search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படுகாயம்"

    • பூபாலன் தன்னுடைய நண்பர்கள் 20 பேருடன் இருசக்கர வாகனத்தில் எஸ்.தாதம்பட்டி கிராமத்திற்கு சென்று அங்கிருந்த பொதுமக்களை சராமாரியாக தாக்கியுள்ளனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள எஸ்.தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அச்சுதன் (வயது26). இவர் தனியார் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

    இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு பாலகோட்டை எனும் கிராமத்தின் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு நாய்க்குத்தி கிராமத்தைச் சேர்ந்த தீர்த்தகிரி மகன் பூபாலன் (34) மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர்

    அவர்கள் அச்சுதனை பார்த்து எதற்காக வேகமாக செல்கிறாய் என திட்டியதாகவும் அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

    பின்னர் நாய்க்குத்தி கிராமத்தை சேர்ந்த பூபாலன் தன்னுடைய நண்பர்கள் 20 பேருடன் இருசக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் எஸ்.தாதம்பட்டி கிராமத்திற்கு சென்று அங்கிருந்த பொதுமக்களை சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அச்சுதன் (26), தினேஷ் (25), வினோத் (27), ராகவன் (23) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    பின்னர் அந்த கிராமத்தினர் திருப்பி தாக்க முற்பட்டபோது வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியினர் கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நாய்குத்தி கிராமத்தை சேர்ந்த பூபாலன், ரமேஷ் (24), ராஜ் குமார் (39), குமார் (41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஏ.டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன், டி.எஸ்.பி. கரிகால்பாரிசங்கர் ஆகியோர் அங்கு விரைந்து நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மீண்டும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பஸ் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது.
    • போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு நாராயணன் பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புட்லூர் அடுத்த எலுட்லாவை சேர்ந்த 13 தொழிலாளர்கள் திம்மம்பேட்டையில் உள்ள வாழைத்தோட்டத்தில் வேலைக்கு சென்றனர்.

    நேற்று மாலை வேலை முடிந்து அனைவரும் ஒரே ஆட்டோவில் சொந்த ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர்.

    தலைகாரி பள்ளி என்ற இடத்தில் ஆட்டோ வந்தபோது எதிரே வந்த ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பஸ் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ முழுவதும் நொறுங்கியது.

    ஆட்டோவில் இருந்த நாகம்மா, ராமாஞ்சினம்மா, பாலபெத்தைய்யா மற்றொரு நாகம்மா உட்பட 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு நாராயணன் பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே ஊரை சேர்ந்த 7 கூலி தொழிலாளர்கள் விபத்தில் பலியான சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

    • வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சீனாவின் ஹுனான் மாகாணம் சாங்டே நகரில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு இன்று காலை குழந்தைகள் வந்து கொண்டிருந்தனர். அப்போது வாகனம் ஒன்று பள்ளி வாசலில் மோதியது. இதில் ஏராளமான குழந்தைகள் காயம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் பள்ளியிலும், ஆஸ்பத்திரியிலும் குவிந்தனர்.

    வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வாகனத்தை ஓட்டி வந்தது யார் என்பது குறித்தும் போலீசார் தெரிவிக்கவில்லை.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவை மாவட்டத்தில் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • பெரும்பாலான குடிசை வீடுகளில் ஆட்கள் இல்லை என்பதால் பெரியளவில் ஆபத்து இல்லையென அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது தீபாவளியை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் இரவு முதலே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாட தொடங்கினர்.

