search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Viduthalai chiruthaigal katchi"

    • கடந்த தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது.
    • கட்டாயம் ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

    கடந்த தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது.

    இந்த முறை கூடுதலாக ஒரு பொதுத் தொகுதியை கேட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகியவற்றில் ஏதாவது ஒரு பொதுத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாத பிற சமூகத்தினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முடிவினை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எடுத்துள்ளார்.

    தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது திருமாவளவன் பொதுத் தொகுதியின் அவசியத்தை விளக்கி கூறினார்.

    ஆனால் தி.மு.க. தரப்பில் சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் தொகுதியை ஒதுக்க விரும்புகிறது. பொதுத் தொகுதியை தவிர்க்குமாறு வலியறுத்தப்பட்டது. ஆனால் கட்டாயம் ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் விடுதலை சிறுத்தையுடன் 2-வது கட்ட பேச்சு வார்த்தைக்கு இன்னும் அழைப்பு கொடுக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. இன்று மாலையில் புதுப்பிக்கப்பட்ட கலைஞர் நினைவிடம் திறப்பு விழா நடைபெறுவதால் நாளை (27-ந்தேதி) பேச்சு வார்த்தைக்கு அழைக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

    எனவே அக்கூட்டத்தில் 3 தொகுதிகளை கேட்டு பெறுவதில் திருமாவளவன் உறுதியாக இருக்கிறார். தி.மு.க.வும் அவரது கோரிக்கையை பரிசீலிக்கும் என்று தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 தொகுதிகளுக்காக போராடி வரும் நிலையில் எங்கள் பக்கம் வந்தால் 5 தொகுதிகள் தர தயார் என்று அ.தி.மு.க. தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
    • பா.ம.க. இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெற முடியாது என்ற தங்கள் நிலைப்பாட்டை சிறுத்தைகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகள் கேட்கிறது. ஆனால் அதற்கு தி.முக. தரப்பில் இன்னும் இறுதியாக எதுவும் தெரிவிக்காததால் விடுதலை சிறுத்தைகளும் தயக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    அதே நேரம் பா.ம.க.வும் தனது முடிவை அறிவிக்கவில்லை. தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமையும். திமு.க. கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும் என்று கூறி வருகிறார்.

    விடுதலை சிறுத்தைகளை குறி வைத்தே அவர் இவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது.

    விடுதலை சிறுத்தைகளை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அ.தி.மு.க. முயற்சித்து வருகிறது.

    4 தொகுதிகளுக்காக போராடி வரும் நிலையில் எங்கள் பக்கம் வந்தால் 5 தொகுதிகள் தர தயார் என்று அ.தி.மு.க. தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.


    அப்போது பா.ம.க. இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெற முடியாது என்ற தங்கள் நிலைப்பாட்டை சிறுத்தைகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பா.ம.க. வரும் என்பது உறுதியாகவில்லை என்று அ.தி.மு.க. தரப்பில் கூறி இருக்கிறார்கள்.

    ஆனாலும் அ.தி.மு.க.வின் 'ஆஃபரை' ஏற்க விடுதலை சிறுத்தைகள் தயக்கம் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் அ.தி.மு.க. 5 இடங்கள் வழங்கினாலும் அது வேட்பாளராகத்தான் இருக்க முடியும். ஆனால் தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்படும் இடங்கள் நிச்சயம் எம்.பி.க்கள் ஆகி விடுவார்கள் என்று கட்சி நிர்வாகிகளும் திருமாவளவனிடம் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    எனவே இந்த தேர்தலில் விட்டுவிடுங்கள். பின்னர் பார்க்கலாம் என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    • திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
    • கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது குறிப்பித்தக்கது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற் கொள்ளப்படுகிறது.

    அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் இன்று கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது குறிப்பித்தக்கது.

