search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rough seas"

    • ஐயப்ப பக்தர்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர்.
    • கடல் சீற்றமும் தணிந்த பிறகு தான் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் தொடங்கிய 3-வது நாளான இன்று கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலிதுறை கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினார்கள். ஆனால் மழை மேக மூட்டம் காரணமாக வானம் மப்பும் மந்தாரமாக காட்சி அளித்தது. இடையிடையே விட்டுவிட்டு மழை பெய்துகொண்டே இருந்தது. தொடர்ந்து மழை மேகம் சூழ்ந்து சூரிய வெளிச்சம் வெளியே தெரியாமல் இருந்தது. இதனால் கன்னியாகுமரி கடற்கரைக்கு சூரிய உதயம் காண வந்த சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    அதேபோல கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்ட ராட்சத அலைகளால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதையும் மீறி கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கடலில் புனித நீராட சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்த போதும் சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர். கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    மழை பெய்து கொண்டிருந்தபோதும் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் கன்னியாகுமரியில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களை சுற்றி பார்வையிட்டனர். இதனால் காந்திநினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரியில் இன்று காலையில் திடீர் என்று மழை பெய்தது. இதனால் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. மழை நின்று, கடல் சீற்றமும் தணிந்த பிறகு தான் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் மழையின் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டது.

    இங்கு சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக் கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. 

    • 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
    • சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை ஏராளமான மீனவர் கிராமங்கள் உள்ளது. இங்கு ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும்.

    அப்போது கடற்கரை ஒட்டியுள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்து விடுவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க பல்வேறு இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்து கடல் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. இன்று காலையிலும் கடல்சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    சின்ன முட்டம், குளச்சல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசைப்படகுகள் அந்த பகுதியில் நங்கூரம் பாய்த்து நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு சில வள்ளங்களில் மட்டும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

    கடல் அலைகள் 15 அடி முதல் 20 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. ராட்சத அலைகள் கடற்கரையொட்டி உள்ள தூண்டில் வளைவுகள் மீது வேகமாக மோதி சென்றன. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கடல் சீற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கொல்லங்கோடு தூத்தூர் இரையுமன் துறை வள்ளவிளை சின்னத்துறை போன்ற கடற்கரை கிராமங்களில் கடல்சீற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. இன்று காலையிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரையையொட்டி உள்ள தூண்டில் வளைவுகளில் வேகமாக மோதியது. தூண்டில் வளைவு இல்லாத பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி-கேரளாவை இணைக்கும் தூத்தூர்-பொழியூர் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராட்சத அலைகள் அந்த சாலைகளை இழுத்துச்சென்றதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோரத்தில் அடுக்கப்பட்டு இருந்த கற்களையும் அலைகள் கடலுக்குள் இழுத்துச்சென்றது.

    இந்த சாலையை குமரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள மீனவர்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். இங்கிருந்து அவர்கள் கேரளாவுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு இந்த சாலை மிகவும் வசதியாக உள்ளது.

    மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் இதை பயன்படுத்தி வந்தனர். இந்த சாலை தற்போது துண்டிக்கக்கூடிய சூழலில் உள்ளது. பள்ளி வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×