      இப்போது 2-ம் விடுதலை போராட்டத்துக்காக வேட்பாளராக நிற்கிறார். 8 முறை எம்.எல்.ஏ., 40 ஆண்டு காங்கிரஸ் உறுப்பினர், எதிர்கட்சி தலைவர், அமைச்சர், சபாநாயகர், 2 முறை முதலமைச்சர் என பழுத்த அரசியலுக்கு சொந்தமானவர். 2-ம் முறையாக பாராளுமன்ற செல்ல ஆதரவு கேட்டு இருகரம் கூப்பி ஆதரவு கேட்டு நிற்கிறார். கடந்த தேர்தலை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். வெற்றி பெற வைப்பீர்களா? ஸ்டாலின் தூதுவனாக உங்கள் பகுதி மக்களிடமும் வாக்கு சேகரியுங்கள். அப்புறம் என்ன? வைத்திலிங்கம் வெற்றி உறுதி.

      தமிழ்நாட்டில் அண்ணாவின் ஆரியமாயை தடை செய்யப்பட்ட போது, துணிச்சலாக கவிஞர் புதுவை சிவம் வெளியிட்ட மண். கலைஞர் அரசியல்வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய மண் புதுவை. எனவே கலைஞருக்கு தமிழகமும், புதுவையும் ஒன்றுதான். அந்த உணர்வோடு ஸ்டாலினும் புதுவை மக்கள் மீது தனி பாசம் கொண்டவன்.

      இங்குள்ள சிவா, சிவக்குமார், நாஜிம் போன்ற திராவிட முன்னேற்ற உடன் பிறப்புகளும் புதுவைமக்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுகின்றனர். அந்த உணர்வோடுதான் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். புதுவை வளர்ச்சிக்கு தி.மு.க.வும், காங்கிரசும் பாடுபட்டால் மாநிலத்தை எப்படி பின்னோக்கி கொண்டுசெல்லலாம் என பா.ஜனதா செயல்படுகிறது.

      இதை மக்கள் பார்த்து வருகிறார்கள். வைத்திலிங்கம் சபாநாயகராக இருந்தபோது, துணைநிலை கவர்னர் மோதினார். பா.ஜனதா கட்சி பொறுப்புகளை சேர்ந்தவர்களை நியமன உறுப்பினர்களாக நியமித்து சட்டமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கினர். ஆட்சியில் இருந்த அரசை புறக்கணித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.

      கவர்னரால் பிரச்சினை

      மக்கள் அடிப்படை வசதிகளை செய்யாமல், வசதிகள் இல்லை என காரணம் காட்டி ரேஷன்அரிசியை தடை செய்தனர். பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை ஏன் என கேள்வி கேட்டனர். இப்படி செய்தவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு, ஒத்துழைக்காமல் அரசியல் சட்ட கடமையை காற்றில் பறக்கவிட்டு புதுவை நிர்வாகத்தை சீர்குலைத்தது பா.ஜனதா. கவர்னர் கிரண்பேடி.

      அவர் ஐபி.எஸ். ஆக இருந்தவர். ஆனால் துணைநிலை ஆளுநராக அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டார். தமிழகத்திலும் ஒரு கவர்னர் உள்ளார். அவரும் ஐ.பி.எஸ். படித்தவர். அவரிடம் மாட்டி முழித்துக்கொண்டு இருக்கிறோம். அவரே இருக்கட்டும் என நாம் சொல்கிறோம். அவர் இருந்தால் தி.மு.க.வுக்கு பெரிய பிரசாரமே நடக்கிறது. காவல்துறையில் பதவிக்காலம் முடிந்தவுடன், இவர்களை கவர்னராக்கி அரசியல் சட்டத்தை மீறி பா.ஜனதா ஏஜெண்டுகள் போல விளம்பரத்துக்காகவே செயல்படுகின்றனர். கவர்னர்கள் தொல்லை கொடுப்பது எதிர்கட்சி மாநிலம் மட்டுமல்ல.

