என் மலர்
இந்தியா
- துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப்பெற்றனர்.'
- பாஜகவில் இருந்து 14 பேர், ஜேடியு விலிருந்து இருந்து 8 பேர் அமைசர்களாக பதவியேற்றனர்.
பீகார் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக-ஜேடியு என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது.
கடந்த வியாழக்கிழமை பீகார் முதல்வராக ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பதவியேற்றார்.
பாஜகவில் இருந்து 14 பேர், ஜேடியு விலிருந்து இருந்து 8 பேர், லோக் சக்தி (ராம்விலாஸ்) கட்சியில் இருந்து 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சாவில் இருந்து தலா ஒருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப்பெற்றனர்.'
இந்நிலையில் வியாழக்கிழமை பதவியேற்ற 26 அமைச்சர்களில் 18 பேருக்கு மட்டுமே இன்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பாஜகவை சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துறையின்கீழ் காவல்துறை, உளவுத்துறை, பொது சட்டம் மற்றும் ஒழுங்கு போன்ற முக்கிய துறைகள் வருகின்றன.
கடந்த ௨௦ ஆண்டுகளாக தம்மிடமே வைத்திருந்த உள்துறையை முதல்முறையாக கூட்டணி கட்சியான பாஜவுக்கு நிதீஷ் குமார் விட்டுக் கொடுத்துள்ளார்.
முந்தைய ஆட்சியில் சாம்ராட் சவுத்ரி வகித்து வந்த நிதி மற்றும் வணிக வரி இலாகா, ஜே.டியுவின் பிரேந்திர பிரசாத் யாதவிடம் வழங்கப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் நில சீர்திருத்தங்கள், சுரங்கம் மற்றும் புவியியல் துறைக பாஜகவை சேர்ந்த மற்றொரு துணை முதல்வரான விஜய் சின்ஹாவுக்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல் விவசாயம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, தொழில்துறை பாஜக அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- உயிர் மாய்ப்பு கடிதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என போலீசார் தகவல்
- பள்ளி ஆசிரியர்கள் மீது பெற்றோர்கள் குற்றச்சாட்டு.
மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் உள்ள ஜல்னா மாவட்டத்தில் 7ம் வகுப்பு சிறுமி, பள்ளி மாடியிலிருந்து விழுந்து உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது மாணவி நேற்று (நவ.21) வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார். சிறுமி வீட்டிலிருந்து சென்ற சிறிது நேரத்திலேயே அவளது தந்தைக்கு பள்ளியிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், உங்கள் மகள் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். செய்தியறிந்து உடனடியாக பள்ளியை அடைந்த குடும்பத்தினர் சிறுமியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சம்பவம் அறிந்து பள்ளிக்கு சதார் காவல்நிலைய போலீசார், உயிரிழப்புக்கான காரணத்தை அறிய சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள், குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்துள்ளனர். தற்கொலை கடிதங்கள் போன்ற எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், உடற்கூராய்வுக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் தெரிவித்தனர்.
உயிரை மாய்த்துக்கொண்டதற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவராத நிலையில், சிறுமியின் குடும்பத்தினர் பள்ளியை குற்றம் சாட்டியுள்ளனர். ஆசிரியர்களின் துன்புறுத்தலால்தான் இந்த முடிவை எடுத்திருப்பார் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம் குறித்து உள்ளூர்வாசிகளும், பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
- 29 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக ஒருங்கிணைத்து, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
- அனைத்து வகையான வேலைகளிலும் அனைத்துப் பெண்களும் இரவுப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும்.
2020ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறிய 4 தொழிலாளர் சட்டங்கள் நேற்று (நவ.21) முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, 4 தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தன. இதில், ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஊதியக் குறியீடு, தொழில்துறை குறியீடு, சமூக பாதுகாப்பு குறியீடு, தொழில்துறை பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல் குறியீடு என 4 சட்டங்களாக ஒருங்கிணைத்து, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அமலுக்கு வந்த புதிய சட்டங்களின்படி, "அனைத்து தொழிலாளர்களுக்கும் நியமனக் கடிதம் வழங்குவது கட்டாயமாகும். முதலாளிகள் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தையும் சரியான நேரத்திலும் செலுத்துவது கட்டாயமாகும்.