    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசை மட்டுமின்றி, அவர் இந்தப் பதவியை வகிப்பதற்குக் காரணமான அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகும்.
    • மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் கவர்னர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அரசியலமைப்புச் சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும் இன்று சட்டப்பேரவையில் நடந்து கொண்டுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    திட்டமிட்டே மாநில அரசோடு முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அரசியல் அரங்கில் அவ்வப்போது தேவையற்ற பரபரப்பை உண்டாக்கும் கவர்னர், தனது பொறுப்பையும் பொறுப்புக்குரிய மாண்பையும் மறந்து ஒரு கட்சியின் பிரதிநிதியைப் போலவே செயல்பட்டு வருகிறார். எனவே, அவர் கவர்னர் பதவியிலிருந்து விலகுவதோடு தமிழ்நாட்டிலிருந்தும் வெளியேற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    மாநில அரசு தயாரித்துக் கொடுக்கப்படும் உரையைப் படிப்பதென்பது ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டம் விதித்துள்ள கடமையாகும். அதை இன்று ஆர்.என்.ரவி அவர்கள் நிராகரித்துள்ளார். இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசை மட்டுமின்றி, அவர் இந்தப் பதவியை வகிப்பதற்குக் காரணமான அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகும். அரசியலமைப்புச் சட்டப்படி விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல் தொடர்ந்து இவ்வாறு அதை அவமதித்து வரும் ஆர்.என். ரவி அவர்கள் எந்த அடிப்படையில் கவர்னர் பதவியில் நீடிக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவர் கவர்னர் பதவி வகிப்பதற்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருப்பதற்கும்கூடத் தகுதியற்றவர் என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன.

    ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பொதுவெளியில் தொடர்ந்து உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்பி வருகிறார். சாதியின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படையிலும் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் பிரிவினையைத் தூண்டும் கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகிறார். அதன் மூலம் இங்கே சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவர் வகிக்கும் கவர்னர் பதவியை இப்படியான சட்ட விரோதச் செயல்களுக்குக் கவசமாகப் பயன்படுத்துவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இத்தகைய போக்குள்ள அவர் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருப்பதே தமிழ்நாட்டு மக்களுக்குக் கேடாக முடியும். எனவே, அவரைத் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

    "கவர்னர் பதவி என்பது பிரிடிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்குள் தங்கிவிட்ட ஒன்றாகும். ஒன்றிய அரசால் கவர்னர் நியமிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் ஒன்றிய அரசை ஆட்சி செய்யும் கட்சியாலேயே அவர் நியமிக்கப்படுகிறார். நடுநிலைக்கும் அவருக்கும் எந்தவொரு தொடர்பும் இருப்பதில்லை. தன்னை நியமிக்கும் கட்சியின் முகவராகவே அவர் செயல்படுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்குத் தொல்லை தருவதற்கும், தமக்குப் பிடிக்காத கட்சிகளை உடைப்பதற்கும், மாநிலத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்குவதற்கும் ஒன்றிய அரசால் கவர்னர் பயன்படுத்தப்படுகிறார். மாநில அரசுகளைக் கலைப்பதற்கு ஆளுநரைத்தான் ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. மாநில அரசுகள் இயற்றுகிற சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குகிற வேலையில் கவர்னர்கள் ஈடுபடுவதைப் பார்க்கிறோம்.

    மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் கவர்னர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை. எனவே கவர்னர் பதவியை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து முன்வைத்துவருகின்றன.

    'இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் கவர்னர் பதவி ஒழிக்கப்படும்' என்ற வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்கவேண்டும் என 'வெல்லும் சனநாயகம்' மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.வுடன் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    தி.முக. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.வுடன் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    தொகுதி பங்கீட்டு குழுவினர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதைத்தொடர்ந்து ம.தி.மு.க.வினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் வரும் 12-ந்தேதி தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது குறித்த தி.மு.க. தலைவர் முடிவு செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

    • பொய்கள் நிறைந்த பரப்புரையைக் குடியரசுத் தலைவரைப் படிக்கச் செய்ததன் மூலம் அவரை பாஜக அரசு அவமதித்து இருக்கிறது.
    • ஒட்டுமொத்தத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிக்கும் வெற்று உரை.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை எதிர்காலத்துக்கான எந்த ஒரு திட்டத்தைப் பற்றிய குறிப்பும் இல்லாமல் பா.ஜ.க.வின் தேர்தல் பரப்புரையாக அமைந்திருக்கிறது.

