search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி கடற்கரை"

    • பொதுமக்களுக்கு தேர்தல் துறையின் வாக்காளர் கையேடுகள் வழங்கினர்.
    • தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் செல்பி பாயின்ட் கார்னர்களும் அமைக்கப்பட்டு இருந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில தேர்தல் துறையின், முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் மூலமாக 100 சதவீத மற்றும் நேர்மையான வாக்குப்பதிவுக்காக பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

    அந்தவகையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் ஸ்கேட்டிங் மற்றும் தப்பாட்டம் மூலமாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்கேட்டிங் வீரர்கள் கலந்து கொண்டு ஸ்கேட்டிங் செய்து கொண்டே பொதுமக்களுக்கு தேர்தல் துறையின் வாக்காளர் கையேடுகள் வழங்கினர். மேலும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும் சென்றனர்.

    வாக்காளர் உறுதி மொழியை ஏற்பதற்கான கையெழுத்து பிரசாரமும் நடந்தது. இதில் தேர்தல் துறை அதிகாரிகளை தொடர்ந்து பொதுமக்களும் தேர்தல் ஆணைய உறுதிமொழியை ஏற்று கையொப்பம் இட்டனர்.

    மேலும் புதுச்சேரி மாநில விலங்கான அணில் வேட மணிந்து துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் செல்பி பாயின்ட் கார்னர்களும் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும், புதுச்சேரி மக்களும் செல்பி எடுத்து கொண்டதுடன், தேர்தல் துறையின் வாசகங்களை படித்து விழிப்புணர்வும் அடைந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் மடக்கி பிடித்து விசாரிக்கவே அது கடத்தப்பட்ட குழந்தை என்பது உறுதியானது.
    • குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    புதுச்சேரி லாஸ் பேட்டை நரிகுறவர் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி விஜயலட்சுமி கடற்கரையில் பலூன் விற்கும் தொழில் செய்து வருகிறனர். இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை பகுதியில் விளையாடி கொண்டிருந்த அவர்களது மூன்றரை வயது குழந்தை திடீர் என்று மாயமானது. இது குறித்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது, இரண்டு பேர் குழந்தையை கடத்தி ஒரு பெண்ணிடம் கொடுத்து ஆட்டோவில் அனுப்பி வைத்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணையை தீவிர படுத்திய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் குழந்தையுடன் ஒரு பெண்ணை கரைக்கால் சாணகரை பகுதியில் இறக்கி விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காரைக்கால் போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்திய போது பெண் ஒருவர் குழந்தையுடன் தப்பி செல்ல முயற்சித்துள்ளார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரிக்கவே அது கடத்தப்பட்ட குழந்தை என்பது உறுதியானது.

    இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடத்தல் தொடர்புடைய மேலும் இருவரை புதுச்சேரியில் கைது செய்தனர். பின்னர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர். கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்திற்குள் மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • ஆபத்தை உணராமல் சிலர் திடீரென கடலில் இறங்கி குளிக்கும்போது ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
    • புதுச்சேரியில் ஏற்கனவே கடலில் இறங்கி குளிக்க தடை உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கனகசெட்டிகுளம் மூலம் புதுக்குப்பம் வரை 31 கி.மீ. கடற்கரை உள்ளது.

    ப்ரோமனேட் கடற்கரை, பாண்டிமெரினா, சின்னவீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, ரூபி கடற்கரை, நோணாங்குப்பம் கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக உள்ளது. சுனாமிக்கு பிறகு கடற்கரையில் கருங்கற்கள் கொட்டப்பட்டது.

    இதனால் கடலில் இறங்கி விளையாட முடியவில்லை. புதிய தொழில்நுட்பத்தில் ரூ.25 கோடியில் தலைமை செயலகம் எதிரே கூம்பு வடிவ அமைப்பு கடலில் இறக்கப்பட்டதால் செயற்கை மணல் பரப்பு உருவானதால் கடல் மணலில் இறங்கி சுற்றுலா பயணிகள், விளையாடி மகிழ்கின்றனர்.

    ஆபத்தை உணராமல் சிலர் திடீரென கடலில் இறங்கி குளிக்கும்போது ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். கடந்த 5 ஆண்டில் 4 கடற்கரைகளில் மட்டும் 67 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டு தொடங்கியது முதல் 7 பேர் இறந்துள்ளனர். கடலில் மூழ்கி சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் உயிரிழப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்தார். இதை தடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். புதுச்சேரியில் ஏற்கனவே கடலில் இறங்கி குளிக்க தடை உள்ளது.