      புதுவையில் ஆளும் கூட்டணியில் உள்ள ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடி. பா.ஜனதாவை பொறுத்தவரை புதுவை மக்களின் முன்னேற்றம், வளர்ச்சி பற்றி கவலைப்பட மாட்டார்கள். அதிகாரத்தை கைப்பற்ற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இதுதான் பா.ஜனதாவின் கொள்கை.

      தமிழகம்போல மாநிலம் இருந்தால் நகராட்சியாக மாற்ற வேண்டும். புதுவை போல யூனியன் பிரதேசத்தை கிராம பஞ்சாயத்தாக மாற்ற வேண்டும். ஒட்டுமொத்தாக அனைவரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும். இதுதான் பா.ஜனதாவின் தீர்மானம். அதனால்தான் கூட்டணி அரசு இருந்தாலும், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்காமல், தன் கைப்பிடியில் பா.ஜனதா வைத்துள்ளது. அவர்களுக்கு கைப்பாவையாக புதுவை முதலமைச்சர் ரங்கசாமி உள்ளார். இந்த அவலங்கள் தீர இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர வேண்டும். நாடு மீண்டும் ஜனநாயக பாதையில் கம்பீரமாக நடை போட வேண்டும்.

      மாநில உரிமைகள் மட்டுமல்ல, யூனியன் பிரதேச உரிமைகளும் பாதுகாக்கப்பட இந்தியா கூட்டணியை நாடு தழுவிய அளவில் அமைத்துள்ளோம். புதுவை முன்னேற வேண்டும். புதுவை மக்கள் வாழ்வில் புதுமலர்ச்சி ஏற்பட வேண்டும்.

      பா.ஜனதா ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும். இந்தியா கூட்டணி டெல்லியில் ஆட்சியில் அமர வேண்டும்.

      ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சியில் அமரும்போது சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளை கூறியுள்ளோம். அதில் முக்கிய வாக்குறுதியாக புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம்.

      இது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்துள்ளது. புதுவை மக்களின் பல நாள் கனவான மாநில அந்தஸ்து ஜூன் 4-ந் தேதி இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் நிறைவேறப்போகிறது.

      மாநிலங்களுக்கும், நாட்டுக்கும் நம்பிக்கை அளிக்கும் தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. தி.மு.க. சார்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக அளித்துள்ளோம்.

      சிறுபான்மையினர் எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும். தேசியநெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

      பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். காரைக்கால், நாகை, தஞ்சை இரட்டை ரெயில்பாதை, கிழக்கு கடற்கரை சாலையில் கன்னியாகுமரி வரை புதிய ரெயில்பாதை அமைக்கப்படும்.

      மாநில கவர்னர் அதிகாரம் குறைக்கப்படும். ஆர்.எஸ்.எஸ். பிடியில் சிக்கியுள்ள சர்வதேச நகரமான ஆரோவில், அரவிந்தர், அன்னை கனவுப்படி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கல்விக்கொள்கை புதுவையில் நீக்கப்படும். ஜிப்மரில் மீண்டும் இலவச மருத்துவம், வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட காரைக்கால் ஜிப்மர் கிளை முழு அளவு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

      10 ஆண்டு மோடி ஆட்சியில் புதுவைக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்தான் அதிகம். மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்க சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது. மின்துறை ஊழியர்கள் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது.

      மின் கட்டண விலையை கேட்டால் ஷாக் அடிக்கிறது. துணை நிலை ஆளுநர் மூலம் அரசியல் கூத்துகளை அரங்கேற்றி வருகின்றனர்.