    பொய்கள் நிறைந்த பரப்புரையைக் குடியரசுத் தலைவரைப் படிக்கச் செய்ததன் மூலம் அவரை பாஜக அரசு அவமதித்து இருக்கிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    வறுமை குறியீட்டில் முன்பு இருந்ததை விட இந்த ஆட்சியில் இந்தியா முன்னேறிவிட்டதாக இந்த அரசு சுய தம்பட்டம் அடிக்கிறது. ஆனால், 125 நாடுகளைக் கொண்ட பசியால் வாடுவோரின் அட்டவணையில் ( global hunger index) இந்தியா முன்பு இருந்ததைவிடக் கீழே இறங்கி 111 ஆவது இடத்தில் இருக்கிறது. அருகாமையில் உள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் முதலான நாடுகளைவிடக் கீழே இந்தியா சென்றிருக்கிறது என்பது தலைகுனியச் செய்கிறது.

    உண்மை நிலை இவ்வாறு இருக்க 'இந்த நான்கு தூண்களையும் அதிகாரப்படுத்துவதற்காக பாடுபடுகிறேன்' என்று இந்த பாஜக அரசு சொல்வது எந்த அளவுக்கு வடிகட்டிய பொய் என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும்.

    ஒட்டுமொத்தத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிக்கும் வெற்று உரை. குடியரசுத் தலைவரை அவமதிக்கும் உரை. இதை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சமீபத்தில் திருச்சியில் நடத்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் மாநாட்டின் மூலம் தன் பலத்தை திருமாவளவன் நிரூபித்து காட்டி உள்ளார்.
    • தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி நாகப்பட்டினத்தை விட்டுக்கொடுக்க தயங்குகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

    முதலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற 30-ந்தேதி தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது.

    கடந்த தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற்றது.

    இந்த தேர்தலில் 3 தொகுதிகள் கேட்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.

    சமீபத்தில் திருச்சியில் நடத்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் மாநாட்டின் மூலம் தன் பலத்தை திருமாவளவன் நிரூபித்து காட்டி உள்ளார். இந்த மாநாட்டில் திரண்டிருந்த கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரிலேயே பார்த்தார்.

    இதை மையமாக வைத்து கூடுதல் தொகுதி கேட்கும் முடிவில் திருமாவளவன் உறுதியாக இருக்கிறார்.

    நாகப்பட்டினம் அல்லது காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றை கேட்க முடிவு செய்துள்ளார். நாகப்பட்டினம் தற்போது கம்யூனிஸ்டு கையில் உள்ளது. காஞ்சிபுரம் தி.மு.க. கையில் இருக்கிறது.

    நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதிக்குள் ஒரு சட்டமன்ற தொகுதியும், காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்குள் 2 சட்டமன்ற தொகுதிகளும் விடுதலை சிறுத்தைகள் கைவசம் உள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி நாகப்பட்டினத்தை விட்டுக்கொடுக்க தயங்குகிறது. அதேபோல் காஞ்சிபுரம் தொகுதிக்கு காங்கிரஸ் குறிவைத்துள்ளது. இந்த போட்டிக்குள் திருமாவளவனும் இறங்கி இருப்பதால் காங்கிரசும், கம்யூனிஸ்டும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

    • ஜெயலலிதா, கருணாநிதி இல்லை என தமிழகத்தில் பாஜக சடுகுடு விளையாட முயன்றால் அதை தடுத்து நிறுத்தும் சக்தி விடுதலை சிறுத்தைகளுக்கு உண்டு.
    • தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    திருச்சி:

    திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் சனநாயகம் எனும் தலைப்பில் பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் நோக்க உரையாற்றினார். பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நானும் திருமாவளவனும் எப்போதும் தமிழினத்தின் உரிமைக்கு வலு சேர்க்கிற அடிப்படையில் தான் இணைந்திருக்கிறோம். நமக்குள் இருப்பது தேர்தல் உறவு அல்ல. அரசியல் உறவு அல்ல. கொள்கை உறவு. தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் யாராவது பிரிக்க முடியுமா? அதுபோலத்தான் திராவிட முன்னேற்றக் கழகமும் விடுதலை சிறுத்தைகளும்.