    வெறும் உத்தரவு மட்டும் உயிரிழப்பை தடுக்க முடியாது என்பதால் மாவட்ட நிர்வாகம் தடையை மீறி கடலில் இறங்கி குளித்தால் அபராதம், தண்டனை விதிக்க ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கான பரிந்துரை சுற்றுலா துறை மூலம் வருவாய்த்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    • கடல் நீர் நிறம் மாறியதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
    • கடல் நீரை சோதனைக்காக ஆராய்ச்சியாளர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அதன் அழகை ரசித்து செல்வது வழக்கம். ராக் பீச் என அழைக்கப்படும் புதுவை கடற்கரை 2 கி.மீ. தூரம் நீளம் கொண்டது. சுற்றுலா பயணிகள் மற்றும் வாக்கிங் செல்வோர் இந்த சாலையை தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 17-ந்தேதி பழைய வடிசாராய ஆலையின் பின்புறம் உள்ள குறிப்பிட்ட பகுதியில் கடல் நீரின் செம்மண் கலரில் நிறம் மாறியிருந்தது. பிற பகுதிகளில் நீல வண்ணத்தில் இருக்கும் போது, அந்த பகுதி மட்டும் செம்மண் நிறத்தில் மாறியிருந்தது. ஒரு கிலோ மீட்டர் அளவில் குருசுகுப்பம் பகுதி வரை செம்மண் நிறமாக காட்சியளித்தது.

    இதனால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த சுற்றுலா பயணிகள் தலைமை செயலகம் எதிரே உள்ள மணல் பரப்பில் இறங்கி, நிறம் மாறியிருந்த கடலின் அழகை புகைப்படம் எடுத்தனர்.

    கடல் நீர் நிறம் மாறியதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. அந்த நீரை சோதனைக்காக ஆராய்ச்சியாளர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் ஏற்கனவே கடல் நீர் செம்மண் கலரில் மாறியிருந்த அதே பகுதியில் மீண்டும் இன்று காலை கடல் நீர் நிறம் மாறியது. செம்மண் கலரில் மாறிய கடலை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    3-வது முறையாக புதுச்சேரி கடல் நிறம் மாறியதால் ஏதாவது வானிலை மாற்றம் ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

    • புகையிலையினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசினை குறைக்கவும் புதுச்சேரி ராக் கடற்கரையில் புகையிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ஒரு பகுதியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிப்பு பலகைகள் கடற்கரையில் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    ஆண்டுதோறும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

    உலகில் புகையிலை பயன்பாட்டினால் 12-ல் ஒருவர் பலியாகின்றனர்.

    இந்தியாவில் 40 சதவீதம் புற்றுநோயால் இறப்பவர்கள் புகையிலை பயன்படுத்துபவர்கள். இதனால் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் உயிரிழந்து வருகின்றனர்.

    இதற்கிடையே தேசிய சுகாதார இயக்ககம் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் (அரசு மார்பு நோய் நிலையம்) மற்றும் புதுச்சேரி போலீஸ் துறை சார்பில் ராக் பீச் (புதுவை கடற்கரை) புகையிலை இல்லா கடற்கரையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், புகையிலை பாதிப்பில் இருந்து அவர்களை காக்கவும், புகையிலையினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசினை குறைக்கவும் புதுச்சேரி ராக் கடற்கரையில் புகையிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கடற்கரை சாலை முழுவதும் புகை பிடிக்க வேண்டாம் என்றும், புகையிலை பொருட்கள் வீசுவதை தவிர்க்கும் வகையில் கடற்கரைக்குள் எந்தவிதமாக புகையிலை பொருட்களையும் கொண்டு வர வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிப்பு பலகைகள் கடற்கரையில் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளது.

    இப்பலகையை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா மற்றும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர். வெங்கடேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்வாதி சிங், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் மாநில ஆலோசகர் டாக்டர். சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கடற்கரையில் 30 நிமிடம் நடந்த வாண வேடிக்கையை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
    • வாண வெடிகள் குறைந்த உயரத்தில் வெடித்ததால் அதன் தீப்பொறிகள் அருகில் நின்றிருந்த பொது மக்கள் மீது விழுந்தது.

    புதுச்சேரி:

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள பிரஞ்சு துணை துாதரகத்தில் தேசிய தின விழா கொண்டாடப்பட்டது.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரிக்கான பிரான்ஸ் துணை துாதர் லீஸ் தல்போ பரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவைத் தொடர்ந்து, இரவு வாண வெடி நிகழ்ச்சி நடந்தது. கடற்கரையில் 30 நிமிடம் நடந்த வாண வேடிக்கையை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    அப்போது, வாண வெடிகள் குறைந்த உயரத்தில் வெடித்ததால் அதன் தீப்பொறிகள் அருகில் நின்றிருந்த பொது மக்கள் மீது விழுந்தது. அதில் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் ஓம்கார் (வயது21) பூர்னடா(22) உப்பளம் நேதாஜி நகர் கணபதி(38) மற்றும் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ஆகிய 4 பேர்மீது வாணவெடி தீப்பொறி விழுந்ததில் அவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இச்சம்பவத்தினால், கடற்கரை சாலையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

    ×