search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanyakumari"

    • ராமர் உருவம் பொறித்த காவி கொடி ஏற்றப்பட்டது.
    • கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பையும் பதட்டையும் ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி:

    அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி ராமர் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி அன்றைய தினம் இரவு குமரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    மேலும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறையில் கடல் நடுவில் உள்ள பாறையில் இரும்பு கம்பி நடப்பட்டு ராமர் உருவம் பொறித்த காவி கொடி ஏற்றப்பட்டது. அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சி.எஸ். சுபாஷ் தலைமையில் குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜ் இந்த கொடியை ஏற்றி வைத்தார்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பாறையில் ஏற்றப்பட்ட ராமர்கொடி குறித்து சமூக வலைத் தளங்களில் சர்ச்சை கிளப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவோடு இரவாக கடலில் உள்ள பாறையில் ஏற்றப்பட்ட ராமர் கொடி அகற்றப்பட்டது. அதையும் மீறி அந்த பகுதியில் மீண்டும் காவி கொடியேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் அந்த காவி கொடி அகற்றப்பட்டது.

    இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பையும் பதட்டையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சுற்றி தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    • முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகிறார்கள்.
    • கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம், பத்ம நாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை, சங்கு துறை-சொத்தவிளை, கணபதிபுரம் உள்ளிட்ட கடற்கரைகள் என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை என பல இடங்கள் இருக்கும் கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பல மாநிலங்களை சேர்ந்த வர்கள், வெளிநாட்டினர் சுற்றுலாவாக வருகிறார்கள்.

    சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டையுமே கன்னியாகுமரியில் பார்க்கலாம். குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வருபவர்கள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்க்க தவறுவதில்லை. அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகிறார்கள்.

    மேலும் கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து மகிழ்வார்கள். அது மட்டுமல்லாமல் சிறந்த ஆன்மீக தலமாகவும் கன்னியாகுமரி திகழ்கிறது. இங்குள்ள பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கும் சுற்றுலா பயணி கள் செல்கின்றனர். கன்னியாகுமரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் இந்த மாதங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும். அதோடு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வருகையும் இந்த மாதங்களில் அதிகமாக இருக்கும்.

    இந்த ஆண்டும் சீசன் காலமான தற்போது கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதுவும் சபரிமலைக்கு செல்லக்கூடிய அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் திரும்பிய இடமெல்லாம் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது.

    அவர்கள் விவேகானந்தர் மண்டபத்தை காண படகு போக்குவரத்து தொடங்கு வதற்கு முன்பே படகு குழாம் முன்பு நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். பராமரிப்பு மற்றும் பாலம் பணிகள் காரணமாக திருவள்ளுவர் சிலையை பார்க்க சுற்றுலா பயணிகள் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை.

    சுற்றுலாவை ஆனந்தமாக கொண்டாடும் நோக்கத்தில் கன்னியாகுமரிக்கு வருபவர்களில் சிலர் ஆபத்தை உணராமல் செயல்படுவது தான் அதிர்ச்சிகரமான விஷயமாக உள்ளது. கன்னியாகுமரி கடலில் அவ்வப்போது ராட்சத அலைகள் எழும். காற்றின் வேகமும் அதிகமாகும்.

    இதனால் கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பாறைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி சிலர் அங்கு சென்று விடுகிறார்கள்.

    அவ்வாறு தடையை மீறி செல்பவர்கள் பாறைகளில் அமர்ந்தும், நின்று கொண்டும் செல்போனில் செல்பி எடுக்கின்றனர். மேலும் சிலர் குரூப்பாக நின்று போட்டோ எடுக்கிறார்கள். அவர்கள் பாறைகளுக்கு செல்லும் வழியும், பாறைகள் மீது நிற்பதும் ஆபத்தானது என போலீசார் எச்சரித்துள்ள போதிலும் பலர் கண்டு கொள்வதில்லை.

    தற்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்று அதிகமாக அடித்து வரும் நிலையிலும் இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப, இளைஞர்கள் பலரும் ஆபத்தான பகுதிகளுக்கு சர்வசாதாரணமாக சென்று வருகின்றனர். அதனை தடுக்க அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    இந்த விஷயத்தில் போலீசார் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பது ஒரு புறம் இருந்தாலும், ஆபத்து என தெரிந்தும் அந்த பகுதிகளுக்கு செல்வோர் தங்களின் எதிர்காலம், குடும்பம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கவனமாக செயல்படவேண்டும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.

    • சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • காரைக்கால் பகுதிகளிலும் நேற்று (31.12.2023) முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை (06.01.2024) லேசானது முதல் மிதமான மழை.

    காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நேற்று (31.12.2023) முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை (06.01.2024) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்நிலையில், வடமேற்கு திசையில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் அனைத்து சுற்றுலா தலங்களும் களை கட்டியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச்சென்ற வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் சனிக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

    முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கடந்த 3 நாட்களாக மழை மேகமூட்டத்தினால் தெரியாமல் இருந்த சூரிய உதயம் இன்று மழை மேகம் நீங்கியதைத்தொடர்ந்து கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத்தெரிந்தது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன்காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம், பாரதமாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், ராமர் கோவில், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கன்னியாகுமரியில் விடுமுறை நாளான இன்று சபரிமலை சீசன் களைகட்டி உள்ளது.

    இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் அனைத்து சுற்றுலா தலங்களும் களை கட்டியது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • நான்குமாட வீதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அழகிய கிராமம்.
    • பாண்டிய மன்னன் ஒருவர் கன்னியாகுமரி பகவதியைத் தரிசிக்க வந்தான்.

    குமரி மாவட்டத்தில் பல்வேறு சிறப்புகள் இருப்பதைப்போல, பல வினோதங்களும் இருக்கின்றன. பெரும்பாலான மாவட்டங்களின் பெயரும், மாவட்டங்களின் தலைநகரங்களும் அந்தந்த மாவட்டங்களின் பெயரிலேயே அமைந்திருப்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெயர் கன்னியாகுமரி என்று இருந்தாலும், மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலாக அமைந்திருக்கிறது.

    கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத்தலமாக அமைந்திருந்தாலும், மாவட்ட நிர்வாக அலுவலகம், மாவட்ட போலீஸ் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் நாகர்கோவில் நகரில்தான் அமைந்துள்ளன. எனவே மாவட்டத்தின் பெயர் குமரியாக இருந்தாலும் வெளிமாவட்டத்தினர் நாகர்கோவில் மாவட்டம் என்று சொல்லும் அளவுக்கு நாகர்கோவில் மாவட்டத்தின் தலைநகராக விளங்குகிறது.

    இதேபோல் மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலை உள்ளடக்கிய தாலுகாவின் பெயர் அகஸ்தீஸ்வரம் என அழைக்கப்படுகிறது. ஆனால் தாலுகா அலுவலகம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த தாலுகா அலுவலகம் நாகர்கோவில் கேப் ரோட்டில் தற்போது மாவட்ட தீயணைப்பு அலுவலகம் செயல்பட்டு வரும் இடத்தில் அமைந்திருந்தது. மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் நாகர்கோவில் பெயரில் தாலுகா அமையாமல் கன்னியாகுமரி அருகே அமைந்துள்ள அகஸ்தீஸ்வரம் என்ற ஊரின் பெயரில் அமைந்திருப்பது வியப்பை தருகிறது.

    அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சிக்காலத்திலேயே மன்னர்களால் இந்த ஊருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மன்னர் ஆட்சிக்காலத்தில் இந்த ஊரைச் சேர்ந்த சிலர் முக்கிய பொறுப்புகளில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஊரில் பிறந்த பலர் படித்து பல்வேறு துறைகளில் மின்னிக் கொண்டிருக்கிறார்கள். மலையாள சினிமாவின் தந்தை என புகழப்படும் ஜே.சி.டேனியல் பிறந்த ஊர் அகஸ்தீஸ்வரம் ஆகும். மேலும் பல்வேறு அரசியல் பிரமுகர்களையும் இந்த ஊர் உருவாக்கி உள்ளது.

    இப்படி பல்வேறு பெருமைகளைக் கொண்ட அகஸ்தீஸ்வரம், மதுரை நகரைப்போன்று நான்குமாட வீதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அழகிய கிராமம் ஆகும். அகஸ்திய முனிவர் இந்த பகுதிக்கு வந்து தவம் செய்ததாகவும் புராணக்கதைகளில் கூறப்படுகிறது. அதனால் அங்கு ஒரு கோவிலும் அமைந்துள்ளது.

    நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் கொட்டாரம் என்னும் ஊரிலிருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் சாலையில் வடுகன்பற்று என்ற சிறிய கிராமத்தில் இந்த கோவில் உள்ளது. நாகர்கோவிலிருந்து 16 கி.மீ. தொலைவு ஆகும்.

    பாண்டிய மன்னன் கட்டிய கோவில்

    கைலாயத்தில் பரமசிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது பூலோகவாசிகள் கைலாயம் சென்றனர். அதனால் கைலாயம் சமமின்றி வடக்கே உயர்ந்தும், தெற்கே தாழ்ந்தும் அப்போது சிவன் அகஸ்தியரிடம் தெற்கே செல்வாய், பொதிகை மலையில் அமர்வாய் என்றார். அகத்தியரும் அப்படியே செய்தார். சிவனுக்குத் திருமணம் முடிந்து கைலாயத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சென்றபின் அகத்தியர் தனியே ஓர் இடத்திற்குச் சென்று தியானத்தில் அமர்ந்தார். அவர் தியானம் செய்த இடம் அகஸ்தீஸ்வரம் ஆயிற்று. எனவே இந்த கோவிலில் உள்ள சிவன் அகத்தியர் பெயரால் வழங்கப்படுகிறார்.