    சமூகநீதி, சமத்துவ சிந்தனை கொண்ட ஆட்சியை நாடு முழுவதும் அமைக்க வேண்டும் என்று தான் இந்த மாநாட்டை திருமாவளவன் நடத்தி இருக்கிறார்.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள மக்களாட்சி மாண்புகள் காக்கப்பட வேண்டுமானால் ஜனநாயகம் வெல்ல வேண்டும்.

    இந்தியாவின் ஜனநாயகத்தை, பன்முகத் தன்மையை, ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களை காப்பாற்ற வேண்டுமானால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.

    இதுதான் நமது இலக்கு. பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக்காது. ஜனநாயக அமைப்பு முறையே இருக்காது. பாராளுமன்ற நடவடிக்கையே இருக்காது. ஏன்? மாநிலங்களே இருக்காது. இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். மாநிலங்களை கார்ப்பரேஷன்களாக மாற்றி விடுவார்கள்.

    பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை லட்சியம் தான் எல்லோருக்கும் இருக்க வேண்டும். பாஜகவுக்கு எதிரான வாக்குகள் எந்த காரணத்திலும் சிதற கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

    இந்த மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இங்கே திரண்டு வந்த தொண்டர்களின் வாகனங்கள் நெரிசலில் சிக்கியதால் பலராலும் மாநாட்டு திடலுக்கு வர இயலவில்லை.

    இந்த மாநாடானது பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சனாதன சக்திகளுக்கு எதிரானது. இது வெறும் தேர்தல் அரசியல் கணக்கல்ல நாட்டைக் காக்க, நாட்டு மக்களை காக்க வேண்டும் என்பதற்கானது. இன்றைக்கு ஜனநாயகத்திற்கு பேராபத்து சூழ்ந்துள்ளது. அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது. ராமர் கோவிலை கட்டி முடிக்கும் முன்பாக திறந்திருக்கிறார்கள். இது யாரை எய்ப்பதற்காக?

    ராமர் பக்தியை நாம் எதிர்க்கவில்லை. ராமர் அரசியலை தான் எதிர்க்கிறோம்.

    அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிய சனாதன சக்திகள் முயற்சிக்கிறது. மதுரை தூக்கி எறிந்தால் நாடு என்னாகும்? நாமெல்லாம் தலை நிமிர்ந்து வீதிகளில் நடமாட முடியுமா? சமூக நீதியை பாதுகாக்க முடியுமா? இட ஒதுக்கீட்டினை பெற முடியுமா? நம் குழந்தைகள் உயர்கல்வியை பெற முடியுமா? என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்பாவி உழைக்கும் சூத்திர இந்துக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தமிழகம் சிறுத்தைகள் மாநிலம்.

    சிறுத்தைகள் இருக்கும் ஊரில் ஆட்டுக்குட்டிகள் வந்து பார்த்தால் என்ன நிலை என்பது தெரியும்.

    தமிழகத்தை பாதுகாக்க படை வீரர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி படை வீரர்கள் இருக்கிறார்கள். உங்கள் கனவு தமிழகத்தில் பலிக்காது.

    இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு வந்து ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் செலுத்துவதாக மோடி கூறினார். ஆனால் அவர்கள் கருப்பு பணத்தைப் பற்றி இப்போது பேசுவதே கிடையாது. மோடியும் ,அமித் ஷாவும் அதானிக்கும் சேவை செய்வதையே வேலையாக கொண்டுள்ளார்கள்.

    நரேந்திர மோடி உலக மகா நடிகர்.

    பத்தாண்டு கால ஆட்சியில் இந்த திட்டத்தை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம் என்று அவர்களால் சொல்ல முடியுமா? விஜய் மல்லையா உள்பட வட இந்திய தொழிலதிபர்களின் பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருக்கிறார்கள். நீங்களோ நானோ படிப்பதற்கு கல்வி கடன் கேட்டால் தருகிறார்களா?

