search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குமரி-கேரளாவை இணைக்கும் தூத்தூர்-பொழியூர் சாலை துண்டிப்பு: மீனவர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் அவதி
    X

    குமரி-கேரளாவை இணைக்கும் தூத்தூர்-பொழியூர் சாலை துண்டிப்பு: மீனவர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் அவதி

    • 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
    • சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை ஏராளமான மீனவர் கிராமங்கள் உள்ளது. இங்கு ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும்.

    அப்போது கடற்கரை ஒட்டியுள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்து விடுவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க பல்வேறு இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்து கடல் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. இன்று காலையிலும் கடல்சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    சின்ன முட்டம், குளச்சல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசைப்படகுகள் அந்த பகுதியில் நங்கூரம் பாய்த்து நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு சில வள்ளங்களில் மட்டும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

    கடல் அலைகள் 15 அடி முதல் 20 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. ராட்சத அலைகள் கடற்கரையொட்டி உள்ள தூண்டில் வளைவுகள் மீது வேகமாக மோதி சென்றன. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கடல் சீற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கொல்லங்கோடு தூத்தூர் இரையுமன் துறை வள்ளவிளை சின்னத்துறை போன்ற கடற்கரை கிராமங்களில் கடல்சீற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. இன்று காலையிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரையையொட்டி உள்ள தூண்டில் வளைவுகளில் வேகமாக மோதியது. தூண்டில் வளைவு இல்லாத பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி-கேரளாவை இணைக்கும் தூத்தூர்-பொழியூர் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராட்சத அலைகள் அந்த சாலைகளை இழுத்துச்சென்றதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோரத்தில் அடுக்கப்பட்டு இருந்த கற்களையும் அலைகள் கடலுக்குள் இழுத்துச்சென்றது.

    இந்த சாலையை குமரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள மீனவர்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். இங்கிருந்து அவர்கள் கேரளாவுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு இந்த சாலை மிகவும் வசதியாக உள்ளது.

    மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் இதை பயன்படுத்தி வந்தனர். இந்த சாலை தற்போது துண்டிக்கக்கூடிய சூழலில் உள்ளது. பள்ளி வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×