      கிரண்பேடிக்கு பிறகு சகோதரி தமிழிசை வந்தார். புதுவையில் உட்கார்ந்துகொண்டு, தமிழக அரசியலை பேசினார். தேர்தல் வந்தவுடன் பா.ஜனதாவுக்கு திரும்ப சென்றுவிட்டார். புதுவை வரலாற்றில் கவர்னர் மாளிகையில் முதலமைச்சராக இருந்த நாராயணசாமி அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதுதான் புதுவைக்கு பா.ஜனதா செய்த சாதனை.

      ரங்கசாமியை தங்கள் பேச்சை கேட்க சொல்லி பாடாய் படுத்துகிறார்கள். ரங்கசாமி தனி கட்சி தொடங்க காரணமே நமச்சிவாயம் தான்.

      இப்போது அவருக்காக ரங்கசாமி ஓட்டு கேட்டு வருகிறார். நமச்சிவாயம் எத்தனை கட்சி மாறினார் என்று கணக்கு போட்டால் தலையே சுற்றுகிறது.

      இவ்வாறு அவர் பேசினார்.

      • ஒவ்வொரு ஆண்டும் இந்த தேவாலயத்தில் ஆண்டு பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.
      • தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

      புதுச்சேரி:

      புதுச்சேரி வில்லியனூரில் பிரசித்தி பெற்ற தூய லூர்து மாதா தேவாலம் உள்ளது.

      ஒவ்வொரு ஆண்டும் இந்த தேவாலயத்தில் ஆண்டு பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.

      இந்த விழாவில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிரான்சு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மாதா வழிபடுவார்கள்.

      இந்த ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றதுடன் தொடங்கியது. காலை 5.30 மணிக்கு அருள்நிறை ஆலயத்தில் நடைபெற்ற கூட்டு திருப்பலிக்கு பின்னர், மாதா உருவம் தாங்கிய திருக்கொடி பக்தர்கள் புடைசூழ மாதா திருக்குளத்தை சுற்றி பவனியாக கொண்டு செல்லப்பட்டது.

      அதன் பின்னர் திருத்தல முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் புதுவை-கடலூர் உயர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் கொடிடையேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

      இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

      தொடர்ந்து 13-ந் தேதி வரை நவநாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலிகள், சிறிய தேர்பவனி நடைபெறுகிறது.

      14-ந் தேதி திருப்பலியை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மாதாவுக்கு வைரகிரீடம் சூட்டப்பட்டு ஆடம்பர தேர்பவனி நடை பெறுகிறது.

      • புதுவையில் 30 மாதிரி ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
      • வருகிற 11, 12 ஆகிய தேதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 4 பிராந்தியங்களிலும் தயார் செய்யப்படும்.

      புதுச்சேரி:

      புதுவை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது:

      புதுவை பாராளுமன்ற தொகுதியில் 26 பேர் போட்டியிடுகின்றனர். அதனால் தேர்தலில் 2 ஓட்டுப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படும். புதுவையில் 967 ஓட்டுச்சாவடிகளில் ஆயிரத்து 934 ஓட்டுப்பதிவு எந்திரங்கள், 967 கட்டுப்பாட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

      கூடுதல் எந்திரங்களும் கைவசம் உள்ளன. மாகி, ஏனாம் பிராந்தியங்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் வருகிற 9-ந்தேதி அனுப்பப்படும். எந்திரம் செல்லும் வழியிலுள்ள மாநிலங்களையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளோம்.

      பெங்களூரு பெல் நிறுவனத்திலிருந்து 60 சர்வீஸ் பொறியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். வருகிற 11, 12 ஆகிய தேதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 4 பிராந்தியங்களிலும் தயார் செய்யப்படும்.

      புதுவையில் 30 மாதிரி ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மாகியில் 31 ஓட்டுப்பதிவு மையங்களை பெண்கள் நிர்வகிக்கின்றனர். தற்போது தபால் ஓட்டுகள் பெறும் பணியிலும் பெண்கள் மட்டும் இப்பிராந்தியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

      புதுவையில் குறைவாக ஓட்டுப்பதிவு உள்ள 77 வாக்குசாவடி மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று ஓட்டுப்பதிவு செய்ய விழிப்புணர்வு நடவடிக்கை எடுப்போம். புதுவையில் ரூ.12 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள், போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் புகார்கள் தொடர்பாக 1950 எண்ணின் வழியாக 417 புகார்களும், சிவிஜில் செயலி மூலம் 16 புகார்களும் வந்தன.