    இது மோடியை ஆட்சி அதிகார பீடத்திலிருந்து துரத்தி அடிக்கும் மாநாடு.

    ஜெயலலிதா, கருணாநிதி இல்லை என தமிழகத்தில் பாஜக சடுகுடு விளையாட முயன்றால் அதை தடுத்து நிறுத்தும் சக்தி விடுதலை சிறுத்தைகளுக்கு உண்டு. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த மாநாட்டில் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, ஏ.வ. வேலு, எஸ். எஸ்.சிவசங்கர், எம்பிக்கள் ஆ.ராசா, திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி. ராஜா, சி பி.ஐ. (எம்.எல்.) விடுதலை தீபங்கர் பட்டாச்சாரியார், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சிபிஐ (எம்.எல்.) மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் ஆகியோர் பேசினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் மேலிட பொறுப்பாளரும் மாநாட்டு பொறுப்பாளருமான பெரம்பலூர் இரா.கிட்டு.

    தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன், திருச்சி கரூர் மண்டல துணை செயலாளர் ராஜா மன்னன், புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் மருத பார்வேந்தன்,

    கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் என்கிற ஆற்றலரசு, அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர்வளவன், மேற்கு மாவட்ட செயலாளர் அங்கனூர் சிவா, அரசு ஊழியர் அய்க்கிய பேரவை மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி செயலாளர் வ.க. செல்லப்பன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் மாநாடு குறித்து வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சட்டமேதை அம்பேத்கர் வழியில் அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாளில் அதன் அடிப்படை விழுமியங்களை காக்க திருச்சியில் திரண்டனர் லட்சக்கணக்கான விடுதலை சிறுத்தைகள். வெல்லும் சனநாயகம் மாநாடு வென்றது.

    இவ்வாறு திருமாவளவன் அதில் தெரிவித்து உள்ளார்.

    • குடிபோதையில் பஸ்சை இயக்க அனுமதித்த பஸ்சின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தருமபுரி:

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொள்ள தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டியில் இருந்து இன்று காலை தனியார் பஸ்சில் அந்த கட்சியின் நிர்வாகிகள் 60-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு சென்றனர்.

    அப்போது பஸ் பொம்மிடி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பஸ்சில் பயணித்த கட்சியின் மற்ற நிர்வாகிகள் திடீரென்று சம்பவ இடத்திலேயே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், அரூர் டி.எஸ்.பி மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் தான் விபத்து அரங்கேறி உள்ளது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் விபத்து நடக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் உயிர் தப்பினோம்.

    குடிபோதையில் பஸ்சை இயக்க அனுமதித்த பஸ்சின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கட்சியினர் அனைவரும் சத்தம் போட்டனர்.

    இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பஸ்சின் முன்பக்க மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
    • பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்ததில் பஸ் டிரைவர் தருமபுரியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகேயுள்ள ஒடசல்பட்டி பத்திரஅள்ளி கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று காலை திருச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டுக்கு ஒரு தனியார் பஸ்சில் அந்த கட்சியை சேர்ந்த 60 பேர் சென்றனர்.

    அப்போது பொம்மிடி பகுதியில் தருமபுரி சாலையில் உள்ள ரெயில்வே பாலம் அருகே சென்றபோது திடீரென்று பஸ் எதிரே வைக்கோல் பாரம் ஏற்றி லாரி வந்தது. அந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் பஸ்சின் முன்பக்க மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதில் பஸ்சில் பயணித்த கட்சியினர் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து பொம்மிடி போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது மாநாட்டுக்கு செல்லும் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மதுப்போதையில் இருப்பது தெரியவந்தது. எதிரே வந்த லாரி டிரைவர் சாதூர்யமாக செயல்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்ததில் பஸ் டிரைவர் தருமபுரியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    காயமடைந்தவர்களை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து தனியார் பஸ் நிர்வாகத்தை கண்டித்து பஸ்சில் வந்த விடுதலை கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் தொப்பூர் கணவாய் பகுதில் நடந்த விபத்தில் 4 பேர் இறந்த நிலையில் இன்று பொம்மிடியில் நடந்த விபத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

    • மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி வருகை தருகிறார்.
    • மாநாட்டை ஒட்டி சிறுகனூரில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் திருச்சி வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை மறுநாள்( வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது.

