என் மலர்
இந்தியா

பூனைக்கு ரூ.1 லட்சம் செலவு செய்து அறுவை சிகிச்சை- டாக்டர் மீது பெண் பரபரப்பு புகார்
- கடந்த மாதம் 31-ந்தேதி பூனையின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் என்.ஜி.ஓ காலனியை சேர்ந்தவர் ஷாம்பவி தேவி. இவர் கடந்த 3 ஆண்டுகளாக தனது வீட்டில் பெண் பூனை ஒன்றை பாசமாக வளர்த்து வருகிறார். பூனைக்கு கடந்த ஆகஸ்டு மாதம் நோய் பாதிப்பு ஏற்பட்டது.
பூனையை சிகிச்சைக்காக ஷாம்பவி தேவி ராமகிருஷ்ணாபுரம் அடுத்த அழகாபுரியில் உள்ள தனியார் கால்நடை மருத்துவர் கிராந்தி குமாரிடம் அழைத்துச் சென்றார்.
டாக்டர் பூனையை பரிசோதித்து விட்டு பூனைக்கு சில பிரச்சனைகள் உள்ளதாக தெரிவித்தார். அறுவை சிகிச்சை மூலம் பூனைக்கு சிகிச்சை அளிக்க ரூ.1 லட்சம் செலவாகும் என தெரிவித்தார்.
செல்ல பூனைக்கு சிகிச்சை அளிக்க ஷாம்பவி தேவி டாக்டரிடம் ரூ.1 லட்சம் கட்டினார். டாக்டர் கிராந்தி குமார் 4 முறை பூனைக்கு அறுவை சிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சைக்கு பின்னரும் பூனையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்பத்திரிக்கு சென்ற ஷாம்பவி தேவி டாக்டரிடம் அறுவை சிகிச்சை செய்தும் பூனைக்கு உடல்நிலை சரியாகவில்லை என கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த டாக்டர் கிராந்தி குமார், ஷாம்பவி தேவியை தாக்கியது மட்டுமல்லாமல் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி பூனையின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதனைக் கண்டு வருத்தம் அடைந்த ஷாம்பவி தேவி பூனைக்கு சிகிச்சை அளிக்க போனில் டாக்டரிடம் தெரிவித்தார்.
அப்போது அவர் உன்னுடைய பூனைக்கு என்னால் சிகிச்சை அளிக்க முடியாது என ஆபாசமாக திட்டினார். இதுகுறித்து ஷாம்பவி தேவி, சைதன்ய புரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