40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் முதலாளிகள் இலவச வருடாந்திர சுகாதார பரிசோதனைகளை வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் PF, ESIC, காப்பீடு மற்றும் பிற சமூக பாதுகாப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
சுரங்கத் தொழில் உட்பட அனைத்து வகையான வேலைகளிலும் அனைத்துப் பெண்களும் இரவுப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும். எலக்ட்ராணிக்,ஆடியோவிஷுவல் மீடியா உள்ளிட்டவற்றில் பணியாற்றுபவர்களுக்கு ஓவர் டைம்க்கான இரட்டை ஊதியம் வழங்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
பெண் தொழிலாளர்களுக்கு சம வாய்ப்புகள் மற்றும் சம ஊதியம் கிடைக்க வேண்டும். ஆபத்தான வேலைகளில் பணிபுரிபவர்களுக்கு 100% சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். நாடு முழுவதும் ESIC பாதுகாப்பு மற்றும் சலுகைகள் விரிவுபடுத்தப்படும்.
நிலையான கால அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முழு நேர, நிரந்தரத் தொழிலாளர்களைப் போலவே விடுப்பு, மருத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் பணியில் சேர்ந்து ஒரு ஆண்டுக்கு பிறகு கிராஜ்யுட்டி உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.
துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் ஊதியம் தொடர்பான தகராறுகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு காணப்பட வேண்டும்.
ஸ்விக்கி, ரோமாடோ, பிளிங்கிட் போன்ற தளங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் முறையான வேலைவாய்ப்புத் துறையின் கீழ் வருகிறார்கள்.
முதலாளிகள் இந்தத் தொழிலாளர்களுக்காக நல நிதிகளை அமைத்து, தங்கள் நிறுவனத்தின் வருவாயில் 1.2% ஐ இந்த நிதிக்கு பங்களிக்க வேண்டும். உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
- உலகம் உயிர்வாழ இந்து சமூகம் அவசியம்
- இந்தியா ஒரு ‘இந்து ராஷ்டிரம்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையில்லை.
இந்து சமூகம் என்றும் அழியாதது என்றும், பண்டைய நாகரிகங்கள் அழிந்தபோதும் இந்த சமூகம் நிலைத்திருந்தது எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் பேசியுள்ளார். மணிப்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,
"உலகில் உள்ள அனைத்து நாடுகளும் எல்லாவிதமான சூழ்நிலைகளையும் கடந்திருக்கும். யுனான்(கிரீஸ்), மிஸ்ர் (எகிப்து), ரோமா என உலகின் அனைத்து சிறந்த பண்டைய நாகரிகங்களும் அழிந்தன. ஆனால் நம் நாகரிகத்தில் ஏதோ இருக்கிறது. அதனால்தான் நாம் இன்னும் இருக்கிறோம்" என தெரிவித்தார்.
முன்னதாக இந்தவார தொடக்கத்தில் அசாமில் பேசிய மோகன் பகவத்,
"தாய்நாட்டின் மீதான பக்தி, நமது முன்னோர்களின் பெருமை மற்றும் நமது கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அனைவரும் இந்துக்கள்தான். இந்து என்பதை வெறும் மத அர்த்தங்களில் மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்து மற்றும் இந்துக்களின் கலாச்சாரம் என்பது வெறும் உணவு மற்றும் வழிபாடு மட்டுமல்ல, அனைத்தையும் உள்ளடக்கியது. இந்து மதம் இன்னும் பல மக்களை ஈர்க்கும்.
தங்கள் வழிபாடு, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை விட்டுகொடுக்காவிடினும், நம் நாட்டை, இந்திய கலாச்சாரத்தை பின்பற்றினால், நம் மூதாதையர்களை எண்ணி பெருமைப்பட்டால் அந்த முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்கள்தான். பாரதம் என்பதில் பெருமை கொள்பவர்கள் அனைவரும் இந்துக்கள்தான். பாரதம், இந்து ஆகிய இரண்டு சொற்களும் ஒத்த சொற்கள்தான். இந்தியா ஒரு 'இந்து ராஷ்டிரம்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையில்லை. நாட்டின் நாகரிக நெறிமுறைகள் ஏற்கனவே அதனை அடையாளப்படுத்துகின்றன" என தெரிவித்தார்.
- பம்பை உள்ளிட்ட 3 இடங்களில் செயல்பட்ட உடனடி முன்பதிவு மையங்கள் மூடப்பட்டன.
- ஆன்லைன் புக்கிங் செய்து வரக்கூடிய பக்தர்களே அதிகளவில் வருகிறார்கள்.