    மதுரை பாண்டிய மன்னன் ஒருவர் கன்னியாகுமரி பகவதியைத் தரிசிக்க வந்தான். தரிசனம் முடிந்தபின் பாண்டியன் கோவிலில் அமர்ந்து கொண்டிருந்தபோது அவனது குதிரை தறி கெட்டு ஓடியது. காவலர்கள் குதிரையைப் பிடிக்கச் சென்றனர். அரசன் வேறு ஒரு குதிரை மேல் ஏறி தவறிய குதிரையைக் காணச் சென்றான். ஒரு காட்டுப்பகுதியில் குதிரை நிற்பதைக் கண்டான். குதிரையின் வலது, இடது என இரு பக்கங்களிலும் நிழல் விழுவதைக் கண்டான். அந்த காட்சி அதிசயமாக இருந்தது. ஜோதிடரிடம் அதற்கு காரணம் கேட்டான் மன்னன். அவர்கள் அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி கொடுத்த இடம் அது என்றார்கள். அரசனும் அந்த இடத்தின் பெருமை அறிந்து அங்கே ஒரு கோவில் கட்டினான். அந்த கோவில் வடுகன்பற்று கோவில் என்பதும் ஒரு கதை.

    பரிவார தெய்வமான அகஸ்தியர்

    இந்த கோவில் கி.பி. 12 -ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கட்டப்பட்டது என சொல்லப்படுகிறது. கி.பி.1127-ம் ஆண்டு கல்வெட்டு உடையவர்மன் ஸ்ரீ வல்லவதேவன் என்ற பாண்டிய மன்னன் இந்த கோவிலைக் கட்டியது பற்றிக் கூறுகிறது. அகஸ்தியரும் இந்த கோவிலின் பரிவார தெய்வங்களுள் ஒன்றாக வழிபடப்படுகிறார். வடுகன்பற்று பகுதிக்கு அகஸ்திய முனிவர் வந்து தவம் செய்ததின் காரணமாகவும், அதனால் அகஸ்தீஸ்வரமுடைய நயினார் கோவில் அமைந்திருப்பதாலும் வடுகன்பற்றுக்கு அருகில் உள்ள ஊரின் பெயர் அகஸ்தீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. அகஸ்தீஸ்வரம் தற்போது பேரூராட்சியாக இருந்து வருகிறது.

    • ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறும்.
    • அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் காலை 7.45 மணிக்கு அம்பாள் கொலு மண்டபத்துக்கு எழுந்தருள், 8 மணிக்கு பஜனை, மாலை 5 மணிக்கு மங்கள இசை, 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் பவனி வருதல் போன்றவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லுதல் நடக்கிறது. தொடர்ந்து அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வருதல், தொடர்ந்து அம்மன் வெள்ளிபல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வருதல், நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு, பின்னர் ஆண்டுக்கு 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.

    • மரத்தினால் செய்யப்பட்ட தொட்டில் வாங்கி கட்டினால் உடனே குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    • செண்பகவல்லியும், நீலாதேவியும் நல்ல அறிவுடனும், அழகுடனும் வளர்ந்து வந்தனர்.

    சுமார் 500 ஆண்டுகளுக்குமுன்னாள் கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலைக்கு அருகில் உள்ள பத்மநாதபுரத்தில் இருக்கக்கூடிய சிவன் கோவிலில் அர்ச்சகராக ஒருவரை பணியமர்த்தினர். அந்த அர்ச்சகருக்கு நாளடைவில் திருமணமும் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த அர்ச்சகர் தன்னுடைய பெண்குழந்தைக்கு செண்பகவல்லி என்று பெயர் சூட்டினார். அதுமட்டுமில்லாமல் இனி அடுத்து பிறக்கும் குழந்தைக்கு சுவாமியின் பெயரான நீலகண்டன் பெயரை சூட்ட வேண்டும் என்று மனதில் நின்னைத்துக்கொண்டார்.

    அடுத்த வருடமே மீண்டும் ஒரு பெண்குழந்தை அர்ச்சகருக்கு பிறந்தது. பெண்குழந்தை என்பதால் சுவாமியின் பெயரான நீலகண்டன் என்பதை நீலா என்றும், மகள் சக்தியின் ரூபமாக திகழவேண்டும் என்று உணர்ந்த அந்த அர்ச்சகர் தன்னுடை மகளுக்கு நீலாதேவி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

    செண்பகவல்லியும், நீலாதேவியும் நல்ல அறிவுடனும், அழகுடனும் வளர்ந்து வந்தனர். மகள்கள் இருவரும் பருவம் அடைந்தனர். அவர்கள் விரும்பும் நகைகள், ஆடைகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியுடன் வளர்த்து வந்தார் அர்ச்சகர். மகள்களை தனியே வெளியே செல்ல அனுமதிக்காகல் தாய் அல்லது தந்தையுடன் தான் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக வளர்த்து வந்தார் அர்ச்சகர்.

