என் மலர்
இந்தியா

பராமரிப்பு என்ற போர்வையில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்
- ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சிறுவர்கள் இருவரும் பாதிரியாரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
- பாதிரியார் சம்பத், பெங்களூருவில் இருப்பதாக வடகரா போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி கல்லேரிபாகம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்(வயது38). கிறிஸ்தவ பாதிரியாராக இருக்கிறார்.
இவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது, கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார்.
அந்த நபருக்கு 6 மற்றும் 12 வயதில் மகன்கள் உள்ளனர். தந்தை வெளிநாட்டில் இருக்கும் நிலையில், சிறுவர்கள் இருவரும் கேரளாவில் இருந்தனர். இந்தநிலையில் சிறுவர்கள் இருவரையும் தான் பராமரிப்பதாக கூறியிருக்கிறார்.
அதன்படி கேரளா வந்ததும் சிறுவர்கள் இருவரையும் பாதிரியார் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது தனது கட்டுப்பாட்டில் இருந்த அண்ணன்-தம்பியான சிறுவர்கள் இருவருக்கும் பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.
சிறுவர்களை இயற்கைக்கு மாறான முறையில் சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கிறார். ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சிறுவர்கள் இருவரும் பாதிரியாரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
பாதிரியாரின் தொல்லை நாளுக்குநாள் அதிகரிக்கவே, அதுகுறித்து சிறுவர்கள் இருவரும் தங்களின் தாய்க்கு தெரிவித்துள்ளனர். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்களின் தாய், பாதிரியார் மீது வடகரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
தாயின் புகார் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் பாதிரியார் சிறுவர்களிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிரியார் சம்பத்தை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார்? என்று போலீசார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் பாதிரியார் சம்பத், பெங்களூருவில் இருப்பதாக வடகரா போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து பாதிரியாரை பிடிக்க தனிப்படை போலீசார், பெங்களூரு விரைந்தனர்.
அவர்கள் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு தப்பிச் செல்ல முயன்ற பாதிரியார் சம்பத்தை கைது செய்தனர். பின்பு அவரை கேரளாவுக்கு அழைத்து வந்தனர். சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பாதிரியாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இவர் கேரள மாநிலத்தில் வடகரா, முடப்பிலவு, தட்டொலிக்கரா உள்ளிட்ட பகுதிகள் மட்டுமின்றி, டெல்லி மற்றும் பெங்களூரு, மைசூருவிலும் பாதிரியாராக பணியாற்றி உள்ளார். அந்த இடங்களிலும் அவர் இது போன்று வேறு சிறுவர்களிடம் அத்துமீறினாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