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் 20 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் உடனடி முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருந்தது.
இதனால் சபரிமலை, பம்பை உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். முக்கியமாக சிறுவர்-சிறுமிகள், முதியவர்கள், வயதான பெண்கள் நெரிசலில் சிக்கி தவிப்புக்கு உள்ளாகினர்.
நெரிசலில் சிக்கி பெண் ஒருவரும் பலியானதால், பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) அடிப்படையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
மேலும் பம்பை உள்ளிட்ட 3 இடங்களில் செயல்பட்ட உடனடி முன்பதிவு மையங்கள் மூடப்பட்டன. தேவசம்போர்டின் இந்த நடவடிக்கையால் வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். அவர்கள் சன்னிதானத்துக்கு அனுமதி பெறுவதற்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அதன்பிறகு நிலையை புரிந்துகொண்டு, காத்திருந்து சாமி தரிசனத்துக்கு அனுமதி பெற்று சன்னிதானத்துக்கு சென்றனர். உடனடி முன்பதிவு எண்ணிக்கை அதிரடியாக குறைக்கப்பட்டதால், முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. ஆன்லைன் புக்கிங் செய்து வரக்கூடிய பக்தர்களே அதிகளவில் வருகிறார்கள்.
இதனால் கடந்த சில நாட்களில் காணப்பட்டதை போன்று பக்தர்கள் கூட்டம் காணப்படவில்லை. சன்னிதானத்தில் பதினெட்டாம் படிக்கு கீழ் உள்ள நடைப்பந்தல் இன்று காலை பக்தர்கள் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது. பக்தர்கள் எந்தவித நெரிசலும் இல்லாமல் நின்று சாமி தரிசனம் செய்வதற்கு சென்றனர்.
சாமி தரிசனத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் உடனடி முன்பதிவு 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது உள்ளிட்டவையே பக்தர்கள் கூட்டம் குறைந்ததற்கான காரணங்களாக கருதப்படுகிறது.
அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் சூழநிலைக்கு தகுந்தாற் போல் உடனடி முன்பதிவை (ஸ்பாட் புக்கிங்) அதிகரித்துக் கொள்ளலாம் என்று கேரள ஐகோர்ட்டு அனுமதி வழங்கியிருக்கிறது. ஐகோர்ட்டின் அந்த உத்தரவு தேவசம்போர்டுக்கு கிடைக்கப்பெறாததன் காரணமாக ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை இன்று காலை அதிகரிக்கப்படவில்லை.
மண்டல பூஜை தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். முதல் நாள் முதல் நேற்று(21-ந்தேதி) இரவு 7 மணி வரை 4 லட்சத்து 94 ஆயிரத்து 151 பக்தர்கள் வந்திருப்பதாகவும், அதில் நேற்று மட்டும் (காலை முதல் இரவு 7 மணி வரை) 72,037 பேர் சபரிமலைக்கு வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வீடியோ, போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
- சித்திக் அளித்த விளக்கம் சரியாக இல்லாததால் அவரை அதிகாரிகள் பணி நீக்கம் செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் வக்கார் சித்திக் என்பவர் டாக்டராக வேலை செய்து வந்தார்.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் புது மனைவி கணவரை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த சித்திக் தனது மனைவியை முதல் மாடிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு வார்டில் இருந்த நோயாளிகளை வெளியே அனுப்பிவிட்டு தனது சட்டை, பேண்டை கழட்டினார்.
பின்னர் புது மனைவியை கட்டிப்பிடித்த படியும், கட்டிலுக்கு அடியில் முன்னும், பின்னும் உருண்டு புரண்டார். இதே போல் நீண்ட நேரம் நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர்.
இதனை ஆஸ்பத்திரி நோயாளிகள் தங்களது செல்போன்களில் வீடியோ, போட்டோவாக பதிவு செய்தனர்.
இந்த வீடியோ, போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து சித்திக்கிடம் விளக்கம் கேட்டனர். சித்திக் அளித்த விளக்கம் சரியாக இல்லாததால் அவரை அதிகாரிகள் பணி நீக்கம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் நோயாளிகளை காப்பாற்றும் புனிதமான பணியில் உள்ள டாக்டர் ஒருவர் இது போன்ற செயலில் ஈடுபட்டது ஏற்புடையதல்ல.
இனி இதுபோல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
- அரவிந்த் ஒரு சிறந்த BLO என்றும், அவரது வாக்குச்சாவடியில் 40 சதவீத பணிகளை முடித்துள்ளதாகவும் ஆட்சியர் கூறினார்.