    இப்படி இருக்கும் காலக்கட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாதபுரம் இருந்தது. பதமநாதபுரம் கோட்டைக்கு அருகில் மகாராஜா மார்த்தாண்ட வர்மாவிற்கு தனி தளபதியாக இருந்தவர் தான் பத்மநாபன். இவர் சுருள்வாள்வீசுவதில் வல்லவராகவும், சிறந்த வீரராகவும் இருந்தார்.

    பத்மநாபனின் பணி என்னவென்றால் படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது. இந்த பணியைதான் பத்மநாபன் கவனித்து வந்தார். ஒரு நாள் காலையில் புலியூர் குறிச்சியில் இருந்து பத்மநாதபுரம் அரண்மணை நோக்கி குதிரையில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார் பத்மநாபன். அப்போது கோவிலுக்கு சென்றுவிட்டு அக்காவும் தங்கையுமான செண்பகவல்லியும், நீலாதேவியும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    குதிரையில் வந்த பத்மநாபன் அக்கா தங்கையான செண்பகவல்லியையும், நீலாதேவியையும் பார்த்தார். ஆஹா... என்ன அழகு என்று வியந்து பார்த்துவிட்டு சென்றார். சிறிது தூரம் சென்ற பத்மநாபன் மறுபடியும் அந்த இரு பெண்களின் மீது ஆசை கொண்டு கோட்டைக்கு செல்லாமல் பெண்களை பின்தொடர்ந்து சென்றார்.

    குதிரையின் சத்தம் அருகில் வரவர அக்காவும் தங்கையும் வேகமாக நடந்து சென்றனர். தங்களுடைய வீட்டிற்கு போய் பயத்தில் திரும்பி பார்த்தனர். அப்போது பத்மநாபன் தெருவின் முனையில் நின்றுகொண்டு கையசைத்துவிட்டு சென்றார்.

    கோட்டைக்கு சென்றதும் பத்மநாபன் நடந்த அனைத்தையும் தன்னுடைய ஆலோசகரிடம் விளக்கி கூறினார். ஆலோசகரிடம் பத்மநாபன் அந்த பெண்கள் இருவரும் யார்? அவர்களது தந்தை யார் என்பதை அறிய வேண்டும் என்று கூறினார். உடனே அந்த ஆலோசகரும் அந்த தெருவில் வசித்து வரும் இளைஞர் ஒருவரை அழைத்துக்கொண்டு வந்தார்.

    அந்த இளைஞர், அந்த பெண்கள் இருவரும் அர்ச்சகரின் மகள்கள் என்றும், பெரியவள் பெயர் செண்பகவல்லி, இளையவள் நீலாதேவி என்றும் கூறினார். உடனே பத்மநாபன் மறுநாள் காலை சிவன் கோவில் அர்ச்சகரிடம் மகள்கள் பற்றி பேசலாம் என்று ஆலோசகரிடம் கூறினார்.

    இதை கேட்டதும் பத்மநாபனின் ஆலோசகர் இன்றைக்கு வேண்டாம். அடுத்தவாரம் சிவன் கோவிலில் கொடியேறுகிறது. எனவே அப்போது அங்கு செல்லலாம் என்று கூறினார். இப்படி சில நாட்கள் நகர்ந்தது. பங்குனி தேரோட்டத்துக்கு கொடியேறியதும் கோவில் அர்ச்சகரை பத்மநாபன் தன்னுடைய கோட்டைக்கு அழைத்துள்ளார்.

    கோட்டைக்கு வந்த அர்ச்சகரை அந்த ஆலோசகர் வழிமறித்து உன்னுடைய பெண்களை பத்மநாபன் பார்த்துள்ளார். உன்னுடைய இரு மகள்களையும் அவருக்கு பிடித்துள்ளது. திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார் என்று ஆலோசகர் கூறினார். அதனால் நீங்களே ஒரு நல்ல நாளாக பார்த்து சீக்கிரம் சொல்லுங்கள் என்றார் ஆலோசகர். அதற்கு அர்ச்சகர் பதில் சொல்லாமல் துக்கம் தொண்டையை அடைக்க, கை கால்கள் நடுநடுங்க வீட்டுக்கு வேகமாக நடந்து வந்தார். நடந்ததை பற்றி தன்னுடைய மனைவியிடம் கூறி வருத்தப்பட்டார் அர்ச்சகர்.

    படைவீரர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய பத்மநாபன் நம்முடைய குழந்தைகளை பெண் கேட்கிறான். அவன் குலத்தால் வேறுபட்டவன். திருமணம் செய்துகொடுப்பதற்கு மறுத்தால் கொலை செய்வதற்கும் அஞ்சமாட்டான். பத்மநாபன் மன்னருக்கு பக்கபலமாக இருப்பவன். என்ன செய்வது என்று தன் மனைவியிடம் ஆதங்கத்துடன் கூறினார் அர்ச்சகர்.