    தமிழக அரசின் சார்பில் பட்டாசுகள் வெடிக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். புத்தாடை அணிந்து, சாமி கும்பிட்டு பலகாரங்களை ஒருவருக்கொருவர் கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    அதன்பிறகு அவர்கள் பட்டாசுகளுடன் தெருக்களுக்கு வந்திருந்து வெடிகளை வெடித்து மகிழ்ச்சி அடைந்தனர். தீபாவளி வெடிவிபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்று 11 இடங்களில் ராக்கெட் வெடிகளால் தீவிபத்துக்கள் ஏற்பட்டது தெரியவந்து உள்ளது. அதாவது கோவை மாநகரில் ஒலம்பஸ் பெருமாள்கோவில் வீடு, மேட்டுப்பாளையத்தில் 2 வீடுகள், தொண்டாமுத்தூர், அன்னூர், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் ராக்கெட் வெடிகள் விழுந்து குடிசை வீடுகள் தீப்பிடித்தன. ஆனாலும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    மேலும் தீபாவளி வெடி வெடித்ததில் பல்வேறு இடங்களில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    கோவை மாவட்டத்தில் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் கடந்தாண்டை விட இந்தாண்டு விபத்துக்கள் பெருமளவில் குறைந்து இருந்தது. மேலும் கோவையில் உள்ள 13 தீயணைப்பு நிலையங்களில் வேலை பார்க்கும் 110-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீபாவளி அன்று பணியில் இருந்தனர். மொத்தம் 16 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் வீரர்கள் விரைந்து சென்று தீயை இணைத்தனர். பெரும்பாலான குடிசை வீடுகளில் ஆட்கள் இல்லை என்பதால் பெரியளவில் ஆபத்து இல்லையென அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பட்டாசு வெடித்து சிதறியதில் எழுந்த தீப்பிளம்பு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 154 பக்தர்கள் படுகாயமடைந்தனர்.
    • பட்டாசுகள் வெடித்ததில் விதிமுறைகளை கடைபிடிக்காததே வெடிவிபத்து காரணம் என்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அருகே உள் அஞ்சூற்றம்பலம் பகுதியில் வீரர் காவு கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தெய்யம் என்ற பாரம்பரிய திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்துவந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் தெய்யம் ஊர்வலம் நடந்தது. இதில் கலந்துகொள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர்.

    ஊர்வலம் தொடங்கிய போது கோவில் வளாகத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது தீப்பொறி பறந்து பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் விழுந்தது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் மொத்தமாக வெடித்து சிதறியது.

    இந்த பயங்கர வெடி விபத்தில் கோவில் திருவிழாவில் பங்கேற்றிருந்த பக்தர்கள் சிக்கினர்.

    பட்டாசு வெடித்து சிதறியதில் எழுந்த தீப்பிளம்பு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 154 பக்தர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள், போலீசார் உள்ளிட்டோர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் காசர்கோடு, கோழிக்கோடு, கண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    அவர்களில் 10 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் காசர்கோடு மாவட்ட கலெக்டர் இன்பசேகர், கண்ணூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜ்பால் மீனா, போலீஸ் சூப்பிரண்டு ஷில்பா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

    மேலும் வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். பட்டாசுகள் வெடித்ததில் விதிமுறைகளை கடைபிடிக்காததே வெடிவிபத்து காரணம் என்பது தெரியவந்தது. வெடி விபத்து நடந்த இடத்தை மாநில தொழில்துறை மந்திரி ராஜீவ் பார்வையிட்டார்.

    மாவட்ட நிர்வாகம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இந்த வெடிவிபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கேரள மாநில அரசு கூறியுள்ளது.

    இந்நிலையில் இந்த வெடி விபத்து தொடர்பாக நீலேஸ்வரம் போலீசார் வழக்கு பதிந்து கோவில் கமிட்டி தலைவர் சந்திரசேகரன், செயலர் பரதன், பட்டாசுகளை வெடித்த ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். வெடிவிபத்து தொடர்பாக கோவில் கமிட்டி நிர்வாகிகள் பாஸ்கரன், தம்பி, சந்திரன், பாபு, சசி ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    • உளுந்தூர்பேட்டை தாலுகா சேலம் ரவுண்டானா என்ற இடத்தில் வரும்போது வேகத்தடை அருகே திடீர் பிரேக் போடப்பட்டது.
    • பின்னால் வந்த 3 கார்கள் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.

    உளுந்தூர்பேட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா சிறு குடல் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (வயது 45) இவருடைய மனைவி கலைவாணி (வயது 42) ஆகியோர் குடும்பத்தோடு சென்னை சென்று விட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சேலம் ரவுண்டானா என்ற இடத்தில் வரும்போது வேகத்தடை அருகே திடீர் பிரேக் போடப்பட்டது.

