புதுச்சேரியில் கடல் அரிப்புக்கான காரணம் குறித்து ஆராய்ச்சி

காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிறதா என கண்டறிந்து நிரந்த தீர்வு காணப்பட உள்ளது.கடற்கரை பகுதிகள் கடல் அரிப்பால் சிறிது, சிறிதாக மாயமாகி வருகிறது.
புதுச்சேரியில் கடல் அரிப்புக்கான காரணம் குறித்து ஆராய்ச்சி
Published on

புதுச்சேரி:

வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள அழகிய சுற்றுலா நகரம் புதுச்சேரி. மினி கோவா என அழைக்கப்படும் புதுச்சேரியில் கனகசெட்டிக் குளம் தொடங்கி புதுக்குப்பம் முள்ளோடை வரை 31 கி.மீ. நீள கடற்கரை உள்ளது.

இதில் பழைய சாராய ஆலையில் இருந்து சீகல்ஸ் ஓட்டல் வரை உள்ள ப்ரோமனட் கடற்கரை (ராக் பீச்), பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, நோணாங்குப்பம் பேரடைஸ் கடற்கரை பிரசித்தி பெற்றது.

இங்குள்ள கடற்கரை பகுதிகள் கடல் அரிப்பால் சிறிது, சிறிதாக மாயமாகி வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு இருந்த கடற்கரையின் ஒரு பகுதி, திடீரென மாயமாகி விடுகிறது. அந்த அளவுக்கு புதுச்சேரி கடலில் காலநிலை மாற்றத்தால் கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது.

புதுச்சேரி கடற்கரையில் ஏற்படும் கடல் அரிப்பு மற்றும் அதனை தடுப்பதற்கான வழிகளை கண்டறிய மத்திய அரசின் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் புதுச்சேரியில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, டாபோ கிராபிகல் கருவி மூலம் கடற்கரை உருவாக்கம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு முறை இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடற்கரை மற்றும் கடல் நீரூக்குள் 1 மீட்டர் வரையிலான ஆழம் வரை சென்று கடல் அலையின் உயரம் உள்ளிட்டவை குறித்த தகவல்களை சேகரிக்கின்றனர்.

இப்படி ஆண்டு முழுதும் 3 மாதத்திற்கு ஒரு முறை எடுக்கப்படும் ஆய்வு தரவுகள் ஒட்டுமொத்தமாக சேகரித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அதன் பிறகே கடலில் தூண்டில் முள் வளைவுக்காக கொட்டிய கல், செயற்கை கடற்கரை உருவாக்க செய்யப்பட்ட கூம்பு வடிவ இரும்பு பொருள் உள்ளிட்டவையால் கடல் அரிப்பு ஏற்படுகிறதா, காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிறதா என கண்டறிந்து நிரந்த தீர்வு காணப்பட உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com