- BLO க்கள் தற்கொலை தொடர்கதையாகி வருவது பணிச்சுமை குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி (SIR) -க்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) ஆக நியமிக்கப்பட்ட ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
கிர் சோம்நாத் மாவட்டத்தில் தேவ்லி கிராமத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் அரவிந்த் வதேர் நேற்று காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அரவிந்த் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், தனது SIR பணியைத் தொடர முடியவில்லை என்றும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும், மரணத்தைத் தவிர வேறு வழியில்லை என்றும் எழுதியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் என்.வி. உபாத்யாய் தெரிவித்தார்.
அரவிந்த் ஒரு சிறந்த BLO என்றும், அவரது வாக்குச்சாவடியில் 40 சதவீத பணிகளை முடித்துள்ளதாகவும் ஆட்சியர் கூறினார்.
கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் BLO க்கள் தற்கொலை தொடர்கதையாகி வருவது பணிச்சுமை குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.
- மும்பை மாநகராட்சி சமீபத்தில் பைகுல்லாவில் உள்ள ஒரு உருது கற்பித்தல் மையத்தை இடித்தது.
- ஒருபுறம், அவர்கள் முழு முஸ்லிம் சமூகத்தையும் அவமதித்து, அவர்களுக்கு எதிராக இந்துக்களை திருப்புகிறார்கள். மறுபுறம், முஸ்லிம் வாக்குகளை கவர உருது மொழியில் சுவரொட்டிகளை வெளியிட்டிருக்கிறார்கள்
இஸ்லாமியர்களின் உருது மொழிக்கு எதிராக செயல்படும் பாஜக தேர்தலுக்காக உருது மொழியில் பிரசாரம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மும்பை மாநகராட்சி சமீபத்தில் பைகுல்லாவில் உள்ள ஒரு உருது கற்பித்தல் மையத்தை இடித்தது. பாஜகவின் எதிர்ப்புகளுக்குப் மத்தியில் மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்து.
இந்நிலையில் மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்குவதை ஒட்டி, தனது தொகுதியில் உருது மொழி பேசும் முஸ்லிம் சமூகத்தினரை ஈர்க்கும் வகையில் பாஜக பெண் வேட்பாளர் ஒருவர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை உருது மொழியில் அச்சிட்டு வாக்குகளை கோரியுள்ளார். அவரது படமும் உள்ளூர் தலைவர்களின் படங்களும் நோட்டீஸ்களில் அச்சிடப்பட்டுள்ளன.
பாஜக சந்தர்ப்பவாத அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) ஆகிய கட்சிகள் விமர்சித்துள்ளன.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எம்என்எஸ் கட்சி, "அப்படியானால் இதுதான் பாஜகவின் தீவிர இந்துத்துவா அரசியலா? ஒருபுறம், அவர்கள் முழு முஸ்லிம் சமூகத்தையும் அவமதித்து, அவர்களுக்கு எதிராக இந்துக்களை திருப்புகிறார்கள். மறுபுறம், முஸ்லிம் வாக்குகளை கவர உருது மொழியில் சுவரொட்டிகளை வெளியிட்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளது.
ஏஐஎம்ஐஎம் கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில், "நேற்று வரை, பாஜக உருது மொழியை வெறுத்தது. அது ஒரு முழு சமூகத்தையும் அவமதிப்பதற்காக இருந்தது. உருது பேசுபவர்களைப் பற்றி மோசமான செய்திகளைப் பரப்பியது. ஆனால் இன்று அவர்களே முஸ்லிம் வாக்குகளுக்காக உருது சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர். வாக்குகளைப் பெற அவர்கள் எதையும் செய்வார்கள்" என்று சாட்டியுள்ளது.
- தான் ஒரு சட்ட மாணவனாக வாழக்கையை தொடங்கி, நீதியின் மாணவனாக வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- கடைசியாக மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று அவரின் அமர்வு தெரிவித்தது.
உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பணியாற்றிய பி.ஆர். கவாய் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார்.
நேற்று கடைசி வேலை நாளின்போது நடந்த பிரிவு உபசார விழாவில், தான் ஒரு சட்ட மாணவனாக வாழக்கையை தொடங்கி, நீதியின் மாணவனாக வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் பி.ஆர்.கவாய் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் ஆவார்.
