search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு முதல் நாளில் 450 சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி
    X

    உல்லாச படகில் பயணம் செய்த பயணிகளை காணலாம்

    கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு முதல் நாளில் 450 சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி

    • 2 அதிநவீன சொகுசு படகுகளும் கோவாவில் வடிவமைக்கப்பட்டு கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது.
    • உல்லாச படகு சவாரியை தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.

    இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 கோடியே 25 லட்சம் செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய பெயர்களை தாங்கிய அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.

    இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளும் கோவா வில் வடிவமைக்கப்பட்டு கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. கன்னியாகுமரி கடலின் தன்மை அடிக்கடி மாறுவதால் இந்த 2 அதிநவீன படகுகளும் விவேகானந்த மண்டபம் மற்றும் திருவள்ளுர் சிலைக்கு இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

    இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளையும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச பயணம் சென்று வர பயன்படுத்த வேண்டும் என்று கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் விடுத்து வந்தன. அதன் பயனாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளும் நேற்று முதல் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த உல்லாச படகு சவாரியை தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதற்கான கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. குளுகுளு வசதி கொண்ட படகில் பயணம் செய்ய நபர் ஒன்றுக்கு ரூ.450 வீதமும் சாதாரண படகில் பயணம் செய்ய நபர் ஒன்றுக்கு ரூ.350 வீதமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை நேற்று ஒரே நாளில் 4 முறை நடந்த உல்லாச படகு சவாரியில் 450 சுற்றுலா பயணிகள் பயணம் செய்து உள்ளனர்.

    Next Story
    ×