    உடனே அர்ச்சகரின் மனைவி, எல்லாவற்றையும் அம்மையப்பன் பார்த்துக்கொள்வான். இப்போது நீங்கள் உறங்குங்கள் என்று ஆறுதல் கூறினார். இப்படி ஒரு வாரம் சென்றபிறகு, ஆவணி தேரோட்டம் 10-ம் நாள் திருவிழாவிற்கு வந்த சிறப்பு அர்ச்சகர்கள் எல்லோரும் கோவிலில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தனர். அர்ச்சகர் தனது வீட்டிற்கு வருகிறார். அப்போது அவருடைய மனைவியும், மகள்களும் தேரோட்டத்தை காண கிளம்பிக்கொண்டிருந்தனர்.

    அவர்களை பார்த்ததும் அர்ச்சகர் இப்போது கோவிலுக்கு செல்ல வேண்டாம். மகள்கள் இருவருக்கும் தோஷம் கழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே இன்றைக்கு 6 வகை கூட்டு வச்சி, பாயசம் தயார் செய்து அப்பளத்துடன் சாப்பாட்டை தயார் செய்து வைக்குமாறு கூறினார்.

    இதை பிள்ளைகள் கையினால் 7 பேருக்கு தானம் செய்த பிறகு நாம் சாப்பிட வேண்டும் என்றார் அர்ச்சகர். பின்னர் தன்னுடைய இரு மகள்களையும் கோட்டைக்கு அருகில் பாழடைந்த ஆழ்கிணறு ஒன்று உள்ளது. அந்த பாழடைந்த ஆழ்கிணற்றுக்கு இரு பெண்களையும் அழைத்துக் கொண்டு சென்றார் அர்ச்சகர்.

    செண்பகவல்லியும், நீலாதேவியும் ஒரேநேரத்தில் கிணற்றில் உள்ள 21 படிகளை தாண்டி இறங்கி காலை கழுவுங்கள் என்று சொன்னார் அர்ச்சகர். உடனே செண்பகவல்லி அப்பா... இந்த பாழடைந்த கிணற்றை காண்பதற்கே பயமாக உள்ளது என்றாள். உடனே நீலாதேவி அது ஒன்றும் இல்லை வா... என்று கூறி அக்காவின் கையை பிடித்து கூட்டிக்கொண்டு சென்றார்.

    முதலில் அவர்கள் இருவரும் நடந்து செல்ல அவர்களது பின்னால் நடந்து சென்றார் அர்ச்சகர். கடைசி படிக்கடில் இறங்கி இருபெண்களும் கால்களை கழுவிக்கொண்டு இருக்கும் போது அர்ச்சகர் அவர்கள் இருவரையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு விடுகிறார் அர்ச்சகர். என்ன செய்வதென்று அறியாத இரு பெண்களும் கிணற்றுக்குள் தத்தளித்தனர். உடனே செண்பகவல்லி மூச்சுத்திணறி இறந்துவிடுகிறாள்.

    உடனே நீலாதேவிமட்டும் கிணற்றில் தத்தளித்தபடி ஏன் அப்பா எங்களை இப்படி தள்ளிவிட்டீங்க... பத்மநாபனுக்கு பயந்து எங்களை இப்படி கொல்ல துணிந்துவிட்டீர்களே என்று சொல்லிக்கொண்டே நீலாதேவியும் உயிரை விட்டாள். இருமகள்களை பறிகொடுத்த அர்ச்சகர் வீட்டிற்கு திரும்பினார். அவரும் தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அர்ச்சகரின் மனைவியும் கணவனின் மார்பில் சாய்ந்து உயிரைவிட்டாள்.

    இப்படி தன்னுடைய அப்பாவால் உயிரிழந்த அக்காள் செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் ஆவியாகி கோட்டையை சுற்றி ஆதாளிபோட்டு வருவோரையும், போவோரையும் அடித்து துன்புறுத்தி வந்தனர். அதுமட்டுமில்லாமல் நீலாதேவி பத்மநாபனை கொன்று அவனது குடலை உறுவி மாலையாக போட்டு சந்தோசமாக ஆரவாரம் செய்து வந்தாள். அதுமட்டுமல்லாமல் பத்மநாபனை சார்ந்தவர்களும், கோட்டையை சுற்றி இருந்த ஊர்மக்களும் நோய்வாய்பட்டு இறந்து வந்தனர். சிலர் அகால மரணம் அடைந்தனர்.

    இதையெல்லாம் அறிந்த மகாராஜா, மலையாள நம்பூதிரிகளை வரவழைத்து சோளிபோட்டு பார்த்தனர். இதற்கெல்லாம் காரணம் அக்காள் செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் தான் என்பது தெரியவந்தது. உடனே இதற்கு என்ன பரிகாரம் என்று கேட்டார் மகாராஜா.

    நல்ல மந்திரவாதியை வைத்து பலிகொடுத்து படையல் பூஜை செய்து அவர்களை சாந்தப்படுத்துங்கள் என்று கூறினார்கள் நம்பூதிரிகள். நம்பூதிரிகள் சொன்னபடியே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பூஜை செய்யலாம் என்று முடிவு செய்தனர். உடனே மகாராஜா மலையாள மந்திரவாதிகள் 3 பேரை வரவழைத்தார். கோட்டைக்கு கிழக்கு பக்கத்தில் மண்ணால் ஆன இரண்டு பெண் உருவத்தை பிடித்து வைத்தனர்.