      பதட்டமான 237 ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக புதுவைக்கு 10 கம்பெனி ராணுவம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2 கம்பெனி ராணுவம் வந்துள்ளன.

      மீதமுள்ள ராணுவ கம்பெனிகள் விரைவில் வர உள்ளன. வாக்காளர்களுக்கு தர பணம் வந்துள்ளதாக புகார்கள் ஏதும் வரவில்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

      இவ்வாறு அவர் பேசினார்.

      • தேர்தல் நடத்தை விதிகளின்படி புதிய திட்டங்கள், அடிக்கல் நாட்டுதலை வாக்குறுதிகளாக தெரிவிக்க கூடாது.
      • 2 கட்சிகளும் தங்கள் விளக்கத்தை தேர்தல் துறைக்கு அனுப்ப உள்ளன.

      புதுச்சேரி:

      புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி பிரசாரம் செய்த போது முதியோர் உதவித்தொகை உயர்த்துவது குறித்து பேசினார்.

      இதுதொடர்பாக தேர்தல் துறை கவனத்துக்கு சென்றது. இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு தேர்தல் துறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

      அதில் தேர்தல் நடத்தை விதிகளின்படி புதிய திட்டங்கள், சலுகைகள், நிதி மானியம், அடிக்கல் நாட்டுதலை வாக்குறுதிகளாக தெரிவிக்க கூடாது.

      எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்துள்ளார்.

      இதேபோல பா.ஜனதா சமூகவலைதள விளம்பரம் தொடர்பாக கட்சியின் பொது செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 2 கட்சிகளும் தங்கள் விளக்கத்தை தேர்தல் துறைக்கு அனுப்ப உள்ளன.

      • ரெட்டியார்பாளையம் போலீஸ் மற்றும் உழவர்கரை நகராட்சி அலுவகலத்திலும் புகார் அளித்தனர்.
      • புரிந்துணர்வு இல்லாததால், கன்று குட்டி மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

      புதுச்சேரி:

      புதுச்சேரி-விழுப்புரம் சாலை உழவர்கரையில் உள்ள இறைச்சி கடையில் ஒரு கன்று குட்டியை இறைச்சிக்காக வெட்டி கொல்வதற்கு கொண்டு வந்தனர்.

      இதை பார்த்த தனியார் அமைப்பின இறைச்சிக்காக கன்று குட்டிகள், கருவுற்ற கால்நடைகள், நோய்வாய்ப்பட்ட கால்நடைகள், அடிபட்ட மாடுகளை வெட்டக்கூடாது என்பது சட்டம் உள்ளது என எடுத்து கூறினர்.

      ஆனால் இறைச்சி கடை உரிமையாளர் ஏற்கவில்லை. இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீஸ் மற்றும் உழவர்கரை நகராட்சி அலுவகலத்திலும் புகார் அளித்தனர்.

      இது தொடர்பான புரிந்துணர்வு இல்லாததால், கன்று குட்டி மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு, மாவட்ட கலெக்டரை அந்த அமைப்பினர் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

      இதையடுத்து கலெக்டரின் நடவடிக்கையை தொடர்ந்து கன்று குட்டியை ரெட்டியார் பாளையம் போலீசார் மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்பு, உழவர்கரை நகராட்சி நிர்வாகம் இறைச்சிக்காக கொல்லப்பட இருந்த கன்று குட்டியை மீட்டு சென்றது.