    இதனால் பின்னால் வந்த 3 கார்கள் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காமராஜ், அவரது மனைவி கலைவாணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தகவல் அறிந்த இடைக்கால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ், தனிப்பிரிவு போலீஸ்காரர் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய காமராஜ் ,கலைவாணி ஆகிய இருவரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்தில் சிக்கிய கார்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    • ரெயிலின் பொது பெட்டியில் ஏற பயணிகள் முண்டியடித்தபோது படுகாயம்.
    • காயமடைந்தவர்கள் பாபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா ரெயில் நிலையத்தில், உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நோக்கிச் சென்ற ரெயிலில் பயணிகள் ஏற முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயமடைந்தனர்.

    இதில், 7 பேரின் நிலை சீராக உள்ளதாகவும், இருவர் எலும்பு முறிவுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பாந்த்ரா ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில், நடைமேடையில் பெரும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. பாந்த்ராவிலிருந்து கோரக்பூருக்குச் செல்லும் ரயில் எண் 22921 நிலையத்தின் பிளாட்பாரம் எண் 1-க்கு ரெயில் வந்தது. அப்போது, ரெயிலில் விரைவாக ஏறுவதற்கு ரெயிலின் பொது பெட்டியில் ஏற பயணிகள் முண்டியடித்தனர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பயணிகள் 9 பேர் படுகாயமடைந்தனர்.

    இதில், ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் மற்றும் பிற பயணிகள் தரையில் ரத்தக் காயங்களுடன் இருந்தவர்களை மீட்டு ஸ்ட்ரெச்சர்களில் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மேலும், ரெயில் நிலையத்தின் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும், காயமடைந்தவர்கள் பாபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு பயணிக்கு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டது மற்றும் சில பயணிகளுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்கிடையில், காயமடைந்த இருவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கடந்த ஆண்டில் 72,292 பேர் சாலை விபத்தில் காயம் அடைந்துள்ளனர்.
    • 70 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியவில்லை.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு (2023) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த சாலை விபத்து தொடர்பான ஆய்வுகள் வெளியாகி உள்ளது.

    சாலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையில் உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

    சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களில் தமிழ் நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் 72,292 பேர் சாலை விபத்தில் காயம் அடைந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் 55,769 பேரும், கேரளாவில் 54,320 பேரும் காயம் அடைந்து 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளன.

    மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தான் அதிக அளவில் சாலை விபத்துகளில் பலியானதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு விபத்தில் இறந்தவர்களில் 44 சதவீதம் பேர் (கிட்டத்தட்ட 76 ஆயிரம் பேர்) மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஆவார்கள். இதில் 70 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியவில்லை.

    இரு சக்கர வாகன ஓட்டிகளின் உயிரிழப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சாலை பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    • அதிகாலை நேரம் என்பதால் அப்போது பஸ்சில் இருந்த மாணவர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
    • க.விலக்கு போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வருசநாடு:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை காலாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு 2 பஸ்களில் ஆசிரியர்கள் சுற்றுலா அழைத்து வந்தனர்.

    இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள குன்னூர் டோல்கேட் பகுதியில் வந்து கொண்டிருந்த போது 46 மாணவர்களை ஏற்றி கொண்டு வந்த ஒரு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு இறங்கி வயலுக்குள் தலை குப்புற கவிழ்ந்தது.

    அதிகாலை நேரம் என்பதால் அப்போது பஸ்சில் இருந்த மாணவர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென பஸ் கவிழ்ந்த நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கி அவர்கள் கூச்சலிட்டனர்.

    இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் மற்றொரு பஸ்சில் வந்தவர்களும் விபத்தில் சிக்கி காயம் அடைந்த மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை மீட்டனர்.

    இந்த விபத்தில் காயம் அடைந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் முத்துமாரி, சரண்யா உள்பட 4 ஆசிரியர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் மாணவர்களான சஞ்சனா (வயது 8), ஸ்டெபி (11), கிருஷ்ணரிஷி (13), சுர்ஜித் (9), ஆதிரா (13), அபிஷேக் (13), ஜெர்வின் ஜீனு (11), ரித்திக் (13), லிபிசா (10), ரோசிக் (11), டிரைவர் புரோசன் (30), ஆசிரியைகள் சுகன்யா (30), சரண்யா (38), தங்கம் (53), ஷோபா (36) உள்பட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த க.விலக்கு போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று இரவு கிளம்பிய பஸ் டிரைவர் சரிவர தூங்காததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

    • படுகாயமடைந்த மூன்று பயணிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து விபத்துக்குள்ளானது.