    அதன்பிறகு அங்கு ஆடு, கோழி பலியிடப்பட்டு, ஒருகோட்டை அரிசி பொங்கி ஒரே படையலாக படைத்தனர். இந்த படையல்கள்படைத்த பிறகுதான் செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் சாந்தம் அடைந்தனர். காலப்போக்கில் பூஜை நடைபெற்ற இடத்தில் ஒரு கோவிலை கட்டினர். அதுதான் மேலாங்கோட்டில் உள்ள அக்காள் தங்கை கோவில். கோவிலில் வீற்றிருக்கக்கூடிய அக்கா தங்கை இருவரும் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.

    அக்கா செண்பகாதேவி கோவிலில் பலிகள் கிடையாது சைவ படையல் மட்டும் தான் படைக்கப்படுகிறது. தங்கை நீலாதேவி கோவிலில் தான் பலிகள் உண்டு. முதல் பூஜை அக்கா செண்பகாதேவிக்கு தான். பிறகு தங்கை நீலாதேவிக்கு பூஜை செய்யப்படுகிறது.

    ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை கொடைவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். அதன்பிறகு தங்கை கோவிலான நீலாதேவி என்ற இசக்கி அம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா சிறப்பாக நடைபெறும்.

    ஒருதடவை இந்த திருவிழாவைக்காண திருவிதாங்கூர் மகாராணி வந்தார். கோவிலில் நடைபெறக்கூடிய உயிர்பலியை பார்த்துவிட்டு எதற்கு இப்படி உயிர்பலி கொடுக்குறீர்கள். அடுத்த திருவிழாவிற்கு பலி கொடுக்க கூடாது என்று கட்டளையிட்டு விட்டு சென்றார் மகாராணி.

    அன்று இரவு மகாராணிக்கு கடுமையான உதிரப்போக்கு ஏற்பட்டது நிற்கவே இல்லை. உடனே மகாராஜா நீலாதேவி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு கேட்ட மறுநிமிடமே உதிரப்போக்கு நின்றுவிட்டது. அன்று இரவு நீலாதேவி அம்மன் மகாராணியின் கனவில் விரிசடை முடியோடும், வீரப்பல்லோடும் அம்மன் காட்சி கொடுத்தாள். இதை பார்த்ததும் இருகரம் குவித்து வணங்கினார்.

    மறுநாள் காலையில் மகாராஜாவிடம், மகாராணி கனவில் விரிசடை முடியோடும், வீரப்பல்லோடும் நீலாதேவி அம்மன் வந்ததை கூறினார். இவ்வாறு காட்சி கொடுத்தது இசக்கி அம்மன் தான். எனவே அவரை இசக்கி அம்மன் என்று அழையுங்கள் என்று கூறுனார். அன்றுமுதல் நீலாதேவி அம்மனை இசக்கி அம்மன் என்று அழைக்கப்பட்டார்.

    ஒரு தடவை தனது குலதெய்வமான பத்மநாபரையும், குருவாயூரப்பனையும் வணங்கிவிட்டு வந்தார். தனது மனைவிக்கு ஏற்பட்ட கடுமையான உதிரப்போக்கு நின்றதால் தனது காவல் தெய்வமான அக்கா தங்கை கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதற்கு வந்தனர்.

    மகாராஜா அக்காள், தங்கை கோவிலில் இருவருக்கும் கையில் காப்பும், காலில் தண்டையும் அணிவித்துவிட்டு தன்னுடைய அரண்மனைக்கு புறப்பட்டார். அரண்மனைக்கு வந்த பிறகு அன்று இரவு மன்னனுடைய கனவில் தோன்றிய செண்பகவல்லி அம்மன் தனக்கு மோதிரம் வேண்டும் என்று கேட்டார். உடனே மகாராஜா மறுநாள் மாலை மோதிரத்தை செய்து கொண்டுவந்து அம்மனுக்கு அணிவித்தார்.

    அன்று இரவு அம்மன் கோவிலில் இசைக்கச்சேரி நடந்தது. இசை கச்சேரியை முடித்துக்கொண்டு மகாராஜாவிடம் பரிசுத்தொகையை வாங்கிக்கொண்டு பாடகர் வில்லு வண்டியில் தனது ஊரான குமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரத்திற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

    அந்த வில்லு வண்டி பத்மநாதபுரம் கிழக்கு பகுதியில் வரும்போது அங்குள்ள சுமைதாங்கி கல்லில் கேரள பெண்கள் போல இருவர் உடை அணிந்து தலையில் அழகிய கொண்டையிட்டு வந்தனர். அந்த இரு பெண்களும் வில்லு வண்டியை நிறுத்தினார்கள். பாடகரை பார்த்து அரண்மனையில தான் பாடுவீங்களா... இங்கேயும் பாடுங்க என்று கேட்டாங்க நீலாதேவி.