    அக்கட்சியின் அரசியல் வெள்ளிவிழா, கட்சித் தலைவரின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

    மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

    இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டிஇ ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சாரியார்,

    திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ.,

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலாளர் ஆசை தம்பி, ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மாநாட்டு பொறுப்பாளருமான பெரம்பலூர் இரா. கிட்டு மற்றும் இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். மேலும் தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி வருகை தருகிறார்.

    முன்னதாக சென்னையில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணிக்கு மேல் புறப்பட்டு திருச்சி வருகை தருகிறார்.

    பின்னர் கார் மூலமாக சாலை மார்க்கத்தில் மாநாடு நடைபெறும் சிறுகனூருக்கு செல்கிறார். முன்னதாக செல்லும் வழியில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் சிலை அமைக்கும் பணிகளை பார்வையிடுவார் என கூறப்படுகிறது. இதை போன்று மாநாட்டில் பங்கேற்கும் மல்லிகார்ஜூன கார்கே பெங்களூரில் இருந்து திருச்சி புறப்பட்டு வருகிறார்.

    மாநாட்டை ஒட்டி சிறுகனூரில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    முதல்வர் வருகையை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் முதலமைச்சரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி டிஐஜி திருநாவுக்கரசு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி, பெரம்பலூர் இரா. கிட்டு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

    மாநாடு மேடை மற்றும் பந்தள் அமைக்கும் பணிகள் இன்று மாலைக்குள் இறுதி வடிவம் பெறும் என கட்சியினர் தெரிவித்தனர்.

    இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் மற்றும் இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • திருச்சியை அடுத்த சிறுகனூரில் வருகிற 26-ந்தேதி மாலை 4 மணிக்கு இந்த பிரமாண்டமான மாநாடு நடைபெற உள்ளது.
    • சுமார் 5 லட்சம் தொண்டர்களை திரட்டும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, கட்சி தலைவர் திருமாவளவனின் மணி விழா, இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி, கால்கோல் விழா ஆகியவற்றை ஒன்றிணைத்து 'வெல்லும் ஜனநாயக மாநாடு' என்ற தலைப்பில் மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

    திருச்சியை அடுத்த சிறுகனூரில் வருகிற 26-ந்தேதி மாலை 4 மணிக்கு இந்த பிரமாண்டமான மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கம்யூனிஸ்டு தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, ராஜா, தீபங்கர் பட்டாச்சார்யா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக அமைவதால் இதனை எழுச்சியுடன் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் திருமாவளவன் செய்து வருகிறார். சுமார் 5 லட்சம் தொண்டர்களை திரட்டும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விடுதலை சிறுத்தை நிர்வாகிகள், தொண்டர்கள் திரள்கிறார்கள்.

    மாநாட்டையொட்டி சமத்துவச் சுடர் ஓட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணிக்கு திருமாவளவன் சுடர் ஓட்டத்தை தொடங்கி வைக்கிறார். சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் நடக்கும் சுடர் ஓட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் த.பார்வேந்தன் தலைமை தாங்குகிறார். 4 நாட்கள் சுடர் ஓட்டம் ஓடி மாநாட்டு பந்தலில் அதனை திருமாவளவன் பெற்றுக் கொள்கிறார்.

    இதனை வழக்கறிஞர்கள் பார்த்திபன், வேல்முருகன், காசி, சொக்கலிங்கம், உதயகுமார், சத்தியமூர்த்தி, கராத்தே பாண்டியன், தினேஷ், திலீபன், செஞ்சுடர் ராமதாஸ், பிரபுவளவன், செல்வகுமார், சரிதா, அன் பழகன், முருகையன், ரத்தினவேல், மணிமாறன், சுப்பிரமணியன் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.

    ×