      • 3 பேரையும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
      • சம்மந்தப்பட்ட ஓட்டல் மேலாளர் மற்றும் அதன் இயக்குனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

      புதுச்சேரி:

      புதுச்சேரி மேரி உழவர்கரை சிவசக்தி நகரை சேர்ந்த சமூக சேவகர் ஐ.ஜி.வீரராகு. இவரது மனைவி பிரபாதேவி (36). இவர், பா.ஜனதா பிரமுகரான இவர் சம்பவத்தன்று இரவு 10.30 மணியளவில் முத்தியால்பேட்டை தொகுதியில் தேர்தல் பணியை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் இவரும் உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த பிரியா (40), பூமியான்பேட்டை ஜவகர் நகரை சேர்ந்த கோமதி (44) ஆகியோரும் புதுவை 100-அடி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர்.

      அப்போது சிக்கன் பிரியாணியில் இறந்துபோன கரப்பான் பூச்சி கிடந்தது. இதனால் 3 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

      இதுபற்றி அவர்கள். ஓட்டல் மேனேஜர் மற்றும் அதன் இயக்குனருக்கு புகார் தெரிவித்தனர்.

      இதை தொடர்ந்து உடனடியாக பிரபாதேவியின் சகோதரர் பிரகாஷ் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் காரில் ஏற்றிக் கொண்டு மூலகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

      அங்கு 3 பேரையும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

      சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிரபாதேவி பின்னர் இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

      புகாரில் பாதுகாப்பாற்ற முறையில் தயார் செய்து, கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகளால் உடலுக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தே, தரமற்ற பிரியாணியை வழங்கி வாந்தி பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்திய சம்மந்தப்பட்ட ஓட்டல் மேலாளர் மற்றும் அதன் இயக்குனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

      அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் தேர்தல் துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
      • வாக்காளர் தேர்தல் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய பொம்மலாட்ட காணொலிகள், உயர்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

      புதுச்சேரி:

      புதுவை பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் தேர்தல் துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

      அதன் ஒரு பகுதியாக, நகர பகுதியில் இயங்கும் உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, பாராளுமன்ற தேர்தலில் தவறாது ஓட்டளிக்க வேண்டி, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தனிப்பட்ட கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

      மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், தனது பெயரில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள தனிப்பட்ட வேண்டுகோள் கடிதங்களை, நகர பகுதிகளில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கி, அதனை, பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மூலம் அவர்களது பெற்றோர்களிடம் தவறாது சேர்த்திட கேட்டுக்கொண்டார். அதன்படி, 50 ஆயிரம் பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்பப்பட உள்ளது.

      நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, வாக்காளர் தேர்தல் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய பொம்மலாட்ட காணொலிகள், உயர்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

      இந்த காணொலிகளை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வாக்காளர் களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார்.

      • 4 கலைஞர்கள் இரவு, பகலாக உழைத்து பைபரால் ஆன 6 பானைகளை செய்துள்ளனர்.
      • சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு பானை பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

      புதுச்சேரி:

      இந்தியா கூட்டணியில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

      அவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பானை சின்னத்தை மக்களிடம் கொண்டுசென்று சேர்க்க புதுச்சேரியை சேர்ந்த பழங்குடியினர் விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம் முடிவு செய்தார்.

      இதற்காக வில்லியனூரை சேர்ந்த துரை என்ற சிற்ப கலைஞரிடம் 6 பானைகள் செய்ய ஆர்டர் செய்தார்.

      4 கலைஞர்கள் இரவு, பகலாக உழைத்து பைபரால் ஆன 6 பானைகளை செய்துள்ளனர். இந்த பானைகள் ஒவ்வொன்றும் 7 அடி உயரம், 6 அடி அகலம் கொண்டவையாகும்.

      இந்த மெகா சைஸ் பானைகள் சிதம்பரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு பானை பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

      இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் வேட்பாளர் ரவிக்குமார் பிரசாரம் செய்யவும் பானைகள் தயாராகி வருகிறது.

      ×