    இதை சற்றும் எதிர்பாராத பாடகர் அப்படியே மவுனமாகி நின்றார். ம்... பாடுங்கள் என்று சத்தமாக கத்தினார் நீலாதேவி. பாடகர் பயத்தி நடுநடுங்கி போனார். இதை பார்த்த செண்பகவல்லி, நீலா இங்கே வா... என்று கூறிக்கொண்டு பாடகர் அருகில் சென்றார்.

    நீலாவை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க பாடுங்க அப்டீன்னு சொல்ல அந்த பாடகர் அந்த இருவரையும் போற்றி பாடினார். பாடல் பாடி முடிந்தது செண்பகவல்லி அம்மன் விரலில் கிடந்த அழகிய மோதிரத்தை, அதாவது மன்னர் கொடுத்த அந்த மோதிரத்தை பாடகருக்கு கொடுத்தாள். மறுநாள் காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி அம்மன் கையில் கிடந்த மோதிர விரலில் கிடந்த மோதிரம் காணவில்லை என்று உடனே மன்னரிடம் சொன்னார்.

    மன்னர் கோவமுடன் நான் செய்து போட்ட மோதிரம் காணவில்லையா? மோதிரத்தை களவு செய்தவர்களை என்முன் கொண்டுவாருங்கள். அவனை மாறுகால், மாறு கை வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். உடனே அரசரின் கட்டளையை முரசுகொட்டி ஆங்காங்க ஊர்மக்களுக்கு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தான் பாடகர் அரண்மனைக்கு வந்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னார். உடனே மன்னர் என்னுடைய காவல் தெய்வம் உன் முன்னால் வந்தார்களா? நீ பாக்கியவான் தான் என்று சொல்லி பாடகருக்கு மேலும் பல பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

    அதுமட்டுமில்லாமல் அம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குழந்தை வரம் வேண்டுபவர்கள் அந்த கோவிலில் மரத்தினால் செய்யப்பட்ட தொட்டில் வாங்கி இந்த கோவிலில் கட்டினால் உடனே குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்.

    உண்மையிலேயே தன்னை நம்பி வரும் பக்தர்களை உயர்வாகி வைக்கிறார் மேலாங்கோட்டு அம்மன். இந்த கோவில் எங்க இருக்கு என்று நினைக்கிறீர்களா? நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லக்கூடிய சாலையில் தக்கலைக்கு முன்னால் குமாரகோவில் செல்லக்கூடிய பாதையில் தான் மேலாங்கோட்டு அம்மன் கோவில் அமைந்துள்ளது.  நாமும் அந்த அம்மன் கோவிலுக்கு செல்வோம். வழிபடுவோம்.

    • இந்த கோவிலின் விசேஷம் நட்சத்திர மண்டபம் ஆகும்.
    • காளையின் கால் தடம்பதித்த இடம்., கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம்.

    துன்பங்கள் நீங்கி மன அமைதி தரும் திருநந்தீஸ்வரர்

    குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திரு நந்திக்கரையில் திருநந்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி என்பதால், பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்ய, இந்த கோவிலை விட ஏற்ற கோவில் எதுவும் இல்லை எனலாம்.

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    காளையை சிவபெருமான் அடக்கி இழுத்து வந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது.

    காளையின் கால் தடம்பதித்த இடம்., கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம்.

    இந்த கோவிலின் விசேஷம் நட்சத்திர மண்டபம் ஆகும்.

    27 நட்சத்திர மண்டலம் கொண்ட கண துவாரங்கள் இங்கு உள்ளன. இந்த மண்டபத்துக்கு ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதை குறிக்கும் வகையில் மண்டபத்தை சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    பொதுவாக பரிகார வலம் வரும்போது மூன்று முறை சுற்றுவது வழக்கமாக இருக்கிறது.

    ஆனால் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலில் உள்ள மண்டபத்தை ஒரு தடவை சுற்றினால் ஒரு ஆண்டு சுற்றியதற்கான பலன் கிடைக்கிறது.

    குமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.

    இந்த கோவிலில் சிவனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி மன அமைதி கிடைப்பதாக கூறப்படுகிறது.

    இங்குள்ள குளத்து நீர் இந்நாள் வரை வற்றியதாக இல்லை.

    பகவான் இங்கு சுயம்பாக காட்சி தருவதால் முப்பத்தி முக்கோடி தேவர்களும் நேரடியாக தொண்டு செய்வதாக நம்பப்படுகிறது.

    இக்கோவிலில் அணையா விளக்கு ஒன்று காணப்படுகிறது.

    இவ்விளக்கில் எண்ணை தொடர்ந்து ஊற்றி வரும் பக்தர்களின் வேண்டுதல்களையும், இனி எண்ணை ஊற்ற வேண்டும் என எண்ணுபவர்களுடைய வேண்டுதல்களையும் இறைவன் ஏற்று அருள்புரிவார் என்பது ஐதீகம்.

