குலசேகரம் அருகே லாரி மோதியதில் பியூட்டி பார்லர் உரிமையாளர் படுகாயம்

இந்த வண்டிகள் அதிக வேகத்துடன் செல்வதால் பல விபத்துகள் நடைபெறுகிறது.பொதுமக்கள் வந்ததும் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் இரவு நேரங்களில் அதிக பாரத்துடன் டாரஸ் லாரிகளில் கல், எம் சான்ட் போன்ற கனிம வளங்கள் பூதப்பாண்டி, திட்டுவிளை, தடிக்காரன்கோணம் சுருளோடு, பொன்மனை, குலசேகரம் வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த வண்டிகள் அதிக வேகத்துடன் செல்வதால் பல விபத்துகள் நடைபெறுகிறது.

நேற்று இரவு அருமனை பகுதியை சேர்ந்த ரெவிகுமார் (வயது 38) என்பவர் பூதப்பாண்டி பகுதியில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். தினமும் குலசேகரம் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் அங்கு சென்று வருவது வழக்கம். நேற்று இரவு கடையை மூடி விட்டு சுருளோடு பகுதியில் வரும்போது நாகர்கோவிலில் இருந்து அதிக கல் பாரத்துடன் கனரக வாகனம் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டு இருந்தது. இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்த ரெவிகுமார் மீது உரசியது. இதில் அவர் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் வந்ததும் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

உடனே ரெவிகுமாரை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ரெவிகுமார் கொடுத்த புகாரின்பேரில் குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதங்கோடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் விஜயகுமார் என்பது தெரியவந்தது. தலைமறைவான லாரி டிரைவர் விஜயகுமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com