    குஜராத்தின் டாங் மாவட்டத்தில் இன்று 64 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் பாதுகாப்புச் சுவரை இடித்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

    சொகுசுப் பேருந்து சூரத்தில் இருந்து சபுதாராவுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, இன்று மாலை 5 மணியளவில், மலை நகரமான சபுதாராவிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து பாதுகாப்புச் சுவரை இடித்து கவிழ்ந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    இதில், படுகாயமடைந்த மூன்று பயணிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காயமடைந்த மற்ற நபர்கள் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    நெடுஞ்சாலையில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து பாதுகாப்புச் சுவரை இடித்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

    • நேற்று இரவு அரசு பஸ் வேதாரண்யத்துக்கு வந்து கொண்டிருந்தது.
    • டிரைவர் பலி, 22 பேர் படுகாயம்.

    கடலூர்:

    சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று இரவு அரசு பஸ் வேதாரண்யத்துக்கு வந்து கொண்டிருந்தது. பஸ்சை பச்சையம்காடு பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜா (வயது 44) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை ரெட்டிச்சாவடியை அடுத்த கரிக்கன் நகர் மலட்டாறு பாலம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில் அதிவேகத்துடன் மோதியது. இதில்பஸ்சின் முன் பக்கம் முழுவதும் பலத்த சேதம் அடைந்தது. மேலும் ஆக்சில் முறிந்து டயர் கழன்று ஓடியது.

    மேலும் பஸ்சில் இருந்த டிரைவர் ராஜா தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். அப்போது பஸ் மோதிய வேகத்தில் டிரைவர் மீது கவிழ்ந்தது. இதனால் ராஜா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    மேலும் கண்டக்டர் திருக்குவளையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் பஸ்சில் பயணம் செய்த சென்னை ராமாபுரம் சொர்ணம் (வயது 48), கதிரேசன் (25), காரைக்கால் அஜிலியா மரியான் (65), 4 வயது பாத்திமா, 11 மாத குழந்தை ரேஷ்மா உட்பட 22 பயணிகள் காயமடைந்தனர்.

    சம்பவம் பற்றி அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து சென்று காயமடைந்த பயணிகளை மீட்டு புதுச்சேரி ஜிப்மர், அரசு மருத்துவமனை, கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சாலையில் கவிழ்ந்த பஸ்சை ஜே.சி.பி. மூலம் அப்புறப்படுத்தினர். உயிரிழந்த ராஜா உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சகோதரி-3 வயது மகள் படுகாயம்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் வெள்ளார் பகுதியை சேர்ந்தவர் சிமி(வயது35). நேற்று சிமி மற்றும் அவரது 3 வயது மகள் சிவன்யா, சகோதரி சினி(35) ஆகிய 3பேரும் ஸ்கூட்டரில் சென்றனர். சினி ஸ்கூட்டரை ஓட்ட, சிமி தனது மகளுடன் பின்னால் அமர்ந்து பயணித்தார்.

    திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெண்பால வட்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்கூட்டர் திடீரென சினியின் கட்டுப்பாட்டை மீறி ஓடி, பாலத்தில் மேலே இருந்து தடுப்புச்சுவரை தாண்டி கீழே இருந்த சர்வீஸ் சாலையில் விழுந்தது.

    பல அடி உயரத்தில் இருந்து ஸ்கூட்டருடன் 3 பேர் கீழே விழுந்ததை அங்கு நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் சிமி, அவரது மகள் மற்றும் சகோதரி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிமி பரிதாபமாக இறந்தார். அவரது மகள் மற்றும் சகோதரி ஆகிய இருவரும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வருகின்றனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிமி உள்ளிட்ட 3 பேரும் மேம்பாலத்தில் இருந்து ஸ்கூட்டருடன் சர்வீஸ் சாலையில் விழுந்தது ஏதே சினிமாவில் பார்த்தது போன்று இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் சிமி உள்ளிட்டோர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

    ×