    • தற்போது கோடை விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.
    • சுற்றுலா பயணிகளின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது.

    இதனை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 கோடியே 25 லட்சம் செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.

    கன்னியாகுமரி கடலின் தன்மை அடிக்கடி மாறுவதால் இந்த 2 அதிநவீன படகுகளும் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடந்தது. இந்த அதிநவீன படகுகளை கடலில் உல்லாச சுற்றுப்பயணம் செய்ய இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பயனாக கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்வதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.

    கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் யாரும் உயிர் பாதுகாப்பு கவசம் அணிந்து படகில் பயணம் செய்வதில்லை. இதனால் சுற்றுலா பயணிகளின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    எனவே வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் உயிர் பாதுகாப்பு கவசம் அணிந்து செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 அதிநவீன சொகுசு படகுகளும் கோவாவில் வடிவமைக்கப்பட்டு கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது.
    • உல்லாச படகு சவாரியை தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.

    இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 கோடியே 25 லட்சம் செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய பெயர்களை தாங்கிய அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.

    இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளும் கோவா வில் வடிவமைக்கப்பட்டு கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. கன்னியாகுமரி கடலின் தன்மை அடிக்கடி மாறுவதால் இந்த 2 அதிநவீன படகுகளும் விவேகானந்த மண்டபம் மற்றும் திருவள்ளுர் சிலைக்கு இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

    இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளையும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச பயணம் சென்று வர பயன்படுத்த வேண்டும் என்று கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் விடுத்து வந்தன. அதன் பயனாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளும் நேற்று முதல் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த உல்லாச படகு சவாரியை தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதற்கான கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. குளுகுளு வசதி கொண்ட படகில் பயணம் செய்ய நபர் ஒன்றுக்கு ரூ.450 வீதமும் சாதாரண படகில் பயணம் செய்ய நபர் ஒன்றுக்கு ரூ.350 வீதமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை நேற்று ஒரே நாளில் 4 முறை நடந்த உல்லாச படகு சவாரியில் 450 சுற்றுலா பயணிகள் பயணம் செய்து உள்ளனர்.

    • கன்னியாகுமரியில் அவ்வப்போது கடல் நீர் மட்டம் தாழ்வதும், உயர்வதுமாக இருந்து வருகிறது.
    • இன்றும் கடல் நீர் உள்வாங்கியதால் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் கடந்த சில நாட்களாக மாற்றங்களை சந்தித்து வருகிறது. அவ்வப்போது கடல் நீர் மட்டம் தாழ்வதும், உயர்வதுமாக இருந்து வருகிறது.

    பவுர்ணமி முடிந்த நிலையில் நேற்று காலை கடல் நீர்மட்டம் திடீரென்று உள்வாங்கியது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.

    இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) 2-வது நாளாக கடல் நீர் மட்டத்தில் மாற்றம் தொடர்ந்தது. இன்றும் கடல் நீர் உள்வாங்கியதால் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதனால் படகு குழாம் முன்பு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து 2 மணி நேரம் தாமதத்திற்கு பின்பு படகு போக்குவரத்து தொடங்கியது.

    ராமேசுவரம் பகுதியில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கம். ஆனால் சமீப காலமாக அடிக்கடி கடல் உள்வாங்கி வருகிறது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. 4 பக்கமும் கடல் சூழ்ந்த ராமேசுவரத்தில் ராமர் சிவபூஜை செய்ததாக ஐதீகம். இதனால் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.

    காசி செல்லும் பக்தர்கள் ராமேசுவரத்திலும் புனித நீராட வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே காசி செல்லும் பக்தர்கள் ராமேசுவரத்திற்கு அதிக அளவில் வருகை தருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று (ஞாயிற்று) விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடல் பகுதியில் புனித நீராடினர். அப்போது திடீரென 100 மீட்டர் தூரம் கடல் உள்வாங்கி சென்றது. இதனை கண்ட பக்தர்கள் அச்சம் அடைந்தனர். இயற்கை சீற்றம் ஏதோ ஏற்பட போகிறதோ? என்று பதட்டம் அடைந்தனர். ஆனால் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. கடல் அமைதியாக காணப்பட்டது.

    இதனால் ஒரு சில பக்தர்கள் அச்சம் அடைந்த போதிலும் பல பக்தர்கள் அதை பற்றி கவலைபடாமல் புனித நீராடினர்.

    முன்னதாக ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோவிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் வடக்கு வாசல் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட அதிக நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    அதனை தொடர்ந்து ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் தீபாராதணை வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரம் பகுதியில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கம். ஆனால் சமீப காலமாக அடிக்கடி கடல் உள்வாங்கி வருகிறது. கடந்த 10 நாட்களாக திடீர், திடீரென கடல் உள்வாங்கியபடி இருப்பதால் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டு விடுமோ? என்று ராமேசுவரம் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைத்துள்ளனர்.

    ×