search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunrise"

    • முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகிறார்கள்.
    • கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம், பத்ம நாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை, சங்கு துறை-சொத்தவிளை, கணபதிபுரம் உள்ளிட்ட கடற்கரைகள் என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை என பல இடங்கள் இருக்கும் கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பல மாநிலங்களை சேர்ந்த வர்கள், வெளிநாட்டினர் சுற்றுலாவாக வருகிறார்கள்.

    சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டையுமே கன்னியாகுமரியில் பார்க்கலாம். குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வருபவர்கள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்க்க தவறுவதில்லை. அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகிறார்கள்.

    மேலும் கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து மகிழ்வார்கள். அது மட்டுமல்லாமல் சிறந்த ஆன்மீக தலமாகவும் கன்னியாகுமரி திகழ்கிறது. இங்குள்ள பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கும் சுற்றுலா பயணி கள் செல்கின்றனர். கன்னியாகுமரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் இந்த மாதங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும். அதோடு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வருகையும் இந்த மாதங்களில் அதிகமாக இருக்கும்.

    இந்த ஆண்டும் சீசன் காலமான தற்போது கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதுவும் சபரிமலைக்கு செல்லக்கூடிய அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் திரும்பிய இடமெல்லாம் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது.

    அவர்கள் விவேகானந்தர் மண்டபத்தை காண படகு போக்குவரத்து தொடங்கு வதற்கு முன்பே படகு குழாம் முன்பு நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். பராமரிப்பு மற்றும் பாலம் பணிகள் காரணமாக திருவள்ளுவர் சிலையை பார்க்க சுற்றுலா பயணிகள் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை.

    சுற்றுலாவை ஆனந்தமாக கொண்டாடும் நோக்கத்தில் கன்னியாகுமரிக்கு வருபவர்களில் சிலர் ஆபத்தை உணராமல் செயல்படுவது தான் அதிர்ச்சிகரமான விஷயமாக உள்ளது. கன்னியாகுமரி கடலில் அவ்வப்போது ராட்சத அலைகள் எழும். காற்றின் வேகமும் அதிகமாகும்.

    இதனால் கடற்கரையை ஒட்டி கடல் நடுவே உள்ள ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பாறைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி சிலர் அங்கு சென்று விடுகிறார்கள்.

    அவ்வாறு தடையை மீறி செல்பவர்கள் பாறைகளில் அமர்ந்தும், நின்று கொண்டும் செல்போனில் செல்பி எடுக்கின்றனர். மேலும் சிலர் குரூப்பாக நின்று போட்டோ எடுக்கிறார்கள். அவர்கள் பாறைகளுக்கு செல்லும் வழியும், பாறைகள் மீது நிற்பதும் ஆபத்தானது என போலீசார் எச்சரித்துள்ள போதிலும் பலர் கண்டு கொள்வதில்லை.

    தற்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்று அதிகமாக அடித்து வரும் நிலையிலும் இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப, இளைஞர்கள் பலரும் ஆபத்தான பகுதிகளுக்கு சர்வசாதாரணமாக சென்று வருகின்றனர். அதனை தடுக்க அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    இந்த விஷயத்தில் போலீசார் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பது ஒரு புறம் இருந்தாலும், ஆபத்து என தெரிந்தும் அந்த பகுதிகளுக்கு செல்வோர் தங்களின் எதிர்காலம், குடும்பம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கவனமாக செயல்படவேண்டும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.

    • புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
    • அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சி தெள்ளத் தெளிவாக தெரியவில்லை.

    கன்னியாகுமரி:

    ஆங்கில வருடமான 2023-ம் ஆண்டு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்து 2024-ம் ஆண்டு மலர்ந்து. இந்த புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.

    அந்த அடிப்படையில் இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள உலகபுகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் ஆடல், பாடல் மற்றும் குத்தாட்டத்துடன் கோலாகலமாக நடந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இரவு விடுதிகளில் தங்கி இருந்தனர்.

    இன்று அதிகாலை இந்த புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருந்தது.

    மேகமூட்டத்தினால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சி தெள்ளத் தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பலர் காலை 7 மணி வரை காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 7.30 மணிக்கு சூரியன் மேகக் கூட்டத்துக்கு இடையில் இருந்து வெளியே தெரிந்தது. அதனையே சுற்றுலா பயணிகளால் பார்க்க முடிந்தது.

    கடலுக்கு அடியில் இருந்து சூரியன் உதயமான காட்சியை புத்தாண்டில் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • ஐயப்ப பக்தர்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர்.
    • கடல் சீற்றமும் தணிந்த பிறகு தான் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் தொடங்கிய 3-வது நாளான இன்று கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலிதுறை கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினார்கள். ஆனால் மழை மேக மூட்டம் காரணமாக வானம் மப்பும் மந்தாரமாக காட்சி அளித்தது. இடையிடையே விட்டுவிட்டு மழை பெய்துகொண்டே இருந்தது. தொடர்ந்து மழை மேகம் சூழ்ந்து சூரிய வெளிச்சம் வெளியே தெரியாமல் இருந்தது. இதனால் கன்னியாகுமரி கடற்கரைக்கு சூரிய உதயம் காண வந்த சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    அதேபோல கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்ட ராட்சத அலைகளால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதையும் மீறி கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கடலில் புனித நீராட சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்த போதும் சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர். கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    மழை பெய்து கொண்டிருந்தபோதும் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் கன்னியாகுமரியில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களை சுற்றி பார்வையிட்டனர். இதனால் காந்திநினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரியில் இன்று காலையில் திடீர் என்று மழை பெய்தது. இதனால் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. மழை நின்று, கடல் சீற்றமும் தணிந்த பிறகு தான் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் மழையின் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டது.

    இங்கு சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக் கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. 

    ×