search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirumavalan"

    • மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி வருகை தருகிறார்.
    • மாநாட்டை ஒட்டி சிறுகனூரில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் திருச்சி வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை மறுநாள்( வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது.

    அக்கட்சியின் அரசியல் வெள்ளிவிழா, கட்சித் தலைவரின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

    மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

    இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டிஇ ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சாரியார்,

    திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ.,

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலாளர் ஆசை தம்பி, ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மாநாட்டு பொறுப்பாளருமான பெரம்பலூர் இரா. கிட்டு மற்றும் இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். மேலும் தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி வருகை தருகிறார்.

    முன்னதாக சென்னையில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணிக்கு மேல் புறப்பட்டு திருச்சி வருகை தருகிறார்.

    பின்னர் கார் மூலமாக சாலை மார்க்கத்தில் மாநாடு நடைபெறும் சிறுகனூருக்கு செல்கிறார். முன்னதாக செல்லும் வழியில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் சிலை அமைக்கும் பணிகளை பார்வையிடுவார் என கூறப்படுகிறது. இதை போன்று மாநாட்டில் பங்கேற்கும் மல்லிகார்ஜூன கார்கே பெங்களூரில் இருந்து திருச்சி புறப்பட்டு வருகிறார்.

    மாநாட்டை ஒட்டி சிறுகனூரில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    முதல்வர் வருகையை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் முதலமைச்சரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி டிஐஜி திருநாவுக்கரசு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி, பெரம்பலூர் இரா. கிட்டு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

    மாநாடு மேடை மற்றும் பந்தள் அமைக்கும் பணிகள் இன்று மாலைக்குள் இறுதி வடிவம் பெறும் என கட்சியினர் தெரிவித்தனர்.

    இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் மற்றும் இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    ×