அதன்படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும், முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு செல்லும், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்தது செல்லும், தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து, வக்பு சட்ட திருத்த சரத்துகள் சிலவற்றை நிறுத்தி வைத்த உத்தரவு, அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 3 ஆண்டு தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை, புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடிக்க தடை, நீண்டகாலம் சிறையில் இருந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது, மராத்தா, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து, சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட்டுக்கு ஜாமீன் வழங்கியது உள்ளிட்ட தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் பிஆர் கவாய் இடம் பெற்றிருந்தார்.
கடைசியாக மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
- இவர் இமாச்சல பிரதேசத்தில் கான்ங்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
துபாயில் நேற்று நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் அதனை இயக்கிய விமானி தப்ப முடியாமல் போனது.
சர்வதேச விமான கண்காட்சிக்காக துபாய் சென்ற தேஜஸ் விமானம் கோவை சூலூரில் இருந்து சென்றுள்ளது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தது, விமானப்படை விங் கமாண்டர் நமான் சயால் என்பது தெரியவந்துள்ளது. இவர் இமாச்சல பிரதேசத்தில் கான்ங்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
அவரின் மறைவுக்கு இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், "நாடு ஒரு துணிச்சலான, அர்ப்பணிப்பு கொண்ட விமானியை இழந்துவிட்டது. துயரமடைந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமன் சியால் ஜியின் தைரியம் மற்றும் தேச சேவைக்கான அர்ப்பணிப்புக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, துபாய் ஏர் ஷோவில் நடந்த விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை விசாரணை நடத்தும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
- மணமகள் ஆவணி காரை ஓட்டிச் சென்றார்.
- கார் மரத்தின்மீது மோதி விபத்தில் சிக்கியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் தும்போலி அருகே முதலசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருடைய மகள் ஆவணி (25).
தனியார் பள்ளி ஆசிரியையான இவருக்கும், தும்போலி பகுதியைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் ஷாரோன் (32) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் நேற்று ஆலப்புழாவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற இருந்தது.
மணமகள் ஆவணி ஒப்பனை செய்வதற்காக அவரது அத்தையுடன் அருகே உள்ள அழகு நிலையத்துக்கு காரில் சென்றார்.
காரை ஆவணி ஓட்டிச் சென்றார். அங்கு செல்லும் வழியில் கார் மரத்தின்மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் ஆவணி மற்றும் அவரது அத்தையும் காயமடைந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் எர்ணாகுளம் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், மருத்துவமனைக்குச் சென்ற மணமகன் ஷாரோன் அங்கு மணமகள் ஆவணிக்கு தாலி கட்டினார்.
ஆனாலும், திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மண்டபத்துக்கு வந்தவர்களுக்கு அங்கிருந்தவர்கள் விருந்து உபசரித்தனர்.
விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகளுக்கு மணமகன் தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- வீட்டில் தூங்கிகொண்டிட்ருந்த்த சப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- அங்கு வந்த குற்றவாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
அரியானா மாநிலம் ரோஹ்தக்கின் காஹ்னி கிராமத்தை சேர்ந்த 23 வயதான ஆட்டோ ஓட்டுநர் சூரஜை, சப்னா (23 வயது) தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து மணந்தார்.
இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். இதுநாள் வரை காஹ்னி கிராமத்திலிருந்து விலகி வாழ்ந்து வந்த தம்பதி அண்மையில் மீண்டும் கிராமத்திற்கு திரும்பினர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு 9:40 மணியளவில், சப்னாவின் சகோதரர் சஞ்சு மற்றும் அவரது மூன்று நண்பர்கள் தம்பதியின் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் வீட்டில் தூங்கிகொண்டிட்ருந்த்த சப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சூரஜின் சகோதரர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானார். தாக்குதல் நடந்த நேரத்தில் சூரஜ் வீட்டில் இல்லாததால் உயிர்த்தப்பினார்.
அங்கிருந்து தப்பிய கும்பல் அன்றைய இரவே சூரஜையும், லடோத்-போஹர் சாலையில் வைத்து கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அவரை வழிமறிக்கத் தயாராகி வருவதாகவும் கிடைத்த தகவலை அடுத்து, போலீசார் அங்கு சென்றனர்.
அங்கு வந்த குற்றவாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். தற்காப்புக்காக போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில், நான்கு குற்றவாளிகளும் காயமடைந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்காக ரோஹ்தக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.






