search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 10 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை
    X

    கோப்புப்படம்

    புதுச்சேரி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 10 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை

    • புதுவையில் 30 மாதிரி ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
    • வருகிற 11, 12 ஆகிய தேதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 4 பிராந்தியங்களிலும் தயார் செய்யப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் 26 பேர் போட்டியிடுகின்றனர். அதனால் தேர்தலில் 2 ஓட்டுப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படும். புதுவையில் 967 ஓட்டுச்சாவடிகளில் ஆயிரத்து 934 ஓட்டுப்பதிவு எந்திரங்கள், 967 கட்டுப்பாட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

    கூடுதல் எந்திரங்களும் கைவசம் உள்ளன. மாகி, ஏனாம் பிராந்தியங்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் வருகிற 9-ந்தேதி அனுப்பப்படும். எந்திரம் செல்லும் வழியிலுள்ள மாநிலங்களையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளோம்.

    பெங்களூரு பெல் நிறுவனத்திலிருந்து 60 சர்வீஸ் பொறியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். வருகிற 11, 12 ஆகிய தேதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 4 பிராந்தியங்களிலும் தயார் செய்யப்படும்.

    புதுவையில் 30 மாதிரி ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மாகியில் 31 ஓட்டுப்பதிவு மையங்களை பெண்கள் நிர்வகிக்கின்றனர். தற்போது தபால் ஓட்டுகள் பெறும் பணியிலும் பெண்கள் மட்டும் இப்பிராந்தியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுவையில் குறைவாக ஓட்டுப்பதிவு உள்ள 77 வாக்குசாவடி மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று ஓட்டுப்பதிவு செய்ய விழிப்புணர்வு நடவடிக்கை எடுப்போம். புதுவையில் ரூ.12 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள், போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் புகார்கள் தொடர்பாக 1950 எண்ணின் வழியாக 417 புகார்களும், சிவிஜில் செயலி மூலம் 16 புகார்களும் வந்தன.

    பதட்டமான 237 ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக புதுவைக்கு 10 கம்பெனி ராணுவம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2 கம்பெனி ராணுவம் வந்துள்ளன.

    மீதமுள்ள ராணுவ கம்பெனிகள் விரைவில் வர உள்ளன. வாக்காளர்களுக்கு தர பணம் வந்துள்ளதாக புகார்கள் ஏதும் வரவில்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×